அத்தியாயம் 3_ 1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:2,147
அத்தியாயம் 3
காற்றைப் பிடித்து கைகளில்
சேமித்தேன், அது மாயமானது
உந்தன் காதலைப் போல!!!
அவனை எப்படி எதிர்க் கொள்ள என்று தயக்கத்துடன் ரேகா வெளியே வர அவனோ அவர்கள் அமர்ந்து சாப்பிட்ட அதே டேபிளில் தான் அமர்ந்திருந்தான்.
அவன் அங்கே அமர்ந்திருப்பது தெரிந்தாலும் ரேகா அவனை நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்த படியே தான் வந்தாள். அவனோ அவளையே தான் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் அவனைப் பார்க்க வில்லை என்றாலும் அவன் தன்னையே தான் பார்க்கிறான் என்பதை அவளால் உணர முடிந்தது. ஆனால் அவன் எந்த கண் கொண்டு தன்னைப் பார்க்கிறான் என்று மட்டும் அவளுக்கு புரிய வில்லை.
தன்னை கேவலமானவள் என்று எண்ணி பார்ப்பானோ என்று தவித்துப் போனாள். அவனோ அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். கூடவே அவள் என்ன நினைக்கிறாள் என்றும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
“நேரம் ஆகிட்டு. வா கிளம்பலாம்”, என்று சொல்லி ஜீப்பை நோக்கிச் சென்றவன் அவள் வருகிறாளா என்று பார்த்து அவளையும் அழைத்துச் சென்றான்.
ஜீப் அருகே வந்ததும் “ஏறு போகலாம்”, என்று சொல்லி ஏறி அமர்ந்தான். அவள் ஏறியதும் “கதவை சரியா மூடிருக்கியான்னு பாத்துக்கோ”, என்று அவன் சொன்னதும் அவனது அந்த அக்கறை அவளுக்கு அவளுடைய தந்தையை தான் மீண்டும் நினைவு படுத்தியது. தாய் தந்தை மறைவுக்கு பின்னர் அவளை அவளே தான் பார்த்துக் கொண்டாள்.
பீஸ் கட்டுவதோடு சரி, வேறு எதிலும் சங்கரன் கலந்து கொள்ள மாட்டார். படிக்கும் போது முக்கியமான நிகழ்வுகளுக்கு கூட அவள் தனியே தான் செல்வாள். அப்படிப் பட்டவளுக்கு இன்றைய அவனின் அக்கறை அவளை நிம்மதி இழக்க வைத்தது. ஏற்கனவே அவன் கைக்குள் இருந்த அந்த நிமிடங்களுக்கு வேறு அர்த்தம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள். கல்யாணம் பற்றிய தவிப்பு வேறு அவளை பாடாய் படுத்தியது.
அவனது அந்த அக்கறை வேண்டும் போலவும் இருந்தது. அது அக்கறையா கருணையா இரக்கமா என்ற குழப்பமும் இருந்தது. அவளுக்காக அவன் பார்த்து பார்த்து செய்வதை ரசிக்கும் அவளது மனம் அடுத்து என்ன என்பதில் பயந்து போய் இருந்தது.
அவளுடைய தவிப்பும் கேள்வியும் அவனுக்கு புரியுமா? அவன் பார்வையும் அவன் செய்கையும் பிடித்து தொலைத்ததில் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவளுக்கு ரணமாக வலித்தது. மீண்டும் ஜீப் புறப்பட்டது. இருவருக்குள்ளும் மௌனமே ஆட்சி செய்தது. ஜீப்பில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
பனி விழும் மலர்வனம் … உன் பார்வை ஒரு வரம்… இனி வரும் இனி வரும்… என்ற பாடல் ஆரம்பித்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் ஒரு நொடி பார்த்து விட்டு முகத்தை உடனே திரும்பி கொண்டார்கள்.
அந்த பாடல் வரிகள் இருவரையும் கட்டிபோட்டது. இது வரை எந்த ஆணும் தொடாத அவள் மனதை ஊர் பேர் தெரியாதவனின் விழிகள் தொட்டு விட்டது. மனதை மட்டும் அல்ல அவளது உடலையும் தான் அவன் தொட்டு விட்டான்.
அவனை நினைத்து சந்தோஷம் கொள்ளும் போதே யாரென்றே தெரியாத ஒருவனுடன் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து என எவ்வளவு பெரிய எல்லையைத் தொட்டு விட்டோம் என்று எண்ணி அவள் மனது பாரமாகவும் ஆனது.
அதை விட கொடுமையான விஷயம் இன்னும் சிறிது நேரத்தில் யாரென்றே தெரியாத ஒருவனுடன் அவளுக்கு திருமணம் வேறு. இந்த கொடூரமான விதியை என்னவென்று சொல்ல?
தன்னுடைய மனதில் தனக்கான மாணாளன் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணினாளோ அப்படி ஒருவன் அருகில் இருக்கிறான். ஆனால் எப்படி இருக்கிறான் என்று கூட தெரியாத ஒருவனுடன் சற்று நேரத்தில் அவளுக்கு திருமணம். இதில் இவனுடன் ரொமான்ஸ் வேறு.
“நான் தான் தப்பானவளா? இவ்வளவு வருஷமும் என் மனசு சலனப் பட்டதே இல்லையே? இன்னைக்கு மட்டும் எனக்கு என்ன ஆச்சு? இவன் என்ன சொன்னாலும் என் மனசு ரசிச்சு தொலைக்குதே? எதுக்கு எடுத்தாலும் இவனையும் அப்பாவையும் என் மனசு எதுக்கு சம்பந்தப் படுத்திப் பாக்குது? இவன் வேற என்னைப் பத்தி என்ன நினைக்கிறான்னு தெரியலை. என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சா தேவலை. ஐயோ தலை வலிக்குது. நான் ஏன் இப்படி சபலத்துக்கு ஆளானேன்? எனக்கு வந்தது சபலமா? காதலா? காதல் எப்படி பெயர் தெரியாதவன் மேல் வரும்? இவன் மேல எனக்கு எப்படி காதல் வந்துச்சு. அதுவும் பாத்து கொஞ்ச நேரம் கூட ஆகலையே? ஐயோ இவன் யாருன்னே தெரியாதே?”
“இவன் என்னைக் கூப்பிட மாமா அனுப்பின டிரைவர் தானே? இவனுக்கு ஒரு வேளை கல்யாணம் ஆகிருக்குமோ? நான் அவனை திரும்பி திரும்பி பாத்ததுனால என்னை யூஸ் பண்ணிக்கிட்டானா? இவன் நல்லவனா? கெட்டவனா? ஏதாவது பேசுறானா பாரு? தீவிரமா ஏதோ யோசிக்கிறானே? என்னவா இருக்கும்? நான் அவன் முத்தத்தை ஏத்துகிட்டு நின்னேன்னு என்னை வேற எதுக்கும் கூப்பிட்டுருவானோ? சே சே, இவன் இப்படி எல்லாம் கிடையாது. ஐயோ என்னோட முதல் முத்தம் இப்படியா நிகழ வேண்டும்? இப்ப நான் என்ன செய்வேன்”, என்று எண்ணினாள் ரேகா.
திடீரென்று அவளை திரும்பி பார்த்தான் அவன். அவளும் அவனை திரும்பி பார்க்க அவன் ஏதோ சொல்ல வாயெடுக்கும் போது “பிளீஸ் எதையும் என்னைப் பத்தி தப்பா சொல்லிறாதீங்க. எல்லாமே என் தப்பு தான். நான் ஏன் இப்படி செஞ்சேன்னு தெரியலை. நான் அப்படி பட்ட பொண்ணு எல்லாம் கிடையாது”, என்று அவசரமாக சொன்னாள் ரேகா.
அழகாக நடந்த அந்த தருணத்தை ஏதாவது சொல்லி அவன் கொச்சப் படுத்தி விடுவானோ என்று பயந்து போனவள் அவனை பேசவே விட வில்லை.
அவள் பேச்சு புரியாமல் அவளை குழப்பமாக பார்த்தான் அவன். இது வரை இருந்த மயக்கம் தொலைந்து ஒரு ஆராய்ச்சி அவன் பார்வையில் வந்திருந்தது.
அவள் விலகலான பேச்சில் அவன் நெஞ்சில் கனல் மூண்டது. எதை எதையோ சொல்ல துடிக்கும் அவன் உதடுகளை வார்த்தையால் கட்டிப் போட்ட ரேகா மேல் எரிச்சலாக வந்தது.
அப்படியும் “ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளேன்”, என்றான் அவன்.
“தயவு செஞ்சு நீங்க எதுவும் பேசாதீங்க. நான் கொஞ்சம் அமைதியா இருக்கணும்”, என்று சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டாள் ரேகா. முகம் திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்கும் அவளை முறைத்து பார்த்தான்.
அதையும் மீறி அவளிடம் பேச அவன் மனது தூண்ட “ஒரே ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளேன்”, என்றான் மீண்டும்.
“நான் என் மனசை கல்லாக்கி கிட்டு தான் வந்துட்டு இருக்கேன். அந்த கல்லு மனசை கரைக்கிற வித்தை உங்க கிட்ட இருக்குனு எனக்கு புரிஞ்சிருச்சு. இப்ப நடந்தது எல்லாமே கனவு தான். கனவு அழகா இருக்கலாம், ஆனா நிதர்சனம் வேற. நீங்க இப்ப சொல்ற எந்த வார்த்தையும் என்னை உடைச்சு போட்டுரும். உங்களுக்கு என் மேல கொஞ்சமே கொஞ்சம் கருணை இருந்தா என் கிட்ட எதுவும் பேசாதீங்க”, என்று இரு கை எடுத்து கும்பிட அதற்கு பின் அவன் எப்படி வாயை திறப்பானாம்?
அவன் வாயை மூடின பின்னர் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் அவள் மனது மட்டும் சிந்தனையிலே இருந்தது. அவன் தன்னைப் பத்தி என்ன நினைத்திருப்பான்? தான் ஏன் இவ்வாறு நடந்து கொண்டோம்? இது வரை எந்த ஆணிடமும் தான் தடுமாறியதில்லையே? இனி மனதால் இன்னொருவனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கல்யாண மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்ல? அவனுக்கு தான் வேறொருவனை முத்தமிட்டது தெரிந்தால் என்ன ஆகும்? இந்த கல்யாணம் நின்றால் முத்தமிட்ட இவனையே திருமணம் செய்ய வாய்ப்பு வருமா? ஒரு வேளை இவனுக்கு திருமணம் ஆகியிருக்குமா? என்று விதவிதமாக எண்ணிக் கொண்டிருந்தாள்.
ஒரே ஒரு நிமிடம் அவன் சொல்வதைக் கேட்டிருந்தால் பின்னாளில் வரும் கஷ்டங்களை அவள் தவிர்த்திருக்கலாம். ஆனால் இதை அவளுக்கு யார் சொல்வது?
“இவனை ஏன் எனக்கு நல்ல படியா அறிமுகம் செஞ்சு வைக்காம போன கடவுளே? என்னால இவன் கூட கழிச்ச இந்த அழகான தருணங்களை மறக்க முடியுமா? இன்னும் கொஞ்ச நேரத்துல தாலி கட்டப் போறவன் கிட்ட வந்தாலே எனக்கு இவன் நினைவு தானே வரும்? இவன் ஒரு வேளை மாப்பிள்ளையோட பிரண்டா இருந்தா? படத்துல எல்லாம் வர மாதிரி என்னை இதைச் சொல்லி பிளாக் மெயில் பண்ணுவானோ?”, என்று தப்பு தப்பாக யோசித்தாள்.
“இவனைப் பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியலை. கடவுளே எதுக்கு என்னை இன்னும் இந்த பூமில வச்சிருக்க?”, என்று தலையை பிடித்துக் கொண்டாள்.
“தெரியாம தான் அவன் தான் உலகம்னு அவன் நெஞ்சில் சாஞ்சி நின்னியா?”, என்று கேள்வி கேட்டது அவள் மனது.
“அதானே, நான் ஏன் அப்படி நின்னேன்? எனக்கு ஏன் அப்ப அப்படித் தோணுச்சு. நான் அப்படி அவன் நெஞ்சுல சாஞ்சு அவனைக் கட்டிப் பிடிச்சப்ப அவன் என்னை அவ்வளவு அசிங்கமா நினைச்சிருப்பான்? இப்ப அதை பத்தி தான் பேச வந்தனா? நல்லதா போச்சு அவனை அமைதியா இருக்க சொல்லியாச்சு. என்னை ஆம்பளைக்கு அலையுறவன்னு எல்லாம் பேசிட்டான்னா என்னால சத்தியமா தாங்கிக்க முடியாது. அதனால் தான் நான் அவனை வாயை மூடச் சொன்னேன். கடவுளே என்னால இவனை விட்டுட்டு வேற ஒருத்தனை ஏத்துக்க முடியுமானு தெரியலை. தயவு செஞ்சு எனக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல நடக்க போற கல்யாணத்தை நிறுத்திரு. நான் கடைசி வரைக்கும் இவன் கூட செலவிட்ட அந்த தருணத்தை நினைச்சு பாத்துட்டே என் காலத்தை ஓட்டிருவேன். கண்டிப்பா என்னால இவனை மறக்க முடியாது”, என்று எண்ணிக் கொண்டாள்.
அவனும் முகத்தில் இறுக்கத்துடன் ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் முகமும் மனமும் இருண்டு போயிருந்தது. சிறிது நேரத்துக்கு முன்னே அவனுக்குள் இருந்த உற்சாகமும் சந்தோஷமும் அவனை விட்டு சென்றிருந்தது. கீழ்வானம் விடியலின் ஆரம்பத்தைக் காட்ட ஜில்லென்ற தென்றல் வீசியது. அது எதுவுமே அவனுடைய மன இறுக்கத்தைக் குறைக்க வில்லை.
அவன் மனது அவன் எடுத்த முடிவை எண்ணி வெகுவாக குழம்பி போனது. தன்னுடைய வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் திணறினான்.
அவனை அறியாமலே ஹோட்டலில் நடந்த நிகழ்வு அவனுக்கு நினைவில் வந்தது. அவன் வாழ்வில் அவன் கொடுத்த முதல் முத்தம் அது தான். அந்த தருணத்தையும் தன்னைக் கட்டி கொண்டு அவள் நின்றதையும் நினைக்கும் போதே அவன் நாடி நரம்புகள் அனைத்தும் முறுக்கேறியது.
இந்த நிமிடம் அவன் உணர்வுகளை அவனே வெறுத்தான். தன்னுடைய பேச்சைக் கேட்க கூட தயாராக இல்லாத அவளை நினைத்தாலே கடுப்பாக இருந்தது.
ரேகாவும் விடியலைப் பார்த்துக் கொண்டே தன்னுடைய வாழ்வுக்கு என்று விடியல் வரும் என்று எண்ணினாள்.
இன்னும் சிறிது தூரம் சென்றதும் அவளுடைய ஊர் அருகில் தான் இருக்கிறது என்பதற்கேற்ப தெரிந்த இடங்களாக வந்தது. “ஊர் வந்துருச்சு”, என்று கவலையுடன் எண்ணினாள் ரேகா. அவள் உடல் எல்லாம் படபடவென்று வந்தது. ஜீப் ஓட்டியவனை திரும்பிப் பார்த்தாள். அவன் கடமையே கண்ணாக ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்தான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எப்படி என்னைப் பாத்துட்டு வந்தான்? ஆனா இப்ப என் பக்கமே இவன் திரும்பலை. அப்ப கட்டாயம் என்னைக் கேவலமா தான் நினைச்சிருக்கான். நான் பல்லைக் காட்டிருந்தா என்னை என்ன வேணும்னாலும் செஞ்சிருப்பான். ஆனா பேசக் கூடாதுன்னு சொன்னதுனால என்னைக் கண்டுக்காம விட்டுட்டான் போல? இவன் கிட்டயா என் மனம் மயங்குச்சு? நான் என்ன அவ்வளவு பலவீனமானவளா? இல்லை இல்லை இவன் நல்லவன் தான். நான் பேசக் கூடாதுன்னு சொன்னதுனால கோபத்துல தான் அமைதியா இருக்கான். என் மனசு இவனை நல்லவன்னு தான் சொல்லுது. இவன் கூடவே எங்கேயாவது ஓடி போகலாமா?”, என்றெல்லாம் யோசித்தாள் ரேகா.