கண் கூசும் வெளிச்சமும், காதினை கிழிக்கும் வெடி சத்தமும் ரசிகர்களின் ஆரவாரமும் இப்பொழுது தான் விடிந்த்தை போல் புத்துணர்ச்சியாக இருந்தது அந்த மைதானமே.
இன்னும் உலக கோப்பையினை வீரர்கள் கை வசம் வந்து சேரவில்லை. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது என அஸ்வின் பரிசு மழையிலும் ரசிகர்களின் அன்பு மழையிலும் நனைந்தான்.
கேப்டனாக அஸ்வின் பேச வந்த பொழுது, “கொஞ்ச நேரம் முன்னாடி இந்த அஸ்வின் எங்க போயிருந்தார்?”
ஆங்கிலத்தில் நடந்தது மொத்த உரையாடலும். அட்டகாசமாய் சிரித்த அஸ்வினின் சிரிப்பே அங்கிருந்த மொத்த கூட்டத்தையும் மீண்டும் பரவசப்படுத்தியிருந்தது.
வர்ணனையாளர், “என்ன ஒரு அதிரடியான ஆட்டம், இந்த வேகம் எங்களோட ரன் டைனமைட்கிட்ட இருக்குனு தெரியும் ஆனா ஸ்ட்ராட்டஜிஸ் ஜஸ்ட் ஒண்டர்ப்புள், என்ன ரகசியம் இது?”
“இது எதுவுமே யோசிச்சு பிளான் பண்ணி நடந்தது இல்ல, திடீர்னு மொத்த டீம் அமைப்பை மாத்தி குழப்பணும்னு மட்டும் தோணுச்சு. நான் எதிர்பாத்த மாதிரியே நடந்துடுச்சு. வேற எந்த ரகசியமும் இல்ல”
வர்ணனையாளர், “உங்க அதிரடியான ஆட்டத்தோட காரணம்?”
“ரெண்டு விஷயம். ஒன்னு… நாட்டுக்காக பார்டர்ல நின்னு சண்டை போட முடியல, என்னால பண்ண முடிஞ்ச விஷயத்தை கண்டிப்பா செய்யணும்னு நினைச்சேன். ரெண்டாவது முழுக்க முழுக்க சுயநலம், இந்த கப்ப உரிமையோடு கைல எடுக்கணும்” என்றான் உலகக்கோப்பையை பார்வையிட்டு.
வர்ணனையாளர், “நீங்க குடுத்த சுதந்திரம் தான் திறமையை வெளிப்படுத்த உதவுச்சுனு எல்லா பௌலர்ஸும் சொல்றாங்க”
“ஒரு கேப்டனா என்னோட கணிப்பு, வியூகம் என்னனு நான் அவங்களுக்கு கைட் பண்ணிட்டேன், அதுக்கு மேல போட்டிய எடுத்துட்டு போனது அவங்க தான். தன்னோட பந்து எந்த மாதிரி ரியாட் பண்ணும்னு அவங்கள விட யாருக்கும் தெரியாது. அதுனால அவங்க வழில விட்டேன்”
வர்ணனையாளர், “கிரிக்கெட் தாண்டி கொஞ்சம் வெளிய வரலாம்” அவர் சிரிப்பே எதை பற்றி கேட்க வருகிறார் என புரிந்தது அஸ்வினுக்கு தலை அசைத்து அனுமதி கொடுத்தான்.
வர்ணனையாளர், “கடைசி மூணு போட்டில பாக்குறோம், அஸ்வின் அமைதியின் உருவமா இருந்தார். எங்களுக்கு தெரிஞ்ச அஸ்வின் ஆக்ரோஷம், வெறி, வேகம் நிறைஞ்சவர். நாங்க எல்லாரும் பாத்தோம் அந்த ஒரே ஒரு கால் தான். உடைஞ்சிருந்த அஸ்வின் முகத்துல அப்டி ஒரு சிரிப்பு. அப்டி என்ன தான் வந்தது அந்த போன் கால்ல?”
ஒரு நொடி எடுத்துக்கொண்டான் அஸ்வின், பேச வந்தவன் தயங்கி மீண்டும் அமைதியானான். கூட்டம் சலசலக்க சிரிப்போடு தன்னை கேள்வி கேட்டவரிடம், “என் வாழ்க்கையோட வெளிச்சமே என்கிட்ட வந்துடுச்சு” என்றவன் கண்ணில் ஒரு சொட்டு நீர் வர வேகமாக கேமராவிற்கு முகம் தெரியாமல் துடைத்தான்.
“கண்டிப்பா மாட்டல… சந்தோசமா ஒரு பட்டாம்பூச்சி கைல சிக்கிட்டேன்”
மறக்காமல் அத்தனை நேரம் சட்டையினுள் விட்டிருந்த மோதிரத்தை சங்கிலியிலிருந்து எடுத்தவன் தன்னுடைய மோதிர விரலில் மாட்டி காமெராவை பார்த்து ஒற்றை கண்ணடிக்க அவனையே பார்த்திருந்த ஆரோஹி இதழ்கள் அழுகையோடு சிரிப்பையும் சிந்தியது.
கண் விழித்து ஒரு மணி நேரம் தாண்டியிருந்தது. பத்து நாட்களுக்கு மேல் தொடர்ந்து ஓய்வில் இருந்தவள் அஸ்வினை காண ஆவலாய் கேட்க அப்பொழுது தான் தான் இத்தனை நாள் விழிக்காமல் இருந்தது தெரிந்தது.
“அஸ்வினை பாக்கணும் ஒடனே” சித்தார்த்திடம் பெண் கேட்க உடனே ஏற்பாடு ஆகியது. ஆரோஹியால் சோர்விலிருந்தும் வெளியிலிருந்தும் சிறிதும் எழ கூட முடியவில்லை.
உறக்கம் கண்களை தழுவி நின்றாலும் அசராமல் அவன் கைகளில் அத உலக கோப்பையை ஒப்படைக்கும் நேரத்திற்காக காத்திருந்தவளுக்கு அஸ்வின் பேச்சும், அவனது குறும்பும் அழுகை சிரிப்பு இரண்டையும் ஒரு சேர கொடுத்தது.
“என்ன ம்மா இவன் சொல்லிட்டான்” வியந்தான் சித்தார்த் அன்னை தந்தையிடம்.
பல நாட்கள் பிறகு குடும்பத்தினர் முகத்தினில் மகிழ்ச்சி தெரிந்தது. அதில் அஸ்வின் கொடுத்த அதிர்ச்சியும் தெரிய ஆரோஹிக்கு கணவன் சிரித்த முகமே அத்தனை நிம்மதியை கொடுத்தது. இந்த சிரிப்பை காண தானே அத்தனை போராடி வந்துவிட்டாள்.
“இதுவே லேட் டா மகனே. இப்பயும் சொல்லலைனா நானே ஒரு பிரஸ் மீட் வச்சு சொல்லிருப்பேன். உன் அண்ணன் முந்திட்டான்” என்றார் மதிவர்தினி மகன் செய்ததில் திருப்த்தியடைந்தவராக.
மைதானத்தில் அஸ்வின் கூறிய செய்தியில் முக்கால்வாசி இளசுகள் மனம் உடைந்தது. ஏமாற்றத்தின் அலை அவ்விடமெங்கும் வீச, “பாருங்க எத்தனை மனசை ஒரே வார்த்தைல உடைச்சிட்டீங்க”
சிரிப்பாலே சமாளித்தவன் கையில் உலக கோப்பை ஒப்படைக்க அதனை ஒரு நொடி பார்த்தவன் தன்னுடைய வேலை முடிந்ததாய் மற்ற வீரர்கள் கையில் ஒப்படைத்து ஓரம் நின்று அவர்கள் கொண்டாட்டத்தை பார்த்துக்கொண்டான்.
இரவு ஒரு மணியை தாண்டியும் மக்களும் சரி, வெற்றி பெற்ற இந்திய அணியும் சரி, எவருக்கும் அந்த இரவினை முடித்துக்கொள்ளும் எண்ணமே இல்லை.
நள்ளிரவு இரண்டை மணி நெருங்கியிருக்க ஆங்காங்கு வீரர்கள் குடும்பமாக நின்று உலக கோப்பையோடு புகைப்படம் எடுத்திருக்க அவர்களை பார்த்து சிரிப்போடு கடந்திருந்தவன் ட்ரெஸ்ஸிங் ரூமினுள் வந்து குளித்து வெளியே வரும் பொழுது கிரிக்கெட் அசோசியேஷன் ஆட்கள் சிலர் இவனுக்காக காத்திருந்தனர்.
“ஹாய் சார்” என்றான்.
“ஹாப்பி அஸ்வின். வாங்க ஒரு போட்டோ எடுத்துட்டு வரலாம்” என்றார் ஒருவர்.
“கப் வாங்குறப்போ கண்டிப்பா எடுத்துருப்பாங்க, அது போதும் சார். அப்றம் நான் இன்னும் டூ ஹௌர்ஸ்ல சென்னை கெளம்பிடுவேன், சோ ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ” என்றான் தன்னுடைய பொருட்களை எடுத்து வைத்து.
“வாட்? நாளைக்கு மொத்த டீமும் டெல்லி போறாங்க, பி.எம் விருந்துக்கு. கேப்டன் நீங்க இல்லனா எப்படி? அது பி.எம் பேச்சை மீறி அவரை அவமானப்படுத்துற மாதிரி இருக்கும்” சுர்ரென கோவம் மூக்கை தொட்டது அஸ்வினுக்கு.
“சார் என்னோட சிச்சுவேஷன் தெரியாத மாதிரி பேசுறீங்க. என்னோட வைப் அங்க உயிருக்கு போராடிட்டு இருக்குற நேரம் இவ்ளோ நாள் நான் தள்ளி இருந்ததே எப்படினு இப்ப வர எனக்கு தெரியல. இனிமேலும் என்னால இங்க இருக்க முடியாது. நான் போயே ஆகணும்”
“இல்ல அஸ்வின், ஒரு நாள் கழிச்சு நீங்க கிளம்புங்க. ப்ரைம் மினிஸ்டர் சொன்னதை எங்களால மாத்த முடியாது, அவர் வர சொன்னது சில சோசியல் மீடியால கூட வந்துடுச்சு”
“உனக்கு தெரியாத மாத்து வழியா? வழக்கம் போல் அது உண்மை இல்ல ரூமர்னு சொல்லிடுங்க. நான் இல்லனா அங்க ஒன்னும் ஆகிடாது. என்னோட கடமை கப் வின் பண்ணி கொடுக்குறது. அதை நான் செஞ்சிட்டேன். அப்டி உங்க பி.எம்க்கு எனக்கு விருந்து வைக்கணும்னு ஆசை இருந்தா என் வீட்டு அட்ரஸ் குடுங்க சாப்பாடு ஆர்டர் போட்டு விடட்டும்”
“டேய் இந்த திமிரு தான்டா உன்ன அழிக்க போகுது” எங்கிருந்தோ வந்த பயிற்சியாளர் அஸ்வினை பார்த்து முறைத்தார்.
“என்ன சார் அந்த திமிரு கிரௌண்ட்ல மிதிக்க விட மாட்டேன்னு சொல்லுமா? எதை பத்தியும் நான் கவலை பட மாட்டேன். என் மனசாட்சிக்கு தெரியும் இந்த நாட்டுக்காக நான் என்னால முடிஞ்ச அளவு போராடிட்டேன், இனி நான் இந்தியாவ ரெப்ரசண்ட் பண்ணி ஆடலானா கூட கவலை பட மாட்டேன்.
ரெண்டு மணி நேர விருந்துக்காக என்னால என்னோட குடும்பத்தை அம்போனு விட முடியாது. எங்களுக்கு போடுற சாப்பாடுக்கு ஒரு குழந்தை படிப்பு செலவை ஏத்துக்க சொல்லுங்க உங்க பி.எம்ம”
அவ்வளவு தான் என்னுடைய பொறுமை என்பது போல் அவன் அங்கிருந்து நகர செய்வதறியாமல் திணறியது அந்த இந்திய கிரிக்கெட் கவுன்சில்.
“என்ன சார் பண்றது இவன் இவ்ளோ திமிரா இருக்கான்”
“இவனை விட்டு போன அங்க நமக்கு ஏறு விழும். பி.எம் கிட்ட தான் பேசணும் அவனோட சுச்சுவேஷனை சொல்லி. வேற வழியில்லை” தான் நினைத்ததையே இறுதியில் சாதித்திருந்தான் அஸ்வின்.
மும்பையிலிருந்து இரண்டே மணி நேரத்தில் சென்னை வந்தவன், அங்கிருந்து மருத்துவமனையை அரை மணி நேரத்தில் வந்தடைந்தான். மருத்துவமனையின் வளாகத்தில் சித்தார்த் வாகனம் நிற்பதை கவனித்தவன் அதனருகே செல்ல, எதிர்பார்த்தது போலவே வாகனத்தின் பின் இருக்கையில் தன்னுடைய உயரத்தை குறுக்கி கடினப்பட்டு படுத்திருந்தான்.
எத்தனை நாட்களாக இவ்வாறு செய்கிறான் என தெரியவில்லை, மனம் பெருமையில் மிதந்தது அஸ்வினுக்கு. இப்படி பட்ட சகோதரன் எத்தனை பேருக்கு கிடைத்துவிடும்?
பல ஆயிரம் கோடிக்கு இவன் சொந்தக்காரன் என கூறினால் எவரும் நம்ப மாட்டார்கள். கண்ணாடியை தட்டினான் அஸ்வின். திடுக்கிட்டு ஒரே முறையில் எழுந்தவன் கண்ணில் அத்தனை பயம்.
அஸ்வினை பார்த்ததும் பயம் நீங்கி அதிர்ச்சியோடு மகிழ்ந்தவன் வேகமாக வெளியே வந்தான்.