“அண்ணா அண்ணா… அண்ணா” அந்த தளமே அதிருமளவு கத்திக்கொண்டே வந்த யாழினி வேகமாக ஜெயனின் அறைக்குள்ளே சென்றாள்.
அவள் வருவதற்கு முன் அவள் ஓசை அந்த தளத்தையே நிறைத்துவிடும், அவனுக்கு முன்னாள் அமர்ந்திருக்கும் அவனுடைய ஆட்களும் அவளுடைய பேச்சைத் தினமும் கேட்டுப் பழகியிருந்தனர். வழக்கத்தை விடக் குரலில் இன்று அதிகம் குதூகலம்.
“சொல்லு யாழினி… இன்னைக்கு என்ன நடந்துச்சு?”
இது யாழினியின் வழக்கம், தினமும் காலை வந்து முதல் நாள் வீட்டில் நிகழ்ந்தவை, செல்லும் வழியில் சாலையில் பார்த்தவை, கேட்டவை என ஒவ்வொன்றையும் ஜெயனிடம் மட்டும் அல்ல குறைந்தது இரண்டு மூன்று பேரிடம் பேசி தான் வேலையைத் துவங்குவாள்.
“இன்னைக்கு இல்ல வெள்ளி கிழமை ஆபீஸ்கு நான் லீவு போட்டேன்ல அன்னைக்கு நடந்துச்சு…”
இன்னும் தலையைத் தூக்காமல் வேலை பார்த்து, “அப்டி என்ன நடந்துச்சு? ஏதாவது சாப்பிட்டியா?”
“இல்ல அத விட பெருசு ரொம்ப ரொம்ப பெருசு…” சிணுங்கியபடியே, “அண்ணா இங்க என்ன பாருங்க…”
சிரிப்புடன் தலையைத் தூக்கியவன் தன் முன்னாள் நிற்கும் பெண்ணை பார்த்து பேச்சற்று போனான். எப்பொழுதும் சுடிதார் உடுத்தி வருபவள் இன்று புடவையில்.
“சாளரி வந்துடுச்சு ண்ணா… எவ்ளோ தெரியுமா அம்பதாயிரம் ரூபா” அவ்வளவு சந்தோசம் அவள் குரலில்.
“சந்தோசம் யாழினி… இன்னைக்கும் வர மாட்டேன்னு சொன்ன இப்டி திடீர்னு வந்து நிக்கிற?”
“சாளரி வந்துச்சுல அது தான் உங்களுக்கு டிரீட் வச்சிட்டு போகலா…”
“ஜெயன் இங்க வாங்க…”
உதய்யின் குரல் கேட்டு விழி அகல விரித்தவள் பேச வந்ததை மறந்து ஜெயனிடம், “அண்ணா அவங்க வந்துட்டாங்களா?”
ஆசையாய் கண்கள் மிளிர கேட்க ஜெயன் சிரிப்போடு ஆமாம் என்றான். உதய் ஒரு முக்கியமான வேலை சார்ந்து ஜப்பான் சென்று நேற்றோடு எட்டு நாட்கள் ஆகியிருந்தது, அவனைக் காணாமல் வாடிக்கிடந்தவள் காதுகளுக்குத் தேனாய் வந்தது அவன் குரல்.
ஜெயன் எழுந்து செல்ல அவன் கையை பிடித்து நிறுத்தி, “ப்ளீஸ் நான் போறேன் ண்ணா” கண்களால் கெஞ்ச யோசிக்காமல் நாற்காலியில் அமர்ந்து அவளுக்கு அனுமதி கொடுத்தான். துள்ளிக் குதித்துச் சென்றவள் அவன் அறைக்கு முன் சென்றதும் நின்று கூந்தலைச் சரி செய்து, புடவை மடிப்பை நீவிவிட்டு அந்த கனமான மரக் கதவைத் தட்டினாள்.
“வாங்க ஜெயன்” அவன் காந்த குரலில் தன் மனதையே வசைபாடி உள் நுழைந்தாள்.
“இன்னைக்கு லஞ்ச்…” தீவிரமாய் ஏதோ மடிக்கணினியையும், ஒரு புத்தகத்தையும் பார்த்து குறிப்பேட்டில் எழுதிக்கொண்டிருந்தவன் கைகள் அப்படியே அந்த மல்லிகையின் வாசத்தில் நின்றது.
வந்தது இவள் தான் என்று புரிந்தது, மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தவனுக்கு இளம் ஊதா நிற காட்டன் புடவை அணிந்து, இடை தொடும் அவள் கூந்தல் காற்றில் ஆடி நிற்க அந்த கருங்கூந்தலில் ஒரு சரம் குண்டுமல்லிகை சூடி பாந்தமாய் காட்சியளித்தாள். அவன் கண்களுக்கு விருந்தாக அந்த மெல்லிய காட்டன் புடவை அவள் அறையினுள் நுழையும் முன் சரி செய்த பொழுது ஒரு பிளீட் மட்டும் கண்ணாடியாய் மாறி அவள் கொடி இடையை அப்படியே காட்டச் சாவிருக்கையில் அமர்த்திருந்தவன் அப்படியே சாய்ந்து பெருமூச்சு ஒன்றை விட்டான்.
என்ன தான் கண்ணியமாக நடந்து கொள்ள முயன்றாலும் ஆணால் அவள் புடவையிலிருந்து விடுபட்டுக் காட்சியளித்த அந்த இடையை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை. இன்று ஏனோ அந்த முகம், கைகள், இடை எல்லாம் தங்கமாய் ஜொலித்தது உதயனின் கண்களுக்கு.
அழகழகா அவ
தொிவா உயிா் உாிவா…
மெது மெதுவா விாி
விாிவா விழி அறிவா…
காரணமே இல்லாமல் காலையில் அலுவலகம் வரும் பொழுது காரில் கேட்ட பாடல் நினைவிற்கு வந்தது. அவன் பார்வை வீச்சைத் தாங்காமல் நாணத்துடன் அவனை நோக்கி வந்தவள் கை புடவை முந்தானையை இறுக்கமாய் பற்றியிருந்தது.
எனக்கானவளே நீதான்
கிட்ட வாறியா
“குட் மார்னிங் சார்” அவன் கண்கள் அடிக்கடி தொட்டு மீண்ட அவள் வயிற்றுப் பகுதியிலிருந்த புடவையைச் சரி செய்ய முன்னாள் இருந்த நாற்காலிக்கு ஒட்டி நின்று, ‘கண்ணு எங்க போகுது பாரு…’ தன்னுடைய மனதின் உரிமையாளனைத் திட்டிக்கொண்டே நின்றாள்.
“குட் மார்னிங் யாழினி”
சிரமப்பட்டு கண்ணை அவள் முகத்திற்கு வந்து நிறுத்தினான், “லீவ் இல்ல நீங்க?”
“தொல்லை இல்லனு சந்தோச பட்டீங்களா சார்?” – யாழினி
“எங்க யாழினி என்ன முழுசா சந்தோச பட விட்டீங்க… வந்துட்டீங்களே” – உதய் “அப்ப நா வேணா வந்த வழியே போய்டவா?” – யாழினி
“தாராளமா போகலாம் ஆனா நாளைக்கு வந்து லீவ் எடுத்த ரெண்டு நாள் ஒர்க் எல்லாம் சேத்து முடிச்சு வைக்கணும்” – உதய்
“நீங்க இப்டி சொல்லுவிங்க, அங்க ஜெயன் அண்ணா எனக்கும் சேத்து அவரே பண்ணிடுவாரு… நான் தைரியமா ஒரு வாரம் கூட லீவ் போடலாம்”
சிரித்தவன், “சாளரி அதுக்கு தகுந்த மாதிரி தான் வரும்…” சரியாக அவளை ஞாபகப் படுத்திவிட்டான்.
“சார் பாத்திங்களா… இதுக்கு தான் சார் நீங்க வேணும்னு சொல்றது. நான் எதுக்கு வந்தேனோ அத மறந்துட்டேன், வெள்ளிக்கிழமை சாளரி வந்துடுச்சு சார். இவ்ளோ சாளரி வரும்ன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல. அன்னைக்கு நைட் எல்லாரும் ஹோட்டல்ல சாப்பிட்டு, பீச் போய் நல்லா என்ஜோய் பண்ணோம். நேத்து அம்மாக்கு, அப்பாக்கு, தங்கச்சிக்கு எல்லாம் டிரஸ் எடுத்தோம். ரொம்ப சந்தோசமா இருந்தேன் சார் ரொம்ப வருஷம் கழிச்சு…”
ஆசையாய்ப் பேச வந்த வார்த்தைகள் இறுதியில் ஒரு நெகிழ்ச்சியுடன் முடிந்தது. அவளையே பார்த்து அவன் மனதில் ஒரு எண்ணம், ‘அவள் வருமானத்தில் அவளுக்கென்று அவள் எதுவும் வாங்கவில்லை. இன்னும்…’
தயக்கத்துடன் அவன் அருகில் பெரிய சாக்லேட் ஒன்றை வைத்து, “ரொம்ப தேங்க்ஸ் சார்…” என்ன முயன்றும் விழிகள் கலங்காமல் இருக்க மாட்டேன் என்றது.
“இப்டி எல்லாம் எமோஷனலா பேசி ட்ரீட்ல இருந்து மிஸ் ஆக முடியாது யாழினி, வேலையும் குறைக்க மாட்டேன்”
“இந்த அம்பதாயிரத்துக்கு எல்லாம் நான் ட்ரீட் வைக்கணும்னா நீங்க எனக்கு ஒவ்வொரு செகண்ட்டுக்கும் ட்ரீட் வைக்கணும்”
“ம்ம்… கம்பெனி கணக்கு எல்லாம் பாக்க ஸ்டார்ட் பண்ணிட்டீங்க போல?”
அவன் கூறி சிரிக்க, “நான் தான் மேக்ஸ்ல எவ்ளோ வீக்னு உங்களுக்கே தெரியும் சார்”
அவள் கொடுத்த சாக்லேட்டை எடுத்துக்கொண்டவன், “ஜெயன் எங்க?”
“அவங்க பிஸி சார்… அது தான் நான் வந்தேன்”
“அவன் பிஸியா?” அவளின் நோக்கம் புரிந்து சிரித்தவன், “லஞ்ச் முடிஞ்சதும் ஸ்டீல் இண்டஸ்ட்ரிக்கு போக போறேன், ரெடியா இருங்க, ஜெய்னக்கும் இன்பார்ம் பண்ணிடுங்க”
“ஓகே சார்…” குரலில் ஏமாற்றம் பெண்ணுக்கு, தலை முதல் கால் வரை பார்த்தவனுக்கு ஒரு வார்த்தை பாராட்ட தோன்றவில்லையா என்று.
“யோவ் இப்ப எதுக்கு என்ன கத்திடு இருக்க?”
வெளியில் ஈஸ்வரனின் குரல் கேட்டதும் உதய் யாழினியை அவனுக்கு முன்னாள் இருந்த நாற்காலியில் அமர கூறினான். இப்பொழுது தான் பெண்ணுக்கும் நினைவு வந்தது, அந்த மனிதன் இருப்பதாய்.
“என்னால இப்போதைக்கு அங்க வர முடியுமான்னு தெரியலையா… நீயே சமாளி” கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவர் உதய் இருப்பது தெரியாமல் சாவகாசமாகப் பேசிக்கொண்டே வந்தார்.
அறைக்குள் வந்தவர் உதயைப் பார்த்ததும் அதிர்ந்தாலும் எதுவும் கூறாமல் அவனுக்கு அருகில் அவனுடைய மேஜைக்கு அருகில் இருக்கும் தன்னுடைய மேஜைக்கு வந்தார்.
“என்ன உதய் எப்ப வந்த?”
“நேத்து தான் வந்தேன். வேலை எல்லாம் செட் ஆகிடுச்சா?” என்றான் தன்னுடைய வேளையிலும் ஒரு கண் வைத்து.
“எங்க உதய் செட் ஆகுது, அங்கனா ஒரே ஒரு கம்பெனி கண்ணுல வச்சு பாத்துக்குவேன், இங்க இத்தனை இருக்கு, நேரம் பத்தலை, அதுவுமில்லாம உன்னையும் மீறி இங்க சிலர் உன்னோட காசுலையே கை வைக்கிறாங்க உதயா” யாழினியைப் பார்த்து ஈஸ்வரன் பேச விழி விரித்துத் திடுக்கிட்டு அவரை பார்த்துத் திரும்பினாள்.
அவரை பார்க்காமல் வேளையில் கவனமாய் இருந்தவன் அவர் பார்வை யாழினி மீது படிந்ததை உணராமல், “யாருன்னு சொல்லுங்க தூக்கிடலாம்” யாழினி வருகையோடு, ஆதியிடம் அன்று இரவு பேசியதும் வந்து மகிழ்ச்சியைத் தர, குதூகலமாக இருந்தான்.
“யாழினி என்னோட கார்ல தண்ணி வச்சிருக்கேன் எடுத்துட்டு வா…”
அதிகாரமாய் யாழினிக்கு ஈஸ்வரன் உத்தரவிடத் தலையைத் தூக்கி அவரை தீயாய் முறைதான் உதய், அவளோ அவர் பேச்சுக்கு மறுப்பேதும் கொடுக்காமல் எழுந்து நிற்க மேலும் ஈஸ்வரன், “கார்ல என்ன பொருள் எங்க இருக்குன்னு எனக்கு தெரியும்” திருட்டு பழியையும் அவள் மீதே போட்டார். மொத்தமாய் மனம் வெறுத்தாள் பெண் தவறேதும் செய்யாமல் பழியை வாங்கிக்கொண்டு.
“யாழினி இங்க என்னோட பி.எ மட்டும் தான் நல்லா அத புரிஞ்சுக்கோங்க. பக்கத்துல இருக்க என்னோட ரூம்ல சுத்தமான தண்ணி தான் வரும், அதுவும் புடிக்கலைனா தாராளமா லிப்ட் யூஸ் பண்ணி பார்க்கிங்க்கு போகலாம். கால்ல எதுவும் அடி பட்ருந்தா, உங்களுக்குனு ஒரு பி.எ வச்சுக்கலாம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல”
காட்டமாய் ஈஸ்வரனிடம் பதில் கூறி, தன்னுடைய மேஜையிலிருந்து ஒரு சாவிக் கொத்தையும், ஒரு சிறிய குறிப்பேட்டை யாழினியிடம் கொடுத்து, “இனி என்னோட வால்ட்ஸ் கீ, பாஸ்வோர்ட்ஸ் எல்லாமே உங்களுக்கும் தெரியும் யாழினி. நான் இல்லாத நேரத்துல எல்லாமே உங்களோட பொறுப்பு மட்டும் தான். ஜெயன கூட்டிட்டு பார்க்கிங் வாங்க, ஸ்டீல் இண்டஸ்ட்ரிக்கு போகணும்”
திரும்பிக் கூட பார்க்காமல் அறையை விட்டு உதய் வெளியேற, அவன் பின்னாலே கலங்கிய கண்களுடன் சென்ற யாழினியின் முதுகைத் துளைத்தது ஈஸ்வரன் சகுனிப் பார்வை.
“காதல் வளக்குறிங்களோ… எப்படி இவளை கூடயே வச்சிருக்கன்னு நானும் பாக்குறேன்டா” என்றவர் கைப்பேசியை எடுத்து உதயிடம் நேரடியாக மோதத் தயாரானார்.
*****************************
தமிழின் வீடு பழங்காலத்து வீடு, முற்றம், ஓட்டு கூரைகள், பின்னங்கட்டில் குட்டி கிணறு, துணி துவைக்க இடை வரை இருக்கும் கல், ஷீலாவின் கை வண்ணத்தில் போது குலுங்கும் மலர் செடிகள், வீட்டின் மையப்பகுதியான முற்றத்தில் துளசி மாடம் என அப்படியே அக்ரஹாரத்து வீடே.
அமெரிக்காவிற்கு சென்று ஒரு அய்யங்கார் குடும்பத்திடமிருந்து தமிழின் தந்தை நந்தன் வாங்கிய அந்த வீடு இப்பொழுதும் சிறு விரிசல் கூட வராமல் அழகாய் நின்றது. அதே முற்றத்தில் தான் இன்று தமிழ் குடும்பம், கெளதம் குடும்பம், சஹானா என அத்தனை பேரும் அமர்ந்திருந்தனர். இதில் வீட்டின் குறுக்கும் நெடுக்குமாய் ஆதி நடந்துகொண்டிருக்க, கெளதம் ஒரு பக்கம் காதல் பயிரை வளர்த்துக்கொண்டிருந்தான், தமிழ் பெரியவர்களிடம் பேச, சஹானா தான் வேறு ஏதோ ஒரு யோசனையில் தவித்தாள்.
“தரையே தேஞ்சு போச்சு இவன் நடந்து நடந்து… ஒழுங்கா என் கல்யாணத்துக்கு ஒரு கோடி ரூபா மொய் வச்சிட்டு”
“உன் கல்யாணத்துக்கு எல்லாம் வர்றதே பெருசு இதுல ஒரு கோடி மொய்”
நண்பனுக்காக பேசிய கெளதம், “எதுக்குடா எங்களை வர சொன்ன?” ஆதியிடம் கேள்வி திரும்பியது.
“சொல்றேன் சொல்றேன் ஒரு ஆள் வர வேண்டி இருக்கு” பிறகு மீண்டும் அனைவரும் பேச்சில் மும்முரமாக இருக்க வெளியில் சென்ற ஆதி, சில நிமிடங்களில் உள்ளே வர அவனை தொடர்ந்து ஆதவனும் வந்தான்.
ஆதவனை அங்கு பார்த்ததில் பெரியவர்கள் குழம்பி நிற்க இளையவர்களுக்கு ஆச்சரியம், முக்கியமாக சஹானாவிற்கு. உள்ளே வந்தவன் முதலில் சென்று கட்டி தழுவியது கெளதம், தமிழ் இருவரின் தந்தையை தான்.
“ஆதி இது…”
“அதே கிழிஞ்ச ஜட்டி ஆதவன் தான்” ஆதவன் வெடுக்கென திரும்பி ஆதியை பார்த்தான், “இந்த டீடெயில்ஸ் எல்லாம் இப்ப கேட்டாங்களா?”
“போடா படவா அப்டி” ஆதவனை தள்ளி நிறுத்தினார் நந்தன்.
“ப்பா…” – ஆதவன்
“பேசாதடா… எங்க போன இத்தனை வருசமா? அப்பா அப்பா-னு காலையே சுத்திட்டு இருந்தவனுக ஒரே வாரத்துல இருக்குற இடம் தெரியாம காணாம போயிட்டீங்க. இப்ப வந்து என்ன உறவு கொண்டாடிட்டு இருக்க?”
“ப்பா என்ன பேசுறீங்க?” கெளதம் தந்தையை தடுத்தான்.
“வேற எப்படி கெளதம் பேச சொல்ற? நீயும் ஆதியும் எப்படி எங்களுக்கு அதே மாதிரி தான இவனையும் நாங்க நெனச்சோம், இப்டி பண்ணிட்டாங்க…” – நந்தன்
“சரி… அது தான் சின்ன வயசு. அதுக்கு அப்றம் எது தப்பு எது சரின்னு தெரியாதா? உங்களுக்குள்ள இருக்க சண்டைல எங்களையே மறந்துட்டீங்கல்ல… இதுல அவன் இன்னும் வர கூட இல்ல”
உதய்யையும் மொத்த குடும்பமும் எதிர் பார்த்தது. யோசிக்காமல் சாஷ்டாங்கமாக பொதுவாக இரு தந்தைமாரின் காலில் விழுந்தான்.
“தெய்வங்களா என்ன மன்னிச்சிடுங்க… என்ன என்னமோ நடந்து போச்சு தான்… இந்த சின்ன பிள்ளையை பெரிய மனசு பண்ணி பெரிய மனுசங்க நீங்க மன்னிச்சு ஏத்துக்கோங்க”
தூரத்தில் அமர்ந்து கலங்கிய கண்களுடன் அவனை பார்த்துக்கொண்டிருந்த ஷீலா, ஆண்கள் இருவரும் ஆதவனை சட்டைசெய்யாமல் நிற்கவும் துரிதமாக சென்று அவன் தோளில் கை பிடித்து எழுப்பியவர் ஆண்களை பார்த்து, “பிள்ளை எவ்ளோ நேரம் தான் இப்டியே நிப்பான்… பேசுறிங்களா கல் நெஞ்சு”
கணவனை சாடியவர் ஆதவனின் கன்னம் தடவி, “எப்படி டா ஆதவா இருக்க?”
குனிந்து அவரை கைகளில் தூக்கி இரண்டு சற்று சுற்றி சிரிப்போடு இறக்கிவிட, “நீ இன்னும் மாறவே இல்ல ஆதவா”
“அதே அதே… அப்டியே தான் நல்லா இருக்கேன்” என்றவன் பார்வை அன்னைக்கு பின் நின்றிருந்த பவித்ராவிடம் பட, “என்ன பவி மறந்து போய்டியா?”
சிரிப்போடு இல்லை என்று தலை அசைத்தவள், “மறக்குற மாதிரியா என் கைல தழும்பு விட்டு வச்சீங்க?” இடது கையிலிருந்த தீ காயத்தை காட்டினாள்.
“தமிழு உனக்கு நியாபகம் இருக்கா? ஒரு தடவ கிளாஸ் கட் அடிச்சிட்டு பைக்ல போனப்ப பவி பாத்து அப்பா கிட்ட சொல்லி குடுக்க போறேன்னு சொன்னா, அவளையும் வண்டில அல்லி போட்டு போனோம், அந்த நேரம் பாத்து ஒரு கார்ல நான் வண்டிய விட்டு சைலென்சர்ல பவி கை பட்டு வாங்குன வீர தழும்பு”
“அவளை அப்டியே விட்ருந்தா கூட அடி கொஞ்சம் கம்மியா விழுந்துருக்கும், அவளை கூட்டிட்டு போனது தான் நாம பண்ண பெரிய தப்பே…” – தமிழ்
அனைவரும் அன்றைய நிகழ்வில் சிரித்துக்கொண்டிருக்க சஹானா ஆதவனை பார்த்து பயத்தில் நின்றாள். ஆனால் அவன் சிறு ஹாய் சொன்னதோடு அவள் பக்கம் திரும்பவே இல்லை. பேச்சும் கேலியாக அரை மணி நேரத்திற்கு மேல் செல்ல அனைவரையும் அமைதிப்படுத்தி அவர்களை அழைத்த காரியத்தை பேச துவங்கினான் ஆதி கேசவன்.
“லோன் பேங்க்ல எல்லாம் கேட்டு பாத்துட்டேன், எதுவுமே சரியா வரல. புதுசா இடம் வாங்கி பில்டிங் எடுக்குறது எல்லாம் சரி வராது. அதுனால இருக்குறதுல என்ன பண்ண முடியுமோ அத பண்ணலாம்னு இருக்கேன்”
அனைவரும் அவன் மேலும் தொடரட்டும் என்று அமைதியாக இருந்தனர். “அப்பா ஆபீஸ் இருந்த இடம் பத்தரம் என்கிட்டே தானே இருக்கு… அந்த இடத்துல கான்ஸ்டருக்ஷன் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்” அத்தனை பேருக்கும் இன்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தான் ஆதி.
அந்த இடம் கிட்ட தட்ட ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்டது, அவன் தந்தை ஆசையாக வாங்கியது. ஒரு சிறு பகுதியில் தன்னுடைய அலுவலகத்தை வைத்துக்கொண்ட ஆதியின் தந்தை, மீத மிருந்த இடத்தில் பிற்காலத்தில் ஒரு அடுக்குமாடி கட்டிடமும், தங்களுக்கு விசாலமான ஒரு சொந்த வீடை கட்டவும் நினைத்தார்.
ஆனால், விதியின் விளையாட்டில் அவர் மறைவையும் தாண்டி அவர்கள் குடும்பம் கோவிலாய் நினைத்திருந்த அலுவலகத்தை சீல் வைத்ததில் அவர் சம்மந்தமான எந்த பொருளும் தனக்கு வேண்டாம் என்று ஆதி ஒதுக்கி வைத்தான். இப்பொழுது அதை பயன்படுத்தி தொழில் துவங்க போவதாக கூறவும் நம்ப முடியவில்லை யாராலும்.
அனைவரின் மௌனத்தை புரிந்தவன், “அப்பா மேல எந்த தப்பும் இல்ல டா” வலி நிறைந்த குரலில் சஹானாவைப் பார்த்து பதில் தந்தான்.
அவன் கூறியதில் விழிகளில் நீர் திரண்டுவிட சகோதரனை மட்டுமே பார்த்து நின்றது அந்த அப்பாவி பெண்.
“அவர் மேல பழிய போட்டு மொத்த உலகத்துக்கும் அவரை திருடனா, அயோக்யனா காமிச்சிருக்காங்க. ஆனா நம்ம அப்பா அப்டி இல்ல டா” சகோதரியின் கை பிடித்து அவளை சமாதானம் செய்தான், ஆனாலும் அவள் அனுபவித்த வேதனைகள் அவள் அழுகையை நிறுத்திவிட வில்லை.
“இத தான ஆதி நாங்களும் சொன்னோம்… அந்த மனுசனை பத்தி எங்களுக்கு தெரியாதா. நீ தான் கோவத்துல எங்க பேச கேக்கல”- கெளதம் தந்தை.
“யார் ஆதி இப்டி பண்ணது?”
ஆதவன் முகம் சுருங்கியது நந்தனின் கேள்வியில்.
நண்பனை பார்க்க அவனோ, “அத பத்தி இப்ப பேச வேணாம் பா… எத எல்லாரும் நம்பிட்டு இருக்காங்களோ அந்த பேர நான் மாத்தணும் கூடவே நானும் வளரனும். ரெண்டுக்கும் ஒரே சொல்யூஷன் அதே இடத்துல நான் அபார்ட்மெண்ட் கட்டி, அதே ஆபீஸ்ல நான் ஒக்காரனும்” ஆணித்தரமாக இருந்தது அவன் பதில்.
“எல்லாம் சரி தான் ஆதி ஆனா சீல் வச்ச கம்பெனில போய் என்ன பண்ண முடியும். அதுல நீ மறுபடியும் கம்பெனி ஸ்டார்ட் பண்ணா யாரும் நம்பி வர மாட்டாங்க” – ஷீலா
“தெரியும் மா. எல்லாமே தெரிஞ்சு தான் துணிஞ்சு பண்றேன். அது விசயமா சி.எம்.டி.எ ல நேத்து தான் பேசுனேன் கொஞ்சம் பெரிய ஆளோட ரெகமெண்டேஷன் வேணும்னு சொன்னாங்க… அது தான் ஆதவன் பேசி இன்னும் ஒரு வாரத்துல அந்த தடை போய்டும். லோன்க்கு நேத்து தான் அப்ரூவள் வாங்குனேன் இடத்தை காமிச்சு. இப்போதைக்கு டூ பி.ஹச்.கே அபார்ட்மெண்ட் கட்டலாம்னு யோசிச்சேன்”
நிறுத்தி தயக்கமாய் கெளதம், தமிழின் பெற்றோரை பார்த்தான். “எனக்கு நீங்க ரெண்டுபேரும் ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணனும்…”
அவனுடைய தயக்கம் அவர்களுக்கு புதிது, “என்னடா கறிக்கொளம்பு கேக்குறப்ப எப்படி உரிமையா கேப்ப, அது மாதிரியே கேளுடா” என்றார் ஷீலா.
“இல்ல லோன் வாங்குறதுக்கு சாட்சி கையெழுத்து போடுறிங்களா?” என்ன தான் உரிமையாய் பழகி இருந்தாலும் இவ்வளவு பெரிய காரியத்தை கேட்பதற்கு பெருத்த தயக்கமே.
“ஏன் டா இவ்ளோ கஷ்ட படுற, எவ்ளோ வேணும்னு சொல்லு அஞ்சே நிமிசத்துல தர்றேன்” – ஆதவன்
“ஏன் அவன் ஒரு தடவ வாங்குன அடி போதாதா?” கெளதம் முந்திக்கொண்டு ஆதவனிடம் சண்டைக்கு வந்தான்.