பூமி பூஜை செய்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது… ஆதியின் தந்தையின் நிலத்தில் வேலைகள் எதுவும் துவங்காவிடினும் வானம் தோண்ட ஆயத்தங்கள் அத்தனையும் தயாராகிக்கொண்டே தான் இருந்தது.
பூஜை போட்ட முதல் நாளே உதய் தன்னுடையதாக மாற்றியிருந்த ஆதியின் தந்தை அலுவலகத்தின் பின்னே இருந்த பெரிய காலியிடத்தில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கப் பெரிய கூரை போட்டு கூடாரம் அமைத்திருக்க அதிலிருந்த படியே தான் கடந்த இரண்டு நாட்களாக கௌதம், தமிழ் இருவரும் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க ஆதவன் வந்து அவர்கள் இருவரும் பேசுவதைக் காதில் கூட வாங்காமல் சஹானாவிடம் கடலை போட்டுக்கொண்டிருப்பான்.
“வந்து ஏதாவது சொல்லு டா”
“நான் மெக்கானிக்கல் படிச்சேன்டா இத பத்தி எல்லாம் சுத்தமா ஐடியா இல்ல” என்று மழுப்பிவிடுவான்.
ஆதி வெளியில் வங்கி அல்லது வேறு ஏதாவது வேலை இருப்பதாகக் கூறி இரண்டு வாரங்களுக்கு மேல் பம்பரமாகச் சுற்றிக்கொண்டிருந்தான். புழுக்கம் தாங்காமல் ஆதவன் ஒரு காகிதத்தை மடித்து விசிறிக்கொண்டிருக்க அவனுக்கு எதிரில் இருந்த ஒரு நாற்காலியில் ஆதவனின் கருப்பு கண்ணாடியை அணிந்து சாய்ந்து அமர்ந்த வாக்கிலே தூங்கிப் போனான் கௌதம்.
என்ன விசிறியும் வேர்வை வழிந்துகொண்டே தான் இருந்தது ஆதவனுக்கு. எந்நேரமும் குளுகுளு என எ.சியில் இருந்தே பழக்கப்பட்டிருந்தவனுக்கு மாசி மாத வெயிலையே சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கௌதமை போல தானும் சட்டையைக் கழட்டி அமர்த்துவிடுவோமா என்ற எண்ணம் தோன்றிய உடனே சட்டையை அவிழ்த்துப் போடத் தான் சிறிது ஆசுவாசமடைந்தான்.
ஆனால் அதுவும் சில நொடிகளே தாக்குப்பிடிக்க மீண்டும் வியர்வை வழிந்தது. ஆனால் கௌதம் அசராமல் வியர்வையைக் கூட கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தான். அந்த நேரம் தமிழ் ஒரு பெரிய மினெரல் கேனுடன் வந்து ஆதவனுக்குத் தண்ணீரைக் கொடுத்தான்.
“என்னடா ஒரு பேன் கூட இல்லையா?” கேள்வி கேட்டுக்கொண்டே தண்ணீரை வாங்கினான்.
வாயில் தண்ணீரை ஊற்றிய பொழுது தமிழின் கை ஆதவன் தலையில் ஓங்கி அடிக்க புரையேறி எதிரில் ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்திலிருந்த கௌதம் முகத்தில் சாரலாய் அது தெறிக்க அதையும் துடைத்து கொஞ்சமும் அசையாது உறக்கத்தைத் தொடர்ந்தான் கௌதம்.
“கேன கூ…” – தமிழ்
“டேய் டேய்… வார்த்தை வார்த்தை” ஆதவன் எச்சரிப்பை விடுத்தான்.
“கூமுட்டை…” வார்த்தையைத் திருத்தி, “உனக்கு விசுர வேற எதுவுமே கெடைக்கலயாடா? இது பிளான் பேப்பர்” ஆதவன் கையிலிருந்த காகிதத்தை வாங்கியவன் அதை மீண்டும் விரித்துப் பத்திரப்படுத்தி வைத்தான்.
கௌதம் பக்கம் திரும்பி அவன் காலிலே ஓங்கி ஏத்தியவன், “தூங்குது பாரு நைட் எல்லாம் போன் பேசிட்டு…”
“ஆஆ…” காலை பிடித்து எழுந்த கௌதம், “மூதேவி எதுக்குடா எத்துன?”
“அவன் பிளான் பேப்பர எடுத்து விசிறிட்டு இருக்கான் நீ வாட்டுக்கு தூங்குற” முறைத்துக்கொண்டு கேட்டான் தமிழ்.
உதட்டை ஏளனமாக முடித்தவன், “என் நண்பனுக்காக இந்த சின்ன பேப்பர் என்ன… என் உசுரையே தருவான் டா இந்த கெளதம்”
“நீ மசுர கிழிக்கிற லட்சணம் எனக்கு தெரியும்…” – ஆதவன்
“வன்மம் கக்கப்பட்டது” – கெளதம்
“பின்ன என்னடா எனக்கு சின்ன வயசுல நாய் பயம் அதிகம் தெரிஞ்சும் ஒரு நாள் இவன் வீட்டு பக்கம் கிரிக்கெட் ஆடிட்டு இருந்தப்ப நாய் இருக்குற வீட்டுக்கு வேணும்னே அனுப்பி வச்சு ஒரு வாரம் காச்சல்ல படுக்க வச்சது இவன் தான… இதுல உசுர குடுத்து நொட்டுவானாம்” ஆதவன் அன்றைய நிகழ்வில் நண்பனை தீயாய் முறைக்க தமிழும் கௌதமும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
“ஆதவா ஒரு டீ சொல்லேன்” இன்னொரு நாற்காலியை இழுத்து போட்டு சோர்வாய் அமர்ந்தான் தமிழ்.
“தமிழு ஒரு எ.சி சொல்லேன்” தமிழை போலவே அதே மாடுலேஷன் தவறாமல் ஆதவன் கூறினான்.
“டீ வேணாம்… எனக்கு களனி தண்ணி போதும்” – தமிழ்
“சரி டா மாடு ஒரு தொட்டிலாவது கட்டி விடுங்கடா நைட் ஏழு மணிக்கு இப்டி வேர்க்க வேர்க்க புடிச்சு ஒக்கார வச்சிருக்கீங்க” தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொள்ளும் அளவிற்கு புழுக்கம். காற்று சுத்தமாக இல்லை.
“என்னோட ஆயா பழைய சேலை இருக்கு, நாளைக்கு மறக்காம எடுத்துட்டு வர்றேன்… ஏன் டா தமிழு இவன் வெயிட்டுக்கு மூணு சேலை ஒண்ணா வச்சு காட்டுனா போதுமா?” கூரை பந்தலில் எ.சி., தொட்டில் எல்லாம் கேட்கும் நண்பனை பார்க்க பாவமாக இருந்தாலும், அவனை கிண்டல் செய்யும் வாய்ப்பை விட்டுவிட மனம் வரவில்லை கௌதமிற்கு.
“நக்கலு? இருடா ஓணானை புடிச்சு உன் டிரௌசர் குள்ள விடுறேன்” இப்பொழுது கெளதம் அதை யோசித்து பார்க்க, முகம் அஸ்டகோலமாக மாறியது.
‘ஆத்தி… இது வெவகாரமான யோசனையால இருக்கு. சரி மூடிட்டு போய்டுவோம்’ நண்பனின் மனதில் என்ன யோசனை, கற்பனை விரிகின்றதென்று புரிந்த தமிழ் வாய் விட்டு சிரிக்க, அந்த அமைதியான இடத்தில் ஏதோ ஒரு ஆட்டோ நுழையும் சத்தம் தெளிவாக கேட்டது மூவருக்கும்.
“யார்ரா அது இந்நேரத்துல வர்றது” தமிழ் அத்தனையையும் எடுத்து கிளம்ப ஆரம்பித்தான். எவர் என்று பார்க்க வந்த கெளதம், ஆதவன் வெளியில் வர, அந்த ஆட்டோவுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்தான் ஆதி.
ஆதவனை பார்த்ததும், “இன்னும் நீ இங்க என்ன டா பண்ற?”
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அதான் நீ வரட்டும்-னு வெயிட் பண்றேன். ஆமா உன் வண்டி என்ன ஆச்சு?” – ஆதவன்
“கொஞ்சம் வேலை இருக்கு அதான்” பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வாசல் பக்கம் திரும்பிய ஆதி வாசலில் இருந்த வெளிச்சத்தை பார்த்து, “டேய் ஓரமா நில்லுங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்”
சிரித்த முகத்துடன் வழியில் கிடந்த சில கட்டைகளை தூக்கி போட்டு, “ண்ணே உள்ள வா” சத்தமாக அழைத்தான் வாசலை பார்த்து.
அழைத்தத்தும் மெதுவாக அந்த காலியிடத்தில் நுழைந்தது பெரிய கண்டைனர்களை சுமக்கும் லாரிகள் இரண்டு வரிசையாக.
“ஆதி எதுக்கு டா கண்டைனர் வருது?” – கெளதம்
“வெயிட் அண்ட் சீ டா ட்ரொவுசரு” நண்பனை அமைதியாக்கி அந்த லாரியை வழி நடத்தியவன் பின்னாலேயே வந்த பெரிய க்ரேன் ஓட்டுனரிடம் எந்த இடத்தில் அவைகளை இறக்க வேண்டும் என்று இடத்தை சுட்டி காட்டி அடுத்த கட்ட வேலைகளை துவங்க இவன் செய்வதை புரியாமல் மூவரும் விழித்து நின்றனர்.
அதற்குள் அந்த க்ரேன் முதலில் ஒரு கண்டைனர் பெட்டியை வைத்து அதை போர்த்தியிருந்த திரையை விலக்கியதும் அதான் தோற்றத்தில் குழப்பம் உண்டானது நண்பர்கள் மூவருக்கும். பிறகு அதான் மேல் மற்றொரு கண்டைனரை சரியாக வைக்கவே கால் மணி நேரம் பிடித்தது. அத்தனையும் முடித்து சிலர் கண்டைனர் உள்ளே சென்று அடுத்த அரை மணி நேரம் இரவென்று கூற பாராமல் வேலை பார்க்க நண்பர்களை அந்த பக்கமே ஆதி விட வில்லை.
“என்னடா சிமெண்ட் மூட்டை வைக்க தான் இந்த குடிசை இருக்கே எதுக்குடா இது?”
“கண்டைனர் வாங்கி விக்கிற வேலை பாக்க ஆரமிச்சிட்டியா?” என மாறி மாறி ஆளுக்கு ஒரு கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்க பொறுமையை இழுத்து புடிக்காமல் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி மூவர் முகத்திற்கு நேராக வார்த்தை பேசாமல் காட்டி ஆதி எச்சரிக்க, அடுத்து ஒரு வார்த்தை வரவில்லை அவர்களிடமிருந்து.
“ண்ணே முடிஞ்சது… நாளைக்கு வந்து கம்பி மட்டும் அடிச்சு விட்டுடுறோம். இந்தா சாவி”
ஒருவன் ஆதி கையில் சாவியை ஒப்படைக்க, “தேங்க்ஸ்டா தம்பி…” இன்முகமாய் அவர்களை அனுப்பி வைத்தவன், “வாங்க டா” நண்பர்களை அழைத்து கண்டைனர் அருகே சென்றவன் கதவு போல் தெரிந்த இடத்தின் முன் நின்று தன்னுடைய கைபேசியில் இருந்து உதய்யின் எண்ணிற்கு வீடியோ கால் விடுத்தான்.
“எதுக்கு ஆதி அவனுக்கு இப்ப கால் பண்ற. அவனை டிஸ்டர்ப் பண்ணாத” உதய் வீட்டில் அவன் தந்தைகளுடன் நடைப்பெற்ற வாதங்கள் பற்றிய அத்தனை தகவல்களையும் ஆதியிடம் பேச்சுவாக்கில் மனம் பொறுக்காமல் ஆதவன் கூறியிருந்தாலும் அதை காதில் கேட்காதது போல் அமைதியாக கடந்து சென்றுவிட்டான்.
“ஒரு ரெண்டு நிமிஷம் டா” சரியாக உதய் அழைப்பை ஏற்க, “வணக்கம்டி மாப்பிள்ளை” சல்யூட் வைத்து உதய்யை கேலி செய்த ஆதிக்கு சோர்ந்த முகம் கொண்ட, வாழ்க்கையே ஒதுக்கிய எண்ணத்தில் இருந்த உதய்யின் தரிசனமே கிடைத்தது.
இன்னும் அலுவலகத்தில் தான் இருந்தான், அலுவலகத்தில் இருந்த அனைவருமே சென்றதால் சட்டையின் இரண்டு பட்டன்களை அவிழ்த்து விட்டு தளர்வாய் இருக்கையில் சாய்ந்திருந்தான்.
“என்னடா?” மிகவும் சாதாரணமாக கேட்டவன் கைபேசியை முன்னாள் நிறுத்தி வைத்து மீண்டும் சாய்ந்துகொண்டான்.
“உதய் மாதவன் உதய் மாதவன்-னு ஒருத்தன் இருந்தான்… அவன் அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்தி தானும் கஷ்டப்படுறது ரொம்ப புடிக்கும். அது தான் அவன் முன்னாடி ஒரு பில்டிங் என்னோட லட்சியத்தை தடுத்து நிறுத்திடாதுன்னு காட்டணும்” கேமராவை திருப்பி அந்த கண்டைனரின் கதவை திறந்து அந்த இடத்தை மொத்தமாய் உதய் பார்க்கும் அளவு செய்தான்.
“இத பாத்து வயிறு எரிஞ்சு சாகட்டும் அந்த ஜென்மம்”
ஆதியின் வார்த்தை உதய் இதழ்களில் சிரிப்பை தான் தந்தது. சில நொடிகளே ஆதி அந்த இடத்தை காட்டினாலும் அத்தனையையும் உதய் தெளிவாக கவனித்துக்கொண்டான்.
ஆதியின் கோவமான முகத்தை பார்த்தவன், “ஆபீஸ என் பேர்ல மாத்துன எனக்கு அந்த காலி இடத்தை மாத்தி வாங்குறதுக்கு எத்தனை செகண்ட் ஆகும்ன்னு தெரியுமா?”
திமிராக புருவத்தை உயர்த்தி உதய் கேட்க கையை அந்த கண்டைனர் மேல் ஓங்கி குத்தி தன்னுடைய ஆத்திரத்தை ஆதி வெளிப்படுத்த, “நான் உன்னோட ப்ராஜெக்ட்க்கு மொத்தமா ஆப்பு ரெடி பண்ணிட்டு இருக்கேன்… நீ என்னடா சின்ன புள்ள மாதிரி டப்பா வச்சு வீடு கட்டுனதுக்கு இவ்ளோ சந்தோச படுற” நக்கலாய் சிரித்தான் உதய்.
“அத செய்றதுக்கு உன்ன விட்டா தான டா நீ பண்ணுவ… பாக்கலாம் என்னை மீறி நீ என்ன செய்ற-னு”
கையிலிருந்த கைபேசியை வெறித்து பார்த்த ஆதியின் தோளை தோட்ட தமிழ், “இதெல்லாம் எப்படா பிளான் பண்ண?” பேச்சை மாற்ற தமிழ் ஆர்வமாய் கேட்க, தற்போது சிந்தனை அத்தனையையும் தற்காலிகமாக விட்டு, “ஒருத்தன் வேர்வைலயே சிமெண்ட் மூட்டை எல்லாம் கட்டி கட்டியா மாறுதுன்னு கம்ப்லைன் வந்துச்சு அது தான்” ஆதவனை நோக்கி சிரிப்போடு கூறவே புரிந்துபோனது எல்லோருக்கும்.
ஆதி வரவழைத்திருந்த கண்டைனர் உள்ளே மூவரையும் தள்ளிவிட்டு நுழைந்த கெளதம் விழிகள் அங்கிருந்த அனைத்தையும் பார்த்து மெச்சாமல் இருக்க முடியவில்லை. நீளமான அந்த கண்டைனர் உள்ளே வலது புறம் ஒரு சிறிய மேஜையும், அதற்கு அருகில் பிளான் போட என ஒரு பெரிய மேஜையும் இருக்க இடது புறத்தில் கோப்புகளை, அல்லது முக்கியமான பொருட்களை வைக்க சிறிய வடிவில் அலமாரி ஒன்றும் இருந்தது. இவற்றை தாண்டி இறுதியாக ஒரு படிக்கட்டும் இருக்க அதில் மேல் ஏறி சென்ற ஆதவன் கண்கள் விரிந்தது.
பெரிய மீட்டிங் அறை போல் நீண்ட மேஜை ஒன்றும் சிறிய ஓய்வு அறை அமைப்பில் சிறிய மெத்தையும் அதான் அருகே ஒரு குளியலறையும் இருந்தது. மேல் தளம் மொத்தமும் எ.சி காற்று இப்பொழுது கூட வீசியது. அந்த அறையை தாண்டி சென்றால் பால்கனி அமைப்பில் இருந்தது.
தட தடக்க படிகளில் இறங்கி வந்த கெளதம், “டேய் கருவாயா உனக்கு எப்படி டா மூளை எல்லாம் வேலை செஞ்சது?” கேள்வியோடு இறங்கி வந்தவன் மீண்டும் அந்த இடத்தை அளக்க கண்கள் சென்றது.
“என்ன பண்றது… இந்த மூளை இருவது வருஷம் முன்னாடி வேலை செஞ்சிருந்தா சில பல ஜீவராசிகளையும் மீட் பண்ணாமயே சந்தோசமா இருந்துருப்பேன்” என்றவன் மேலும், “இனி இது தான் நம்ம ஆபீஸ். மேல மீட்டிங் ரூம், கூடவே ஒரு சின்ன ரூம், இன் கேஸ் ஒடம்பு சரியில்லாம ரெஸ்ட் தேவ படுறப்ப யூஸ் பண்ணிக்கலாம்”
“செம்மயா இருக்கு ஆதி ஆனா இதுக்கு ரொம்ப செலவு ஆகிருக்குமே” கண்டைனர் ஆகவே இருந்தாலும் உள் பக்க சுவர்கள் எல்லாம் மின்ட் கிறீன் நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் நிறம் தீட்டப்பட்டு அழகாய் காட்சியளித்தது.
“அதெல்லாம் இல்லடா பட்ஜெட் ப்ரன்ட்லி தான்… மேலயும் கீழயும் சேத்து மூணு லட்சம் தான் ஆச்சு. இந்த பர்னிச்சர் அது இதுன்னு ஒன்றை லட்சம். அவ்ளோ தான்”
நண்பனிடம் நல்ல பிள்ளையாய் கெஞ்சிய ஆதியின் பிடரியில் இரண்டு அடி போட்டு, “குடிகார கபோதி… குடிச்சு சாக எங்க ஆபீஸ் தான் உனக்கு கெடச்சதா?”
நாற்காலி ஒன்றை எடுத்தே ஆதியை தமிழ் அடிக்க வர அதை வாங்கி சிரிப்போடு வைத்த ஆதவன், “விடுடா… நாளைக்கே பூஜையை போட்டு ஆரமிப்போம். அதுக்கு முன்ன நான் ஒன்னு சொல்ல போறேன். எனக்கு நீங்க யோசிக்கிற ப்லோர்ஸ் எத்தனையோ இருந்தாலும் பரவால்ல அதுக்கு மேல ரெண்டு ப்லோர்ஸ்ல கம்ப்ளீட்டா ஒரு பெண்ட்ஹவுஸ் மாதிரி ஒன்னு டிசைன் பண்ணி தாங்க. மொத்தம் அஞ்சு ரூம் வேணும் அது எல்லாம் கண்டிப்பா பால்க்கனி இருக்கனும்.
ஒரு பெரிய ஹால், டைன்னிங் ரூம், பெரிய கிட்சன், ஒரு தியேட்ர் ரூம், இண்டோர் ஸ்விம்மிங் பூல், ஒரு ஹோம் ஆபீஸ், ஓபன் ஸ்பேஸ்ல பயர் பிட். இது எல்லாம் வச்சு லக்ஸுரி ஹவுஸ் வேணும். எவ்ளோ செலவு ஆனாலும் எனக்கு சுத்தமா கவலை இல்லை. எஸ்டிமேட் போட்டு கைல குடு ஒரே நாள்ல புல் அமௌன்ட் செட்டில் பண்ணிறேன்” ஆதவன் அடுக்கிக்கொண்டே போக மூவரும் என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்தனர்.
ஆனால் அதன் காரணத்தை அறிந்து எதுவும் பேசாமல் அமைதியாகிவிட அதற்கு மேல் மூவரையும் எதுவும் யோசிக்க விடாமல், “என்னடா எப்ப எஸ்டிமேட், பிளான் எல்லாம் என் கைக்கு வரும்?” என்றான் அதிகாரமாய்.
“ஆதவா தனியா லக்ஸுரி பில்டிங்ஸ் டிசைன் பண்ற அளவு எங்களுக்கு திறமையோ, அனுபவமோ இருக்கானு தெரியல டா” உள்ளே சென்ற குரலில் கெளதம் கூற, அவன் கூற்றை ஆமோதிப்பதாய் ஆதி, தமிழ் அமைதியாய் நின்றனர்.
“பழகிக்கோங்க டா” என்றான் ஆதவன் அசால்டாக.
“டேய் இது என்ன மல்லிகை வியாபாரமா? ஒரு நாள் விக்கலனா மறு நாள் கூவி கூவி விக்க கத்துக்கலாம்னு… கட்டிடம் டா. ஒரு சராசரி மனுஷனோட கனவு, ஆசை, ஏக்கம்… அதையும் தாண்டி பல உயிர் சம்மந்தப்பட்டது. இதுல எங்கையாவது ஒரு இடத்துல சொதப்புனாலும் நாங்க என்ஜினீயர்ன்ற பட்டத்துக்கே தகுதியில்லாதவனா மாறிடுவோம்” – ஆதி
“உங்க மேல நம்பிக்கை எனக்கு இருக்கு” – ஆதவன்
“எங்களை நம்பி இவ்ளோ பெரிய பொறுப்பை குடுக்காத. அவ்ளோ தான் சொல்லிட்டேன். உதய் கம்பெனில பேசு, சீனியர் ஆஃபீஸ்ர்ஸ் வந்து கச்சிதமா முடிச்சிடுவானுக, எனக்கு எந்த பிரச்னையும் அதுல இல்ல” மொத்தமாய் மறுத்தான் ஆதி.
“நீங்க தான் எனக்கு பண்ணனும். நீங்க மட்டும் தான். புரியுதா?”
அழுத்தி ஆழமாய் ஆதவன் கூறி மறு பேச்சிற்கே இடம் இல்லாமல் சென்றுவிட ஏற்கனவே உதய்யின் வார்த்தைகளால் மேலும் யோசனையில் ஆழ்ந்தான் ஆதி. எத்தனை தடைகள் தான் வந்து சேரும்?
*****************
பத்து அடி நீளம் பத்து அடி அகலம், மனதை சாந்தமாக்க வெள்ளை நிற சுவர் சாயம் கொண்ட அந்த படுக்கை அறை நிச்சயம் ஒரு நடுத்தர குடும்பத்தினருக்கு மன நிம்மதியை வழங்கும். அதிலும் ஒரு ஆள் தாராளமாக உறங்கும் அளவிற்கு பெஞ்சு மெத்தை, காற்றாட ஒரு மின்விசிறி, தேர்ந்தெடுத்த சில புத்தகங்கள், அவற்றை வைத்து படிக்க ஒரு மேஜை, நாற்காலி என சராசரி மனிதனுக்கு தேவைப்படும் அத்தனை தேவைகளும் அந்த சிறு அறைக்குள் அடுக்கியிருந்தது.
ஆனால் ஏழையாக பிறந்து, வாலிப வயதிற்கு மேல் பணத்தில் படுத்து எழுந்த மனிதனால் அந்த எளிய வாழ்க்கையுடன் ஒன்றி இரண்டு வாரங்கள் கூட இருக்க முடியவில்லை. சிறையே ஆனாலும், வி.வி.ஐ.பி ஈஸ்வரனுக்கு ஏனைய கைதிகளை போல் அல்லாமல் வசதியாகவே இருந்தது சிறை வாசம். வன்மம் மனதில் மண்டி கிடக்க, இருந்த அந்த சிறிய காலி இடத்தில் அறை மணி நேரத்திற்கும் மேலாக குறுக்கும் நெடுக்கும் உலாவிக்கொண்டே இருந்த மனிதருக்கு நள்ளிரவை தாண்டியும் உறக்கம் எட்டாக்கனியாக இருந்தது.
நிமிடங்கள் கடக்க அறை கதவை பார்த்துக்கொண்டே இருந்தவரை அதிகம் காக்க விடாமல் அவரின் கதவை திறந்து உள்ளே பயத்தோடு நுழைந்தான் ஈஸ்வரன் பி.எ.
“என்னடா இவ்ளோ நேரமா நீ வர? இந்த மயிருக்கெலாம் நான் காத்துட்டு இருக்கணுமா?” எடுத்த எடுப்பிலே காய்ந்தார் அவன் மேல்.
“சார் செக்யூரிட்டி எல்லாம் சமாளிச்சு வர லேட்டா ஆகிடுச்சு. கோவப்படாதிங்க”
“பேசிட்டு இருக்காத. எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா? இன்னைக்கு நான் அவன்கிட்ட பேசியே ஆகணும்” மேலும் உக்கிரமாய், ‘இன்று மட்டும் நீ செதப்பி பாரேன்’ எச்சரித்தது அவர் பார்வை.
“எல்லாமே செட் சார். கன்பர்மேஷன் வந்ததும் கூப்ட்டு பேசிடலாம்” என்றான் அவர் பி.எ.
அந்த நிமிடத்தையும் வீணடிக்க விரும்பாமல், “என்ன இங்க அனுப்பி வச்சிட்டு அந்த பரதேசி இந்நேரம் அவளோட கூத்தடிச்சிட்டு இருப்பானே… இருக்கட்டும் எல்லாத்துக்கும் இன்னையோட ஒரு முடிவு கட்டுறேன். அவ மேல கை வச்சா இவனுக்கு இங்க உறுத்ததோ? முடிக்கிறேன்… மொத்தமா கூண்டோட முடிச்சு விடுறேன் இவனுகல”
க்ரோத தீ பற்றிக்கொண்டு காட்டு தீயாய் உடலில் இருந்த ஒவ்வொரு செல்லும் உதய் மாதவனை, தன்னை தன் குடும்பம், வேலையாட்கள் முன்னாள் அவமானப்படுத்தியவனை தன் கையாலே கொல்லும் அளவிற்கு ஆத்திரம் எரிந்தது.
“பிசினஸ்ல என்ன பன்றான்?” மீண்டும் உதய் பற்றிய கேள்வி தான்.
“என்னால கம்பெனி உள்ள என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடியல சார். நீங்க உள்ள வந்த ஒடனே என்ன வெளிய அனுப்பிட்டாங்க. ஆனா அந்த யாழினி பொண்ணு இப்ப காலைல ஏதோ நர்சரி ஸ்கூல்ல வேலை பாத்துட்டு சாயந்தரம் ஒரு சின்ன ஹோட்டல்ல வேலை பாக்குது” – பி.எ
யாழினி மட்டுமே ஒரு நிம்மதியான செய்தியை கொடுத்துளாள் ஈஸ்வரனுக்கு, “பிச்சைக்காரி அவளுக்கு ஏத்த வேலைய தான் பாக்குறா” இளக்காரமான புன்னகை அவர் முகத்திற்கு சிறிது நேரம் மகிழ்ச்சியை தந்தது.
“அப்றம் சார் நம்மள பத்தி முதல உதய் சார் காதுக்கு நியூஸ் கொண்டு போனது ஆதவன் தான்” அவர் சற்றும் எதிர் பாராத தகவலை தந்தான் அவன்.
“எல்லாம் இவன் குடுக்குற இடம். கொஞ்ச நாள் தானே… இவன முடிச்சு விட்டா எல்லாரும் அடங்கிடுவானுக”
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ஏதோ செய்தி ஈஸ்வரன் பி.எ எண்ணிற்கு வர, “சார் பேசலாமா?”
“ம்ம்ம் அடி” என்கவும் அவன் ஈஸ்வரன் கையில் கைபேசியை கொடுத்தான்.
ரிங் சென்ற ஐந்தே நொடியில் அழைப்பை ஏற்று, “என்ன அந்த பக்கிங் பாஸ்டர்ட் கால் பண்ண சொன்னானா? வெளிய வந்த அஞ்சே நிமிசத்துல மொத்த குடும்பத்தையும் தூக்கிடுவேன்… சொல்லி வை டா அவன்கிட்ட”
எடுத்த எடுப்பிலே மொத்த வன்மத்தையும் வார்த்தைகளில் இறக்கிய அவசர புத்தியுடவன் சாட்சாத் நீரஜ் தழல் தான். ஒரு பக்கம் ஈஸ்வரனை உதய் வெளியில் வர விடாமல் வைத்திருக்க, அந்த பக்கம் நீரஜ் வெளியில் வர விடாமல் அரசு பார்த்துக்கொண்டது.
“என் குடும்பத்தை விட்டுட்டு அவனுகள நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ. வேணும்னா நானே உனக்கு ஸ்கெட்ச் போட்டு தர்றேன்” நீரஜ் வார்த்தைகள் ஈஸ்வரனுக்கு புது தெம்பை கொடுத்தது, அதனாலே மகிழ்ச்சியாக நிதானமாய் பேசினார்.
ஈஸ்வரனின் பேச்சை கேட்டு நீரஜ் புருவங்கள் முடிச்சிட்டது, “என்ன அந்த மாதவன் அடுத்த ஆட்டைய உன் மூலியமா நடத்த பாக்குறானா?” கடுமையாய் தான் இன்னமும் இருந்தது நீரஜ் வார்த்தைகள்.
“என் மானத்தை சந்தி சிரிக்க வச்சு ஜெயில்-கு அனுப்புனவன் கூட உறவாட நான் ஒன்னும் அறிவில்லாதவன் இல்ல. பிஸ்னஸ் மேன். அறிவு இருக்குற நீயும், தகவல் இருக்குற நானும் சேந்த்தா நடக்காதது கூட நடக்கும்” ஈஸ்வரன் உஷ்ணத்தை வெகு தொலைவில் இருந்தவன் அருகே அனுபவிப்பது போல் கத கதப்பாக இருந்தது நீரஜ் மனம்.
“வெளிய வராம என்னால ஒரு துரும்ப கூட அசைக்க முடியாது” ஆதங்கத்தில் ஈஸ்வரன்.
“அவனை பத்தி டீட்டைல்ஸ் மட்டும் எனக்கு தந்தா போதும், மீதியை நான் பாத்துக்குறேன்” கோணல் சிரிப்பு நீராஜின் இதழ்களில் விரிய அடுத்த ஒரு மணி நேரம் உதய்யின் மொத்த தகவலும் நீரஜ் வசம் இருந்தது.
“சொதப்பிடாத தழல், அவன் தப்பிச்சு கைல சின்ன க்ளூ கிடைச்சாலும் உன்னையும் என்னையும் ஜெயில்லயே பொதச்சிடுவான்… ஒரே ஒரு பேப்பர் போதும் நம்ம கதவ அவன் கண்டுபுடிக்க”
தந்தையின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தியவனுக்கு ஈஸ்வரனின் வார்த்தைகளை அது போலவே விட தோன்றவில்லை. ஒருமுறை நடந்த தவறின் பலன் கண் முன்னே இருக்க… தன்னுடைய திட்டத்தை மேலும் மேலும் உறுதியாக்க சிந்தனையில் மூழ்கினான்.