“கிரிக்கெட்டரே…” அவள் சிணுங்கல் மொழி அப்பொழுது அவனிடம் வேலைசெய்யவில்லை.
“வா ஆரூ, பங்க்ஷன் ஆரமிக்க போகுது”
தன்னோடு ஏதோ பேச எண்ணுகிறாள் என்பது தயங்கி அவள் வருவதில் தெரிந்தது. அதற்கு நேரம் தான் இல்லை. அவள் கை பற்றி வீட்டினுள் இழுத்து சென்று வேறு உடையை தாங்கிய பையையும் அவள் கையில் ஒப்படைத்தான்.
வீட்டிற்கு வந்த விருந்தினரிடம் சிறிது நேரம் அளவளாவிவிட்டு அவன் அறைக்கு வர அவன் மனைவி அவன் எடுத்துக்கொடுத்த தாவணியில் பாந்தமாக தயாராகி நின்றாள்.
அவன் இல்லாத பொழுது மங்கிப்போயிருந்த முகத்தில் இப்பொழுது வண்ணத்தின் வாசனை, ஒப்பனையின் சாயல். மஞ்சள் நிற பாவாடை, அடர் பச்சை நிற தாவணியில் கொள்ளைகொண்டாள் கணவன் மனதினை.
சிகை கூட அழகாக வாரி நெருக்கமாக தொடுத்திருந்த ஜாதிமுல்லை சூடியிருந்தாள். கதவை திறந்ததுமே அதன் மனம் தான் முதலில் அஸ்வினை நாடியது.
“தாவணி ரொம்ப அழகா இருக்கு கிரிக்கெட்டரே”
“ம்ம்ஹ்ம்ம்” என்றவன் அவளை தாண்டி தன்னுடைய உடையை எடுத்து குளியலறைக்குள் மறைந்தான்.
ஐந்தே நிமிடத்தில் திரும்பி வந்தவன் உடையை மாற்றி வர, “நான் வேற டிரஸ் மாத்திடவா?” என வந்து நின்றாள்.
“ஏன் இப்ப தானே நல்லா இருக்குனு சொன்ன?” அவள் எடை குறைந்தபடியால் அளவு சற்று மாறுபட்டிருந்தது, மற்றபடி உடனே மாற்றும் அளவிற்கு மோசம் என்று சொல்லிவிட முடியாது.
“இப்பவும் அழகா இருக்கு, ஆனா இதை போட்டா அங்க வந்து நிக்கிறது? எதுவும் தப்ப நினைப்பாங்கள்ல எல்லாரும்?”
“தாவணி போடுறதுல என்ன தப்பு கண்டு புடிச்சிடுவாங்க, ஜீன்ஸ், மிடிஸ், மினிஸ் போட்டு நின்னா கூட தப்பில்ல. சும்மா வா” என்றான் தன்னுடைய முகத்திற்கு ஏதோ கிரீம் தடவி.
அவள் தயங்கியே நிற்க, “இன்னும் என்ன?” என்றான் அவளை திரும்பி பார்த்து.
“ஏன் எந்த ரியாக்ஷனும் இல்லாம இருக்கீங்க?” அவன் முகத்தை படிக்க முயன்று தோற்றுப்போனாள்.
“டைம் அச்சுலடா வா வந்து பேசலாம்” நகரபோனவளை நிறுத்தி நவரத்தினங்கள் பதித்த நான்கு தங்க வளையல்களை ஒப்படைத்தான், “நம்ம சார்பா”
“இல்ல நானே வெள்ளில வளையல் வாங்கியிருக்கேன்” தயக்கமாக இருந்தது அதனை வாங்க பெண்ணுக்கு.
“ரொம்ப நல்லதா போச்சு. வெள்ளி சூடு குறைக்கும்ல? அப்போ அதை மொத போட்டுட்டு இதை அப்றம் போடு” அவளை அதிகம் யோசிக்க விடாமல் இழுத்து சென்றான்.
விழா அழகாக துவங்கி மகிழ்ச்சியாக முடிந்தது.
நிறைவான மனதோடு திவ்யாவை தானே வீட்டில் வைத்து பார்த்துக்கொள்வதாக மதி கூற, மாறனுக்கு முகமே இல்லை. இன்னும் இரண்டு மாதத்திற்கு பிறகு தானே வருவதாக வாக்குறுதி கொடுத்து மதியை சமாதானம் செய்தாள் திவ்யா.
அனைத்தும் முடிந்து மதிய உணவிற்கு பிறகு அவரவர் அறைக்குள் தஞ்சம் புகுந்தனர். சோர்வாக தென்பட்ட ஆரோஹி மெல்ல படியினில் ஏற அவள் பின்னே வந்த அஸ்வின் வேகமாக அவளை நெருங்கி மனைவியை சட்டென கைகளில் அள்ளிக்கொண்டான்.
திடீரென காற்றில் மிதந்த தன்னை நம்பாமல் அவள் ஜீரணிக்கும் முன்பே அஸ்வின் மனைவியை பத்திரமாக கைகளில் நெஞ்சோடு அணைத்து சிறை செய்திருந்தான்.
“நாராயணா…”
அலறியவளை, “ஷ்ஷ்… கத்தாதடி” வீட்டினருக்கு கேட்டுவிடுமோ என்கிற பயத்தில் மெல்ல அதட்டினான்.
“முடியாது” அவளை போலவே ஹஸ்கி குரலில் பதில் கொடுத்தவன் படியேறினான்.
“என்ன முடியாது, காலைல இருந்து உங்க பின்னாடி எப்படி சுத்திட்டே இருந்தேன். அப்போ எல்லாம் கண்டுக்காம இப்ப மட்டும் என்ன?”
அவள் கைகளில் திமிறியவாளை பதறி பிடித்தான் அஸ்வின், “ஆரூ உயிரே போச்சு ஒரு நிமிஷம். விழுந்திருந்தா என்ன ஆகும்” குரலை உயர்த்தாமல் அதே ஹஸ்கி குரலில் தொடர அவன் பட்டபாடு… அப்பப்பா. அவளை திட்டியே அறைக்குள் வந்தவன் கதவை காட்டினான் அவளிடம்.
“தொறக்க மாட்டேன். ஏன் என்ன இக்னோர் பண்ணீங்கனு சொல்லுங்க”
“நான் உன்ன எப்போ இக்னோர் பண்ணேன், உன் கைய புடிச்சிட்டே தானே சுத்துனேன்”
அவன் நெஞ்சிலே அடித்தாள், “பொய். சிரிச்சு கூட பேசல. சுத்தி சுத்தி எல்லாருக்கும் இன்ட்ரோ குடுத்ததோட சரி. இந்த டிரஸ் நல்லா இருக்குனு கூட சொல்லல”
“சரி கதவை திற உள்ள போய் பேசலாம்”
“மாட்டேன். ஒன்னு பதில் சொல்லுங்க இல்லையா என்ன இறக்கி விடுங்க” கணவனிடம் நிர்பந்தம் வைத்தாள் அஸ்வின் மனைவி.
“இறக்கி விட மனசு வரல, காரணம் சொல்றேன் ஆனா உள்ள போய் சொல்றேன். திற” அவள் எதுவும் பேசாமல் முகத்தை திருப்பி வைத்தாள்.
“சரி நீ ரொம்ப அழகா இருக்க, இந்த தாவணி அதை விட அழகா இருக்கு. போதுமா?”
“பாவப்பட்டு சொல்றது எனக்கு வேணாம். இறக்கிவிடுங்க” இம்முறை பலமாக திமிறியவள் லாவகரமாக கீழே இறங்கியும்விட்டாள்.
“ஆரூ” கோவப்பட்டு சென்ற மனைவியின் கையை பிடித்து துரிதமாக அறை கதவையும் திறந்தவன் அவளை உள்ளே அடைத்து தாளிட்டான்.
“போங்க, பேசாதீங்க. உங்கள பாத்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு நான் பீல் பண்ணிட்டு இருக்கேன். இதுல அந்த நியூஸ் வேற, தெரியும் தானே உங்களுக்கு? நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா… ஆறுதலா பேச கூட நீங்க எனக்கு கால் பண்ணல. இப்ப இந்த பங்க்ஷன்க்கு வரலைனா இன்னும் ஒரு மாசம் கழிச்சு தான் உங்கள பாத்துருக்க முடியும்” விழிகளை உருட்டி கோவம் காட்டினாள்.
“என் பட்டாம்பூச்சி அழுகுதா?” மயிலிறகாய் வருடியவன் மூச்சுக்காற்று பெண்ணின் பிறைநுதல் தீண்ட, அவன் இதழ்கள் அவளது விழியினில் மையம் கொண்டது.
அவன் ஸ்பரிசத்தால் மோட்சம் அடைந்த நீர் துளிகளை துடைக்க போனவள் மற்றொரு கையையும் அவனது மற்றொரு கை சிறைபிடிக்க, மிரண்டு கண் திறந்து பார்த்தாள் ஆரோஹி.
பேதையின் கன்னத்தில் இளைப்பாறிய அவன் நெற்றியை மெல்ல விடுவித்து தன்னை பார்த்து விழிக்கும் அவள் கண்ணை பார்த்தவன் மந்திர புன்னகை ஒன்றை சிந்தினான்.
“ஏன் அவாய்ட் பன்றேன்னு கேட்டல? பதில் சொல்லவா?” முத்தம் கொடுத்து மூச்சு முட்ட வைத்தவன் செயலில் அவள் எங்கே பதில் கொடுப்பது?
அவனே பேசினான், “எந்த எக்ஸ்படேஷனும் இல்லாம வந்தவனை சுத்தி அத்தனை பேரும் இருந்தும் யோசிக்காம டைட் ஹக் குடுத்தியே அப்போ தோணுச்சு இந்த விபரீத எண்ணம்…” நிறுத்தினான் அவளது மென்மையான சருமத்தின் மேன்மையை உணர்ந்தவனாய்.
“எது?” கிரகத்திலும் காரியமே கண்ணாய் கேட்டாள்.
கண்களில் குறும்பு பெறுக வலது கை அவளது நாடியின் அடிப்பாகத்தை மெல்ல வருடி சற்று மேலே தூக்கியது.
அவள் விழி தாழ்ந்து தரையை நோக்காமல் தடித்த அவன் முரட்டு இதழ்களில் பதிந்தது அவள் பிழையும் அல்ல.
நாடி உரசிய அவன் விரல்கள் மெல்ல உயர்ந்து அவள் இதழ் வரிகளில் வருடி தன் இதழ்களுக்கு கடத்தி அதன் மென்மையின் பரிசாய் ஒரு முத்தம் ஒன்று வைக்க, உச்சாணிக்கொம்பிலிருக்கும் மோகமே முக்தி பெற்று அரண்டோடியது.
அஸ்வினுக்கு அந்த இதழ் தீண்டல் அவன் விறல் வழியே நிகழ்ந்தாலுமே வாழ்வின் அந்தாதியை பெற்ற உணர்வு.
உரியவள் கண்களோ, ‘அவ்வளவு தானா?’ என்கிற வினாவோடு தொக்கி ஏமாற்றமாக நிற்க மனையாட்டிக்கு இந்த வேதனையை கொடுக்க விரும்பாமல் மெய் மறந்து நொடியில் அவள் இதழ்களை கவ்விக்கொண்டான்.
முரண் இல்லா அவளது குணத்தில் இத்தனை நாள் கட்டுண்டு கிடந்தவனுக்கு, இலக்கணமே பரிசானது போல் அவளோடான முதல் முத்த போர்.
அனுபவமில்லா அவளது முத்தத்தில் பித்தானவன் கிறங்கி உடல் தளர போனவள் இடை வளைத்து பத்திரமாக தன்னுடலோடு பிணைத்துக்கொண்டான்.
ஆழந்த நிம்மதியான உறக்கத்தில் இருந்தவனுக்கு சாமரம் வீசியது போல் அவளது இமை முடிகள் அவனது கண்ணெதிரில் உரசி சிலிர்க்க, அஸ்வின் ஒரு கை மனைவியின் கழுத்தில் பதிந்து தனக்கு வாகாக திசைமாற்றி இன்னும் முத்தத்தை ஆழத்தில் இழுத்து சென்றது.
கடலின் ஆழம் சென்றும், தேடிய முத்து கிடைத்தும் பொறாமைக்காரனுக்கு போதவில்லையாம். இன்னும் இன்னும் புதையலை தேடினான். பாவம் அவள் நிலை உணர்ந்தானோ என்னவோ விட்டான் அவளது இதழ்களை.
கண்ணை மூடியபடியே ஆழந்த மூச்சை இழுத்தவள் சற்று ஆசுவாசமடைந்து விழி திறக்கையில், செய்த பிழையெல்லாம் இம்முறை சரிசெய்கிறேன் என்கிற போலியான கரிசனையோடு மீண்டும் மனைவியின் செவ்விதழ்களை தனதாக்கினான் அந்த கணவன் என்கிற கள்ளன்.
பெண்ணவளும் கள்ளி தான் போல, ஒரே எடுத்துக்காட்டில் கை தேர்ந்த வித்தகன் போல அவன் அசைவிற்கேற்றவாறு தன்னை சரி செய்துகொண்டு வழிநடக்க, கயவன் கைகள் அவளது தாவணி ஒதுக்கி வஞ்சியவள் வஞ்சகம் இல்லாத தளிர் மேனியில் ஊர்வலம் சென்றது.
அஸ்வின் இத்தாதுக்குதலை எதிர்பாராதவள் மெல்ல அலறி அவன் கையை பிடிக்க முயல, அவளது இதழ் தேனை மேலும் ருசி பார்க்க அவனுக்கு வாகாக அமைந்தது.
இனிப்பை தேடி அதன் சுவை உள்ளவரை பருக நினைத்து சென்றவனுக்கு கரும்பு ஆலை அதுவென தெரிந்த பிறகு தற்காலிகமாக ஓய்வெடுத்து நின்றான்.
அஸ்வினின் அடாவடியான தேடலில் கன்னம் சிவந்து, நெஞ்சுக்குழி தாறுமாறாக ஏறி இறங்கியது பெண்ணுக்கு. முகத்தை தூக்கி பார்க்க கூட அத்தனை தயக்கம், வெட்கம் பிடுங்கி தின்றது. அவளது தாவணி சரி செய்து, நெற்றியில் இதழொற்றி கன்னம் தங்கினான்.
“உனக்காக தான் வந்தேன். உனக்காக மட்டும் தான் வந்தேன். அதுவும் இதை மட்டும் தான் சொல்ல. போதுமா?”
குனிந்து அவள் கண் பார்த்து கேட்டான். வேறென்ன வேண்டும் அவளுக்கு? அத்தனை பிரச்சனை தாண்டி, பலரை எதிர்த்து அவள் முகம் பார்த்து, ‘உனக்காக’ என சொல்லும் உறவு அமைவதெல்லாம் எத்தனை பெரிய பாக்கியம்? அவள் கணவன் அவளுக்கு பொக்கிஷம் தான்.
ஆனால்… ஹ்ம்ம்… மற்றவை எல்லாம் யோசிக்க அவள் விரும்பவில்லை. இந்த நொடி அவன், அவள் என்பதை தாண்டி அவள் வாழ்க்கையில் எதுவுமில்லை.
அவளுக்காக ஒரு உயிர், அவளை உயிராய் நினைக்கும் ஒரு ஜீவன், அவள் ஜீவன். போதுமே.
இனி மரணமே நிகழ்ந்தாலும் அதையும் சிரிப்போடு ஏற்பாள். தாவி கணவன் கழுத்தை கட்டிக்கொண்ட ஆரோஹி அந்த நொடி மோட்சம் அடைந்தாள், அவனிலும், அவன் காதலிலும்.