எனைச் சுற்றி ஏகாந்தம்
அத்தியாயம் 1
அதிகாலை காலை ஐந்து மணி, கத்தாரில் அமைந்திருந்த ஒரு பெரிய நட்சத்திர விடுதியின் பின் பக்கமாக நுழைந்தான் தமிழரசன். பெயரில் மட்டுமே அரசன், நிஜத்தில் பரிதாபத்திற்குரிய சாதாரண இந்தியக் குடிமகன். இப்போது வேலை பார்ப்பதோ கத்தாரில். வேலை என்றால் ஐ.டி கம்பெனியிலோ இல்லை எண்ணெய் தொழிற்சாலையிலோ இல்லை. இந்த நட்சத்திர விடுதியில் கழிவறை சுத்தம் செய்பவன்.
முதல் தளத்தில் இருந்த ஸ்டோர் ரூம் போல இருந்த அறைக்குள் நுழைந்து அணிந்திருந்த சட்டை மேலேயே அங்கே இருந்த யூனிபார்மை அணிந்து கொண்டு தனக்கு தேவையான பொருள்களையும் எடுத்துக் கொண்டு படிகட்டு வழியாவே மாடிக்குச் சென்றான்.
அவன் கையில் இருந்த லிஸ்ட்டை ஒரு முறை பார்த்து விட்டு முதலில் ஒரு அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். இன்று பதினான்கு அறைகளில் இருக்கும் பாத்ரூம்களை அவன் சுத்தம் செய்ய வேண்டும். முதல் அறைக்குள் நுழைந்து வேறு எதையும் கண்டு கொள்ளாமல் அந்த கழிவறைக்குள் நுழைந்து கையில் குளவ்ஸ் மாட்டிக் கொண்டு சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.
யாரோ எவரோ பயன்படுத்திய கழிவறையை சுத்தம் செய்ய மனசு வலித்தது தான். ஆனால் வேலை ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் பொதுக் கழிப்பிடங்களே இப்போதெல்லாம் சுத்தமாக இருக்கும் போது அங்கே கேட்கவும் வேண்டுமா?
அடுத்து பத்து நிமிடத்தில் அந்த அறையை சுத்தம் செய்து விட்டு லிஸ்டில் இருந்த அடுத்த அறைக்குள் நுழைந்தான். மொத்தமாக அவன் வேலையை முடித்து விட்டு வெளியே வரும் போது இரண்டு மணி நேரம் கடந்திருந்தது. கீழ் தளத்துக்கு வந்ததும் யூனிபார்மை கழட்டி வைத்தான். அப்போது அந்த ஹோட்டல் மேனேஜர் அவன் வேலைக்குரிய பணத்தை அவனுடைய அக்கவுண்டுக்கு அனுப்பி விட்டதாக சொன்னார். இந்த இரண்டு மணி நேரத்தில் அவனது சம்பளம் இந்திய பணத்தின் மதிப்புக்கு ஆயிரம் ரூபாய்.
தமிழ்நாட்டில் ஒரு நாளில் எட்டு மணி நேரம் வேலை பார்த்தாலும் கிடைக்காத பணம். சம்பளத்தை நினைத்துப் பார்த்ததும் மனதில் இருந்த வலி பறந்தோட புன்னகை முகமாக அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்தான். வேலை மனதுக்கு வலியைக் கொடுத்தாலும் அதற்குரிய ஊதியம் மனதுக்கு நிறைவைக் கொடுத்தது.
ஹோட்டலில் இருந்து நடந்தே ஒரு பெட்ரோல் பங்குக்குள் நுழைந்தவன் கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் அங்கே வேலை பார்த்தான். அதற்கு அவனுக்கு கிடைத்ததும் ஆயிரம் ரூபாய். மூன்று மணி போல தன்னுடைய மேன்சனுக்கு வந்தான். அங்கே அவனைப் போல பலர் தங்கி இருந்தனர். இதே போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை உண்டு. அங்கே கொடுத்த உணவை வாங்கிக் உண்டு விட்டு அவனது அறைக்கு வந்தான். அவனது அறையில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவன் அவனுடன் தங்கி இருந்தான்.
தமிழரசனுக்கு ஊர் தென்காசி. செந்தில் மற்றும் தமிழரசன் இடையே இங்கு வந்து தான் பழக்கம். இப்போது இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.
போட்டிருந்த சட்டையை கழட்டி விட்டு ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு குளிக்கச் சென்றான். குளித்து முடித்து ஒரு லுங்கியைக் கட்டி கொண்டு மடக்கி வைத்திருந்த தன்னுடைய படுக்கையை விரித்து அதில் படுத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டான். மாலை ஐந்து மணிக்கு எழுந்தவன் மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு வேலைக்கு கிளம்பினான் மற்றொரு ஹோட்டலுக்கு. ஏழு மணியில் இருந்து இரவு பதினொரு மணி வரை அங்கு அவனுக்கு வேலை.
உணவு சமைப்பதோ பரிமாறுவதோ இல்லை. அங்கே கிளினிங்க் வேலை தான். தரையை தொடைப்பது, பாத்திரங்களைக் கழுவி வைப்பது, பாத்ரூம் கழுவி வைப்பது வரை எல்லா வேலைகளையும் செய்வான். அதற்கும் அவனுக்கு ஆயிரம் ரூபாய் வருமானம்.
அங்கேயே இரவு உணவை முடித்து விட்டு பன்னிரெண்டு மணிக்கு மேல் அவன் அறைக்கு வரும் போது செந்தில் அறையில் இருந்தான்.
“வா டா சாப்பிட்டியா?”, என்று அக்கறையுடன் கேட்டான் செந்தில்.
“சாப்பிட்டேன் மச்சான், நீ சாப்பிட்டியா? இன்னைக்கு வேலை எப்படி போச்சு?”
“எப்பவும் போல தான்”, என்றான்.
செந்தில் வேலை பார்ப்பது ஒரு ஆயில் தொழிற்சாலையில். அவனுக்கு காலை ஒன்பது மணியில் இருந்து இரவு பதினொரு மணி வரைக்கும் வேலை. சம்பளம் மாசம் என்பதாயிரம் வரும். என்ன அவன் வேலை செய்வது ஒரே இடத்தில் என்பதால் அவனுக்கு அலைச்சல் கிடையாது.
தமிழரசனுக்கு அலைச்சல் உண்டு என்றாலும் சம்பளம் அவனை விட அதிகம். அது போக இடையில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கௌரவமான வேலை கிடையாது. தமிழரசனுக்கு அந்த ஆயில் தொழிற்சாலையில் வேலைக்கு செல்ல ஆசை தான். ஆனால் இதுவே போதும் என இருந்து விட்டான். அங்கே சென்றாலும் எடுபொடி வேலை தான். அதை எங்கு பார்த்தால் என்ன என்ற எண்ணம் தான்.
தமிழரசன் குளித்து விட்டு வரும் போது தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் செந்தில். அது மட்டுமல்லாமல் காதில் போனை வைத்து கொண்டு அமைதியாக இருந்தான். அவன் முகத்தில் இருந்த எரிச்சலை பாவமாக பார்த்தான் தமிழ்.
அந்த பக்கம் பேசிக் கொண்டிருப்பது செந்திலின் அன்னை. அவள் பேசுவது தமிழுக்கும் கேட்டது. செந்திலின் மனைவியான வனிதாவை தான் அந்த அம்மா திட்டிக் கொண்டே இருந்தாள். என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருந்தான் செந்தில். செந்திலைக் கண்டு தமிழுக்கு வேதனையாக இருந்தது. இது எப்போதும் நடப்பது தான். ஆனால் இன்று அவன் முகம் இன்னும் இறுகி இருப்பது போல இருந்தது.
“அவ அவளோட அம்மா வீட்ல இருக்குறது சரி கிடையாது செந்தில். எதுத்த வீட்டுக்காரன் கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுறா. அவன் கூட ஒரே வண்டியில போறான்னு வேற கேள்வி பட்டேன். ஒழுங்கா இங்க வந்து இருக்கச் சொல்லு. இல்லைன்னா புருஷன் வெளிநாட்டுல இருக்கும் போது இங்க இவ தரங்கெட்டுப் போய்ட்டான்னு நம்ம குடும்பத்துக்கு தான் கெட்ட பேர்”, என்றாள் அந்த அம்மா. அதைக் கேட்டு நண்பன் முகத்தில் வந்து போன வலியைக் கண்டு தமிழுக்கு வேதனையாக இருந்தது.
“பேசி முடிச்சிட்டியா மா?”, என்று இறுக்கத்துடன் கேட்டான் செந்தில். அவன் தோளில் கையை வைத்து அழுத்தி பொறுமையாக இருக்கும் படி சைகை செய்தான் தமிழ்.
“ஆமாப்பா, சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். உன் பொண்டாட்டியால இன்னும் என்ன என்னவோ பாக்கணும்னு இருக்கு போல? நல்ல வீட்ல பொண்ணு எடுத்தோம்?”, என்று அந்த அம்மா புலம்ப “சரி மா எனக்கு இப்ப ஒரு முக்கியமான வேலை இருக்கு, நான் வைக்கிறேன்”, என்றான் செந்தில்.
“என்ன வேலைப்பா? அதான் வேலை முடிஞ்சிருச்சே?”
“இல்லை மா, நம்ம மாப்பிள்ளைக்கு தான் போன் பண்ணனும்”
“மாப்பிள்ளை கிட்ட என்ன பேச போற? அதுவும் இந்த நேரத்துல?”
“இல்லை, மாப்பிள்ளை கிட்ட ஒரு தகவல் சொல்லணும்?”
“என்ன டா? உன் தங்கச்சி கூட தான் மாப்பிள்ளை போன்ல பேசிட்டு இருக்கார். சத்தம் கேக்குது”
“அப்படியா? சரி கொஞ்ச நேரம் கழிச்சு பேசுறேன்”
“என்ன பேசப் போற செந்திலு”
“இல்லை, உஷா நடவடிக்கை சரியில்லைன்னு என் காதுக்கு தகவல் வந்துச்சு. என்ன தான் நான் அவளுக்கு அண்ணன்னாலும் அவ புருஷன் கிட்ட சொல்றது தானே முறை? அவளால மாப்பிள்ளை குடும்பம் கேவலப் படக் கூடாதுல்ல?”
“என்ன டா சொல்ற?”
“ஆமா மா, பள்ளிக் கூடத்துல உஷா நடவடிக்கை சரி இல்லையாம்? ஏதோ டீச்சர் கூட சிரிச்சு சிரிச்சு பேசுறாளாம்? நாளைக்கு ஏதாவது நடந்தா நம்ம மரியாதை என்ன ஆகுறது? அதான் நான் மாப்பிள்ளை கிட்ட சொல்லி இப்பவே கண்டிக்க சொல்லப் போறேன்”
“செந்திலு அறிவு கெட்ட தனமா பேசாத. நம்ம உஷா அப்படி இல்லை. நம்ம வீட்டுப் பொண்ணைப் பத்தி நீயே தப்பா பேசுவியா? அவ உன் தங்கச்சி டா”
“எப்படி எப்படி? நம்ம வீட்டுப் பொண்ணா? அப்பா வனிதா யாருமா?”
“செந்திலு”
“சொல்லு வனிதா யாரு? அவ என் பொண்டாட்டி தானே? உன் மகளைப் பத்தி சொன்ன உடனே உனக்கு இப்படி கோபம் வருது? வனிதாவைப் பத்தி மட்டும் நீ அப்படியெல்லாம் பேசுவியா? அவளைப் பத்தி யார் என்ன சொன்னாலும் என் மருமகளைப் பத்தி பேசுவியா? இனி பேசினா செருப்பைக் கழட்டி அடிப்பேன்னு சொல்லாம என் கிட்டயே என் பொண்டாட்டி பத்தி குறை சொல்ற? உனக்கு அசிங்கமா இல்லை?”
“செந்திலு”
“பேசாத மா, இங்க வீட்டை பிரிஞ்சு புதுசா கல்யாணம் பண்ணின பொண்டாட்டியை பிரிஞ்சு தனியா கிடந்து கஷ்டப் படுறேன்? ஆனா நான் எப்ப டா வேலை முடிஞ்சு வருவேன்னு காத்துட்டு இருந்து என் பொண்டாட்டியைப் பத்தி என் கிட்டயே பத்த வைக்கிற? ஏன் உன் பொண்ணும் அவ புருஷனை விட்டு பிரிஞ்சு தானே இருக்குறா? அவளைச் சொல்லுறது தானே? அப்புறம் என்ன சொன்ன? வனிதாவை அவ அம்மா வீட்ல விட்டு வைக்க கூடாதா? அவ நம்ம வீட்ல இருக்கும் போது நீயும் உன் மகளும் சேந்து அவளை பண்ணக் கூடாத டார்ச்சல் எல்லாம் பண்ணி தானே நான் அவளை அங்க போகச் சொன்னேன்? மறுபடியும் அவளை வரச் சொல்ற? ஏன் உனக்கும் உன் மகளுக்கும் பொங்கி ஆக்கித் திங்க கசக்குதா? நீ ஆசைப் படுற மாதிரி வனிதாவை இங்க வரச் சொல்றேன்? ஆனா அதுக்கு முன்னாடி உஷா அவ புருஷன் வீட்ல போய் இருக்கட்டும்”
“ஆன்… அது எப்படி? அங்க மாப்பிள்ளை இல்லாம எப்படி அனுப்ப?”
“முடியாதுல்ல? அப்ப வாயை மூடிட்டு இரு. இன்னொரு தடவை என் பொண்டாட்டியைப் பத்தி குறை சொன்னா நான் பேசவே மாட்டேன். உனக்குன்னு பணம் அனுப்புறதையும் விட்டுருவேன்”
“என்னது?”
“என்ன என்னது? ரெண்டு வீட்டு வாடகை பணம் வருது, குத்தகை பணம் வருது? அப்புறம் என்ன உனக்கு பணக் கஷ்டம்? இதுக்கெல்லாம் வந்து கணக்கும் கேப்பேன்”
“எல்லாம் அவளால தான். அவ தான் உன்னை மயக்கி வச்சிருக்கா. அதான் நீ இந்த ஆட்டம் ஆடுற? இன்னைக்கு போய் அவ வீட்ல கத்திட்டு வந்தேன். அதை உன் கிட்ட போட்டுக் கொடுத்துட்டாளா?”
“இன்னொரு தடவை அவ வீட்டுக்கு போய் அசிங்க படுத்தின நான் என்ன செய்வேன்னே தெரியாது சொல்லிட்டேன். அப்புறம் என்ன சொன்ன அவ என்னை மயக்கிட்டான்னா? ஏன் அதுல என்ன தப்பு இருக்கு? நீ உன் புருஷனை மயக்கலையா? இல்லை உன் பொண்ணு தான் அவ புருஷனை மயக்கலையா?”, என்று அவன் நக்கலாக கேட்க அந்த பேச்சில் தமிழுக்கே சிரிப்பு வந்து விட்டது. இப்ப அந்த அம்மா முகம் எப்படி போகும் என்று எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டான்.
“டேய்… என்ன டா அம்மா கிட்ட இப்படி எல்லாம் பேசுற?”, என்று அந்த அம்மா கேட்டாள்.
“நீ மகன் கிட்ட சரியா பேசிருந்தா நானும் சரியா பேசிருப்பேன். எனக்கு ஒரே தலை வலியா இருக்கு. வை போனை”, என்று சொல்லி வைத்து விட்டான்.
அன்னையின் பேச்சை எண்ணி மனதுக்கு வேதனையாக இருந்தது. செந்திலின் அம்மாவுக்கு அவனை மிகவும் பிடிக்கும் தான். ஆனால் மருமகளைத் தான் அவளுக்கு பிடிக்கவே இல்லை. இத்தனைக்கும் அவள் பார்த்து கட்டி வைத்தது தான்.
இந்த நேரம் அவனது போனுக்காக மனைவி காத்திருப்பாள் என்று புரிய வனிதாவை அழைத்தான். எடுத்ததும் “அத்தான்”, என்று உருகி வந்தது அவள் குரல். அவள் குரல் கேட்டு மனதுக்கு லேசாக இருந்தது செந்திலுக்கு. அடுத்த நொடி அவர்களுக்கு தனிமை கொடுக்க அறையை விட்டு வெளியே வந்து மொட்டை மாடிக்குச் சென்று விட்டான் தமிழ்.
“சாப்பிட்டியா வனிதா?”, என்று காதலுடன் வந்தது செந்திலின் குரல்.
“சாப்பிட்டேன் அத்தான்”, என்று சொல்லும் போதே அவள் விசும்பினாள்.
“என்ன டா?”
“ஒண்ணும் இல்லை அத்தான். நீங்க சாப்பிட்டீங்களா?”
“சாப்பிட்டேன், சரி அங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லு”
“ஒண்ணும் பெருசா இல்லையே அத்தான். என்னைப் பத்தி கவலைப்படாதீங்க”
“அம்மா அங்க வந்துச்சா?”
“உங்க கிட்ட அத்தை பேசினாங்களா? நீங்க என்னை நம்புறீங்களா அத்தான்?”
“யார் என்ன சொன்னாலும் நான் நம்புறேன் டி. ஆனா தயவு செஞ்சு அங்க என்ன நடந்தாலும் எனக்கு சொல்லு. உனக்குள்ளே போட்டு அழுத்தாத”
“நீங்க நேர்ல இருந்தா எல்லாம் சொல்லி உங்க நெஞ்சுல சாஞ்சி அழுதுருப்பேன் அத்தான். ஆனா கண்ணுக்கு மறைவா இருக்குற உங்களைக் கஷ்டப் படுத்த என்னால முடியாது. ஆனாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு அத்தான். என்னோட கேரக்டரைப் பத்தி தப்பா பேசி ரொம்ப அசிங்கமா இருக்கு அத்தான். நீங்க அதை நம்பினா என்னோட கதி என்ன ஆகும்? அம்மா அப்பா எல்லாம் அழுதுட்டே இருக்காங்க. நீங்க சீக்கிரம் வந்துறீங்களா? நமக்கு பணத் தேவை எல்லாம் இல்லையே? நீங்க வாங்களேன்”
“இல்ல மா, வெளிநாட்டுல வேலை பாக்குறேன்னு தான் உங்க வீட்ல எனக்கு உன்னை கட்டி வச்சாங்க. இப்ப வந்தா என்ன நினைப்பாங்க?”
“அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டாங்க. இப்ப என்னோட வாழ்க்கை தான் அவங்களுக்கு முக்கியம். விவசாயம் செஞ்சாவது பிழைச்சிக்கலாம் அத்தான்”
“இன்னும் ஆறு மாசம் காண்ட்ராக்ட் இருக்கு வனிதா. அப்புறம் வந்துறேன்”
“சரிங்க அத்தான்”, என்று சொன்னவள் வேறு ஏதோ பேச செந்திலும் சிறிது நேரம் பேசினான்.
வனிதாவிடம் பேசி முடித்த செந்தில் தமிழின் அலைபேசிக்கு அழைக்க அதை எடுத்ததும் “மொட்டை மாடிலயா தமிழ் இருக்க? நான் பேசி முடிச்சிட்டேன், நீ கீழ வா”, என்று அழைத்தான்.
கீழே வந்ததும் இருவரும் சிறிது நேரம் தங்களின் படுக்கையில் படுத்த படியே பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் செந்தில் உறங்கி விட்டான். தமிழுக்கு தூக்கம் வர வில்லை.
செந்தில் வனிதாவை நம்பினதால் சரியாப் போச்சு. இல்லைனா என்ன ஆகும் என்று பயமாக இருந்தது. மனைவிக்காக பேசிய நண்பனை எண்ணி பெருமையாகவும் இருந்தது. கூடவே தன்னுடைய குடும்பத்தைப் பற்றி எண்ணிக் கொண்டான். மனம் வேதனையில் கசங்கியது. செந்திலுக்கு திருமணம் ஆகி பிரச்சனை என்றால் தமிழுக்கு திருமணம் ஆகாமலே பிரச்சனை. இனியும் திருமணம் நடக்குமா என்று கூட அவனுக்கு தெரிய வில்லை. இப்போது அவனுக்கு வயது முப்பத்தி இரண்டு.
இந்த வயதில் அவனுக்கு யார் பெண் கொடுப்பார்களாம்? முன்பெல்லாம் கோதுமை நிறத்தில் இருப்பவன் என்று சொல்லலாம். இப்போதோ கருத்துப் போய் இருந்தான். தலை முடியெல்லாம் கொட்ட ஆரம்பித்திருந்தது. சொட்டை விழ வில்லை தான். ஆனாலும் கொஞ்சம் வயது முதிர்ந்த தோற்றம் தான் அவனுடையது. முப்பது வயது ஆனாலே அரைக் கிழவன் தானே? இவன் அதையும் தாண்டி விட்டான்.