“என்ன டா யோசிச்சிட்டு இருக்க?”, என்று கேட்டான் கருப்பட்டி.
“அவங்க மதியோட நைட்டி தான் டா போடுறாங்க. அதான் அவங்களுக்கு டிரஸ் வாங்க போகணும். ஆனா எனக்கு எடுக்க தெரியாது. அம்மாவும் வர மாட்டாங்க. அவங்களைக் கூப்பிடலாம்னு பாத்தா ரொம்ப டயர்டா தெரியுறாங்க?”
“சும்மா உனக்கு தோனினதை வாங்கிட்டு வா டா மச்சான். ஒரு வாரத்துக்கு தானே? அப்புறம் திருப்பூர்ல போய் அவங்க டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துறலாம்”
“சரி தான். அப்புறம் நீயும் கடைக்கு வா. தனியா போய் எடுக்க எப்படியோ இருக்கும்”, என்று சொல்ல அவனும் சரி என்று சொன்னான்.
கிளம்பும் போது மதியை அழைத்த சிவன் “அவங்களுக்கு டிரஸ் வாங்க போறோம் மதி. உன்னைக் கூட்டிட்டு போய்ருவேன். ஆனா நீ தான் அவங்களைப் பாத்துக்கணும். நீயும் இல்லைன்னா செல்வியும் அம்மாவும் அவங்களை ஏதாவது சொல்ல வாய்ப்பு இருக்கு. அவங்களை உன்னை நம்பி தான் விட்டுட்டு போறேன். பாத்துக்கோ”, என்றான்.
“மத்தது எல்லாம்….”, என்று அவன் தயங்க “வேற ஒண்ணும் வேண்டாம். எனக்கு வாங்கினது புதுசு இருந்தது. அதை கொடுத்துட்டேன். என்னோட சட்டையும் அவங்களுக்கு சரியா தான் இருக்கு. மத்தது எல்லாம் அப்புறம் பாக்கலாம்”, என்று சொன்னதும் தான் இருவரும் கிளம்பிப் போனார்கள்.
அவர்கள் மாலை நான்கு மணிக்கு வீட்டுக்கு வரும் போது மதி பதட்டத்தில் இருந்தாள். “என்ன மதி டென்சனா இருக்க?”, என்றான் கருப்பட்டி.
“அண்ணிக்கு உடம்பு சரி இல்லைண்ணா. மதியம் சாப்பாடு கொடுத்தேன். ஒரு வாய் சாப்பிட்டாங்க. அப்புறம் ஒரே வாந்தி”
“என்ன சொல்ற நீ?”
“ஆமா ரொம்ப சோர்வாக மயங்குற மாதிரி இருந்தாங்க. ரூம்ல படுக்க வச்சிருக்கேன்”
“கருப்பட்டி, நீ ஒரு ஆட்டோவை வரச் சொல்லு டா”, என்று சொல்லி விட்டு கண்மணி படுத்திருந்த அறைக்குள் சென்றான். அங்கே அரை மயக்கத்தில் படுத்திருந்தாள் கண்மணி.
சட்டென்று அவனுக்கு அவளை எப்படி அழைக்க என்று தெரிய வில்லை. அவன் வயது தான் அவளுக்கு இருக்கும் என்பதால் அண்ணி என்று அழைக்க அவன் தயங்கிய படியே அவளை நெருங்கி “என்னங்க…. அண்ணி”, என்று தடுமாற்றத்தொடு அழைக்க அவன் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.
“என்ன செய்யுது…. அண்ணி?”, என்று அவன் கேட்க “கண்மணின்னே கூப்பிடு சிவா. நான் அதெல்லாம் பெருசா எடுக்க மாட்டேன்”, என்று சோர்வுடன் சொன்னாள் கண்மணி.
“சரி என்ன ஆச்சு? எதுக்கு வாமிட்டா இருக்கு? வாங்க ஹாஸ்பிட்டல் போயிட்டு வரலாம்”, என்று அழைத்தான்.
“அதெல்லாம் வேண்டாம். சரியாகிரும்”, என்று சொல்லிக் கொண்டே எழுந்து நின்ற கண்மணி அடுத்த நொடி தலை சுற்றிக் கீழே விழுந்தாள்.
“கண்மணி என்ன ஆச்சு?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டான் சிவன். அவன் அலறிய அலறலில் அனைவரும் அங்கே விரைந்தார்கள். பார்வதி கூட வந்து விட்டாள். ஆனால் அவள் அருகே செல்ல வில்லை.
அவளைத் தூக்கி கட்டிலில் நேராக படுக்க வைத்தவன் அவள் கன்னம் தட்டி “கண்மணி கண்மணி”, என்றான். அவளோ அசையாமல் படுத்திருந்தாள். அவனுக்குள் பதட்டம் தொற்றிக் கொண்டது. மதி கொடுத்த தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தான். அப்போதும் அவளிடம் அசைவில்லை.
“மதி ஆட்டோ வந்துட்டான்னு பாரு”, என்று சொன்னதும் வெளியே சென்றாள். ஆட்டோ வந்து நிற்க கருப்பட்டி வேகமாக வீட்டுக்குள் வந்தான்.
சிவன் அவளைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்து ஆட்டோவில் அமர வைத்து அவள் அருகே மதியை அமரச் சொல்லி தானும் அமர்ந்தான்.
“கருப்பட்டி நீயும் வா டா”, என்று அவன் அழைத்ததும் கருப்பட்டி முன்னே அமர்ந்து கொண்டான். ஆட்டோ கிளம்பியது. மதி அவளை தன்னுடைய மடியில் சாய்த்து படுக்க வைத்திருந்தாள்.
மருத்துவமனையில் சேர்த்ததும் அவளை பரிசோதித்த டியூட்டி டாக்டர் உடனே மகப்பேறு மருத்துவரை அழைத்தார். அவர் வந்து சோதனை செய்யவே வெளியே இருந்த மூவரும் பதறினார்கள்.
“என்ன டா வேற வேற டாக்டரா வராங்க?”, என்று கேட்டான் கருப்பட்டி.
“தெரியலை டா. ஒரு வேளை ஆக்ஸிடெண்ட்ல கண்மணிக்கும் ஏதாவது அடி பட்டிருக்குமோ?”, என்று பயத்துடன் கேட்டான் சிவன்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அந்த பெண் மருத்துவர் “பயப்படுற மாதிரி எதுவும் இல்லை. சாதாரண மயக்கம் தான். அவங்க இப்ப கன்ஸீவா இருக்காங்க. சரியா சாப்பிடாததுனால தான் அப்படி ஆகிருக்கு”, என்று சொல்ல அனைவரின் முகமும் மலர்ந்தது.
“கொஞ்சம் வீக்கா இருக்காங்க. வேளாவேளைக்கு சரியா சாப்பிட வைங்க. நான் மெடிசன் எழுதித் தரேன். அதையும் கொடுங்க. அடுத்த தடவை செக்கப்க்கு வரும் போது ஸ்கேன் எழுதி தரேன்”, என்று சொல்லிச் சென்றார். மூவரும் கண்மணி கண் விழிக்க காத்திருந்தார்கள்.
கருப்பட்டிக்கு அவளைப் பார்க்கும் போது தூசி படிந்த ஓவியம் போல தான் தோன்றியது. “இந்த பொண்ணு சிரிச்சா அழகா இருக்கும்ல?”, என்ற எண்ணம் அவனுக்குள் உதயமானது.
கண்மணி கண் விழித்துப் பார்த்த பிறகு தான் நிம்மதியாக இருந்தது அனைவருக்கும். “வாழ்த்துக்கள் கண்மணி, வாழ்த்துக்கள் அண்ணி”, என்று இருவரும் சொன்னார்கள். கருப்பட்டி எதுவும் சொல்ல வில்லை.
சங்கடத்துடன் எழுந்து அமர்ந்தாள் கண்மணி. “அண்ணி நீங்க மாசமா இருக்கீங்கன்னு டாக்டர் சொன்னாங்க. எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?”, என்று சொன்ன மதி அவளைக் கட்டிக் கொண்டாள். சின்ன சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டாள் கண்மணி.
“இது உனக்கு முன்னாடியே தெரியுமா கண்மணி?”, என்று கேட்டான் சிவன்.
“ம்ம்”
“அண்ணனுக்கு தெரியுமா?”
“தெரியும். அன்னைக்கு இளா கூட வேலை பாக்குறவரோட வீட்டு பங்ஷன்க்கு போயிட்டு வரும் போது ஹாஸ்பிட்டல்ல செக் பண்ணிட்டு வரும் போது தான் ஆக்ஸிடெண்ட் ஆச்சு. என்னையும் குழந்தையையும் காப்பாத்தணும்னு நினைச்சு மணல் மேல என்னைத் தள்ளி விட்டுட்டு அவர் லாரில மோதிட்டார்”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கிப் போனது. கருப்பட்டிக்கு அவளை அனைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல ஒரு எண்ணம் உருவாக தன்னையே அவன் கடிந்து கொண்டு பேசாமல் நின்றான்.
“கவலைப்படாதே கண்மணி. அண்ணா உன்னை விட்டு எங்கயும் போகலை. உன் குழந்தை மூலமா உன் கூட தான் இருப்பான். அவன் ஆத்மா உன் கூடவே தான் சுத்திட்டு இருக்கும். சரி வாங்க வீட்டுக்கு போகலாம்”, என்று சொல்லி அனைவரையும் அழைத்தான் சிவன். மதி அவளை கைத்தாங்கலாக அணைத்த படி வெளியே அழைத்து வந்தாள்.
வீட்டுக்குள் வந்ததும் அனைவரும் உள்ளே சென்றார்கள். உள்ளே சென்றது தான் தாமதம் “அங்கயே நில்லுங்க”, என்று கத்தினாள் பார்வதி.
“என்னமா?”, என்று சலிப்புடன் கேட்டவன் “மதி, கண்மணியை கூட்டிட்டுப் போய் படுக்க வை”, என்றான்.
“நில்லு மதி. யாரும் இங்க இருக்க கூடாது. முதல்ல அவளை இங்க இருந்து போகச் சொல்லு சிவா. இது என்ன சத்திரமா கண்டவங்களும் வந்து தங்க?”, என்று கேட்டாள் பார்வதி. கண்மணியின் கண்கள் கலங்கிப் போனது.
இந்த வீடும் இல்லை என்றால் தன்னுடைய நிலைமை என்னவாகும் என்ற பயம் வந்தது. பணப் பிரச்சனை அவளுக்கு இல்லை தான். ஆனால் பாதுகாப்பு? இந்த வயதில் தனி ஒரு பெண்ணாக அவளால் எப்படி வாழ முடியும்? அதுவும் குழந்தையும் வந்து விட்டால் என்று எண்ணி கவலை கொண்டாள்.
இந்த நிமிடம் கணவனின் இழப்பு பூதாகரமாக தெரிந்தது அவளுக்கு. ஆனால் பார்வதி அப்படிச் சொன்னதும் “அம்மா, என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா?”, என்று எரிச்சலுடன் கேட்டான் சிவன். கண்மணிக்கு அவமானமாக இருந்தது. அவளுக்கு ஒரு நொடி ஆகாது இங்கிருந்து செல்ல. ஆனால் அவளது கணவன் அவளை இங்கே இருக்க சொல்லியிருக்கிறானே?
“என்ன டா அம்மா? மகனே இல்லைன்னு ஆனதுக்கு அப்புறம் மருமக எங்க இருந்து வந்தா? என்னால அப்படி சட்டுன்னு யாரையும் ஏத்துக்க முடியாது. அவளை இங்க இருந்து அனுப்பிரு”, என்று மீண்டும் திடமாக சொன்னாள் பார்வதி.
“அம்மா அண்ணன், அவளை பாத்துக்க சொல்லிருக்கான் மா. அவ நம்ம பொறுப்பு”
“அதை நீ வேணும்னா கேக்கலாம். என்னால முடியாது”
“அப்படின்னா நான் கண்மணியைப் பாதுக்காக்க வேற வீடு பாக்க வேண்டியது இருக்கும்”, என்று மிகப் பெரிய இடியைத் தூக்கிப் போட்டான் சிவன். அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள். கண்மணி கூட வியப்பாக அவனைப் பார்த்தாள்.
ஏனோ தனக்காக போராடும் ஒரு நல்ல நண்பனாக அந்த நிமிடம் அவன் அவள் கண்களுக்கு தெரிந்தான்.
“நினைச்சேன் டா. ஒருத்தன் இவ தான் வேணும்னு நம்மளை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு போனான். இப்ப நீயும் போறேன்னு சொல்றல்ல?”, என்று மகனிடம் கேட்ட பார்வதி கண்மணி புறம் திரும்பி ஏதோ பேச போக “அம்மா தேவையில்லாம எதுவும் பேசிறாதீங்க?”, என்று எச்சரித்தான்.
“நான் பேசுறது தேவையில்லாத பேச்சா? நீ தான் எங்களை விட்டுப் போகப் பாக்குற? அதுக்கு காரணம் இவ தானே?”
“நீங்க மனசாட்சி இல்லாம பேசினா நான் அப்படி தான் முடிவு எடுக்க முடியும்? சரி இப்ப ஒரே ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்கு பதில் சொல்லுங்க”
“என்ன?”
“உங்களுக்கு மகன் வேண்டாம். மருமகளும் வேண்டாம். அப்படி தானே?”
“ஆமா”
“சரி, நான் அவளை எங்கயாவது தங்க வச்சு பாத்துக்குறேன். நான் அவளுக்கு துணையா போனாக் கூட நீங்க அதை சரியா புரிஞ்சிக்க மாட்டீங்க? ஆனா எனக்கு ஒரே ஒரு உறுதி கொடுங்க”