அன்று மானுடத்தின் உயிர் நாடியாம் காதலைக் கொண்டாடும் காதலர் தினம். அதிகாலை எட்டு மணிக்கெல்லாம் (திரிபுரசுந்தரிக்கு அது தான் அதிகாலை), அமிழ்தினியனுக்கு மெசேஜ் செய்திருந்தாள்.
“இன்னைக்கு நாம ஒரு முக்கியமான இடத்துக்கு போறோம்”
இரவெல்லாம் கனவின் தாக்கத்தில் தூக்கம் இல்லாமல் தவித்தவன் அவள் மெசேஜை பார்த்ததும் கோபமுற்றான்.
‘இவங்க பெரிய ராணி மகாராணி, இவ சொன்ன உடனே என்ன ஏதுனு கேட்காம நான் கிளம்பிடனுமா?’
“வர முடியாது” என்று பதிலனுப்பினான்.
“சரி, நான் பிரகாஷ் கூட போறேன்” அவனுக்கு பதிலனுப்பி விட்டு தயாராகினாள்.
முழு கருப்பு நிறத்தில் முட்டிக்கு மேல் வரை தொங்கும் பிரில் வைத்த பாடிகான் (Bodycon) ட்ரஸ் அணிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப காதில் சின்ன கம்மல், எப்பொழுதும் போல அவள் சுருள் முடியை பறக்க விட்டவாறு வந்து நின்றவளை பார்த்து வாயடைத்து நின்றார் பாகீரதி. அவள் நிறத்திற்கு கருப்பு உடை தூக்கிக் கொடுக்க, முன்பக்கம் சற்றே அபாயகரமான வளைவும், தொடை தெரியும் உடையும் அவர் வயிற்றை பிசைந்தது. போடாதே என்று சொன்னால் முரண்டு பிடிப்பாளே இவளை எப்படி தடுப்பது என்றென்னும் போதே அவளுக்கு உதவ அமிழ்தினயன் அங்கு வந்து நின்றான்.
அவனும் சொல்லி வைத்தார் போல் கருப்பு முழு நீள சட்டை. வெள்ளை ஜீன்ஸ், கூலர்ஸ் என்று வந்து நிற்க, திரிபுரசுந்தரி அவனை பார்த்து சீட்டியடித்தாள். அவளின் செயலுக்கு லேசாக முகம் சிவந்தவன், நிதானிக்கும் முன்பு மற்றொரு குண்டை தூக்கி போட்டாள், “ஹாப்பி வேலண்டைன்ஸ் டே, அதிப்பா”
அமிழ்தினியன் தடுமாறினான், தலையை அழுத்த கொத்தி விட்டுக்கொண்டவன் சட்டென்று, “சேம் டு யு” என்று கூறியபடி பாகீரதியை பார்த்து திரும்பி, “அம்மா! ஹேப்பி வேலன்டைன்ச்ல் டே மா” என்றுரைத்து சமாளித்தான். அவரும் சிரித்துக் கொண்டே “இரு டா, டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்றபடி உள்ளே சென்று விட்டார்.
அவர் உள்ளே சென்றதும், ரிபு முந்திக் கொண்டு, “ப்ளீஸ் அதிப்பா! இன்னைக்கு ஒரு நாள் என் ட்ரஸ் பத்தி நீ ஒன்னும் சொல்லக் கூடாது. ப்ளீஸ் ப்ளீஸ்”
இனியன் பொறுமையாய் கைகளை கட்டிக் கொண்டு அங்கிருந்த சேரில் அமர்ந்துவிட்டான், “நீ இந்த டிரெஸ்சை மாத்திட்டு வரதா இருந்தா நாம போகலாம். இல்லேனா நீ அந்த பிரகாஷ் கூடவே போ. நான் வரலை”
“ஏன் அதிப்பா இப்படி பண்ற?”
“ரிபு! மாடர்ன்க்கும் மாடஸ்ட்க்கும் ஒரு வித்தியாசம் இருக்குது. நீ ஸ்டைலிஷா இருக்கறதுக்கு, ஃபேஷனபிளா இருக்கறதுக்கு மாடர்ன் ட்ரெஸ் தான் போடணும்னு இல்லை, மாடஸ்ட்டா போட்டாலே போதும். நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறன். நீ எந்த டிரெஸ் போட்டாலும் அழகு தான் டா. எக்ஸ்போஸ் பண்ணினா தான் அழகா என்ன? ஒருத்தரோட பார்வை நம்ம மேல விழம்போது அது அசுயையாவோ, காமமாவோ இருக்கக் கூடாது டா. பர்தா போட்டுட்டு போனா கூட காம பார்வை பார்க்கிறவனும் இருக்கான், ஸ்கூல் ட்ரெஸ் போட்டுட்டு போற புள்ளைங்களை பார்க்கிற கேடு கெட்டவனும் இருக்கத் தான் செய்யுறான். ஆனால் நம்ம பக்கம் நாம சரியா இருந்துக்குவோமே?” குரலை தாழ்த்தி அவன் கூறினாலும் அதிலிருந்த உறுதியை அவளால் குலைக்க முடியவில்லை
கன்னத்தில் கை வைத்து அவன் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தவள், “ஹ்ம்ம், ட்ரெஸ் போடும் போதே நினைச்சேன், எப்படியும் நீ வேண்டாம்னு சொல்லுவேன்னு. சரி ஒரு சின்ன நப்பாசை தான். என்னவோ போ, எவ்வளோ ஆசையா இந்த ட்ரெஸ் வாங்கினேன் தெரியுமா?”
“அவ்ளோ தானே? ஒரு சின்ன மாற்றம் பண்ணினா போதும். இதுக்கு மேட்சிங்கா ஒரு லெக்கிங்க்ஸ் போட்டு, மேல லாங் ஜாக்கெட் ஒன்னு போட்டுடு, அதுவும் பேஷன் தான், மாடஸ்ட் பேஷன்”
அவன் சொன்னது போலவே மாற்றிக் கொண்டு அவள் வந்து நிற்கவும், பாகீரதி நிம்மதியாய் உணர்ந்தார்.’உனக்கு இவன் தான் சரி’ அவர் மனம் என்ன நினைத்து அப்படி சொல்லியதோ, கடுவுளுக்கே அந்த கணக்கு புரியும்!!!
கிளம்பும் முன் மறக்காமல் அதிப்பாவுடன் செல்பி எடுத்து ஸ்டேட்டசில் போட்டாள்.
காரில் ஏறி எங்குச் செல்ல வேண்டுமென்று அவள் மேப்பில் போட்டு அவனிடம் கொடுத்து விட்டாள். அவன் மௌனமாகவே ஓட்டிக்கொண்டு வர, “ஏன் அதிப்பா? எங்க போறோம்னு கேட்க மாட்டியா?”
“எதுக்கு? கேட்டா சர்ப்ரைஸ்னு சொல்லுவ”
“சரி ஏதாவது பேசிட்டாவது வாயேன். ரொம்ப போர் அடிக்குது. தூங்கிடுவேன். அல்லது ஏதாவது பாட்டு பாடு” வெகு நேரமாக டிராபிக்கில் தவழ்ந்து கொண்டிருந்ததால் வந்த எரிச்சலில் ரிபு கூறினாள், பின்னே டிராப்பிக் நெரிசலில் உலகத்திலேயே இரண்டாவது இடம் பெற்ற ஊர் ஆயிற்றே!!!
அவள் கேட்ட நேரம் சரியாக சுற்றி புகை மண்டலமும், டிராபிக்கும் சூழ, அமிழ்தினியன்
“என் இனிய இஞ்சிமொரபாவே
புதிதான அதிகாலையோ, புகை சூழும் நெடுஞ்சாலையோ
உன்னோடு நான் சென்றால் என் பாடு திண்டாட்டம் தான்” என்று பாட, அதற்கு இசைப்பாட்டாய்
“யப்பா யப்பா அதிப்பா
சரியான பூமரப்பா
நீ பேசுறது எல்லாம் க்ரிஞ்சுப்பா”
அமிழ்தினியன், “ஏ புள்ள இஞ்சிமொரப்பா
ஆளை கொஞ்சம் விடு தாயி
உன் தொல்லை கொல்லுதடி
அம்மி கல்லும் ஆடுதடி”
இருவரும் மாற்றி மாற்றி கையை ஆட்டிக் கொண்டே சத்தமாக பாட, கார் கதவு மூடி சத்தம் வெளியே கேட்காவிட்டாலும் இவர்கள் செய்கைகளை பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து கார்காரர் இவர்களை ஏலியன்களை போல் பார்த்துக் கொண்டுச் செல்ல,
“ஒய்! இஞ்சிமொரப்பா! பக்கத்து கார்காரன் நம்மளையே பார்கிறான். கொஞ்சம் அடக்கி வாசிப்போம்”
“அதிப்பா! அவனுக்கு பொறாமை. அவன் மூஞ்சை பாரு, பத்து கடப்பாரையை ஒண்ணா முழுங்குன மாதிரி விரைப்பா இருக்குது. பக்கத்துல அவன் பொண்டாட்டி, இந்த கடப்பாரையை கட்டிகிட்டதுக்கு இந்த போனையே கட்டியிருக்கலாம் போல, மாசம் மாசம் ரீசார்ஜ் பண்ணினா காலத்துக்கும் நமக்கு அடிமையா இருக்கும்ங்கிற ரேஞ்க்கு போனை கட்டிப்புடிச்சிட்டு வரா. நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வரது கடப்பாறை மூஞ்சிக்கு புடிக்கலை. மனசுக்குள்ள ‘லவ்வர்ஸ் டே அதுவுமா வந்துட்டானுங்க இவனுங்க வேற கடுப்பை கிளப்பிட்டுனு’ நினைச்சிருப்பான்”
மனதில் எதுவுமில்லாமல் “நாளை திங்கட்கிழமை” என்பது போல் அவள் எதார்த்தமாய் கூறி விட்டு சிரித்தாலும், இனியனுக்கு இடித்தது. இவர்கள் இருவரையும் பார்த்து அப்படி தானே நினைப்பார்கள்? சும்மா இருவரும் வெளியே சென்றாலே ஜோடியாய் ஜோடிக்கும் உலகம், இன்று காதலர் தினம் வேறு. அண்ணன் தங்கையாய் சென்றாலே வித்தியாசமாய் பார்க்கும் போது, இவர்களை கேட்கவா வேண்டும். இன்று அவளுடன் வந்திருக்கவே கூடாதோ?
“ஆமா ஏன் அந்த பிரகாஷ் கூட போகலை?”
“நான் ப்ரகாஷ் கூட போறேன்னு சொன்ன பிறகும் நீ ஏன் வந்து நின்ன?”
“நீ போக மாட்டேன்னு தெரியும் அதான்”
“அதே மாதிரி நீயும் வந்து நிப்பனு எனக்கு தெரியும் அதிப்பா” என்றபடி அவன் கன்னத்தை கிள்ள அவள் கையை நகற்றியவன், “ரிபு! நீ இன்னும் சின்ன பொண்ணுமில்லை, நான் சின்ன பையனுமில்லை. உனக்கு இருபது வயசாகுது அதை புரிஞ்சு பொறுப்பா நடந்துக்கோ”
“சின்ன பையன், பொண்ணாவே இருந்திருக்கலாம். சின்ன வயசுல எவ்வளோ ஜாலியா என் கூட விளையாடுவ, அதெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன். இந்த வயசு தான் நாம ரெண்டு பேரும் சகஜமா பழக தடையா இருக்குனா அந்த வயசாகாமலே இருந்திருக்கலாம்”
இதற்கு என்ன பதிலுரைப்பான் அவன், அவனுக்கும் இதே உணர்வு தானே!!
அவனின் போன் ஒலி எழுப்ப, காருடன் அதை இணைத்திருந்த ஸ்பீக்கரில் போட்டான், “அப்பா!
“தம்பி! நான் வீட்டுக்கு வந்துட்டேன் பா”
“சரி பா! நானு…”
“பப்புமா கூட இருக்கிற தானே?”
அவர் குரலில் ஒரு சிறு கேலியும், சின்ன சிரிப்பும் கலந்து ஒலிப்பது போலிருந்தது.
“ஆங்…..ஆமா பா. சரி தம்பி நான் போய் பாகீரதி பார்த்துட்டு ஆபிஸ் கிளம்புறேன். நீ பாரு”
பேசிவிட்டு வைத்தவனுக்கு சமீப காலமாக தந்தையும் தாயும் பூடகமாய் தன்னையும் ரிபுவையும் சேர்த்து வைத்து பேசுவது புரிந்தது. அவனுக்கும் புரியாமல் இல்லை. இரு வீட்டிலும் வேறு எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லாத போது, எல்லாமும் சீராக இருக்கும் போது அவர்களின் எதிர்பார்ப்பு தப்பில்லை தான். ஆனாலும் இது நடக்கக் கூடாது….
“ரிபு! நான் கொஞ்ச நாளாவே ஒரு யோசனையில் இருந்தேன். இப்போ முடிவு பண்ணிட்டேன் ”
“என்ன யோசனை? என்ன முடிவு?”
“நான் திருவனந்தபுரத்திற்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போக போறேன்”
“ஹே! என்ன திடீருன்னு?”
“இல்லை எனக்கு கொஞ்சம் மாறுதல் தேவை அதான்…”
“பெங்களூர் தானே பா ஹெட்குவார்ட்ஸ். உனக்கு இங்க தானே நல்ல ஸ்கோப்”
“வேலை தெரிஞ்சவன் எங்கிருந்தாலும் சக்சஸ் ஆக முடியும். எனக்கு ஒரு இடமாறுதல் வேணும்னு தோணுது. ஆபிஸ்ல கேட்டா உடனே கிடைச்சுடும். சீக்கிரம் கிளம்பனும்”
அவள் முகம் வாடியது
“ஒய்! இஞ்சிமொரப்பா! என்ன?”
“இல்லை, நீ போய்ட்டா என்னை யாரு டெய்லி காலேஜ் கொண்டு விடுவாங்க, யாரு ஷாப்பிங் கூட்டிட்டு போவாங்க”
அவள் விளையாட்டாய் கூற, அவனுக்கு அது விளையாட்டாய் தெரியவில்லை. மௌனமாய் வந்தான்.
“எப்போ கிளம்புற?”
“ம்ம்…இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு, இங்க சில விஷயங்கள் செட்டில் பண்ணனும், அதை பண்ணிட்டு கிளம்பனும்” அவன் குரல் இறுகிக் கிடந்தது.
“ஏன் இப்போ உர்ருனு பேசுற?”
“ம்ம்ச்ச்….நான் அபியை கொஞ்சம் கண்காணிக்க சொன்னேனே? செஞ்சியா?”
“எனக்கு என்ன வேற வேலை வெட்டி இல்லையா? அந்த வெட்டி டாக்கை நான் ஏன் கவனிக்கனும்?”
“ரிபு, அவன் உன் தம்பி”
“தம்பியா இருந்துட்டா மட்டும் போதுமா. தம்பின்னு என்ன செஞ்சிருக்கான் அவன்?”
“நீ அக்காவா அவனுக்கு என்ன செஞ்சிருக்கியோ அதை தானே அவன் உனக்கு திரும்ப செய்வான்?!”
அவள் பதில் கூறவில்லை, இருவரும் வெவ்வேறு உணர்வுகளினால் கட்டப்பட்டு அமைதியாய் வந்தனர்.
மேப்பில் அவள் போட்டுக் கொடுத்த இடம் வந்தது. அது எலஹன்காவில் இருக்கும் ஒரு அபார்ட்மென்ட்டை காட்டியது.
“ஹே! மச்சான். நான் உன் அபார்ட்மன்ட் வாசலில் தான் நிக்குறேன். ஹ்ம்ம் வா”
அவள் கூறிய மச்சான் என்ற சொல்லில் கை முஷ்ட்டி இறுக ஸ்டீரிங் வீலை அழுத்தமாக பற்றிக்கொண்டான். அவன் இருந்த கோபத்துக்கு அது உடையக் கூட வாய்ப்புண்டு. மச்சானாம்ல மச்சான்? அந்த மச்சானை பார்க்க கொலைவெறியுடன் காத்திருந்தான்.
கீழே வந்தவன் அரிசி மாவுக்கு கை கால் முளைத்தது போல் மொட்டை மொழுக்கடீரென்று இருந்தான். பின்பக்கம் ஒரு குடுமி வேறு. இவன் தான் அந்த மச்சானா? கண்களாலேயே அவனை எரித்துக் கொண்டிருந்தான் அமிழ்தினியன்.
வந்தவன் திரிபுரசுந்தரியை பார்த்து கை அசைத்து விட்டு அவளை லேசாக கட்டிபிடித்து வரவேற்றான். அமிழ்தினியனிடம் திரும்பி, “ஹலோ ஜீ” என்றபடி கைகொடுத்தான்.
அமிழ்தினியன் அவனுக்கு கை கொடுக்காது சட்டென்று தன் போன் அடித்தது போல் அதை காதில் வைத்து பேச ஆரம்பிக்க, நீட்டிய கையை இறக்கி அந்த அரிசி மாவு ரிபுவுடன் பேசச் சென்றது.
“ஏண்டா, பொம்பளை புள்ளைனா கட்டி பிடிச்சு வரவேற்ப, பசங்களுக்கு கை கொடுப்பியா? என்ன அழகான கல்ச்சர் பழகியிருக்கீங்க டா?” மனதிற்குள் அவனை வருத்தெடுத்தவாறு அழைப்பே வராத போனை பேசி முடித்துவிட்டு வேறு வழியில்லாமல் அந்த மச்சானிடம் (?) சென்று தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான்.
அந்த மச்சான் ‘ஹம் ஆப் கே ரெயின்கோட்’ பேமிலி போல!! ஹிந்தியிலேயே கதைத்துக் கொண்டிருந்தான். நடு நடுவே மும்பயிலிருந்து வந்த ஹீரோயின் போல தமிழிலும் கதைத்தான். அவன் சொன்னது இது தான்.
பெங்களூரில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று “ஏர் இந்தியா ஷோ(Air India Show)”, ஆசியாவிலேயே மிகப்பெரிய ஏர் ஷோ. பாதுகாப்பு துறை (Ministry of Defense) ஏற்பாடு செய்யும் இந்த ஏர் ஷோவில் கிட்டதட்ட 809 நிறுவனங்களும், 98 நாடுகளும் கலந்துக் கொள்ளும் நிகழ்வு அது. பார்க்க கண் கொள்ளா காட்சியாயிருக்கும். அந்த மும்பை மச்சானின் அபார்ட்மென்ட் மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் தெள்ளதெளிவாய் நிகழ்ச்சியை காண முடியுமென்பதால் திரிபுரசுந்தரி இங்கு அவனை கூட்டி வந்திருந்தாள்.
ஏர் ஷோவை என்னவோ அவனே ஏற்பாடு செய்ததை போல அந்த மும்பை மச்சான் பெருமை பீத்திக்கொண்டு வர, எட்டாவது மாடியில் இருக்கும் அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
“மச்சான்” என்று கூவியபடி கிட்டத்தட்ட ரிபு வயதிருக்கும் ஒரு பெண் ஓடி வந்து ரிபுவை கட்டிக்கொண்டாள்.
இருவரும் மச்சான் என்று மாற்றி மாற்றி கொஞ்சிக் கொள்ள, அமிழ்தினியனுக்கு இவள் தான் அந்த மச்சான் என்பது புரிந்தது.
“ஹலோ! ஐ ஆம் அகான்ஷா. நான் ரிபுவோட மச்சான், ஐ மீன் ஃப்ரெண்டு. யு மஸ்ட் பி அதிப்பா”
“வோய் பிச்சு பிச்சு. எனக்கு மட்டும் தான் அதிப்பா”
“நீங்க ரிபுவோட காலேஜ் ப்ரெண்டா?” கழுத்தில் தொங்கும் கருப்பு கருகுமணியை (தாலி) பார்த்து யோசனையுடன் கேட்க, “நான் அவளோட சீனியர். ரெண்டு வயசு பெரியவ”
“ஓ, ஆனா அப்படி தெரியவே இல்லை. நான் கூட என்ன இவ்ளோ சின்ன பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்கனு யோசிச்சேன்” என்றபடியே அந்த மும்பை மச்சானை இல்லையில்லை, அரிசி மாவை ஒரு நக்கல் பார்வை பார்த்தான். பழிக்கு பழி வாங்குகிறானாம்!!!
“தேங்க்ஸ் பார் தி காம்ப்ளிமன்ட் இனி! பை தி வே இந்த கல்யாணம் நாங்களா செஞ்சிகிட்டோம். படிச்சு முடிச்சோம், லவ் பண்றது வீட்ல தெரிஞ்சுது, எதிர்த்தாங்க, தனியா வந்து கல்யாணம் பண்ணிகிட்டோம் அவ்ளோ தான்” இரு வரியில் அவள் மொத்த கதையும் முடிக்க, அனைவரும் சேர்ந்து அபார்ட்மன்ட் மொட்டை மாடியில் ஏர் ஷோ பார்க்கச் சென்றனர்.
இது ஒரு முக்கிய நிகழ்வு, அதுவும் இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே இப்படி ஒரு நிகழ்வை காண்பது அரிதென்பதால் அபார்ட்மன்ட் வாசிகள் அவர்களின் குடும்பங்கள், நண்பர்கள் என அங்கே ஒரு மினி திருவிழா கூட்டம் நிரம்பியிருந்தது.
இவர்கள் நால்வரும் அங்கிருந்த தண்ணி தொட்டியின் மீது அமற, இரும்பு ஏணியில் ஏற திரிபுரசுந்தரிக்கு கால் இடறியது.
“ஹே! பார்த்துடி. என்னாச்சு? வலிக்குதா? சுளுகிடுச்சா?” ரிபுவின் கால்களை பிடித்த அமிழ்தினியன் மென்மையாய் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.
“ஒண்ணுமில்ல அதிப்பா”
“ம்ச்! ஏதாவது சின்ன ஸ்ப்ரைன் ஆயிருந்தா கூட இப்போ வலி தெரியாது, அப்புறமா காட்டு காட்டுன்னு காட்டிடும், இங்க வலிக்குதா? அவன் முகத்தில் அத்தனை பதற்றம்.
“இல்ல அதிப்பா வலி இல்லை”
அவன் ஒவ்வொரு இடமாக பிடித்து வலிக்கிறதா என்று கேட்க அவள் இல்லையென்று கூறிக்கொண்டே வர, பார்த்துக்கொண்டிருந்த மும்பை அரிசி மாவு தன் மனைவியிடம், “இவங்களை பார்க்க நாம லவ் பண்ணினப்போ நம்மளையே பார்த்த மாதிரி இருக்குதுல” ஹிந்தியில் அவன் அமைதியாக கூறினாலும் அமிழ்தினியனுக்கு அது கேட்டு விட்டது. பட்டென்று காலை விட்டுவிட்டான்.
திரிபுரசுந்தரிக்கு அடி பட்டதும் அனிச்சை செயலாய் அவள் கால் பிடித்திருந்தாலும் தான் அப்படி செய்திருக்கக் கூடாதென்று குற்றவுணர்வுக்கு ஆளானான்.
இன்னும் அந்த நாள் அவனுக்காக வைத்திருந்தது ஏராளம்……