ஓரமாக சென்று ஆதி நின்று கொள்ள சில நிமிடங்களில் காவல்துறை வாகனம் ஒன்று வந்துவிட அதிலிருந்த காவல்துறையினர் வந்து முதலில் கமல்காந்த்தை ஆராய்ந்தவர்கள் அவன் மூச்சு காற்றை உணர்த்த பின்னர் ஹரி விஷ்ணுவின் வாகனத்தை உள்ளே உற்று பார்த்தனர்.
“சார் பெரிய இடம் மாதிரி தெரியுதே பசங்கள பாக்க” கான்ஸ்டாபில் இன்ஸ்பெக்டரிடம் கேள்வி எழுப்பினார்.
“சார் கில்லாடி சார் நீங்க” பூரித்தான் அந்த கான்ஸ்டாபில்.
“பசங்கள எதுவும் பண்ணிட வேணாம். வண்டிய டோ போட்டு இழுத்துட்டு வர சொல்லு. இவன நாம ஹாஸ்பிடல் எடுத்துட்டு போகலாம்”
“அட்றா சக்க” மறைந்திருந்து பார்த்த ஆதியின் மனதில் உற்சாகம்.
ஹரி, விஷ்ணுவின் பாதுகாப்பிற்கும் எந்த தீங்கும் வர கூடாது, தன்னை நம்பி வந்த கமல்காந்தின் நிலைமையும் தான் உடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த காவல் அதிகாரிகளின் பேச்சை உன்னிப்பாக கவனித்தான்.
இப்பொழுது அவர்களால் எந்த பாதிப்பும் இல்லை என்ற பிறகு தான் நிம்மதி. ஆதி மனதில் வேறு சில எண்ணங்களும் பய பந்தை உருட்டிக்கொண்டிருந்தது. உதய்யின் ஆட்கள். அவர்கள் மட்டும் வந்தால் மொத்த திட்டமும் வீணாகிடும் என்ற பயம் மனதின் வியாபித்தது.
“யாரு யா இன்பர்மேஷன் குடுத்தது?” – இன்ஸ்பெக்டர்
“தெரியல சார்… கால் பண்ணா போன் போகல… வண்டி வருது சார்…”
படபடப்புடன் ஆதி நிற்க, அவனுடைய பி.பியை ஏற்றாமல் சில நிமிடங்களில் அந்த வாகனம் வர விஷ்ணு, ஹரி இருந்த கார் அவ்விடத்தை விட்டு அகன்றது. அதன் பிறகு கமல்காந்தை பிடித்து வண்டியின் பின்னிருக்கையில் போட்ட காவல்துறையினர் வாகனத்தை எடுக்க மெதுவாக ஜன்னல் வழி எட்டி பார்த்த கமல்காந்த் ஆதிக்கு சிரிப்போடு டாட்டா கூற தலையில் அடித்து அவனை பின் தொடர சென்றான்.
அந்த பக்கம் உதய்யின் ஆட்கள் விஷ்ணு ஹரி இருவரையும் அந்த மொத்த இடத்தையும் புரட்டிப்போட்டு தேடிக்கொண்டிருந்தார்.
********************
இரவு மணி ஒன்பதை தாண்டி இருந்தது… அலுவலகத்திலிருந்து வந்த உதய், வீட்டிற்குள் போக மனமே இல்லாமல் அலுவலக பையை ஜெயன் கையில் கொடுத்து தளர்வாய் வீட்டின் வாசல்படியிலேயே அமர்ந்துவிட்டான். உள்ளே செல்ல மனமே இல்லை. அதனால் தான் நேரத்தை அதிகம் அலுவலகத்திலே செலவிட்டான்.
வீட்டினுள் நுழைந்தால் அன்னையின் நியாபகம், அந்த வீட்டில் அவர்கள் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களும் நினைவுகளும் வந்து ஆட்டி படைக்கும் உதய் மாதவனை. சகோதரர்களை விரைவாகவே வீட்டிற்கு அழைத்து செல்லும் அவன் அன்னை, உதய்யின் வரவிற்காக நிமிடத்திற்கொரு முறை வாசலை பார்க்கும் அன்னையை இத்தனை வருடங்களில் எத்தனை முறை நினைத்தாலும் மனம் துடியாய் துடிக்கும்.
அன்னையின் உடலில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனை அழைத்து சென்றவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது, செல்லும் வெளியில் எங்கும் ஒரு சிரிப்போடு பாதி மூடிய கண்களோடும் உதய்யின் முகத்தை கயாத்திரியின் ரத்த கரை படிந்த கைகள் வருடியதையும் அவர் வார்த்தைகளையும்,
“ஆதியையும், நம்ம குடும்பத்தையும் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கோ தம்பி…” எவ்வளவு கதறியிருப்பான் அன்று அன்னையிடம் தன்னை விட்டு செல்ல வேண்டாம் என்று… கேட்டாளா அந்த அன்னை?
அன்று அவர் கேட்டிருந்தால் இன்று இப்படி மனம் முழுதும் வெறுமையோடும், கண்களில் கண்ணீரோடும் யாருமே இல்லாத வீட்டில் எவரும் இல்லாதது போல் அமர்ந்திருக்க தேவை இல்லையே… மனதிற்கு ஒரு ஆறுதல் யாழினியின் இடைவிடா பேச்சும், அர்த்தமிலா அவள் கேள்விகளும். இப்பொழுது அதுவும் இல்லை.
ஒரு கட்டத்தில் எதற்காக உயிர் வாழ்கிறோம் என்ற எண்ணங்கள் கூட சில தினங்களாக வர துவங்கியது. ஆதி, யாழினி, குடும்பம் இவர்களின் பிரிவு ஒரு புறமென்றால், இன்னும் சில வாரங்களில் அன்னையின் இறந்த தினம் வரவிருக்கிறது. எப்படி அந்த நாளை கடத்த போகிறோம் என்ற பயம் கூட அதிகம் வந்தது. தளர்வாய் அப்டியே வாசலில் படுத்துவிட்டான். தரையில்…
அன்னிச்சை செயலாக கைகள் பிடிவாதம் செய்து யாழினியின் எண்ணிற்கு அழைத்தது. சில நொடிகளில் அழைப்பு ஏற்கப்பட்டது. திருமண பேச்சை துவங்கிய அன்னையிடம் சண்டையிட்டு அழுது வீங்கிய கண்களோடு மொட்டை மாடியில் படுத்திருந்தவளுக்கு ஆறுதலாய் இருந்தது தொடுதிரையில் தெரிந்த அவனுடைய விறைப்பான முகம்.
உதய்யின் புகைப்படத்தை பார்க்க பார்க்க கண்ணீர் துளிகள் வழிந்துகொண்டே இருக்க அழுகையை மீறி விசும்பலும் விடாது வர துவங்கியது. அன்று அவன் இல்லத்தில் அவன் மடியில் அமர்ந்த நொடியே அவனை மட்டுமே தன்னுடைய உலகமாய், மானசீகமாக கணவனாய் எண்ண துவங்கியவள் வேறு ஒருவனை அந்த இடத்தில் வைத்து கூட பார்க்க உடல் கூசியது.
திருமணம் வேண்டாம் என்று ஒரேடியாக மறுத்த மகளை ஆத்திரம் தீர அன்னை திட்டுவிட்டார். அதனாலே அவன் புகைப்படத்தை பார்த்து ரணமான இதயத்தை ஆற்றிக்கொண்டிருந்தாள். ஆனால் அடுத்த நிமிடமே உதய்யின் அழைப்பு வர, மீண்டும் ஏதோ வலி புதிதாக ஆழமாக உருவாகியது. அவளுக்கு எப்படி தெரியும், தன்னை ஆட்டி வைத்த ஈஸ்வரன் சிறையில் உள்ளான் என்று?
அழைப்பை எடுக்காமல் விட்டால் அவனுக்கு என்ன மரியாதை என்று உடனே அழைப்பை ஏற்றாள் கண்களை துடைத்து. அழைப்பை ஏற்றும் இரண்டு பக்கமும் அமைதி மட்டுமே இருக்க, “இருக்கியா?” ஆடவனின் குரலும் தடுமாறியதோ?
“ம்ம் இருக்கேன் சார்” அழுகையை கட்டுப்படுத்துவது அவளுக்கு சவாலாக தான் இருந்தது… ஆனால் அதையும் தாண்டி அவனுக்கு இன்னும் தன் மேல் இருந்த பிரியமும் அவள் மனதிற்கு சுகத்தோடு வலியை தந்தது.
“என்ன பண்ற யாழினி?”
“சும்மா… மாடில இருக்கேன் சார்”
“சந்தோசமா இருக்கியா யாழினி?”
இல்லை என்று தலை ஆடியது ஆனாலும் நாவோ, “எனக்கு என்ன சார்? சந்தோசமா இருக்கேன்” என்றது.
“ஆபீஸ் வரலாமே…”
“இல்ல சார் வேணாம்… வேற இடத்துல வேலைக்கு போறேன். நிம்மதியா இருக்கேன் சார்”
“இங்க உன்ன நிம்மதியா நான் இருக்க விடலன்னு சொல்றியா யாழினி?”
“சில விசயங்கள் பேசாம அப்டியே விடுறது தான் சார் நல்லது” மௌனம் அவனிடம்.
அவன் குரலில் இருந்த ஏக்கமும் ஏமாற்றமும் உணர்ந்தே இருந்தாலும் தன்னை எப்பொழுதும் யாரோ கண்காணிக்கும் எண்ணம் பெண்ணுக்கு அதிகம் இருந்தது. ஈஸ்வரனின் பார்வை வட்டத்தினுள் வந்தது புரிந்தாலும் அந்த வட்டத்தை தூசியை போல் தட்டி உடைக்கும் ஆற்றல் அவள் மனதை பறித்தவனுக்கு அதிகம் உள்ளது என்பதை உணர மறைந்துபோனது குடும்பத்தை தன்னை விட அதிகம் நேசிக்கும் யாழினியின் மனம்.
“பேசாம இருக்காத யாழினி… ஏதாவது பதில் பேசு”
“என்ன சார் பேசுறது? நமக்குள்ள பேச என்ன இருக்கு?” சற்றே குரல் உயர்ந்தது அது தன்னுடைய உணர்வுகளை மறைப்பதற்காக கூட இருக்கலாம்.
“இத்தனை நாள்ல உனக்கு ஒரு நிமிஷம் கூட என் மேல நம்பிக்கை வரலையா? இல்ல உனக்கு நம்பிக்கை தர்ற மாதிரி நான் நடந்தது இல்லையா யாழினி?” இதழ்களை கடித்து அழுகையை அடக்கியவள் வார்த்தைகளையும் விழுங்கினாள்.
உதய்க்கோ நெஞ்சம் அடைத்தது அவள் அமைதியும் அவனை சுற்றியிருந்த இருளும். ஏதாவது ஒரு ஏக்கமோ வேதனையோ அவள் குரலில் தெரியாதா என்ற அவன் ஆசை நிராசையாகவே மாறியது.
“இல்லன்ற ஒரே காரணத்துல தான் உங்கள பாக்க கூட நான் வரல-னு நான் என் வாயால சொல்லனுமா சார்?” செத்து செத்து மடிந்தாள் யாழினி தன்னுடைய ஒவ்வொரு பொய்யிலும், அது பொய்யாகவே இருந்தால் பரவாயில்லையே… அவள் பேசுவது ஒவ்வொன்றும் அவனின் பாசத்திற்கு தான் செய்யும் துரோகமாக தான் தெரிந்தது.
வேதனை நிறைந்த அவன் மெல்லிய சிரிப்பு அவள் காதுகளை அடைந்து கொன்றது, “சார்…” என்ன முயன்றும் அந்த நொடி தன்னுடைய தவிப்பை யாழினியால் மறைக்க முடியவில்லை.
“என்ன யாழினி இது… சார் அப்டி இப்படின்னு? உனக்கும் எனக்கும் எதுவும் இல்லடா மடையானு சொல்லிட்டு எதுக்கு மரியாதை எல்லாம் வருது?”
“அப்டி எல்லாம் இல்ல சார்… புரிஞ்சுக்கோங்க”
“புரிஞ்சிட்டேன் யாழினி. இப்ப தான் எல்லாமே புரிஞ்சிட்டேன்… நம்மள ஆசையா பாசத்தோட உரிமையோட பாத்துக்குறதுக்கு ஒருத்தர் வர எல்லாம் ஒரு ராசி வேணும்”
மீண்டும் சிறு சிரிப்பு அவனிடம், “ஓகே… பீ ஹாப்பி. உனக்கு வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாங்கனு சொன்னல… கங்ராட்ஸ்”
நொடி பொழுதில் இணைப்பு துண்டித்துவிட அவன் குரலில் தெரிந்த பரிதவிப்பை உணர்ந்தவள் மனம் கதறி அழுதது, எத்தனை ஆசையாய் அவள் மடியில் அன்று கிடந்தான்… இதுநாள் வரை எவரிடமும் மனம் திறவாதவன் அன்று மனதில் இருந்த வலியை அவளிடம் பகிர்ந்துகொண்ட பொழுது வழிந்த கண்ணீர் கூறியதே அவன் வாழ்க்கையின் அவள் இடத்தை…
அத்தனையையும் தானே உடைத்து அவன் மனதையும் உடைத்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சி மட்டுமே மிஞ்சியது. அத்தனையையும் உதறி அவன் தோளில் சாய்ந்து அவனுக்கு ஆறுதலாய் மாற துடித்தாலும் இத்தனையையும் பேசி அவன் முன் நிற்க கால்கள் கூசியது. தரையின் சூட்டையும் மறந்து மடங்கி படுத்து அழுத்தவளுக்கு ஆறுதல் அந்த நிலாவாய் கூட இருக்க முடியவில்லை.
கைபேசியை தூரம் வைத்து அப்படியே வெறும் தரையில் கிடந்தவன் காதில் அவள் வார்த்தைகள் விழுந்துகொண்டே தான் இருந்தது. அவள் வார்த்தைகளை தாண்டி ஒலித்த அவன் கைபேசியை எடுத்து பார்த்தான். மணிமேகலை.
ஓரளவு யூகித்துவிட்டான். ஆதியின் பூமி பூஜையில் இருந்த மணிமேகலையை பார்த்த உடனே புரிந்து போனது அவர்கள் இருவரின் உறவை. எப்பொழுது வேண்டும் என்றாலும் அவள் மாமன் மகள் அழைப்பாள் என்று எதிர்பார்த்தான். நண்பனுடைய காதலாவது கை கூடட்டும் என்ற எண்ணத்தோடு அழைப்பை ஏற்றான்.
“மாமா…” எப்பொழுதும் குதூகலமாக வரும் மாமன் மகள் குரல் அல்ல அது.
“என்ன மணி இவ்வளவு சோகம் குரல்ல?”
“மாமா நான் ஒன்னு சொன்னா நீங்க கோவ பட கூடாது” சிரித்தான், “பச்சை கொழந்த மேல கோவம் வருமா மணி? நீ கொழந்த டா. தப்பு பண்ணிருக்க மாட்ட” என்றான் புன்னகை மாறாமல்.
“நீங்க ரொம்ப ஸ்வீட் மாமா… ஆனா நான் மிஸ்டேக் பண்ணிட்டேன் தான். அப்பாவை நினைச்சா பயமா இருக்கு மாமா” பயம் அவள் குரலில் பளிச்சிட்டு தெரிந்தது.
“நீ பண்ணது பெரிய தப்பு இல்லடா” – உதய்
“மாமா உங்களுக்கு தெரியுமா? அப்ப நான் தப்பு பண்ணலல?” உற்சாகம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது மணிமேகலையின் குரலில்.
“பூஜைல நீ இருந்தத பாத்தேன்… மாமா கிட்ட சொல்லிட்டியா?”
உதய் அமைதியாகிவிட்டான், “அவங்க சொன்னாங்க மாமா… நீங்க யாழினிய லவ் பண்றத”
சிரித்தான் ஆடவன்., “அவன் ஒரு லூசு டா… வக்கிறேன்”
ஏதோ ஒரு வித சோர்வோடு எழுந்தவன் வீட்டிற்குள் சென்று குளித்து உடையை மாற்றி உறக்கம் வராமல் மொட்டை மாடிக்கு சென்றான். நிலவை பார்த்து அமர்த்திருந்தவன் மனதில் அதனிடம் ஓராயிரம் கேள்விகள் கேட்டது. சிதறி கிடந்த மின்மினிகள் கூட அவன் கேள்விகளுக்கு பதில் கூறாமல் சிரித்துக்கொண்டிருந்தது. உதய்யை தேடி வந்த ஜெயன் மூச்சு வாங்க உதய்யை பார்த்து நின்றான்.
“சொல்லுங்க ஜெயன். இந்த நேரத்துல என்ன அவசரம்?”
“ஹரி விஷ்ணு ஜெயில்ல இருக்காங்க” சற்றும் எதிர்பாராத செய்தி அது, சட்டென இடத்திலிருந்து எழுந்தான் உதய்.
“என்ன பிரச்சனை ஜெயன்?”
“ட்ரங்க அண்ட் டிரைவ் சார்”
“யாருக்கும் எதுவும்….??” பயத்தோடு வேகமாக கேட்டான்.
“இல்ல சார் மைனர் இன்ஜூரி தான்” கோவத்தில் உதய்யின் முகம் சிவந்தது. ஒரு உயிரை இழந்தது போதாதா? இதற்காக தானே சகோதரர்களிடம் அத்தனை முறை சிறு குழந்தைகளுக்கு கூறுவது போல் பாடம் எடுத்தான்…
“அவங்க ட்ரிங்க்ஸ் பண்ணிருக்குறப்ப எதுக்கு டிரைவ் பண்ண விட்டீங்க ஜெயன்?” என்ன தான் இருந்தாலும் சகோதரனின் மனம் வாடவும் செய்தது.
“சார்.. ஆதி சார் தம்பிக இருந்த பார்ல வந்து பிரச்சனை பண்ணிருக்கார். அத பாத்துட்டு இருக்கறப்ப தம்பிக அந்த பக்கம் போய்ட்டாங்க”
“பார்ல இருந்த கேமரால பாதப்ப தம்பிக கார் கண்ட்ரோல்ல இல்லாம தான் இருந்துருக்கு. ஆனா அவங்க கார் போன வேகத்துக்கு ஆக்சிடென்ட் ஆன பையன் இவ்ளோ சின்ன காயத்தோட இருந்தது தான் சார் சந்தேகமா இருக்கு…” – ஜெயன்
“இடியட்ஸ்… இப்படியா சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாம இருப்பாங்க?” சகோதரர்களை அர்ச்சித்துக்கொண்டிருந்த உதய்யின் கைபேசி மீண்டும் அடித்தது.
அழைப்பு ஆதியிடமிருந்து வர உடனே எடுத்து காதில் வைத்தான், “என்னடா நீ இன்னும் தூங்கலயா?” ஜெயன் கூறியது போல் முழு போதையில் இருப்பவனிடம் இருக்கும் உளறல் வார்த்தைகள் சற்றும் இல்லை, நிதானமாக ஏளனமாக வந்தது ஆதியின் குரல்.
“நீ எப்படி தூங்குவ? உன் தம்பிக தான் அங்க ஜெயில்ல இருக்காங்கல… ச்ச அங்க கொசு அடிக்க கூட ஆள் இருக்காதே” பரிகாச குரலில் பாவப்பட்டான்.
“பேசாம குடும்பமா அங்க போய் ஒக்காந்துக்கோங்களேன்” எத்தனை நாட்கள் எதிரி நாடு மன்னர்களை போல் சண்டையிட்டு வசனம் பேசிக்கொண்டே இருக்க என்ற எண்ணம் தான் வந்தது, சகோதரர்களை சிறைக்கு அனுப்பியது இவன் தான் என்று தெரிந்தும். எவருடனும் சண்டையிடும் நிலையில் இல்லை அவனும், “ஆதி…” நிதானமாக அழைத்தான்.
“வேணாம் உதய் சார்… நீங்க கீ குடுத்தா மட்டும் தான் எல்லாமே நடக்குமா என்ன?”
வெளியில் தந்தையின் அலுவலகம் தனக்கு இல்லாதது வருத்தம் தரவில்லை என்றாலும் உள்ளுக்குள் சொல்ல முடியாத கோவம் இருந்தது ஆதிக்கு,
“பணம் எல்லா இடத்துலயும், யார் தூண்டிவிட்டாலும் சத்தமா பேசும் உதய் சார்” அழுத்தமாக இதற்கு நான் மட்டுமே காரணம் என்று நேரடியாக கூறி முடித்தான்.
அடிபட்ட பாம்பாய் சீரியவனின் வேதனை புரிந்துவிட அவனிடம் பேசி பயன் இல்லை என்று உணர்ந்து பேச்சை நிறுத்திக்கொண்டான் இணைப்பை துண்டித்து.
“அவங்க அங்கையே இருக்கட்டும் ஜெயன்” – உதய்
“சார்…” நம்ப முடியவில்லை முதலாளியின் பேச்சை.
“சரியா தான் கேட்டுச்சு ஜெயன், விடுங்க. சொல்லி திருந்தாதவங்க பட்டு திருந்தட்டும். நாளைக்கு வண்டி ஓட்டுனவன் அங்கையே இருக்கட்டும். இன்னொருத்தன கூட்டிட்டு வந்துக்கலாம்”
இதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்று சென்றவனை மேலும் பேச்சில் பிடித்து நிறுத்த முடியவில்லை ஜெயனால்.
மறுநாள் காவல்நிலையத்தில் இருந்து விஷ்ணுவை பிடித்து வெளியில் இழுத்து வந்த ஜெயன் ஹரியை அங்கேயே விட்டு வந்தான். ஜெயன் பின்னால் சகட்டுமேனிக்கு கத்திகொண்டே வந்த விஷ்ணு உதய்யின் காரை வெளியில் பார்த்ததும் உள்ளே சென்று அமர்ந்துகொண்டான்.
“எதுக்கு என்ன மட்டும் வெளிய எடுத்த… அவனையும் எடு” ஆணையிட்டான் சகோதரனுக்கு.
“நீயும் வரியா என்கூட?” சம்மந்தமே இல்லாத கேள்வியை கேட்டவன், “போகலாம் ஜெயன்” அவசரமே இல்லாமல் பேசிய சகோதரன் மேல் விஷ்ணுவிற்கு வெறுப்பு வளர்ந்துகொண்டே சென்றது.
“ஆக்சிடென்ட் நாங்க பண்ணல… அந்த கிறுக்கன் போய் சொல்றான்” கத்தினான் அந்த மைதியான வாகனமே அதிரும்படி, “அவன் மேல வண்டிய இடிக்கிறதுக்குள்ள ஹரி பிரேக் போட்டுட்டான்”
“தெரியும் உங்க மேல தப்பில்லன்னு” நாளிதழை எடுத்து புரட்டியவனின் அலட்சியம் சுத்தமாக அங்கிருந்த ஜெயனுக்கு கூட புடிக்கவில்லை.
“தெரிஞ்சு ஏன் இப்டி எல்லாம் பண்ற? உன்ன எல்லாம் நம்பி தானே இருக்கோம் நாங்க எல்லாரும். முதல மாமா, இப்ப ஹரி. என்ன தான் கிடைக்கிது உனக்கு? தயவு செஞ்சு எங்க குடும்பத்தை விட்டு போய்டு நீ… உன்னால நான் அதிகமா நேசிக்கிற எல்லாரும் என்ன விட்டு போகுறாங்க” வெறுத்துவிட்டான் விஷ்ணு சகோதரனை.
பார்வை செய்தித்தாளில் இருந்தாலும் அதிலிருந்த ஒரு எழுத்து கூட உதய்யின் கவனத்தை ஈர்க்கவில்லை. தான் சில தினங்களாக யோசித்துக்கொண்டிருக்கும் எண்ணங்களை தான் சகோதரனும் கூறியிருக்கிறான்.
“சார் கேஸ் எல்லாம் பைல் பண்ணல சார்… அடிபட்ட பையன ரெண்டு தட்டு தட்டுனா உண்மைய சொல்லிடுவான் சார். அந்த பையனோட கை தடம் கூட கார் மேல இல்ல. ஹரி சார் ரொம்ப பாவம் சார்” ஜெயனும் தன் பங்கிற்கு சமாதான வார்த்தைகளை கூறினான் முதலாளிக்கு.
நீ பேசிக்கொண்டே இரு என்று அடுத்த சில நிமிடங்கள் உதையிடமிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. மணிமேகலையின் இல்லத்தை பார்த்த விஷ்ணு, “இங்க எதுக்கு வந்துருக்க, ஜெயன் உங்க போன் தாங்க”
காரை விட்டு உதய்க்கு முன்னாள் இறங்கியவன் தன்னுடைய தந்தைக்கு அழைத்து அத்தனையும் விடாமல் ஒபிதித்துக்கொண்டிருக்க அவனை சட்டை செய்யாமல் வீட்டிற்குள் நுழைந்ததும் சோபாவில் அமர்ந்திருந்த மணிமேகலையின் தந்தை முன்னே அமர்ந்துகொண்டான்.
“அடடே உதய்… உனக்கு நூறு ஆயிசு தான் போ. நானே உன்ன பாக்க வரணும்னு நெனச்சேன்” – செந்தமிழரசன்(மணிமேகலையின் தந்தை, நளினியின் உடன் பிறந்த சகோதரர்)
உதய்யின் சத்தம் கேட்டு வேகமாக படி இறங்கி வந்த மணிமேகலை முகத்தில் சிறிதும் பயம் இல்லை. உதய் கூறினால் நிச்சயம் அவன் தந்தை மாரு வார்த்தை பேசாமல் ஆதிக்கு டிக் போட்டுவிடுவார் என்ற சந்தோஷத்தில் வரவேற்பறை அருகே இருந்த உணவு மேஜையில் சுவாரஸ்யமாக கதை கேட்க தயாராக அமர்ந்தாள்.
மணிமேகலையை பார்த்தவன், செந்தமிழரசனை பார்த்து, “நானும் உங்ககிட்ட முக்கியமான விசியம் பேச தான் மாமா வந்துருக்கேன்” என்றான்.
“இல்ல உதய் உன்ன நான் இப்ப பேச விட மாட்டேன். கொஞ்சம் இரு” எழுந்து சென்றவர் திரும்பி ஒரு புகைப்படத்துடன் வந்தார் அந்த இடைவேளையில் மணிமேகலை அவனை ஆர்வமாய் பார்க்க விழிகள் மூடி திறந்து தைரியம் கூறினான்.
“இது நான் மணிக்கு பாத்துருக்குற பையன். பேர் ராம் பிரகாஷ். புதுசா இப்ப தான் ஒரு ஹாஸ்பிடல் கட்டி நிர்வாகம் பண்ணிட்டு இருக்கான். குணத்துல தங்கம், யாரும் சொன்னப்ப கேக்காம நானே அவனை கடந்த ரெண்டு வாரமா பாத்துட்டே தான் இருக்கேன். நம்ம மணிய சந்தோசமா வச்சுக்குவான். நீ நோ சொல்லிடாத… மாமா மனசு கஷ்டப்படும்”
சிரிப்பு அவர் இதழ்களில் இருந்து சிறிதும் மறையவில்லை, கண்களோ உதய்யின் பதிலை ஆர்வமுடன் எதிர்பார்த்தது. அவர் நீட்டிய புகைப்படத்தை சில நொடிகள் மௌனமாக பார்த்து தங்கள் எதிரில் இருந்த டீபாயில் வைத்தான்.
“நான் நோ சொல்ல போறதில்லை மாமா… அதே நேரம் நான் சொல்றத கேட்டுட்டு நீங்க உங்க பதில் என்னனு சொல்லுங்க” அவரின் கண்களை முதல் முறை சந்திக்க தவறினான் உதய்.
“நீ தப்பு செய்றவன் இல்ல உதய்” அவன் தயக்கம் உணர்ந்து ஊக்குவித்தார் அவர், “உன் மாமாகிட்ட எதுக்கு தயக்கம்?”
நீண்ட நெடிய மூச்சை விட்டவன் கண்களை மூடி திறந்து தலையை உயர்த்தினான், “எனக்கு மணிய கல்யாணம் பண்ணி தர்றிங்களா?”