“பேசாதடி” பற்களை கடித்து அஸ்வின் கூற பயம் கண்ணில் குடிகொண்டது ஆரோஹிக்கு.
“நமக்கு கல்யாணம் ஆனதை வெளிய சொல்லாத ரீசன் நீ நினைக்கிறது இல்ல ஆரூ” அவளுக்கு முன்னே நெருக்கமாக கேட்டது அஸ்வினின் கனத்த குரல்.
விழியை மூடிக்கொண்டே கேட்டவள் தொண்டைக்குழி ஏறி இறங்குவதை பார்த்த அஸ்வின் மேலும் தொடர்ந்தான், “எனக்கு என் ஆரூ இப்டி இருக்குறது தான் புடிச்சிருக்கு. நீட்டா, எலிகண்ட்டா, சிம்பிளா எப்பவும் வேணும். உனக்கு புடிச்சா நீ மாறலாம். நீ எப்படி இருக்கியா அப்டியே உன்ன ஏத்துக்குவேன் நான்”
“இன்னும் நீங்க காரணம் சொல்லல” கண்ணை மூடிக்கொண்டே கதை கேட்கும் சிறுமியாய் கேட்ட மனைவியின் ஆர்வத்தில் அவன் இதழ்கள் மெல்ல விரிந்தது.
“வேர்ல்ட்கப் வருதுல, இந்த நேரத்துல நான் எப்படி பெர்ஃபார்ம் பன்றேனோ அதை பொறுத்து அந்த பேர் உனக்கும் வரும். ஒருவேளை நான் சரியா ஆடலனா அதுக்கு எந்த மாதிரி எல்லாம் பேசுவாங்களோ சொல்ல முடியாது. என்ன எது சொன்னாலும் சரி தான். அவங்க நேரா நம்ம கல்யாணத்தை கை காட்டிட்டா…” பேச்சு வராமல் நிறுத்தினான்.
“நேரம் காலம் எப்படி வேணாலும் மாறலாமே, ஒருவேளை தப்பு நடந்துட்டா?”
ஆரோஹி, “அதை எல்லாம் சமாளிச்சு வர்றதுல தான் உங்க திறமை. சரி உங்க பாடை விடுங்க, எனக்கு நீங்க கப் அடிச்சு மீடியா முன்னாடி நின்னு, ‘இவ தான் என் பொண்டாட்டி’ உலகத்துக்கு இன்ட்ரோ குடுக்கணும்” அவளை கூர்ந்து பார்த்து கூறியவள் புருவத்தை உயர்த்தி, “சொல்லுவீங்க தான?” அதிகாரமாக பெண்ணவள் கேட்டாள்.
அவன் அன்பு கட்டளைக்கெல்லாம் தலை ஆட்டும் நோயானது இப்பொழுது அவளிடமிருந்து அவனுக்கும் ஒட்டிக்கொண்டது போல. உடனே எல்லா பக்கமும் தலை அசைத்து உறுதியளித்தான் மனைவியிடம்.
*****
இதோ அதோ என அஸ்வின் போட்டிக்காக சென்று ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியிருந்தது. அவன் எண்ணப்படியே ஆரோஹியை அன்னை வீட்டிலே விட்டு சென்றிருக்க அவன் கிளம்பும் நேரம் அஸ்வின் கையை பிடித்து வாயில் மனம் இல்லாமல் தவிப்போடு ஏதோ பேச வருவதும் தயங்குவதுமாய் இருக்க,
“என்ன மீன்குஞ்சு மாதிரி வாய திறந்து திறந்து மூடிட்டு இருக்க? வர்றியா என் கூட?” பலமாக எச்சில் விழுங்கி தலை அசைத்து மறுப்பை தெரிவித்தவள் விரல்களை ஒவ்வொன்றாக பிடித்து விளையாடினான்.
“சிரிச்சிட்டே பாய் சொல்லு”
உள்ளுக்குள் அஸ்வினுக்கு ஒரு பயம், இந்த பிரிவு தவிப்பு எல்லாம் திருமணம் ஆன புதிதென்பதால் வந்ததாக இருந்தால் அதற்கு சிறிதும் அடிமையாக அவன் மனம் தயாராக இல்லை.
ஆண்டு அனுபவித்து இல்லுலகை விட்டு பிரியும் நொடி வரை பிரிவு உயிரை பிசையவேண்டும் என்பது மட்டுமே அவனது ஆசை.
“போன தடவை மாதிரி மொத்தமா பேசாம இருந்துட கூடாது, டெய்லி கால், எப்போவாவது வீடியோ கால் பண்ணனும்” மூக்கை உறிஞ்சி கேட்டவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டி நம்பிக்கை கொடுத்து வந்தான்.
ஆனால் கொடுத்த வாக்கை அதிகம் கடைபிடிக்காமல் போனான் அந்த விளையாட்டு வீரன். தினமும் பேசுவேன் என கூறியது வாரம் நான்கு முறை தான் வந்தது.
எப்போதாவது காணொளி மூலம் அழைப்பேன் என்றது இதுவரை இரண்டே முறை தான் வந்தது. அவனை அதிகம் தொந்தரவு படுத்த விரும்பாத ஆரோஹியும் அவன் போக்கிலே விட்டாள்.
இருவது நாள் மதி வீட்டிலும் பத்து நாள் திவ்யா வீட்டிலும் அவள் பொழுதுகள் ரம்யமாக கழிந்த நிலையில், அன்று ஆரோஹியோடு திவ்யா வீட்டிற்கு சென்ற மதி திவ்யாவிற்கு வளைகாப்பு நடத்த விரும்புவதாக மாறனிடம் கேட்க மாறன் தம்பதியினரை விட நம் நாயகிக்கு தான் அத்தனை மகிழ்ச்சி. மாமியாரை கட்டி முத்த மழை பொழிந்துவிட்டாள்.
வளைகாப்பிற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் இல்லம் திரும்பிய சித்தார்த், “என்ன அண்ணி டயட்ல இருக்கியா இவ்ளோ மெலிஞ்சிட்ட?” என்றான் அவளை மேலிருந்து கீழே பார்த்தபடி.
“ஆமாடா உன் அண்ணனுக்கு மாடல் மாதிரி தான் பொண்ணு வேணுமாம்”
“ஏது அவன் சொன்னானா?”
ம்ம் என தலையை ஆட்டினாள் சுட சுட செய்த பஜ்ஜியை உள்ளே தள்ளி, “வேணும்னா அத்தைகிட்ட கேளேன்” உடனே அன்னையை அழைத்து கேட்டுவிட்டான்.
“என் பையன் அப்டி எல்லாம் சொல்ல மாட்டான். ஆனா சாப்பாடை நல்லாவே குறைச்சிட்டா. உன் அண்ணன் வந்து என்ன தான் கேள்வி கேப்பான் பாரு” என்றார் அவரும் புலம்பியபடியே.
“என்ன ரோஹி சுகரா?”
விழி விரித்து உண்பதை நிறுத்தினாள், “ஒரு வேலை இருக்குமோ?” அவளுக்கும் பயம் வந்துவிட்டது.
“உதை தான் விழும் ரெண்டு பேருக்கும். என் மகனை பாத்தா என் மருமக தானா தேறிடுவா நீ போடா” என சின்ன மகனை விரட்டும் சாக்கில் மருமகளை சிவக்கவே வைத்துவிட்டார்.
அதிகம் மனம் கணவனை தேடுகிறது தான். எப்பொழுதடா பாப்போம் என அலைபாயும் அவள் மனதிற்கு பதில் கூற முடியவில்லை. எந்நேரமும் இம்சிக்கிறான் கள்வன்.
பேச்சை மாற்றும் பொருட்டு, “பிட்சா சாப்பிடணும் போல இருக்கு போகலாமா?” சித்தார்த்திடம் ஆரோஹி கேட்க மதி இருவரையும் விரட்டியடித்தார்.
எந்நேரமும் இருவரும் எங்காவது சென்று வெளி உணவை உண்டு வந்து வீட்டில் சரியாக உண்பதில்லை. இவளோடு சேர்ந்து மகனும் சேட்டை செய்வது தான் மிச்சம்.
ஆரோஹிக்கு தோன்றும் நேரமெல்லாம் சித்துவை அழைத்து சென்று நினைத்ததை சாதித்துவிடுவாள். அது நள்ளிரவாகட்டும் நன்பகலாகட்டும். அதோடு விட்டார்களா அந்த ஏரியாவில் இருக்கும் வாண்டுகளோடு இணைந்து மாலையானால் விளையாடுவது, அஸ்வின் வாங்கி கொடுத்த மிதிவண்டியும் இங்கு வந்து இறங்க ஒரே ரகளை தான்.
சில பெற்றோர்கள் வந்து கண்டித்தே சென்றுவிட்டனர் மதிவர்த்தினியிடம், இவர்கள் இருவரால் அவர்கள் பிள்ளைகள் படிப்பை கூட மறந்து விளையாடுவதாக. இதை இந்த வளர்ந்த குழந்தைகளிடம் கூறினால்,
“போன்ல இருந்து அவங்க பசங்களை காப்பாத்தி விடுறேன் அத்தை. எனக்கு தேங்க் பண்ண சொல்லுங்க” என்றிடுவாள்.
ஏதோ அந்த மொத்த இடமும் செல்வந்தர்கள் வசிக்கும் இடம் என்பதால் அதிக கூட்டம் வராது, இவளை இன்னாரின் மனைவியென ஓரளவிற்கு கணித்து வைத்திருந்தவர்களும் விஷயத்தை வெளியே கசிய விடவில்லை.
“மிட் நைட் ஸ்பாட் ஒன்னு புதுசா கண்டு புடிச்சிருக்கேன். நைட் போகலாம்” என ரகசியம் பேசி சென்றுவிட்டான் சித்தார்த்.
உற்சாகமாக இரவு உணவை கொஞ்சமே கொஞ்சம் எடுத்த ஆரோஹி, அதன் பிறகான உணவை நினைத்து மகிழ்ச்சியில் நேரத்தை கைபேசியில் செலவழிக்க துவங்கியவளுக்கு வந்து விழுந்தது அஸ்வின் புகைப்படம். இரவின் அரசியோடு எடுத்த புகைப்படம்.
மங்கிய தோற்றத்தில் அவனும், மங்கா தோற்றத்தில் அம்புலியும் இருந்தன. பிரகாசமாக ஒளிரும் நிலவை விட அவளவன் மங்கிய தோற்றத்திலும் வசீகரித்தான். வெள்ளை நிற டீ-ஷர்ட், அதுவும் தொளதொளவென இருந்தது.
வசீகரமான சிரிப்போடு வெகு எங்கோ பார்த்தது போல் எதார்த்தமாக எடுத்த புகைப்படம் என அடித்து கூறும் அளவு சிறு போலியும் இல்லை.
“எவ்ளோ நேரம் சைட் அடிக்கிற?” தன் அருகே கேட்ட சித்தார்த்தின் குரலை கேட்டும் அசையவில்லை பெண்.
அவன் தான் ஒரு குடும்ப உறுப்பினரை தாண்டி நண்பனாகிவிட்டானே. அவனிடம் மறைக்க தோன்றவில்லை.
அந்த புகைப்படத்தை உற்று உற்று பார்த்தவள் அதை ஜூம் செய்து, “உன் அண்ணனை பாரேன் சித்து, 2000s நேரத்துல வந்த ஹீரோ மாதிரி இருகாருல? எப்படின்னா குஷி விஜய், வாலி அஜித் ம்ம்ம் அப்டி தானே?” அவனிடமும் காட்டினாள் அத்தனை சிரிப்போடு.
“முத்திடுச்சு” அவள் காதல் பித்தை உணர்ந்தவன் அங்கிருந்த சோபாவில் படுத்தான்.
சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு, “ஒடம்பு எதுவும் சரியில்லையா ரோஹி? உன் முகமே என்னவோ போல இருக்கு” அவள் இளைத்ததில் சித்தார்த்துக்கு மனம் தாளவில்லை, அன்னையிடம் இத்தனை நேரம் நச்சரித்து இப்பொழுது மீண்டும் அவளிடமே வந்து கேட்கிறான்.
“எனக்கென்ன டா நல்லா இருக்கேன். மார்டன் ட்ரெஸ் போடலாம்னு இருக்கேன். அதுக்கு வெயிட் குறைச்சா தானே நல்லா இருக்கும்”
“சகிக்கல” முகம் சுளித்தான் சித்தார்த்.
“அய்ய. ஃபிட்டா பொண்ணுங்க வேணும்னு சொல்ற ஆளுங்க மத்தில நீயும் உன் அண்ணனும் ஏன்டா விசித்திர பிறவிகளா இருக்கீங்க. அன்னைக்கு வீடியோ கால்ல அவரும் இ…” ஏதோ கூற வந்தவள் தொடுதிரையில் இருந்ததை பார்த்து அப்படியே மௌனமாகிவிட்டாள்.
“என்ன ஏதாவது புது ஸ்வீட்டா?”
சித்தார்த்தா சிரிப்போடு கேட்க கை அசைவில் அவனை அருகே அழைத்தவள், “உன் அண்ணன் என்ன ஏமாத்துறாரு போலடா” ஆரோஹி காட்டியது யவ்னிகா தன்னுடைய இன்ஸ்டாக்ராம் இணையத்தில் பதிவிட்டிருந்த புகைப்படம்.
அஸ்வினை போல் அவளும் நிலவினை துணைக்கு அழைத்து படமெடுத்திருந்தாள்.
“ஹே லூசு நிலா தெரியிற மாதிரி போட்டோ எடுத்தா ஒடனே அஸ்வின் கூட இருக்கறதா அர்த்தமா?”
“இங்க பாரு நான் எதையும் தெரியாம பேச மாட்டேன். உன் அண்ணன் போட்டோல இருக்க இடத்தை பாரு, இங்க பாரு ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருக்காங்க. அதுல அந்த பொண்ணோட கேப்ஷன் பாரு. ‘நிலாவோட துணையோட நிலா கூட இருக்கேன்’ ச்சை நாராசமா இருக்கு” முகத்தை சுளித்து கைபேசியை தூரம் வைத்தாள்.
ஆரோஹி கூறியதை உறுதி செய்த சித்தார்த் அஸ்வினுக்கு அழைக்க என்றும் இல்லாமல் இன்று சகோதரன் அழைப்பை ஏற்க மறுத்தான்.
ஆரோஹி இங்கு வீட்டில் கண்டறிந்ததை சில நிமிடங்கள் பிறகே அங்கு அஸ்வின் தெரிந்துகொண்டான்.
*****
தொடர்ந்து இருக்கும் போட்டிக்கு இடையே இந்திய கிரிக்கெட் சங்கம் இரண்டு நாட்கள்.
ஓய்வு மற்றும் ஒரு விருந்தை கொண்டாடி நிம்மதியான மனநிலையோடு ஒரு புகைப்படத்தை எடுத்து இணையத்தில் பதிவிட்டு நண்பர்களோடு நேரம் செலவழித்த நேரம் தான் அங்கு யவ்னிக்காவை அஸ்வின் பார்த்தது.
அத்தனை கூட்டத்தின் மத்தியில் அஸ்வினை நோக்கி சிரிப்போடு நகர்ந்தவளை என்ன செய்வதென தெரியாமல் திணறினான்.
வந்தவளுக்கு அஸ்வின் திருமணம் நடந்ததையே மறந்தவள் போல் அஸ்வின் கையணைத்து அவள் பேச அவனுக்கோ கோவம் சிகரம் தொட துவங்கியது. அஸ்வின் அணியினர் முதல் அங்கிருந்த சில திரை பிரபலங்கள் வரை இப்பொழுதும் அவர்கள் ஜோடிகளாகவே தெரிந்தனர்.
இதில் ஒருவர், “எப்பொழுது திருமணம்?” என கேட்க, “சூன்” என வந்த யவ்னியின் பதிலில் அவள் கையை உதறி அவ்விடத்திலே இருவருக்கும் எதுவுமில்லை என உரக்க கூறிவிட்டான்.
“அஸ்வி…”
யவ்னி அஸ்வினை கண்ணீரோடு அணுக பார்க்க, “ஸ்டாப் ரைட் தேர் யவ்னி. வி ஆர் டன். நான் இதை உன்கிட்ட தெளிவா எப்பயோ சொல்லிட்டேன். நொவ் ஐ ஹாவ் மை ஓன் லைப் அண்ட் எ வைப் டு செரிஷ் (now i have my own life and a wife to cherish). சோ ப்ளீஸ் நீயா விலகி போறது எல்லாருக்கும் நல்லது”
அஸ்வினின் உரத்த குரல் மொத்த கூட்டத்தையும் அதிர வைக்க யவ்னிக்கு அவமானமாக போனது. கருத்த முகத்தோடு கண்ணீர் வடிய அஸ்வினை நோக்கியவள் பார்வை உயிரற்று கிடந்தது.
கூட்டத்தில் சலசலப்பு மெல்ல உயர சுற்றம் பார்த்தவன், யவ்னியை அழுத்தமாக விழியாலே எச்சரித்து அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட்டான்.
தனியே வந்தமர்ந்த அஸ்வினின் உள்ளம் மனைவியை சரமாரியாக திட்டியது. அவள் வாய் விடவும் தானே இங்கு வந்து நிற்கிறது. இந்திய அணியில் சாதாரண வீரனாக இருந்தாலே பல விதமான பேச்சுகள் வரும், இவன் இந்த அணியின் துணை கேப்டன், அணியின் முன்னணி வீரன், முக்கிய பேட்ஸ்மேன் போன்ற பல தலைப்புகள் கொண்ட ஒருவனது செயல் சிறிதே ஆனாலும் பெரிதாக பேசப்படுகின்றது.
அவன் போடும் சிறு பதிவு கூட பெரிதாக பாதிக்கும். இங்கே பேசிவிட்டு வந்த வார்த்தை இந்த நான்கு சுவற்றை தாண்டி போகாதே ஆனாலும் பாதிப்பு இன்னும் பல நாள் இருக்கும்.
“இந்தியா டீம் வைஸ் கேப்டன் கல்யாணம் ஆனவர்னு தெரிஞ்சா எத்தனை மனசு கஷ்டப்படுமோ” நிதின் (இந்திய அணி கேப்டன்) குரல் கேட்டு அஸ்வின் தலை தூக்க அவனோட சேர்ந்து இன்னும் சிலரும் வந்து நின்றனர்.
“பாய்..”
“ஏண்டா தப்பு பண்ணலையே நீ. தைரியமா தான் இரு” என்றான் மற்றொருவன்.
“இல்ல ராகுல் அவ அப்பாவால ஏதாவது பிரச்சனை வந்துடுமோனு தான் யோசிக்கிறேன்”
“வரட்டும் அஸ்வின், பட் ட்ரூத் உன் பக்கம் இருக்கு. நீ அவளுக்கு ஆல்ரெடி எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டியே. டீம் பத்தி பயப்பிட வேணாம். நான் பேசுகிறேன் பிரச்சனை வந்தா” நிதின் நம்பிக்கை கொடுக்கவும் தான் அஸ்வின் மனம் சற்று சாந்தமானது.
“அப்றம் பொண்ணு யாரு, நாங்க பாத்துருக்கோமா? பேர் என்ன?” கூட்டத்திலிருந்து ஒருவன் கேட்க அவன் ஆரோஹியை நினைத்து அஸ்வினுக்கு சிறு வெட்கம் மலர்ந்தது.
“பட்டாம்பூச்சி” அவனது பட்டாம்பூச்சியின் நினைவில் முகம் எங்கும் வண்ண சாயல் பூத்து குலுங்கியது.
“ஸ்டேடியம்ல பாத்த பொண்ணா?” நிதின் சரியாக நினைவில் வைத்து கேட்க ஆமாம் என தலையை ஆட்டினான்.
அடுத்து வந்த கேள்விகள் முழுதும் அவர்கள் திருமணம் பற்றி, ஆரோஹி பற்றி என ஒரே விசாரணை தான்.
“டேய் உன் பொண்டாட்டிகிட்ட இருந்து தப்பிக்கணும்னா மொத உன் போஸ்ட் டெலீட் பண்ணு, இல்லாட்டி மவனே கல்யாணம் பத்தி வெளிய தெரிய முன்ன உன் டிவோர்ஸ் நியூஸ் தான் வரும்” கேலி பேச்சு வரவும் தான் யவ்னி போட்ட பதிவை பார்த்து தலையில் அடித்துக்கொண்டான் அஸ்வின்.
இனி அதனை அழித்தால் கூட அதற்கும் பேச்சு வருமே என விட்டுவிட்டான். இந்த பிரச்சனையில் சித்தார்த்திடமிருந்து வந்த அழைப்பை கூட ஏற்காமல் போனான்.
பெரிய கூட்டத்தின் முன்பு உண்மையை உடைத்தாயிற்று இனி யவ்னி பிரச்சனை இருக்காதென அவன் எண்ணியிருக்க அடுத்த நாளே யவ்னி கர்பமாக இருப்பதாகவும், அதற்கு காரணம் அஸ்வின் எனவும் அசுர வேகத்தில் செய்தி பரவி விடியலே சற்று மங்கி தான் போனது.