Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

08. சசிரேகா - ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே -1

இன்று வேலூர் நகரில் உள்ள பிரபலமான கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய மாணவர்களின் வருகையின் நிமித்தமாக ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தது. முதலாமாண்டு படிக்க வரும் மாணவ மாணவிகளை வரவேற்கும் விதமாக ஏற்கனவே அங்கு படித்துக் கொண்டிருக்கும் மற்ற மாணவர்கள் ப்ரெஷர்ஸ்டே என பெயர் வைத்து அதற்கு சொந்த பணத்தில் செலவு செய்து பலூன்கள், ரிப்பன்கள் என ஆங்காங்கு கட்டி வைத்திருந்தார்கள். அது பார்ப்பதற்கு அழகாக இருந்தது, அந்த ஏற்பாடுகளை பார்த்து ரசித்தபடியே முதலாமாண்டு மாணவ மாணவிகள் ஜாலியாக கல்லூரிக்குள் பிரவேசித்தார்கள்.

அவர்களை காண சீனியர் மாணவர்கள் ஆவலாக இருந்தார்கள். வந்தவர்களை ரேகிங் எதுவும் செய்யவில்லை, ஆனாலும் தங்களது டிபார்ட்மெண்ட் யூஜீ மாணவர்கள் யார் யார் என கேட்டு தெரிந்துக் கொண்டு அவர்களுடன் நட்பாக பேசி பழக முயற்சி செய்தார்கள். வந்திருக்கும் யூஜீ மாணவர்களோ சீனியர் மாணவர்கள் இந்தளவுக்கு அன்புடன் பழகவும் அவர்களும் பாசமாக பழகினார்கள்.

அப்படி அந்த கல்லூரியே கலகலப்பாக இருந்த சமயம், கவின் தன் தங்கை கமலியுடன் பைக்கில் ஒன்றாக வந்து இறங்கினான், அவனைக் கண்டதும் சீனியர் மாணவர்கள் நால்வர் அவர்களை சூழ்ந்துக் கொண்டார்கள்.

”நிப்பாட்டு நிப்பாட்டு என்னப்பா வந்த முதல் நாள்லயே பொண்ணை பிக்கப் பண்ணிட்ட போல” என ஒரு சீனியர் மாணவன் கேட்க அதற்கு கவினோ



Advertisement

”ஆமாம் ஒரே தொல்லை, என்னை விடவே மாட்டேங்குது வசமா மாட்டிக்கிட்டேன், வேற வழியில்லாம கூட்டிட்டு அலையறேன், எல்லாம் என் தலையெழுத்து”

”ஏன் இப்படி அலுத்துக்கிட்டு பேசற, பொண்ணு அழகா காஷ்மீர் ஆப்பிள் மாதிரிதானே இருக்கா, பிடிக்கலையா உனக்கு”

”இதை போய் யார் பார்ப்பா”

Advertisement

”என்ன இப்படி சொல்ற இந்த காலேஜ்ல நிறைய பொண்ணுங்க அழகா இருக்காங்க ஆனா, இவ்ளோ அழகான பொண்ணை இப்பதான் நாங்க பார்க்கறோம், நீ என்னடான்னா இப்படி பேசறற”

Advertisement

”நான் உண்மையை சொன்னேன்”

”என்னத்த சொன்னியோ, காண்டேத்தாத ஆமா உன் பேரு என்ன”

”கவின்“

Advertisement

”எந்த டிபார்ட்மெண்ட்”

”கம்ப்யூட்டர் சயின்ஸ்”

”அட நம்ம டிபார்ட்மெண்ட்தான் அப்போ அந்த பொண்ணு”

”அதுவும்தான்

”இரு இரு நீ என்ன அது இதுன்னு பேசி வைக்கற சரியில்லை பொறு,  நான் அந்த பொண்ணுகிட்ட பேசறேன்” என சொல்லியவன் அவளிடம் பேசினான்

”ஹாய் எப்படியிருக்கீங்க”

”ம் ஏதோ இருக்கேன்“ என கமலி பேச அவர்களில் ஒருவனோ

”என்ன இவ்ளோ சலிப்பா பேசற”

”காலேஜ்க்கு வர்றதுக்கே போர் அடிக்குது, முதல் நாளே காலேஜ்ல எதுவும் சொல்லித் தரப் போறதில்லை, அதனால சினிமாக்கு போலாம் வான்னு கூப்பிட்டா, இவன் வரலை, நானே கோபத்தில இருக்கேன், இதுல நீங்க வேற ராகிங் பண்றீங்களா“

”சே சே உன்னைப்போய் நாங்க கலாய்ப்போமா, இந்த வருஷத்தோட காலேஜ் கனவு கண்ணியே நீதானே” என சொல்ல அவளோ அழகாக சிரித்தாள்

”ஆமா உன் பேரு என்ன“

“கமலி“

”வாவ் காதல் கோட்டை பட நாயகியோட பேர்கூட கமலிதான்”

”அந்த படம் ரிலீஸ் ஆனப்பதான் நான் பிறந்தேன், அதனால எனக்கு அந்தப் பெயரை வைச்சிட்டாரு என் அப்பா”

”ஓ நைஸ் ஆமா நீ எந்த டிபார்ட்மெண்ட்”

”கம்ப்யூட்டர் சயின்ஸ்“

”வாவ் அப்ப நீயும் எங்க டிபார்ட்மென்ட்தானா, அப்போ ஜாலியா இருக்கலாம்”

”தாராளமா ஆமா உங்களைப் பத்தி சொல்லலையே”

”என் பேரு சேகர், இவன் பேரு ரகு, இவன் கார்த்திக், அவன் பேரு ரவி, நாங்களும் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட்தான் இனி நாம எல்லாரும் ஒண்ணா படிக்கலாம்”

”அதுக்கு வாய்ப்பில்லையே“

”ஏன் ஏன் இல்லை” என ரகு கேட்க அதற்கு கமலி

”ஏன்னா என்ன சொல்றது நீங்க பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்தானே“

”ஆமாம் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்“

”ஆனா நாங்க எம்டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ், உங்களோட சீனியர்ஸ்” என கமலி சொல்லவும் அந்த நால்வரும் அரண்டார்கள்

”சீனியர்ஸா அப்போ ஏன் இங்க வந்து படிக்கறீங்க”

”ஏன் இங்க வந்து படிக்க கூடாதா என்ன பிரின்சி கிட்ட உங்களை பத்தி சொல்லவா“

”அய்யோ வேணாம் இதுதான் எங்களோட கடைசி வருஷம், நீங்க பாட்டுக்கு கம்ப்ளையின்ட் பண்ணிட்டா அப்புறம் எங்களுக்கு ப்ளாக் மார்க் விழுந்துடும் சாரி சாரி”

”இட்ஸ் ஓகே” என்றாள் கமலி திமிராக

அவர்களோ கவினிடம்

”ஏன் சீனியர் வந்த உடனே நீங்க எங்களுக்கு சீனியர்ஸ்னு சொல்லியிருக்கலாமே”

”கொஞ்ச நேரம் டைம் பாஸ் பண்ணலாம்னுதான் சொல்லலை”

”உங்க ஆளு இனிமேல நாங்க சைட் அடிக்க மாட்டோம், சிஸ்டரா பார்க்கறோம்”

”அவள் என் ஆளு இல்லை என் கூடபிறந்த தங்கச்சி” என சொல்லி முடிக்கவும் அந்த நால்வரும் பயத்தில் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அங்கிருந்து விட்டார்கள் ஒரு ஓட்டம், அதைக் கண்டு அவ்விருவரும் கலகலவென சிரித்தபடியே சுற்றி முற்றி வேடிக்கைப் பார்க்க ஒரு இடத்தைக் கண்டதும் தானாக அவர்களின் சிரிப்பு கோபமாக மாறியது.

கவின் பார்த்த இடத்தில் கண்மணி வந்துக் கொண்டிருந்தாள், அவளும் இந்த கல்லூரிதான் போல அது பற்றி அறியாமல் போனான்

”சே இவளா இவள் எப்படி ஓ இவளும் இங்கதான் படிக்கப் போறாளா, இவளால என் மானமே போச்சி, அவமானம்தான் மிச்சம், இவளை என் வாழ்க்கையில திரும்பவும் பார்க்கவே கூடாதுன்னு நினைச்சேன் ஆனா, மறுபடியும் மறுபடியும் பார்க்கற மாதிரியே அமையுதே, இவள் இருக்கற இடத்தில நாம இருந்தா அது நமக்குதான் அசிங்கம், நமக்கு இந்த காலேஜே வேணாம்” என கவின் உணர்ச்சி பெருக்கில் வெளிப்படையாக புலம்ப பக்கத்தில் இருந்த கமலியும்

”ஆமாம் கவின் என்னால இந்த காலேஜ்ல படிக்க முடியாது, நானும் வேற காலேஜ்க்கு போறேன்” என சொல்ல திடுக்கிட்ட கவின் தன் தங்கையைப் பார்க்க அவளோ வேறு எங்கோ பார்த்தபடி இருந்தாள், யாரை பார்க்கறாள் என அவனும் பார்த்தான், அவள் பார்த்த இடத்தில் குணா இருந்தான், அவனை இவனுக்கு தெரியவில்லை, அதனால் குழம்பி அவளிடமே தனியாக அழைத்துச் சென்று பேசினான்

”கமலி என்னாச்சி உனக்கு, நீ ஏன் இந்த காலேஜே வேணாம்னு சொல்ற”

”எல்லாம் அவனாலதான்“

”யாரு அவன்? இதுக்கு முன்னாடி நான் அவனை பார்க்கலையே”

”நானும் அவனும் கோவை இன்ஜினியரிங் காலேஜ்ல ஒண்ணா படிச்சோம் அவன் பேரு குணா“

”குணா இந்த பேரை நான் கேள்விப்படலையே ஆமா ஏன் உன் முகம் கோபமா இருக்கு, கண்ணெல்லாம் கலங்கியிருக்கு ஏய் கமலி நீ அவனை லவ் பண்ணி தொலைச்சியா என்ன” என சொல்லவும்தான் தாமதம் அவளின் கண்கள் கண்ணீராய் சிந்த அவனது மனமே கனத்துவிட்டது, சிறுபிள்ளை என அவளை பார்த்து வந்தவனுக்கு தன் தங்கையின் வேதனை முள்ளாய் குத்த

”இரு நான் அவன்கிட்ட பேசறேன்“

”வேணாம் கவின் விட்டுடு”

”நீ இப்படி அழறதை பார்க்கறப்ப எனக்கு கஷ்டமாயிருக்கு, எதுக்காகவும் நீ அழமாட்ட, உன்னை ஒருத்தன் அழவைச்சிருக்கான்னா அவனை எப்படி சும்மாவிடறது ராஸ்கல், உன்னை லவ் பண்ணி ஏமாத்தினவனை இன்னிக்கு உயிரோட விடறதாயில்லை”

”அய்யோ கவின் அவன் ஒண்ணும் என்னை ஏமாத்தலை, அவன் என்னை காதலிக்கவும் இல்லை, இன்னும் சொல்லனும்னா அவன் யாரையுமே காதலிக்கலை“

”புரியலை தெளிவா சொல்லு” என கேட்டதும் கமலி சட்டென பழைய நினைவில் சென்றாள்

”குணா என் க்ளாஸ் மேட், யார்கிட்டயும் பேச மாட்டான், பழக மாட்டான், தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பான், நல்ல படிப்பாளி, கவிதை எழுதுவான், ஓவியம் வரைவான், பாட்டு டான்ஸ் விளையாட்டுன்னு எல்லாத்திலயும் அவன்தான் நெம்பர் ஒன் ஆனா, யார்கிட்டயும் பழகமாட்டான், அவனோட நட்பா பழக யார் வந்தாலும் ஏத்துக்கல, அது ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி, 4 அடி தள்ளி நின்னுதான் பேசுவான், அவன் பேசறதே அபூர்வம் ரொம்ப திமிர் பிடிச்சவன், யாருக்கும் அடங்காதவன், யாராவது தப்பு செய்து அது அவனுக்கு தெரிஞ்சா கோபத்தில அவனை அடிச்சி வெளுத்துடுவான், இதனால நிறைய முறை சஸ்பெண்ட் ஆனாலும் காலேஜ்லயே நல்ல மார்க் எடுப்பான் யூனிவர்சிட்டி டாப்பர்”

”இந்தளவுக்கு ஒருத்தனை பத்தி நீ புகழ்ந்து சொல்றது ஆச்சர்யமா இருக்கு, அவன் நல்லவனாதான் இருக்கான்“

”இல்லை அவன்கிட்ட நிறைய பொண்ணுங்க நட்பா பழக ஆசைப்பட்டாங்க, காதலிக்கறதாவும் சொன்னாங்க ஆனா, அவன் யாரையும் கிட்ட சேர்க்கலை, யாரையும் காதலிக்கலை, எல்லாரையும் தள்ளி வைச்சிப் பார்த்தான், அதே போல என்னையும் தள்ளி வைச்சான், நான் அவனை எந்தளவுக்கு சின்சியரா லவ் பண்ணேன் தெரியுமா, அவனுக்காக என் உசுரை கூட விட துணிஞ்சேன், நான் தற்கொலை செய்துக்குவேன்னு மிரட்டியும் அவன் பயப்படலை செத்தா சாவு, உன்னை நான் காதலிக்க மாட்டேன், உன்னைன்னு இல்லை, நான் யாரையுமே காதலிக்க மாட்டேன், எனக்கு யாரும் தேவையில்லைன்னு முகத்தில அடிச்ச மாதிரி சொல்லிட்டுப் போயிட்டான்

அதுக்கு அப்புறம் எனக்கு அவனை பார்க்கவே பிடிக்கலை, அவாய்டு பண்ணேன் ஆனா, முடியலை அவன் என்னை விலக்கி வைச்சதோட சரி, நான் இருக்கேனா செத்தேனான்னு கூட அவன் கண்டுக்கலை, கொழுப்பு, திமிரு, யாருக்கும் அடங்காம அலைஞ்சான், எப்படியோ படிச்சி முடிச்சி அதுக்கு அப்புறம் அந்த ஊரும் வேணாம் அந்த காலேஜும் வேணாம்னு இங்க வந்தா என் கண்முன்னாடி வர்றான், எனக்கு எப்படியிருக்குது தெரியுமா

இப்ப கூட அவன் என் காதலை புரிஞ்சிக்காம என்னை விரட்டினது திட்டினதுதான் ஞாபகத்துக்கு வருது, கடைசியா கூட அவன்கிட்ட நான் கெஞ்சினேன், அப்ப அவன் என்ன சொன்னான் தெரியுமா நீ நினைக்கற ஆள் நான் இல்லை? வேற எவனாவது உனக்கு பிடிச்ச மாதிரி உன்கூட பழகறது, உன்கூட சேர்ந்து ஊர் சுத்தறது, உன் பின்னாடியே நாய்மாதிரி வாலாட்டிக்கிட்டு நீ சொல்றதை செய்றவன் எவனாவது கிடைப்பான், அவனை பிடி, இந்த காதலால என் குடும்பம் நாசமா போயிடுச்சி, அதே தப்பை நானும் செய்யறதா இல்லை, எனக்கு ஒரு லட்சியம் இருக்கு, அதை நோக்கி நான் போறேன், உனக்காக வர்ற அளவுக்கு நீ ஒண்ணும் அந்தளவுக்கு ஒர்த் இல்லை, இதோட என்னை விட்டுடுன்னு ரொம்ப அவமானமா பேசிட்டான்

அவன் மேல நான் வைச்ச காதலை விட இப்ப அவன் மேல கொலை வெறியா இருக்கேன், எனக்கு இருக்கற கோபத்துக்கு அவனை இங்கயே இப்பவே கழுத்தை நெறிச்சி கொன்னுடலாம்னு தோணுது” என ஆவேசமாக பேசிய தங்கையைக் கண்டு வாயடைத்து நின்றான் கவின்.

”நீயா இது நீ எவ்ளோ சாப்ட்டான பொண்ணு ஆனா, இந்தளவுக்கு நீ கோபப்படறதை பார்க்கறப்ப அவன் உன் மனசை ரொம்பவே நோகடிச்சிட்டான் போல இருக்கே”

”ஆமாம் கவின் அவனால ஏற்பட்ட அவமானத்தை தாங்கிக்க முடியாம நான் அந்த ஊரைவிட்டே வந்துட்டேன்”

”அதானா கோவையை விட்டு வரவே மாட்டேன்னு பிடிவாதமா இருந்த நீ, எனக்கு இங்க இருக்க பிடிக்கலை வேற ஊர் காலேஜ்ல படிக்கறேன்னு அடம்பிடிச்சி வந்தியா நான்கூட கோவை உனக்கு அலுத்துப் போச்சோன்னு நினைச்சேன்”

”நான் பிறந்த ஊர் எப்படி எனக்கு அலுத்துப் போகும், எனக்கு உலகத்திலேயே ரொம்ப பிடிச்ச இடம்னா அது கோவைதான் ஆனா, அந்த ஊரையே வெறுக்கற அளவுக்கு குணா செய்துட்டான்”

”நிஜமாவே நீ அவனை லவ் பண்ணியா” என சந்தேகமாக கேட்க கவினை கடுமையாக பார்த்தாள் கமலி

”இல்லை நீ சின்ன பிள்ளை போல துறுதுறுன்னு இருப்ப, எல்லாரும் உன்னை சீரியஸா பார்க்க மாட்டாங்க, ஜாலியா சுத்திக்கிட்டு இருப்பியே எப்படி உனக்குள்ள  லவ் வந்தது அதுவே எனக்கு சந்தேகமா இருக்கு“

”ஏன் நானும் பொண்ணுதானே, நான்லாம் ஒருத்தனை காதலிக்க கூடாதா என்ன”

”தாராளமா யார் வேணாம்னு சொன்னா ஆனா, உனக்கெப்படி காதல் வந்தது அதுவும் குணா மாதிரி ஒரு திமிர் பிடிச்சவன் மேல“

”அவனோட அந்த முரட்டு திமிருதான் எனக்கு ரொம்ப பிடிச்சதே ஆனா, அவனோட திமிர்தான் என் காதலை கேவலமா பார்த்து என்னை ஒரு பொருட்டாவே மதிக்காம அவமானப்படுத்தி விரட்ட வைச்சது, அவனோட திமிரை அடக்கனும், நான் பட்ட அவமானம் போல அவன் படனும் அவனை நான் நிச்சயம் பழிவாங்கியே தீருவேன்” என சபதம் போட கவினுக்கு திக்கென்றது

”ஏய் இரு இரு என்ன நீ பேசிக்கிட்டு இருக்கறப்பவே திடுதிப்புன்னு சபதம் போடற இது ஒண்ணும் விளையாட்டில்லை”

“நான் ஒண்ணும் விளையாட்டு பிள்ளையில்லை, என் காதலை மதிக்காத அவனுக்கு காதல்னா என்னன்னு புரிய வைக்கனும், காதல் தோல்வியோட வலியை அவன் அனுபவிக்கனும், நான் இப்ப காதல் தோல்வியால கஷ்டப்படற மாதிரி அவனும் ஒரு நாள் கஷ்டப்படனும், கஷ்டப்பட வைப்பேன்“

”இந்தளவுக்கு விரோதத்தை காட்டனுமா என்ன? அந்தளவுக்கு குணா என்ன அவ்ளோ ஒர்த்தானா ஆளா விட்டுத்தள்ளு” என சொல்ல கமலியின் முகம் வெறுப்புக்கு மாறியது.

கவினோ எதேச்சையாக திரும்பிய போது அவர்களை கடந்து கண்மணி சென்றாள், அவளைக் கண்டதும் ஆசிட் பட்டது போல துடித்துப் போனான் கவின், அவனின் இந்த மாற்றத்தைக் கண்ட கமலி சட்டென கண்மணியைப் பார்த்துவிட்டு கவினிடம்

”யார் அந்த பொண்ணு, அவளை பார்த்து நீ ஏன் இப்படி ஷாக் ஆகற”

”அவள் பேரு கண்மணி“

”இந்த பேரை எங்கயோ கேட்ட மாதிரியிருக்கே ஆமாம் உன்னோட ரிங்டோன்ல வைச்சிருப்பல்ல கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” என அவள் பாடி காட்ட அவனுக்கு கோபம் வந்தது

”போதும் நிறுத்து நான் எப்பவோ அந்த ரிங்டோனை மாத்திட்டேன்”

”எதுக்கு இப்படி கோபப்படற என்ன விசயம்“

”அதெல்லாம் ஒண்ணுமில்லை“

”ஏய் ஒண்ணுமில்லைன்னு சொன்னா அப்ப ஆயிரம் விசயம் இருக்குன்னு அர்த்தம், மரியாதையா சொல்லிடு“

”ஏய் அதெல்லாம் இல்லை விடு“

”அவளை நீ லவ் பண்ணியா”

”சே சே”

”அப்ப லவ் பண்ண ஒத்துக்க“

”ப்ச் இல்லை கமலி“

”நான் மட்டும் குணாவை பத்தி சொன்னேன்ல நீ மட்டும் ஏன் கண்மணியை பத்தி சொல்ல மாட்டேங்கற, இவ்ளோதான் நீ என் மேல வைச்சிருக்கற அன்பா”

”அப்படியில்லை கமலி நல்லவிசயம்னா சொல்லலாம் அவமானப்பட்டதையெல்லாமா சொல்ல முடியும்”

”கண்மணி உனக்கு தோழியா இல்லை காதலியா, அவளை நீ காதலிச்சியா இல்லை அவள் உன்னை காதலிச்சாளா, இரண்டு பேருக்கும் பிரேக் அப் ஆயிடுச்சா” என வரிசையாக கேட்டுக் கொண்டே போக அவளை நிப்பாட்டினான் கவின்

”நிறுத்து நிறுத்து எதுக்கு இப்படி எக்ஸ்பிரஸ் ட்ரெயின் மாதிரி பேசற, பதில் சொல்றதுக்காவது கேப் தருவியா”

”சரி சொல்லு லவ்தானே“

”ஆமாம்” என்றான் சலிப்புடன்

”நீ கூட லவ்லாம் பண்ணுவியா“

”நீயே லவ் பண்றப்ப, நான் பண்ண மாட்டேனா”

”எனக்கே நிறை அட்வைஸ் பண்ணுவ, ஒழுங்கா இருக்கனும், நல்லா படிக்கனும், படிப்புதான் முக்கியம், மத்ததெல்லாம் சாதிச்ச பின்னாடிதான் காதல் கல்யாணம்லாம் லைப்ல செட்டில் ஆனபின்னாடிதான் வரனும் அப்படி இப்படின்னு அளந்துவிடுவ இப்ப இப்படி பேசற“

”வாஸ்தவம்தான் லைப்ல செட்டில் ஆகனும், பாரின்ல பெரிய கம்பெனியில நிறைய சம்பளத்தோட வேலை செய்யனும் இல்லையா சொந்தமா கம்பெனி வைச்சி நடத்தி அது பெரிய அளவுக்கு சக்ஸஸ் ஆனபின்னாடி லைப் பார்ட்னரா பார்க்கனும், காதலிக்கனும், கல்யாணம் செய்துக்கனும்னு நிறைய குறிக்கோளோட இருந்தேன் ஆனா, அதையெல்லாம் உடைச்சி போட்டவ கண்மணி”

”ஓஓஓஓஓ”

”அந்தளவுக்கு இல்லை”

”ப்ச் எத்தனை வருஷ காதல் கதை இது“

”மக்கும் நாங்க காதலிக்கவேயில்லை, நீ ஒண்ணு எதையாவது சொல்லாத“

”காதலிக்கலைன்னா புரியலையே அவளும் கோவைதானா”

”இல்லை மதுரை”

”ம் மதுரையா சரி ஆமாம் உனக்கு கோவையில சீட் கிடைக்காம கடைசியில மதுரையில சீட் கிடைச்சதுன்னு படிக்க போனல்ல அங்க பார்த்தியா”

”ஆமாம் முதல் நாளே அவளை பார்த்துட்டேன், பார்த்ததும் அப்படியொரு ஈர்ப்பு அவள் மேல, காதல்னா அது அவளைத்தான் லவ் பண்ணனும் கல்யாணம்னா அது அவகூடதான்னு முடிவே எடுத்துட்டேன், பர்ஸ்ட் இயர் என் க்ளாஸ்ல ஜாயின் பண்ணா எனக்கு அப்படியே றெக்கை கட்டி பறக்கற மாதிரி சந்தோஷமா இருந்தது. அவளை நான்னு இல்லை அந்த காலேஜ்ல எத்தனை பேர் சைட் அடிச்சாங்க தெரியுமா, அந்த காலேஜ்லயே அவள்தான் அழகி இல்லைல்ல பேரழகி, காலேஜோட கனவு கண்ணி, அவளை லவ் பண்ண எத்தனை பேர் ஆசைப்பட்டாங்க  தெரியுமா, அவள் பின்னாடியே ஒரு கும்பலே சுத்தும்”

”ம்ம்ம்  ரொம்ப புகழாத என்னை விட அவ்ளோ ஒண்ணும் அவள் அழகில்லை”

“நீ என் தங்கச்சி உன்னையும் அவளையும் ஏன் கம்பேர் பண்ற, நீ கோவைக்கு அழகின்னா அவள் மதுரைக்கு அழகி போதுமா”

”ஷ்ஷ் அப்புறம்”

”பசங்கதான் அவள் பின்னாடி அலைஞ்சாங்க ஆனா அவள் நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வைன்னு சொல்வாங்கள்ல அதுபோல அவள் இருந்தா, தைரியசாலி தப்புன்னா தப்புன்னு அடிச்சி பேசுவா, புத்திசாலி, க்ளாஸ்ல அவள்தான் பர்ஸ்ட், யூனிவர்சிட்டி டாப்பர், கோல்டு மெடல் கூட அவளுக்கு தந்தாங்க, படிப்பு படிப்பு படிப்பு எந்நேரமும் படிப்புதான் ஆனா, நல்லா சங்கீதம் தெரியும், பாடுவா, பரதநாட்டியம் ஆடுவா, காலேஜ் ஆண்டுவிழா வந்தா அவளோட பாட்டும் டான்ஸ்சும் கண்டிப்பா இருக்கும், சாதாரண குடும்பம்தான், அப்பா அம்மா இவள் அவ்ளோதான், காலேஜ் முடிச்சிட்டு வீட்லயே அக்கம் பக்கம் இருக்கற ஸ்கூல் பசங்களுக்கு ட்யூசன் எடுத்து அதுல வர்ற வருமானத்தில காலேஜ் படிப்பை முடிச்சவ, சின்சியர் ஸ்டூன்ட்ன்னு பெயர் எடுத்தவ, அவள் மேல சின்னதா ஒரு குறை கூட கண்டுபிடிக்க முடியாது, அவ்ளோ ஒழுக்கமா இருப்பா”

”நைஸ் இந்தளவுக்கு குணம் இருந்தா கண்டிப்பா அவளும் திமிர்பிடிச்சவளாதான் இருக்கனும் கரெக்டா”

”திமிர்ன்னு சொல்ல முடியாது, என்னவோ அவளுக்கு இந்த காதல் மேலயும் கல்யாணத்து மேலயும் விருப்பம் இல்லை போல இருக்கு, அவளுக்கு யாரெல்லாம் காதல் கடிதம் கொடுத்தாங்களோ, அந்த கடிதம் எல்லாம் அவள் கிழிச்சி போட்டு கொடுத்தவனை திட்டுவா பாரு, அடுத்த முறை அவன் அவளை பார்க்கவே தயங்கற அளவுக்கு திட்டுவா, நிறைய பேரை இப்படிதான் ரிஜக்ட் பண்ணியிருக்கா“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!