அத்தியாயம் 4_ 2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:2,051
அதே நேரம் அந்த மாளிகையே கல்யாண கொண்டாட்டத்தில் இருந்தது. வாழை மரங்கள் கட்டப் பட்டு மாவிலைத் தோரணம் போடப் பட்டு கலர் கலர் சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
சொந்த பந்தங்கள் அனைவரும் அங்கே குவிந்திருந்தனர். அது விக்ரமின் வீடு. அந்த வீட்டைக் கண்டாலே அவர்கள் கோடீஸ்வரர்கள் என்று தெரிந்து விடும்.
சேதுபதி சாரதா தம்பதி தான் அந்த மாளிகைக்கு சொந்தக்காரர்கள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் ஆதித்யா, அவன் மனைவி காயத்ரி. அவர்களுக்கு திருமணம் முடிந்து எட்டு மாசம் ஆகியிருந்தது.
ஆதித்யாவுக்கு அடுத்து பிறந்தவள் மஞ்சு. அவள் கணவன் சுதாகர் டெல்லியில் போலீஸ் ஆக இருக்கிறான். அவர்களுக்கு திருமணம் முடிந்து மூன்று வருடம் ஆகிறது. அவர்களுக்கு ஒரு வயதில் அஞ்சலி என்ற மகள் இருக்கிறாள்.
சேதுபதி சாரதா தம்பதியின் கடைசி மகன் தான் விக்ரம். அவனுக்கு தான் சற்று நேரத்தில் ரேகாவுடன் திருமணம் நடக்க இருக்கிறது.
கோபத்தின் உச்சியில் தன்னுடைய அறையில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தான் விக்ரம். அவன் கண்கள் கலங்கி சிவந்திருந்தது. அது கோபத்தாலா கண்ணீராலா என்று யாருக்குமே தெரியாது.
“கல்யாணத்தை நிறுத்த வேண்டும்”, என்று ஒரு மனது எண்ண மற்றொரு மனதோ “கல்யாணம் நடக்கட்டும். அதன் பின்னர் பார்த்துக் கொள்”, என்று கூறியது. இரு வேறு குழப்பமான மன நிலையில் இருந்தான்.
அவன் அறையில் நுழைந்த சாரதா “விக்ரம் கண்ணா”, என்று சொல்லி அவன் தலையை வருடி விட்டாள். அம்மாவைக் கண்டதும் அவன் முகத்தில் சற்று புன்னகை வந்தது.
“அம்மா”
“என்ன டா ஒரு மாதிரி இருக்க?”
“ஒண்ணும் இல்லை மா”
“உன்கிட்ட ஒரு விஷயத்தை வர வைக்க முடியுமா? சரி நாங்க பெண்ணழைக்க கிளம்புறோம். அண்ணனும் மாப்பிள்ளையும் உன் கூட இருப்பாங்க. நாங்க இன்னைக்கு தான் எங்க மருமகளைப் பாக்க போறோம்”
“சரி மா”
“நீ பழைய விக்ரமா இல்லை டா. உன் மனசுல ஏதோ ஓடுது. சரி என் மருமக வந்தா எல்லாம் சரியாகிருவ. அவ கிட்ட சொல்லி உன் காதைத் திருகச் சொல்றேன்”
“ஐயையோ பயமா இருக்கே. கொஞ்சம் உங்க மருமக டெரர் பீஸ் தான்”, என்று சிரித்தான்.
“அதான் மாஞ்சு மாஞ்சுனு அத்தனை வருஷம் லவ் பண்ணுனியா? சரி சரி இப்படி சிரிச்சிட்டே இரு என்ன? நாங்க கிளம்புறோம். அப்பா இங்க தான் இருப்பார். ஏதாவது வேணும்னா அவர் கிட்ட கேளு”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கே வந்த காயத்ரி “அத்தை நேரம் ஆச்சு. வாங்க கிளம்பலாம். புது மாப்பிள்ளைக் கிட்ட அப்புறமா வந்து பேசலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல விக்ரம் ஆள் வந்த உடனே நம்மளை எல்லாம் கண்டுக்கவே மாட்டான்”, என்று சிரித்த படி சொன்னாள்.
“அண்ணி, என்னைக் கிண்டல் பண்ணினது போதும். இங்க இருந்து சொல்லிட்டே இருந்தா எப்படி? சீக்கிரம் என் ஆளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க”, என்று சொல்லி சிரித்தான் விக்ரம்.
“பாத்தீங்களா அத்தை? நான் சொல்லலை? எப்படி விரட்டுரான் பாத்தீங்களா?”, என்று காயத்ரி சொன்னதும் “உன் புருசனும் கல்யாணத்தன்னைக்கு இப்படி தான் இருந்தான்”, என்று சொன்னாள் சாரதா. அதற்கு அழகாக வெட்கப் பட்டாள் காயத்ரி.
“ஐயோ ரெண்டு பேரும் இங்க என்ன செய்றீங்க? சீக்கிரம் வாங்க. வேன் கிளம்பிருச்சு. அப்பா அங்க கத்திக்கிட்டு இருக்கார்”, என்ற படி வந்தாள் விக்ரமின் அக்கா மஞ்சு.
“சரி டா நாங்க கிளம்புறோம்”, என்று சொல்லி சாரதா சொன்னதும் “அம்மா, அக்கா, அண்ணி மூணு பேருமே ரேகா கிட்ட எதையும் கேட்டுக்காதீங்க. முடிஞ்ச அளவு புதுசா பாக்குற பொண்ணு கிட்ட மாதிரியே பேசுங்க”, என்றான் விக்ரம்.
மூவரும் பூம் பூம் மாடு போல தலையை ஆட்டினார்கள். அவன் அவர்களை சந்தேகமாக பார்க்கும் போதே அங்கிருந்து சென்று விட்டார்கள். அவனுடைய அறையில் இருந்த பால்கனி வழியாக கீழே பார்த்தான். அம்மா, அண்ணி, அக்கா மூவரும் ஏறியதும் கார் கிளம்பியது. அவனுடைய அப்பா சேதுபதி, அவனது அண்ணன் ஆதித்யா, அக்கா கணவர் சுதாகர் மூவரும் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு கட்டிலில் வந்து அமர்ந்தான். “இன்னும் கொஞ்ச நேரத்தில் ரேகா இங்க வந்துருவா”, என்று அவன் மனம் துள்ளும் போதே “அவ இங்க வந்து தான் ஆகணுமா? உலகத்துல எத்தனையோ பொண்ணு இருக்கும் போது நான் ஏன் இவளை விரும்பினேன்?”, என்று நினைத்து அவன் மனம் வேதனை கொண்டது.
அப்போது “டேய் என்ன டா இன்னும் கிளம்பாம இருக்க? நல்லதா போச்சு. நான் இப்ப வந்தேன். மணி என்னன்னு பாத்தியா?”. என்று கேட்டுக் கொண்டே அவனுடைய அறைக்குள் நுழைந்தான் அவனது ஆருயிர் அண்ணன் ஆதித்யா.
“ப்ச் இப்ப எதுக்கு கத்துற? மெதுவா பேசுண்ணா”, என்று அவனிடம் சிடுசிடுத்தான் விக்ரம்.
“நான் மெதுவா பேசுறது இருக்கட்டும்? நீ ஏன் டல்லா இருக்க? என் மச்சினிச்சி உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டாளா?”, என்று சிரிப்புடன் கேட்டான்.
“அண்ணா நானே கொலை வெறில இருக்கேன். பேசாம போயிரு சொல்லிட்டேன்”, என்று விக்ரம் கத்தும் போது “நீ இன்னும் கிளம்பலையா விக்ரம்? உன்னை கிளப்ப தானே நான் மச்சானை அனுப்புனேன்? என்ன ஆதி மச்சான் அவனைக் கிளப்பாம அவன் கிட்ட கதை பேசிட்டு இருக்கீங்க?, என்று கேட்ட படி அங்கு வந்தான் சுதாகர்.
“நீங்க வேற மச்சான், இவனைக் கிளப்ப தான் நான் வந்தேன். ஆனா கிளம்ப மாட்டிக்கான்”, என்றான் ஆதித்யா.
“விக்ரம், எல்லாரும் பெண்ணழைக்க கிளம்பிட்டாங்க. மேலூருக்கும் கீழுருக்கும் கால் மணி நேர பயணம் தான். அங்க கிளம்பி வர தாமதம் ஆனாலும் அரை மணி நேரத்துல வந்துருவாங்க. நீ கிளம்பி தாயாரா இரு விக்ரம்”, என்றான் சுதாகர்.
தன்னுடைய அண்ணனிடம் பேசுவதைப் போல வீட்டு மருமகனை விரட்ட முடியாமல் “சரி மாமா, இதோ கிளம்புறேன்”, என்று அக்கா கணவரிடம் மரியாதையாக சொல்லி விட்டு மீண்டும் ஒரு முறை குளிக்கச் சென்றான்.
**************
அதே நேரம் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் ரேகா. அவளுக்கு ஆடிப் பாட வேண்டும் போல சந்தோஷமாக இருந்தது. அப்போது அவளுடைய அறைக்குள் பல பெண்கள் வந்தார்கள்.
தன்னை அழைக்க தான் வந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட ரேகா தன்னாலே எழுந்து நின்றாள். காயத்ரியும் மஞ்சும் அவளைக் கண்டு புன்னகைத்தார்கள். அவர்கள் யாரென்று தெரியாமல் சும்மா உதட்டை இழுத்து வைத்து சிரித்தாள் ரேகா.
மஞ்சு அவளிடம் ஏதோ பேச ஆரம்பிக்க “நேரம் ஆச்சு, எல்லாரும் கிளம்புங்க. காயத்ரி உன் தங்கையை அழைச்சிட்டு வா. கார்ல போகும் போது எல்லாம் பேசிக்கலாம்”, என்று சாரதா குரல் கொடுத்ததும் மஞ்சுவும் காயத்ரியும் அவளுடைய கை பிடித்து வெளியே அழைத்துச் சென்றார்கள்.,
வெளியே ஒரு வேனும் காரும் தயாராக இருந்தது. உறவினர்கள் அனைவரும் வேனில் ஏற ரேகாவை காரில் ஏறச் சொன்னார்கள்.
ரேகா ஏறி அமர்ந்ததும் அவளுக்கு ஒரு புறம் காயத்ரியும் மற்றொரு புறம் மஞ்சுவும் அமர்ந்தார்கள். டிரைவர் ஏறியதும் அவருடைய அருகே இருந்த இருக்கையில் சாரதா அமர்ந்தாள். டிரைவர் காரைக் கிளப்பினார்.
ரேகாவுக்கு அவர்கள் யார், என்ன என்று எல்லாம் தெரிய வில்லை. ஆனால் காரில் வருவதால் மாப்பிள்ளைக்கு நெருங்கிய உறவு என்று மட்டும் புரிந்தது. அதனால் அவர்களிடம் என்ன பேச என்று தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“இந்த சேலைல நீ ரொம்ப அழகா இருக்க? என் தம்பி பாத்தா கவுந்துருவான்”, என்று சொல்லி சிரித்தாள் மஞ்சு. அவள் தம்பி என்று சொன்னதும் அவள் தான் அந்த விக்ரமின் அக்கா என்று புரிந்து கொண்ட ரேகா ஒரு புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்தாள்.
“என் கொழுந்தன் இன்னுமா கவுராம இருக்கான். அவன் தான் எப்பவோ ரேகா அழகுல கவுந்துட்டானே?”, என்று சொல்லி சிரித்தாள் காயத்ரி.
“முதல்ல நாம எல்லாம் யாருன்னு ரேகாவுக்கு சொல்லுங்க. அம்மாடி ரேகா என்னோட பேர் சாரதா. நான் விக்ரமோட அம்மா”, என்று சொன்னாள் சாரதா.
பதிலுக்கு என்ன சொல்ல என்று தெரியாமல் “வணக்கம் மா”, என்றாள் ரேகா.
“அதானே எங்களை எல்லாம் உங்களுக்கு தெரியதுள்ள? என் தம்பி உன்கிட்ட சொன்னானோ சொல்லலையோ? அதனால நானே சொல்லிறேன். நான் மஞ்சு, விக்ரமோட அக்கா. அப்புறம் இவங்க காயத்ரி எனக்கும் விக்ரமுக்கும் அண்ணி. உனக்கு அக்கா”, என்றாள் மஞ்சு.
“இப்ப எதையும் குழப்பிக்காத ரேகா. உனக்கு கல்யாண டென்ஷன் இருக்கும். நம்ம வீட்டுக்கு வந்த அப்புறம் எல்லாரையும் தெரிஞ்சிக்கலாம்”, என்று அழகாக புன்னகைத்தாள் காயத்ரி. அந்த புன்னகை ரேகாவையும் தொற்றியது.
அருமையான மாமியார் சாரதா, அழகான நாத்தனார் மஞ்சு, புரிதலுடன் கூடிய சகோதரி சகோதரி என்று மூவரையும் கண்ட ரேகாவுக்கு “இந்த குடும்பத்தில் வாழ வர்ஷாவுக்கு குடுத்து வைத்திருக்க வேண்டும்”, என்ற எண்ணம் தான் வந்தது.
கூடவே “அந்த டிரைவருக்கும் பெரிய குடும்பமா இருக்கணும். அவனுக்கும் அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், தங்கைன்னு எல்லாரும் இருக்கணும். நானும் வர்ஷா மாதிரியே இவ்வளவு சொந்தம் இருக்குற வீட்டில் தான் வாழனும். கடவுளே என்னோட அம்மா அப்பாவைத் தான் என்கிட்ட இருந்து பிரிச்ச. நான் இப்ப உன்கிட்ட கேக்குறது ரெண்டே விஷயம் தான். அந்த டிரைவர் கூட கல்யாணம் நடக்கணும். இன்னொன்னு அவன் குடும்பமும் பெரிய குடும்பமா இருக்கணும்”, என்று வேண்டிக் கொண்டாள்.
அவள் மனதில் எதையோ யோசித்துக் கொண்டிருக்க “உன் கிட்ட ஒண்ணு மட்டும் கேக்கவா மா?”, என்று கேட்டாள் சாரதா.
நடப்புக்கு வந்த ரேகா “கேளுங்க”, என்றாள்.
“இல்லை வீட்ல எத்தனையோ கார் இருக்கு, எத்தனையோ வேலைக்காரங்க இருக்காங்க. ஆனா காலைல உன்னைக் கூப்பிட நான் தான் போவேன்னு விக்ரம் அடம் பிடிச்சான்? நான் தான் அவனை சீக்கிரம் எழுப்பி விட்டேன். போகும் போது உன்னை பாக்க போறேன்னு சந்தோஷமா கிளம்பி போனவன் வரப்ப ஒரு மாதிரி வந்தான் மா. அவன் கார் கதவை சாத்துறதுலே அவன் மனசு எனக்கு கொஞ்சம் புரியும். என்ன காரணம்னு அவன் கிட்ட கேட்டேன் சொல்லலை. இப்ப வரும் போது கூட கேட்டேன் சொல்லலை. பையனுக்கு ஒண்ணுன்னா அம்மா மனசு தாங்குமா? அதான் உன்கிட்ட கேக்குறேன். என்னைத் தப்பா எடுத்துக்காத மா. உன்னை உன் வீட்ல விட வந்தப்ப உங்க மாமா அவனை எதுவும் சொல்லிட்டாரா? அதான் அவனுக்கு கோபமா?”, என்று சாரதா கேட்டுக் கொண்டிருக்க ரேகா காதில் எதுவுமே விழ வில்லை.
“என்னது காலைல கூப்பிட வந்தவன் தான் விக்ரமா?”, என்று அதிர்ச்சியில் திகைத்துப் போனாள் ரேகா. சாரதா சொன்னதைக் கேட்டு அவள் மூளை வேலை நிறுத்தம் செய்தது போல இருந்தது.