சிலை போல நின்றிருந்தாள் உமா. அவனும் தன்னை விரும்பினதைக் கேட்டு அவளுக்கு வியப்பாக இருந்தது. அவனைப் பற்றிய யோசனையிலே அமர்ந்து விட்டாள்.
கடைக்கு சென்ற சிவன் முகம் ஒரு மாதிரி இருக்க கருப்பட்டி என்னவென்று விசாரித்தான். சிவனுக்கும் யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்ததால் நடந்ததைச் சொல்லி விட்டான். கருப்பட்டிக்கும் இதில் என்ன செய்ய என்று தெரிய வில்லை.
“சரி விடு, உன் காதலைச் சொல்லிட்டல்ல? உமா மனசு மாறும்”, என்று சமாதானப் படுத்தினான் கருப்பட்டி.
அன்று இரவு உமா எதுவோ அவனிடம் பேச வர அவனோ அவள் முகத்தைக் கூட பார்க்காமல் படுத்து விட்டான்.
அடுத்த நாள் அனைவரும் வீட்டில் இருக்கும் போது அங்கே வந்தார்கள் ராதாகிருஷ்ணன், கோதை, மதி மற்றும் அருண் நால்வரும். “அப்பா”, என்ற படி உமா வர எல்லாரையும் வர வைத்து விஷயத்தைச் சொன்னார் ராதாகிருஷ்ணன்.
சொத்துக்களை பிள்ளைகளுக்கு பிரித்து எழுதப் போவதாக சொன்ன அவர் இப்போதிருக்கும் வீட்டையும், உமா பில்டர்சையும் அருணுக்கு கொடுக்க போவதாகவும், உமா பெயரில் இயங்கி வரும் டிரஸ்ட்டை இனி கண்மணி தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி அவள் பெயரில் எழுதி வைத்தார். அவளுக்கு என்று சில இடங்களையும் எழுதி வைத்தார்.,
விளம்பரக் கம்பெனியை உமாவுக்கு கொடுத்தார். கோதையின் நகைகளை உமா மற்றும் கண்மணிக்கு சரிபாதியாக கொடுத்த அவர் மற்ற சொத்துக்களை பிள்ளைகள் மூன்று பேருக்கும் பிரித்து எழுதி வைத்தார்.
“இதெல்லாம் எதுக்கு பா?”, என்று கேட்டாள் உமா.
“எனக்கு இதெல்லாம் வேண்டாம்”, என்றாள் கண்மணி.
“உங்க அம்மாவுக்கு கிடைக்காத உரிமை உனக்கு கிடைக்கணும் கண்மணி. நீயும் எனக்கு மக தான். உன்னை என்னால விட்டுக் கொடுக்க முடியாது”, என்று சொன்ன ராதாகிருஷ்ணன் அந்த சொத்துக்களை அவளிடம் கொடுத்தார். வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொண்டாள். உமாவுக்கான சொத்துக்களையும் கொடுத்து விட்டு இரவு உணவை முடித்து விட்டு கிளம்பிச் சென்றார்கள்.
அதற்கு அடுத்த நாள் கருப்பட்டி கடையில் ஒரு ஆல்பத்தை தேடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் கையில் சிக்கியது ஒரு சிறிய ஆல்பம்.
“இது என்ன புதுசா இருக்கு?”, என்று எண்ணிக் கொண்டு அதை திறந்து பார்த்தவன் திகைத்து போனான். சிறு சிரிப்பும் அவனுக்கு வந்தது.
அவசரமாக சிவாவுக்கு தெரியாமல் அதை எடுத்து தன்னுடைய இடுப்பில் சொருகிக் கொண்டவன் “சரி சிவா நான் வீட்டுக்கு போயிட்டு வரேன்”, என்றான்.
“இப்ப போல வீட்டுக்கு போறியா? ஏன் டா?”
“குட்டியை பாக்கணும் போல இருக்கு”, என்று சொல்லிச் செல்ல சிவனும் சிரித்து விட்டுவிட்டான்.
நேராக வீட்டுக்குச் சென்றவன் “உமா இங்க வா”, என்று அழைத்தான்.
“என்ன மாமா?”
“இந்தா, உன் புருஷன் பண்ணின வேலையை பாரு? இவன் கல்யாணத்துக்கு வந்து பொண்ணு மாப்பிள்ளையை போட்டோ எடுத்தானோ இல்லையோ? உன்னை வளைச்சு வளைச்சு எடுத்துருக்கான்”, என்று சொல்ல குழப்பத்துடன் அதை வாங்கிப் பார்த்தவள் ஆனந்தமாக அதிர்ந்து போனாள்.
“அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் உமா. உன்னைத் திட்டிட்டு அவன் எப்படி வேதனைப் படுவான்னு நான் பாத்துருக்கேன். இனியாவது சந்தோஷமா இருங்க”, என்று சொல்லிச் சென்றான்.
அறைக்குள் சென்ற உமா அந்த ஆல்பத்தை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அனைத்துமே அவளது புகைப்படம். அவர்களாக போஸ் கொடுத்தது மட்டுமல்லாமல் அவளுக்கே தெரியாமல் பல புகைப்படங்களை அவன் எடுத்திருந்தான். அதைக் கண்டு அவன் காதலும் அவளுக்கு தெளிவாக புரிந்தது.
மதிய உணவை உண்டு விட்டு கடைக்குச் சென்ற கருப்பட்டி சிவனை உடனே வீட்டுக்கு போகச் சொன்னான். “நீ வீட்டுக்கு தானே போன? எனக்கு எடுத்துட்டு வந்துருக்கலாம்ல?”, என்றான் சிவன்.
“ஆமா ஆமா அவ என்னைப் பாக்க நினைச்சிட்டாலும். எப்ப டா சண்டை போடலாம்னு அலையுறா”, என்று சொன்னாலும் வீட்டுக்கு கிளம்பினான்.
வீட்டுக்கு போனதும் “வா சிவா, உமா சிவா சாப்பிட வந்துட்டான் பாரு. வா வந்து சாப்பாடு எடுத்து வை”, என்று பார்வதி அழைக்க உமா வெளியே வந்தாள். அவள் கண்கள் அவனையே துளைக்க அதைக் கண்டு ஜெர்க் ஆனவன் “ஏதாவது சண்டை போட ரெடி ஆகீட்டாளோ? இப்படி ஒரு லுக் விடுறா”, என்று எண்ணிக் கொண்டு அறைக்குள் முகம் கழுவச் சென்றான்.
அங்கே கட்டிலில் வீற்றிருந்த ஆல்பத்தைப் பார்த்தவனுக்கு இது கருப்பட்டியின் வேலை தான் என்று புரிந்தது. “இப்ப இவ என்னை ஆசையா பாக்குறாளா? இல்லை அவளுக்கே தெரியாம இவ்வளவு போட்டோ எடுத்தேன்னு பாக்குறாளான்னு தெரியலையே? எதுக்கும் சாப்பிட்டுட்டு உடனே ஓடிரணும் பா”, என்று எண்ணிக் கொண்டு சட்டையை கழட்டிப் போட்டவன் முகம் கழுவி விட்டு சாப்பிடச் சென்றான்.
அவன் அமர்ந்ததும் உமா அவனுக்கு பரிமாற பார்வதி அறைக்குள் சென்று விட்டாள். தயக்கத்துடன் அவன் உண்ண ஆரம்பிக்க அவள் பார்வை அவன் மீதே இருந்தது.
சிறு குறுகுறுப்புடன் அவன் அவளைப் பார்க்க அவளோ பார்வையைத் திருப்பிக் கொண்டாள். உண்டு முடித்ததும் அறைக்குள் சென்றவன் சட்டையை மாட்டிக் கொண்டு வேகமாக செல்ல நினைக்க அறைக்குள் வந்த உமா கதவை அடைத்து தாள் போட்டாள்.
அவன் அவளைத் திகைப்பாக பார்க்க ஓடிச் சென்று அவனை இறுக்கிக் கொண்டாள். அவள் செய்கையில் அதிர்ந்து விழிக்க “சாரி சிவா, ஐ லவ் யு சிவா”, என்று அவள் உரைத்து முடிக்கும் முன் அவளை இறுக அணைத்தவன் அவளுடைய இதழ்களைக் கவ்வி இருந்தான். அதற்கு மேல் அவனுக்கு வேறு என்ன வேண்டுமாம்? சிறிது நேரம் கழித்து விட்டவன் மீண்டும் மீண்டும் அவள் இதழ்களை சிறை எடுக்க பேச மறந்து போனாள் உமா.
இதழ்கள் கன்றிச் சிவந்து வலி எடுத்த போதும் முத்தம் நீடிக்க தான் செய்தது. அவளும் அவனிடம் இருந்து பிரிய மறுத்தாள்.
அவளது இடையில் பதிந்திருந்த அவன் கரங்கள் அவள் மேனியில் தங்களின் உரிமையை நிலைநாட்ட முயல “ஐயோ இப்ப போலயா? வீட்ல எல்லாரும் இருக்காங்க? நீங்க கடைக்கு போகணும்”, என்று முணங்கினாள். அந்த மறுப்பைச் சொல்லும் போது அவளே அவளை வெறுத்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
மறுப்பு சொன்னாலும் அவன் கரங்களுக்குள் உருகிக் கரைந்து கொண்டிருக்கும் அவள் நிலையும் அவள் மனதும் அவனுக்கு புரிந்தது. அதனால் அவளை விட மறுத்தான்.
“இதுக்கு மேல வெயிட் பண்ணுறது கஷ்டம் டி. எனக்கு நீ இப்பவே வேணும் உமா. பிளீஸ்…”, என்று அவனது கெஞ்சல் அவளை மொத்தமாக அடித்துப் போட்டது.
“சிவா”, என்று அவளது ஒற்றை சிணுங்களான அழைப்பே அவளது சம்மதத்தை அவனுக்கு புரிய வைத்தது. அது போதுமே அவனுக்கு.
அவள் இதழ்களில் தன்னுடைய இதழ்களை புதைத்தவன் மீண்டும் மூச்சு திணறத் திணற அவளை முத்தமிட்டான்.
அவள் மேனியின் மென்மையும் அவள் மேல் இருந்து வந்த வாசனையும் அவனை இன்னும் போதை கொள்ளச் செய்தது. அவன் கரங்களின் உரிமை உணர்த்திய அவன் ஆசையில், அவன் தொடுகையில் தன்னைத் தொலைத்தாள் உமா.
அவன் கரங்கள் தன்னுடைய தடைகளை தகர்க்க அதற்கு விருப்பத்துடன் உடன் பட்டாள். அவளுக்கு அவன் மட்டுமே ஆடையாகிப் போன போது வெட்கத்துடன் கண்களை மூடிக் கொண்டாலும் அவள் கரங்கள் அவனை அனைத்துக் கொண்டது.
அவனை இது வரை கம்பீரமான தோற்றத்தில் தான் பார்த்திருக்கிறாள். ஆனால் அவனோ அவள் மீதான காதலில் உருகிக் கொண்டிருந்தான். வெட்கத்தை உதறி அவளிடம் அவன் காதல் வசனம் பேச “இந்த அளவுக்கு இவன் என் மேல ஆசை வச்சிருந்தானா?”, என்று வியந்து போனாள் உமா.
தாபம் அதிகமாக அவனது கெஞ்சல்களும் உளறல்களும் சீண்டல்களும் கூடிக் கொண்டு தான் போனது. வெற்றி பெற்ற கர்வம் அவனுக்கு வந்தாலும் தோல்வி பெற்ற கவலை மட்டும் அவளுக்கு வரவே இல்லை.
இது பகல்.. அனைவரும் வெளியே இருக்கிறார்கள் என்றெல்லாம் மறந்து அவனுக்குள் முழுமையாக கலந்தாள் உமா. இருவருக்கும் இந்த உலகம் மறந்து தான் போனது. இந்த உலகையே வென்ற சந்தோஷம் அவனுக்கு வந்தது.
திருப்தியாக அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகிப் படுத்தவனின் கரங்கள் அவளை வாரிச் சுருட்டி தன்னுடன் அணைத்துக் கொண்டது. அவளும் வாகாக அவன் மார்பில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் இருவரும் நன்று உறங்கிப் போனார்கள். கூடிய களைப்பில் அவர்கள் உறங்க உண்ட மயக்கத்தில் அவர்கள் உறங்குகிறார்கள் என்று எண்ணி பார்வதி அவர்களை தொல்லை செய்ய வில்லை.
அடுத்து வந்த நாட்களில் இருவரும் சந்தோஷமாக வலம் வந்தார்கள். ஒவ்வொரு நிமிசமும் அவனின் தேடல் அதிகரித்துக் கொண்டு தான் சென்றது. ஒவ்வொரு இரவும் விடியலும் அவர்கள் காதலை அதிகரித்துக் கொண்டு தான் போனது.
மூன்று மாதம் கழித்து….. உமாவுக்கு அன்று காலையில் எழும் போதே தலை சுற்றுவது போல இருந்தது. மீண்டும் படுக்கையில் படுத்துக் கொள்ள “என்ன டி எந்திரிக்க மனசு இல்லையா? ஸ்டூடியோக்கு போகாம நானும் தூங்க வரவா?”, என்று கேட்க கண்களை உருட்டி அவனை முறைத்தாள்.
“என்ன உமா? உடம்புக்கு முடியலையா?”, என்று அக்கறையுடன் கேட்டவன் அவள் முகத்தில் படிந்திருந்த முடியை விலக்கி விட அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள் “ஹாஸ்பிட்டல் போகலாமா?”, என்று கேட்டாள்.
“போகலாம் வா”, என்று சொல்லி அவளைக் கிளம்பச் செய்தவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான். அவளோ கண்மணிக்கு பார்த்த லேடி டாக்டரைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல அவனோ வியப்பாக அவளைப் பார்த்தான்.
“அவங்களை எதுக்கு டி பாக்க வந்துருக்கோம்?”
“வயித்துல உங்க பிள்ளை இருக்கானா இல்லையான்னு பாக்க அவங்க கிட்ட தானே காட்டணும்?”, என்று சொல்ல அவன் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியது.
“உமா, நிஜமா தான் சொல்றியா?”, என்று கேட்க டாக்டர் அவர்களை அழைத்தார். டாக்டரும் அது குழந்தை தான் என்று சொல்ல சந்தோஷமாக வெளியே வந்தார்கள். அப்போது மதி மற்றும் அருண் இருவரும் அங்கே வர மதியும் குழந்தை உண்டாகி இருப்பது தெரிந்து அனைவருக்கும் சந்தோஷமாக இருந்தது.
நால்வரும் சேர்ந்தே வீட்டுக்குச் செல்ல வீடு முழுக்க கலகலகலப்பாக இருந்தது. அனைவரும் சென்றதும் அறைக்குள் வந்த சிவன் அந்த அந்திப் பொழுதில் உமாவை இறுக அணைத்துக் கொண்டு தன்னுடைய அன்பை முத்தத்தால் வெளிப்படுத்தினான்.