டீ போட்டு முடித்த மதி “அண்ணி ரெண்டு அண்ணனுங்களுக்கும் நிலாவுக்கும் டீ குடுத்துறீங்களா? நான் சுந்தரி அம்மாவுக்கு போய்க் கொடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.
“என் கிட்ட கொடு. நான் போய் அவங்களுக்கு கொடுக்குறேன்”, என்று சொல்ல வேண்டும் போல இருந்தது கண்மணிக்கு. ஆனால் தான் கொண்டு போய்க் கொடுத்தால் அதை சுந்தரி ஏற்றுக் கொள்வாரா என்ற தயக்கம் காரணமாக மதி சொன்ன வேலையைச் செய்தாள்.
டீ குடித்து விட்டு அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். சுந்தரிக்கு டீயை புகட்டி விட்டு வந்த மதி அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
கருப்பட்டி அப்போது எழுந்து கொள்ள “எங்க டா கிளம்பிட்ட?”, என்று கேட்டான் சிவன்.
“அம்மாவுக்கு உடம்பு துடைச்சு வேற டிரஸ் மாத்தணும் டா”, என்று கருப்பட்டி சொல்ல “நான் மாத்தி விட்டுட்டு தான் வந்தேன். உக்காருண்ணா”, என்று மதி சொன்னதும் அமர்ந்தான்.
டீ குடித்து முடித்த வெண்ணிலாவும் “நான் கொஞ்ச நேரம் அம்மா கிட்ட பேசிட்டு வரேன்”, என்று சொல்லி சுந்தரியைக் காணச் சென்றாள். அவள் எப்போதும் அப்படி தான். பள்ளியில் இருந்து வந்து அன்று நடந்த அனைத்தையும் சுந்தரியிடம் சொல்லி விட்டு வந்து தான் படிக்க அமர்வாள்.
அனைவரும் சுந்தரியை அன்பாக கவனித்துக் கொள்ள, தான் வந்ததில் இருந்து அவரைக் காணக் கூட போகாதது ஒரு மாதிரி இருந்தது கண்மணிக்கு. அனைவரும் பேசிக் கொண்டிருந்ததால் அந்த எண்ணம் அவள் அடி மனதில் அப்படியே தங்கிப் போனது.
“வேலை இருக்குனு சொன்னவன் அசையாம உக்காந்து கதை பேசுறான்”, என்று எண்ணிய கருப்பட்டி வேறு எதுவும் கேட்க வில்லை. ஆனாலும் அவன் ஏன் அவ்வளவு அவசரமாக வந்தான் என்று குழப்பமாக இருந்தது.
அடுத்து ஒரு வாரம் கடந்திருந்தது. செல்வியையும் குழந்தையையும் சிவன் கார் பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான். அதற்கு பின் வீடு எப்போதும் போல இருந்தது. கண்மணிக்கு கருப்பட்டி வீட்டுக்கு சென்று சுந்தரியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அதைச் செய்ய தைரியம் இல்லாததால் அந்த எண்ணத்தோடே நாட்களைக் கடத்தினாள்.
மீண்டும் ஒரு நாள் கண்மணியிடம் இரண்டாவது திருமணம் பற்றிய பேச்சை ஆரம்பித்தாள் பார்வதி. அதைக் கேட்டு “அத்தை நீங்க சொல்ல வரது எனக்கு புரியுது? இப்ப நான் ரெண்டாவது கல்யாணம் பண்ணினா தான் நல்லா இருப்பேன்னு சொல்றீங்க? அதுக்கு ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருக்குனு வச்சிப்போம். ஒரு வேளை அப்படி அமையாம போச்சுன்னா? வரவன் என்னை நல்லா வச்சிக்கிட்டாலும் என் குழந்தையை கவனிக்காம போய்ட்டான்னா? கவனிப்பு கூட நான் கொடுத்துக்குவேன். ஆனா என் குழந்தைக்கு அப்பா வேணும்னு நினைச்சு கல்யாணம் பண்ணின பிறகு அவன் என் குழந்தைக்கு அப்பாவா இல்லாம போய்ட்டான்னா அந்த கல்யாணம் அர்த்தம் இல்லாம போயிரும் அத்தை. அப்புறம் பிரிவு விவகாரத்துன்னு வரும். பிரிஞ்சதுக்கு பிறகு என் குழந்தைக்காக மறுபடியும் இன்னொரு கல்யாணம் பண்ணச் சொல்லுவீங்களா?”, என்று கேட்டாள் கண்மணி.
“நீ இப்ப கேட்டது நியாயமான கேள்வி தான் கண்மணி. நீ சொல்ற மாதிரியும் நடக்க வாய்ப்பு இருக்கு. அதனால இனி உன் கிட்ட ரெண்டாவது கல்யாணம் பத்தி நான் பேச மாட்டேன். ஆனா உன்னையும் உன் குழந்தையையும் ஏத்துக்குற மாதிரி ஒருத்தன் வந்தான்னா கண்டிப்பா நானே அவனுக்கு உன்னைக் கட்டி வைப்பேன். அப்ப நீ மறுத்து பேசக் கூடாது”
“சரிங்க அத்தை, அப்படி ஒருத்தன் வந்தா பாக்கலாம்”, என்று முடித்துக் கொண்டாள். பார்வதி அதை மகனிடம் சொல்ல சிவன் தனக்குள் சிரித்துக் கொண்டவன் “கொஞ்ச நாள் ஆறப் போடலாம் மா”, என்று அன்னைக்கு சமாதானம் சொன்னான்.
செல்வி கூட புகுந்த வீட்டுக்கு சென்று விட்டாள். அவளுடைய மகனுக்கு கார்முகிலன் என்று பெயர் வைத்தார்கள்.
இப்படியே நாட்கள் கடந்திருந்தது. கண்மணிக்கு ஏழாம் மாதமும் ஆரம்பித்தது. இந்த இடைப்பட்ட நாளில் உமா எத்தனையோ முறை தன்னுடைய அக்கா யார் என்று சிவனிடம் கேட்டிருக்கிறாள். ஆனால் அவன் இது வரை மூச்சு விட வில்லை.
அது போல அருணும் மதியிடம் பல முறை கேட்டான் தான். ஆனால் அவள் அதைச் சொல்லவே இல்லை. மதிக்கு கவர்ன்மெண்ட் வேலையும் கிடைத்திருந்தது. ஆனால் வேலையில் சேர இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால் இப்போதும் அருண் அலுவலகத்தில் தான் வேலை செய்து கொண்டிருந்தாள். வேலை கிடைத்திருப்பதை அருணிடம் சொன்னாள்.
“வாழ்த்துக்கள்”, என்று சொல்லி அவன் கை கொடுக்க அவளுக்கு தான் என்னவோ போல இருந்தது. தயக்கத்துடனும் சிவந்த முகத்துடனும் அவனுடைய கை மீது அவளுடைய கையை வைக்க அவளது சிவந்த முகம் அவனுக்குள் ரசனையையும் சிறு ஆர்வத்தையும் விதைத்தது.
அவன் பார்த்த பெண்களில் அவள் மட்டும் வித்தியாசமாக இருந்ததால் அவன் மனம் அவள் பக்கம் லேசாக சாய ஆரம்பித்தது. ஆனால் அவள் அப்படி இல்லை. அவன் ஆண் என்பதால் அவனிடம் சற்று கூச்சுத்துடன் பழகினாளே தவிர மற்ற படி அவள் அவளாக தான் இருந்தாள். அவள் வேலைக்கு வந்த பிறகு அவனுடைய வேலைப் பளுவும் பெரிதளவு குறைந்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனதில் குடியேறிக் கொண்டிருந்தாள் மதி.
“இவ என்ன எப்பவும் சேலை கட்டிட்டே ஆபீஸ் வரா. சுடிதார் எல்லாம் போட மாட்டாளா? ஆனாலும் சேலை தான் அழகா இருக்கு”, என்று எண்ணும் அளவுக்கு அவன் மனதில் நுழைந்திருந்தாள் மதி.
இந்த இதைப் பட்ட நாளில் நடந்த மற்றொரு நல்ல விஷயம் கண்மணி சுந்தரியை சென்று பார்த்தது தான். தயக்கத்துடன் தான் கருப்பட்டி வீட்டுக்கு சென்றாள்.
அவளை சந்தோஷமாக வரவேற்று சுந்தரி பேசிக் கொண்டிருக்க அதற்கு பிறகு அவளும் சுந்தரியை நன்கு பார்த்துக் கொண்டாள். சிவனிடம் சொல்லி ஒரு வீல் சேர் வாங்கச் சொல்லி அதில் சுந்தரியை அமர வைத்ததும் அவள் தான்.
அவள் தன்னுடைய தாயை பார்த்துக் கொள்வதில் அவள் மேல் கருப்பட்டிக்கு ஒரு இனம் புரியாத அன்பும் உருவானது. அதுவும் ஒரு நாள் அவள் சுந்தரிக்கு சந்தோஷமாக கதை பேசிய படி உணவு ஊட்டிக் கொண்டிருக்க அதைக் கண்டு நெகிழ்ந்து போனான் கருப்பட்டி.
அவன் மனதில் அவள் மீது கொஞ்சம் கொஞ்சமாக அன்பு கூடிக் கொண்டு போக சுந்தரிக்கோ கண்மணியை கருப்பட்டிக்கு கட்டி வைக்க வேண்டும் என்ற ஆசை கூட உருவானது. ஆனால் அதை எப்படி பார்வதியிடம் சொல்ல என்று தடுமாறிக் கொண்டிருந்தாள்.
கண்மணிக்கு ஏழாம் மாதம் ஆரம்பித்ததும் ஒரு நாள் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது “சிவா கண்மணிக்கு வளைகாப்பு நடத்தணும் டா”, என்ற பேச்சை ஆரம்பித்தாள் பார்வதி.
“அதெல்லாம் வேண்டாம் அத்தை. எனக்கு வளைகாப்பு நடத்த பிறந்த வீடா இருக்கு? இல்லை கலவை சாதம் செஞ்சு எடுத்துட்டு வர அம்மா தான் இருக்காங்களா? யாரும் இல்லாத அநாதை”, என்று தளர்வுடன் சொன்னாள் கண்மணி.
ஏனோ சிவனுக்கு அதைக் கேட்டு கஷ்டமாக இருந்தது. அவனால் அவனுடைய அன்னையை திருப்பி தர முடியாது. ஆனால் அவளது பிறந்த வீட்டை திருப்பித் தர முடியுமே?
உமா இப்போது தன்னிடம் வந்து கேட்டால் கண்மணி தான் அவளது அக்கா என்று சொல்ல தயாராக இருந்தான்.
அங்கே உமா வீட்டிலோ அனைவரின் முகமுமே இறுக்கத்துடன் இருந்தது. முன்பிருந்த கலகலப்பு இல்லை. அவரவர் தனித் தனி அறைகளில் இருந்தார்கள். ராதாகிருஷ்ணன் ஏற்கனவே பவித்ரா இருந்த அறையில் சென்று இருந்து கொண்டார். ஏனோ அது கோதைக்கு கஷ்டமாக இருந்தது.
கணவன் பிள்ளைகள் என யாருமே அவளிடம் பேச வில்லை என்றதும் வெகுவாக தனிமைப் பட்டுப் போனாள். எதற்காக இந்த வாழ்க்கை என்ற எண்ணம் கூட அவளுக்கு வந்தது.
அப்போது உமா ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தாள். ஏனோ மகளிடம் பேச ஆசையாக இருக்க அவள் அருகே சென்று அமர்ந்தாள் கோதை. ஆனால் உமா உடனே எழுந்து கொள்ளவும் “ஏன் டி இப்படி பண்ணுற? யாருமே என் கூட பேச மாட்டுக்கீங்க? எனக்கு கஷ்டமா இருக்கு”, என்று சொல்லும் போதே கோதை கண்களில் கண்ணீர் வந்தது.
“உனக்கு என்ன மா கஷ்டம்? நீ ஆசைப் பட்ட வாழ்க்கை தான் உனக்கு இருக்கே? உன் புருஷன் கூட நிறைவான வாழ்க்கை தானே வாழ்ந்துட்டு இருக்க? அப்புறம் என்ன?”
“அவர் என் கிட்ட பேச மாட்டிக்கார் டி? உன் அப்பா என் முகத்தை பாத்து கூட எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? ஆபீஸ் கூட போக மாட்டிக்கார். பாவமா இருக்கு”
“அப்பா உன் கிட்ட எப்படி பேசுவார் மா? அவர் மனசுலயும் குற்ற உணர்வு இருக்கும்ல? அவர் அதை சரி பண்ண நினைக்கும் போது அதுக்கு நீயே தடையா இருக்க. அப்ப அப்பா எப்படி உன் கிட்ட பேசுவாங்க?”
“இப்ப என்னை பண்ணச் சொல்ற உமா? உங்க அப்பா பழைய படி மாறினா போதும் எனக்கு”
“அப்படின்னா அந்த பொண்ணையும் நீ உன் மகளா ஏத்துக்கணும். எத்தனை நாள் மா வாழப் போறோம்? கொஞ்சம் அடுத்தவங்க மேல அன்பா இருந்துட்டு போகலாமே? அவளை நீ மகளேன்னு கொஞ்ச கூட வேண்டாம். அப்பாவோட பொண்ணா அக்சப்ட் பண்ணிக்கோ. பவித்ரா அம்மாவோட மகன்னு நினைச்சா தானே உன்னால முடியாது. அதுவே அப்பாக்கு பிறந்த பொண்ணுன்னு நினைச்சிக்கோ. அப்பாவைப் பிடிச்சிருக்குன்னா உனக்கு அந்த பொண்ணையும் பிடிக்கும்”
“சரி நான் ஏத்துக்குறேன். நான் எங்க வந்து கேக்கணும் சொல்லு. உங்க அப்பாவுக்காக கேக்குறேன். எனக்கு அவர் வேணும். அதுக்காக நான் அந்த பொண்ணை ஏத்துக்குறேன். நான் சுயநலவாதின்னு நீங்க சொல்லலாம். எனக்கு இது தான் எதார்த்தம்”
“நிஜமாவா மா?”
“ஆமா”, என்று கோதை சொல்ல சந்தோஷப் பட்ட உமா “ஒரு நிமிஷம் இரு மா”, என்று சொல்லி தன்னுடைய போனை எடுத்து சிவனை அழைத்தாள். உமா அழைக்கவும் அவனுக்கு ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவனும் அதை எதிர் பார்த்தான் தானே?
அவசரமாக எடுத்து “ஹலோ”, என்றான்.
“ஹலோ, நான் உமா பேசுறேன்”
“சொல்லு உமா”
“அம்மா என்னோட அக்காவை ஏத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க. அவங்களே அதை உங்க கிட்ட சொல்லுவாங்க. நான் அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வரேன். அவங்க கேட்டா நீங்க சொல்லுவீங்க தானே? உடனே உங்களைப் பாக்க வரட்டுமா?”
“அவசரப் படாதே. ஒரு நிமிஷம் பொறுமையா நான் சொல்றதைக் கேளு”
“சொல்லுங்க. ஆனா பிளீஸ் உண்மையை மட்டும் சொல்லிருங்க. இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது”
“சரி சொல்றேன். அன்னைக்கு நீ எங்க வீட்டுக்கு வந்தப்ப பாத்தியே கண்மணி. அவ தான் உன்னோட அக்கா”
“என்னது? அவங்களா? அவங்க உங்க வைப் தானே?”
“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை”
“அப்படின்னா அன்னைக்கு மதி அண்ணின்னு சொன்னது?”
“கண்மணி எங்க அண்ணி தான். எங்க மூத்த அண்ணன் மனைவி. அண்ணா இப்ப உயிரோட இல்லை. அவன் பிணத்தை வாங்க… தான்”
“புரியுது…..”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கிப் போனது.
“சரி அதை விடு. நாளான்னைக்கு கண்மணிக்கு வளைகாப்பு நடத்த போறோம். அப்ப நீ உன் வீட்ல சொல்லி எல்லாரையும் கூட்டிட்டு வா. வளைகாப்புக்கு உங்க வீட்ல உள்ளவங்க தான் எல்லாம் செய்யணும். புரியுதா? கண்மணிக்கு பிறந்த வீட்டு சீர் வரணும். ஆனா உங்களை ஏத்துக்குறதும் ஏத்துக்காம போறதும் கண்மணியோட விருப்பம்”
“ஹிம், சரி நான் அன்னைக்கே எல்ல்லாரையும் அழைச்சிட்டு வரேன்”, என்று சந்தோஷமாக சொல்லி போனை வைத்தாள் உமா.
கண்மணி யாரென்று தெரிந்ததால் வந்த சந்தோஷமா? இல்லை அவனுக்கு திருமணம் ஆக வில்லை என்ற சந்தோஷமா? ஏதோ ஒன்று அவள் மனதை அமைதி படுத்தியது.
கோதை மற்றும் ராதாகிருஷ்ணனிடம் “உங்க பொண்ணு கிடைச்சிட்டா, அக்காவுக்கு நாளான்னைக்கு வளைக்காப்பாம். அன்னைக்கே நீங்க எல்லாரும் அவளை பாருங்க. அது வரை அவ யாருன்னு சொல்ல மாட்டேன்”, என்று சொன்ன உமா அண்ணனிடம் மட்டும் உண்மையைச் சொன்னாள். அவனுக்கும் கண்மணியின் நிலைமையை எண்ணி கவலையாக இருந்தது. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தான் அருண்.