கொல்லை துளசி எல்லை கடந்தால் 33_1(cont)
வீட்டிற்குள் நுழைந்தவள் படுத்துக்கொள்ளச் சற்று நேரத்திற்கெல்லாம் தங்கையிடமிருந்து அழைப்பு வந்தது. வாழ்க்கை வெறுத்துப் போனது பெண்ணிற்கு! நிம்மதியான ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்படுவது ஒரு குற்றமா? வெந்துபோன மனதை நீர் குடித்துக் குளிரவைக்க வர, நடுக்கூடத்தில் மனோ அமர்ந்திருந்தான். யாருடனோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
“என்னப்பா தூக்கம் வரலியா? எதுக்கு லைட் போடாம இருட்டில உக்காந்து இருக்கீங்க?” கேட்டுக் கொண்டே எபியின் அருகில் அமர்ந்தாள்.
“தூக்கம் வரல டி. நீ என்ன இந்நேரம்?”
“யாரு ஃபோன்ல?”
“தோஸ்த்து! ஹமி.”
“ஓஹ்…. மடியில படுத்துக்கவா மனோ?”
“உனக்கு என்ன டி ஆச்சு? வா படு” இழுத்து மடியில் போட்டுக் கொண்டான்.
சற்று நேரத்திற்கெல்லாம் தொடை நனைய ஆரம்பிக்கவும், படுத்திருந்தவள் கண்களை துடைத்தவன், “என்ன விஷயம்னு சொன்னாதான் தெரியும் விழி. இப்போ எதுக்கு அழற?”
“நகு தான் ஃபோன் போட்டு எழுப்பி விட்டா. அண்ணா நம்ம விஷயமா பேசினானாம். இதுவரைக்கும் நான் கல்யாணம் வேண்டாங்கரனால பொய் சொன்னதா நினைச்சாங்களாம். அப்படியே லவ்ன்னாலும் விட்டுடுவேன்னு கனவு கண்டாங்க போல! நான் அந்தாள நிஜமாவே கல்யாணம் பண்ண விரும்பலன்னும்.. உங்க மேல எனக்கு வருஷ கணக்கா விருப்பம்ன்னு அண்ணா சொல்லவும், அதையே நினைச்சு அம்மாக்கு ஹை பிரஷர் ஆகி மயங்கிட்டாங்களாம்.”
“இப்போ எப்பிடி இருக்காங்க?”
“அப்போவே சரி ஆகிட்டாங்க போல. ஆனா ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாம பாத்துக்கச் சொன்னாங்களாம்”
“ம்ம்ஹும்”
“எனக்கு எதுவும் சரிய படல மனோ. பயம் பிடிக்குது. நகு கல்யாணம்.. அம்மா ஹெல்த் எல்லாம் காட்டி என்னை கார்னர் பண்ணுவாங்க மனோ. இப்போவே அப்பாவும் பாட்டியும் ‘அம்மா மனசு நோகாம நடந்துக்கோ பாப்பா. குடும்பம் முக்கியம் பாப்பா, நம்ம சந்தோஷம் மட்டும் தான் முக்கியம்ன்னு வாழக்கூடாது. அம்மாக்கு ஏதாவது ஆகிட்டா குடும்பமே இடிஞ்சு போயிடும். அம்மா சொல்பேச்சு கேளு பாப்பா’ன்னு அட்வைஸ்! நகு அவ பங்குக்கு பெரிய இவ மாதிரி ‘எனக்காக பாக்காத அலர், உன்ன காரணம் காட்டி வினோ அத்தானோட என் கல்யாணம் நிக்கும்னா நின்னுட்டு போகட்டும்! நீ விரும்புற எபி அத்தானை அங்கேயே கல்யணம் பண்ணிக்கோ’ன்னு அட்வைஸ்!
ப்ச்! ஒத்துக்க போறதில்லன்னு எனக்கு 100% தோணுதே மனோ! குடும்பத்த எதிர்த்து நிக்கணுமா மனோ. உயிரா வளத்தாங்க மனோ. அவங்க கனவே நாங்க ரெண்டு பேரும் தான். நான் ஆசைப்பட்ட எதையும் எனக்கு கோடுக்க மறுத்தது இல்ல. ஆனா இப்போ… நான் பேசரத கேட்கக் கூட யாருமே தயாரா இல்ல! உங்க பேர கூட முழுசா கேக்க யாரும் விருபின மாதிரி தெரியல! எங்க போய் முடியுமோன்னு இருக்கு.
கையில நிஜமாவே விஷத்த எதுவும் அம்மா எடுத்தா என்ன மனோ பண்ணுவேன். ஏன் மனோ காதலிச்சோம். நீங்க அப்போவே வேண்டாம் சொன்னீங்க. நான் தான் கேக்கல! ஐயோ மனோ… நீங்க இல்லாம என்னால சத்தியமா முடியாது மனோ. இப்பிடி பயமுறுத்தி என்னை அந்த ஆளோட மணமேடைல ஏத்த நினைச்சா என்ன பண்றது? பேசாம நமக்குள்ள நடந்ததை வீட்டில சொல்லிடவா? ஆனா எப்படி மனோ இத சொல்லுவேன்?”
தொடையில் முகம் புதைத்து அழுபளுக்கு பதில் கொடுக்காமல், தலை வருடி அமர்ந்திருந்தான். அழுகை நின்றபாடில்லை என்றதும் ஒருகட்டத்தில், “ரொம்ப அழுதுட்ட. போதும். நான் இருக்கேன், நீ தூங்கு விழி!” என்றவனின் யோசனை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்திருந்தது.
திருமணம் என்று சடங்கு சம்பந்தப்பட்டதாக மாறியது? இரு இதயங்கள் சம்பந்தப்பட்டது தானே அது. வலுகட்டாய திருமணம் என்ன தரும்? கடனே என்ற ஜீவனற்ற வாழ்க்கை! ஒன்று சேர தகுதியுள்ள இருவரை சேர விடுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை?
இவர்கள் காதலை ஒருவரும் புரிந்துகொள்ளப் போவதும் இல்லை. விழி வீட்டில் உள்ளவர்கள் சம்மதத்தோடு திருமணம் நடக்கப் போவதும் இல்லை. நடுவே குட்டையை குழப்பவென்றே பிரவீன். அவன் நடந்ததைக் கூறினால், மானம் மண்ணாங்கட்டி என்று அவனையே விழிக்கு மணமுடித்து விடுவர்!
ஏதோ முடிவுக்கு வந்தவன், விழியை அறையில் படுக்கவைத்து அவனும் படுக்கச் சென்றான். அடுத்த இருவாரங்கள் வீட்டிலிருந்தே வேலைபுரிய அனுமதி வாங்கிவிட அவன் வீட்டோடு இருந்துவிட்டான். மறுநாள் காலை அலர்விழி கிளம்பி நின்றாள், அலுவலகம் செல்ல!
மனோவின் அறைக்குள் செல்ல இன்றும் அதே போல் யோசனை முகம். அதே சூனியத்தை வெறிக்கும் பார்வை! பெண் நொந்துபோனாள். இப்படி கதறுபவன் ஏன் இணங்க வேண்டும்? அவரசபட்டாயிற்று! அதற்காக அவன் காட்டும் உணர்வுகள் கொஞ்சம் அதிகமென்று தோன்றியது பெண்ணிற்கு!
“யோவ்… ரொம்ப பண்றயா நீ! நல்ல வேளை நான் பொண்ணா பிறந்தேன். இல்ல நடந்த சம்பவத்துக்கு தூக்க மாத்திரை போட்டு இருப்பீங்க. கற்பு பறிபோன எஃபெக்ட் கொடுக்காதீங்க மனோ. ‘கற்பு’ன்னா புருஷன் பொண்டாட்டி ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா வாழறது. அத தான் நம்ம தாத்தா தொல்காப்பியரும் சொல்லி இருக்கார். குடிச்சுட்டு பக்கத்து வீட்டுக்காரிகூட போகலியே… குடுச்சுட்டு கிடந்த உங்க பொண்டாட்டிட்ட தானே வந்தீங்க! ஹாப்பா, உங்களோட முடியலடா சாமி!
சரி, நான் கிளம்பட்டா? மதியத்துக்குச் சமையல் செஞ்சு வச்சிருக்கேன். நேரத்துக்கு சாப்பிடுங்க! நான் கிளம்பறேன். சாயங்காலம் சீக்கிரம் வரேன் சரியா? நான் வரதுக்குள்ள தற்கொலை முடிவெல்லாம் எடுத்திடாம. நான் கைவிடமாட்டேன் மனோ…” அவள் கிளுக்கி சிரிக்க,
“வாய் டி உனக்கு! நானே ட்ராப் பண்றேன் வா” என்று அவனே கூட்டிச் சென்று விட்டு, மாலை அழைத்து வந்தான். இடையே சில பல கைப்பேசி அழைப்புகளும், வெளி வேலையுமாக நாள் சென்றிருந்தது.
இரவு உணவு தயாராயிருக்க, உண்ண அமர்ந்தவளுக்கு உள்ளுக்குள் ஆனந்தம். “நான் ரொம்ப லக்கி மனோ. உங்கள மாதிரியே பொண்டாட்டி கஷ்டம் உணர்ந்து வீட்டு வேலையை ஷேர் பண்ற புருஷன் இருந்தா வேலைக்கு போர பொண்ணுங்களுக்கு பிரச்சினையே இல்லை தெரியுமா?” என்று ஆரம்பமாகிய பேச்சு இங்கு அங்கு என்று எல்லா இடத்தையும் மேய ஆரம்பித்தது.
“அப்புறம்.. சாருக்கு நாள் எப்படி போச்சு? என்ன என்ன பண்ணினீங்க?”
என்ன செய்தான்? ஹமியை அழைத்திருந்தான். ஒருவன் உயிரை மட்டும் விட்டு வைக்கக் கூறியிருந்ததின் நிலவரம் பற்றி விசாரித்திருந்தான். இதை அலர்விழியிடம் கூற முடியாதே.
அதன் பின் மாதவனோடு பேசினான். அவன் சங்குபாப்புவின் “மாமா..” என்ற கொஞ்சலில் வலி மறந்து நின்றான். அதைக் கூற முடியும் என்பதால் கூறினான்.
“மாதவன்ட்ட பேசினேன் விழி. நம்மள பத்தி பேசினதா சொன்னான். பிரவீன் தான் மாப்பிளைன்னு சொன்னான்.”
“அம்பிகா அத்தைக்கு பிரவீன் தான் மூத்த மகன், எபி! அவனுக்கு அப்புறம் தான் நாங்க எல்லாரும். ஏன் வினோவுமே இவனுக்கு அப்புறம் தான். இவன் மேல அத்தைக்கு உயிர். இது குடும்பத்தில எல்லாருக்குமே தெரியும்!
இப்போ இவனே கேட்ட பிறகு, இவனுக்கு அலர்விழிய கல்யாணம் பண்ணி கொடுக்காம எப்பிடி வினோக்கு நகுவ கொடுக்க முடியும்? ஏன்னா இந்த சம்பந்தத்தில அத்தை தான் அதிக பிரஷர் கொடுக்கிறாங்க போல.
இந்த நிலமைல நீங்க எங்க ஆட்களாகவே இருந்தாலும், இவன் நடுவில இருக்கவரை உங்களுக்கும் அலருக்கும் முடிக்கவே மாட்டாங்க! உங்கள பத்தி பேசினேன். ஆனா… ஒண்ணும் பதில்லை. ரெண்டு மாசத்துல அலர் ஊருக்கு போர நேரம் நானும் போறேன். என்ன பண்ணறதுன்னு பாப்போம்” என்று மாதவன் கூறியதை அலர்விழியிடம் கூறினான்.
கேட்டவளுக்குத் தாள் உள்ளுக்குள் பீதி கிளம்பியது. “ஒத்துக்கவே மாட்டாங்களா மனோ…”
பெண்ணின் முகம் பார்த்தான்.. பயம் தெரிந்தது.
“நீ தான் டி. நீ மட்டும் தான் எனக்கு. அப்பிடி எல்லாம் என் பொண்டாட்டியைத் தூக்கி கொடுத்துட்டு நிக்க மாட்டேன் புரியுதா?”
“நீங்களே தூக்கி கொடுத்தாலும் போகமாட்டேனாக்கும்”
“மறந்துட்டேன் பாரு… நீ வந்ததும் உன் அண்ணி ஃபோன் போட சொன்னா. ஏதோ ரெண்டு பேர் கிட்டயும் ஒண்ணா சொல்லணுமாம்”
காணொளியில் நீல விழி குட்டி அழகி தான் வந்தாள். மழலை நீங்கா மொழியில் கதைத்தாள்.
“மாமா மாமா… பாப்பு குட்டி விளையாட குட்ட்ட்ட்ட்டி பாப்பா மம்மி டம்மில இருக்கே” என்று அபிகெயில் கூற நினைத்த விடயத்தைப் பிள்ளை போட்டுடைத்தாள்.
அலர்விழி குஷியாகிப் போக, இவனுக்குத் தொண்டை அடைத்தது. இப்படி ஒன்றை எண்ணாமல் போனோமே என்று! மருந்தகம் சென்று ‘ப்ளான் பி’ மாத்திரை வாங்கி வந்தான்.
இவன் கொடுக்க, வாங்கியவள் கரம் நடுங்கியது. ‘ஏன் மனோ?’ என்றாள் பார்வையாலேயே…
“ஏற்கனவே லேட். 72 மணி நேரத்துக்குள்ள எடுக்கணுமாம். போட்டுக்கோ. யோசிக்காத! ப்ளீஸ் டி” என்றவன், உள்ளே சென்றுவிட்டான்.
அசைவில்லாமல் நின்றிருந்தவள் மெல்ல வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். நடந்த எதுவும் நினைவிலில்லை. நினைவில் இல்லை என்பதற்காக அது உண்மை இல்லை என்று ஆகிவிடாதே! தடம் பதித்திருப்பானோ?
கருத்தரித்து விடாமல் இருக்க மாத்திரை அவசியம் தானா? அலுவலக தோழியும் இப்படி தானே குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுகிறேன் என்று மருத்துவரிடம் கேட்காமல் கண்ட மாத்திரையும் போட்டு மூன்று வருடமாகப் பிள்ளைக்காக வேண்டாத தெய்வம் இல்லை! தனக்கு அந்த அவஸ்தை தேவையா? உயிர்த் துடிப்பை நிறுத்துவது பாவமாகாதா? மனோவோடான நிகழ்வை ஏற்றாயிற்று! அதற்குச் சின்னமாக அவள் மனோவின் வாரிசு வந்தால் தான் என்ன என்று தோன்றவும் மாத்திரைக் குப்பைத் தொட்டியில் தஞ்சம் புகுந்தது.
சட்டப்படி திருமணம் ஆகவில்லை! நினைவோடு கூடல் நிகழவில்லை. நடந்த விஷயத்தால் இடை, அதின் வடிவை இழக்குமோ தெரியவில்லை. இதெல்லாம் போதாதென்று வீட்டில் அவள் காதலை காது கொடுத்துக் கேட்க ஆளில்லை!
நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டிலுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின்றாரே.
மகாகவி பாரதியார்