வீட்டின் வாயிலுக்கு அருகில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் மல்லாக்க படுத்திருந்த பேரனிடம் இதோடு பத்தாவது முறையாக கேட்டுவிட்டார் இளங்கோவன்.
ஆனால் விஸ்தாரமான பஞ்சு மெத்தையில் இடம் கிடைத்தது போல் கால் மேல் கால் போட்டு வீட்டின் மேல் கூரையில் கண்ணை வைத்திருந்த தேவா, “ஏன் தாத்தா இந்த சுவரை இவ்ளோ உயரம் கம்மியா வச்சிருக்கீங்க? இன்னும் கொஞ்சம் மேல தூக்கி வச்சிருந்தா இங்க ஒரு காத்தாடிய மாட்டி விட்ருக்கலாம்”
சாதுர்யமாக தாத்தாவின் பேச்சை மாற்றியவன் மேல் கோவமாக கண்களை பதித்தார் இளங்கோவன்.
“ஏங்க அய்யா இப்டி புள்ளைய கேள்வி கேட்டு கொடஞ்சிட்டே இருக்கிக, யய்யா நீ வா”
வெள்ளி தட்டில் தாராளமாக உணவை வைத்து பிசைந்து வந்தார் கடற்கரைதாயம்மாள், “என்ன தான் கோவம் இருந்தாலும் சோத்து மேல அத காட்ட கூடாது ய்யா”
உணவு என்றதும் சத்தமில்லாமல் எழுந்து அமர்ந்தவன் அருகில் உட்கார்ந்த ஆச்சியிடம், “என்ன சாப்பாடு கொண்டு வந்துருக்கீங்க?” என்றான்.
“நீ இந்த நேரம் வந்து திடுதிப்புனு நிப்பனு தெரியாதே, அதான் சாப்பாடு எல்லாத்தையும் தண்ணி ஊத்தி போட்டேன்” – கடற்கரைதாயம்மாள்
“பழையசோறுன்னு ஒரே வார்த்தைல சொல்ல எதுக்கு இப்டி சுத்தி வளைக்கனும்” என்றாலும் வாயை நன்றாக திறந்து ஊட்டி விட சொன்னான்.
அவன் செயலில் சிரிப்பு வர, பேரனுக்கு மனதார ஒரு கவளம் உணவை ஊட்டி விட்டவர், “பழைய சோறு சாதாரண சாதத்தை விட இருவது மடங்கு உடம்புக்கு நல்லது. அதான் பாரு ஆச்சி உனக்கு கார சாரமா இருக்கணும்னு சுண்ட சூடு பண்ண ஒத்தப்பூண்டு கொழம்பு கொண்டு வந்துருக்கேன்”
“சரி சரி பேசாம ஊட்டி விடுங்களேன் பசிக்கிது”
முகம் வாடி கிடந்தவனின் தோற்றம் மனதை பிசைய கணவனிடம் இப்பொழுது எதுவும் பேச வேண்டாம் என கண்ணால் சைகை செய்து பேரன் வயிறார உண்டு முடிக்கும் வரை எதுவும் பேச விடவில்லை.
“ஏன் ஆச்சி உங்க கையால செய்யிறதுல இந்த பழைய சோறு மட்டும் சொதப்புது?” வாய் ஒன்று கூறினாலும் கையோ அவர் கையிலிருந்த தட்டிலிருந்த நீஸ் தண்ணீரை சொட்டு மிச்சமில்லாமல் குடித்து முடித்தது.
“ம்ம்ம் கல்யாணம் கட்டிக்கோ அதுவு கூட நல்லா இருக்கும்” – ஆச்சி
“இனி உன்ன கட்டிக்கிட்டு நான் பிரதேசம் போகவா?” ஆச்சியின் முகத்தை கைகளில் பிடித்து கொஞ்சினான்.
“டேய் அவ என் பொண்டாட்டிடா, நீ கை எடு” கணவனை செல்லமாக முறைத்த கடற்கரைதாயம்மாள் பேரனிடம்,
“உனக்கு எதுக்கு ய்யா இந்த கெழவி எல்லாம், உனக்கு தங்க விக்கிரகமாட்டம் ஒரு புள்ளைய கூட்டி வந்து நிறுத்திட மாட்டேன்?” – ஆச்சி
“ஆஆ வாய் மட்டும் வக்கணையா பேசுங்க, ஆனா இது வர ஒரு புள்ளைய கண்ணு முன்னால காட்டுனது இல்ல” முறுக்கிக்கொண்டான் ஆச்சியிடம்.
“ஆமா இவனும் ராமன், நாங்க காட்டுற பொண்ண தவற வேற புள்ளைய கண்ணுல கூட பாக்க மாட்டான்” அந்த பக்கமிருந்து சற்று கோவமாக வந்தது இளங்கோவன் குரல்.
“ஏன் அய்யா இந்த பேச்சு? புள்ள ஏதோ வயசு கோளாறுல பேசுறான்” கணவரை அமைதியாக்கி பேரனிடம் வந்தவர்,
“நீ சொல்லு ராசா, ஆச்சியோட சொந்தத்துல ஒரு பொம்பள புள்ளைய பாத்தேன், ராசாத்தி கணக்கா இருந்தா. ரோசா பூ நிறம் பாத்துக்கோ… பேசி முடிச்சிடலாமா?” ஆசை கண்களில் மின்ன கேள்வி எழுப்பினார்.
“அந்த புள்ளைக்கு ஆட தெரியல்னா என்னடா பண்ணுவ?” பேரனின் அலப்பறை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போவத்தைப் பார்த்த இளங்கோவன் அவனை முறைத்தார்.
“நான் காசு கட்டி டான்ஸ் கிளாஸ் சேத்து விடுவேன், உங்களுக்கென்ன? வேணும்னா சொல்லுங்க உங்களையும் அனுப்பி வச்சிடலாம்”
“யய்யா அவர் சொல்றத கேக்காத உன்னக்கென்ன டான்ஸ் ஆடணும்ல ஆட வச்சிடலாம் ஆச்சி நான் பேசுறேன்” – ஆச்சி
இருவரின் பாச பிணைப்பை கொண்டவருக்கு பொறுமை காற்றில் பறந்தது, “அது என்ன பதினோரு மணிக்கு கெளம்பி வர்ற அளவு கோவம் வேண்டி கெடக்கு? கன்னத்துல தழும்பு வேற, உன் அய்யா எதுவும் கை ஓங்குனாரா?”
சாமர்த்தியமாக பல நிமிடங்களாக இந்த பேச்சையே மாற்றிக்கொண்டிருக்கும் பேரனிடம் இதற்கும் மேலும் விட்டு வைக்க மனம் வரவில்லை.
“அத தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? உங்க மாப்பிள்ளைக்கிட்ட சண்டை போடுறதா இருந்தா சொல்லுங்க இப்பயே நடந்தத சொல்றேன்” பேரம் பேசினான் தேவா.
“டேய் எடக்கு மடக்கா பேசாம சொல்ல போறியா இல்லை உன் அம்மைக்கு போன் அடிக்கவா?”
ஒன்பது மணிக்கெல்லாம் தாத்தாவும் ஆச்சியும் உறங்கியிருப்பார்கள் என தெரிந்து பதினோரு மணி போல் வாசலிலே கொசு கடியை கூட பொருட்படுத்தாமல் படுத்த பேரனின் வரவை வேலையாள் மூலம் தெரிந்து கொண்ட இளங்கோவனுக்கு அதற்கு மேல் தூக்கம் எட்டாக்கனியாகியது.
வெளியில் வந்து பார்த்தால் உறங்காமல் கொட்ட கொட்ட முழித்துக்கொண்டிருந்தான், முகத்தில் அப்பட்டமான சோகத்தோடு பெருத்த யோசனை வேறு.
உறக்கம் வரவில்லை அதற்கு மேல், அவர் மனைவியோ அவன் முகத்தை பார்த்தே உண்ணவும் இல்லை என தெரிந்து முதலில் அவன் பசியை மாற்றிவிடலாம் என வந்துவிட்டார்.
“ஜவுளி கடைக்கு போனோம், அய்யாமைக்கு நகை வாங்கி நாயாகி கைல குடுத்துருக்கார். உங்க பொண்ணு நகையை எங்க வச்சோம்ன்னு மறந்துட்டு, நான் தான் அத தொலைச்சிட்டேன்னு வீம்பா நிக்கிறாரு, இதுல பார்க்கிங்ல அறைஞ்சிட்டார். எ.டி.எம் கார்ட தூக்கி போட்டு வந்துட்டேன் வாயடைக்க”
சுரத்தையே இல்லாமல் ஏனோ தானோவென பேசிய பேரனின் மன கொதிப்பை தெரிந்தும் எதுவும் செய்ய இயலா நிலை. மாப்பிள்ளையிடம் சண்டைக்கு நிற்க முடியாதே, மகளும் முகம் கொடுத்து பேசுவதில்லை.
“என்ன நினைச்சிட்டு இருக்கா உன் அம்மா?”
கொதித்த இளங்கோவனால் மகளை மட்டுமே திட்ட முடிந்தது, அதில் தேவா தன் பங்கிற்கு, “திருத்தம்… உங்க மக” என்றான்.
“சரி என் மக தான், பேராண்டி ஒரு முறை தப்பு பண்ணிட்டான், அதுக்குன்னு காலம் எல்லாம் அவனையே குறை சொல்லிட்டே இருக்க முடியுமா? உன் அய்யப்பா கூட ஒன்னும் சொல்லலையா உன் அப்பாவை? எப்படி சொல்லுவாங்க, எல்லாரும் ஒரே ரத்தம் தான. மகனுக்கு தான் துணை போவாங்க”
“அவரும் திட்டுனாரு தாத்தா, உன் டிராகன் மருமகன் தான் கேக்கல. சரி இப்போ என்ன அடிச்சது ஆகி போச்சு, விடுங்க” – தேவா
“அது எப்படி விட முடியும்? அத்தனை பேர் முன்னாடி கை நீட்டி அடிக்கலாமா?” – இளங்கோவன்
அவரின் கோவத்தை கட்டுப்படுத்த இடக்காக பேசிய பேரனிடம், “நீ ஏன்டா குதர்க்கமாவே பேசுற? உன் அப்பன் என்ன தப்பு பண்ணாலும் பாத்துட்டே இருக்க முடியுமா?” அங்கலாய்த்தார் பெரியவர்.
“சரி விடுங்க, காசு இப்போ அடுத்த வாரம் தேவ, ஒரு இடம் வாங்கலாம்னு வச்சேன், அதை தான் இப்போ இடிக்கிது” என்றான் யோசனையாக.
“ஆமா மருமகன் புள்ள வேணும்னட்டே அந்த காச எல்லாம் செலவு பண்ணாலும் பண்ணுவார்” வருத்தமாக பேரன் சொல்வதை ஆமோதித்தார் ஆச்சி.
“என்கிட்ட காசு வாங்கிக்கோ ராசா” ஒரே பார்வையில் இளங்கோவனின் பேச்சை நிறுத்தினான்.
“ஆச்சி உங்க வீட்டுகார உள்ள கூட்டிட்டு போங்க. செவனேன்னு படுத்துக்கெடந்தவன எழுப்பி விட்டு பஞ்சாயத்து பன்றார்றாமாம், இந்நேரம் தூங்க விட்ருந்தா என் அத்தை மக கூட ரெண்டு குத்து பாட்டு டான்ஸ் ஆவது ஆடிருப்பேன்” புலம்பியவாறே போர்வையை தூக்கி தன்னறையை பார்த்து நடந்த பேரனை வேதனையோடு பார்த்தனர் இருவரும்.
“நம்மகிட்ட காசு வாங்குறதுல இவனுக்கு என்ன கௌரவ குறைச்சலாம்?” ஆதங்கப்பட்ட கணவரிடம், “நடந்தது அந்த மாதிரி. அவன் மானஸ்தன். உங்க மருமக பேசுனது கேட்டும் உங்க காச வாங்குனா அது என் பேரனுக்கு தான் அசிங்கம்.
அவன் குணத்துக்கும் அறிவுக்கும் ராஜாவா தான் வாழுவான். ரொம்ப யோசிக்காம வந்து படுங்க அய்யா” கணவரை சமாதானம் செய்து உறங்க அனுப்பினார் அவரின் மனைவி கடற்கரைதாயம்மாள்.
மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தோப்பிற்கு சென்ற தேவா மதியம் ஏற்றுமதி செய்ய வேண்டிய தேங்காய்களை சரி பார்த்துவிட்டு, தென்னைகளுக்கும், அந்த தென்னைகளுக்கு இடையில் ஊடு செய்கையாக விட்டிருந்த மிளகு செடியையும் வாழை கன்றுகளையும் பார்வையிட்டு மற்றொரு ஓரத்தினுள் வளர்ந்திருந்த வெற்றிலை செடியினை பறிக்க துவங்கினான்.
காலையில் எழுந்து வந்த பெரியசாமி இவன் வரவை பார்த்து, “ஏனுங் தம்பி அதுக்கு ஆள் வருவங்கள்ல? நீங்க செத்த ஓய்வெடுங்க”
“ஓய்வெடுத்து ஓய்வெடுத்து முதுகெல்லாம் வலி வந்தது தான் அண்ணே மிச்சம். கணக்கு பிள்ளை வந்ததும் என்ன வந்து பாக்க சொல்றிங்களா?” என்றவன் வெற்றிலை கொடியில் பறிக்க வேண்டிய இளம் இலைகளை பறித்து ஒரு கூடையில் பத்திரப்படுத்தி வைத்தான்.
“சரிங்க தம்பி சொல்லிடறேன், நான் மாட்டுக்கு தண்ணி காட்டிட்டு வர்றேன்” சென்றவரை நிறுத்தினான்.
“நான் பசங்கள குளம் வர கூட்டிட்டு போறேன் ண்ணே, நீங்க இருங்க” என்றவன் காளைகளை கட்டியிருக்கும் தொழுவத்திற்கு செல்ல அங்கு காளையனோ தரையில் கிடந்த மணலை தன்னுடைய கொம்பினால் குத்தி கிழித்துக்கொண்டிருக்க, புலி வேந்தன் காளையனோடு சண்டை இழுத்துக்கொண்டிருந்தான்.
“டேய் வேந்தா…” விட்டால் சண்டையிட துவங்கிவிடுவான் என்ற பயத்தில் தேவா ஓங்கி குரலை உயர்த்தி எச்சரிக்கை செய்ய, அவன் குரல் கேட்டதும் சிறியவன் சட்டென சண்டையை நிறுத்தி தேவாவை பார்த்தான்.
இரண்டு நாட்களாக பார்க்காது போக தேவாவை பார்த்ததும் கட்டியிருந்த கயிற்றிலிருந்து விடுபட போராடிக்கொண்டிருந்த வேந்தனை பார்த்து சிரித்துக்கொண்டான் தேவா.
அருகில் சென்று அவன் அதன் முகத்தை தடவ தலையை உயர்த்தி தேவாவின் முகத்தில் முத்தம் வைத்தது தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது.
“இப்போ சேட்டை மறுபடி வர ஆரம்பிச்சிடுச்சா?” என்றவன் வேந்தனின் காயங்களை ஆராய நன்றாக ஆறி காயத்தின் வடு மட்டும் தெரிந்தது.
“சரியாகிடுச்சு டா தம்பி, வெளிய போகலாமா?”
வேந்தனை விடாது கொஞ்சிக்கொண்டிருந்த தேவாவிடம் தன்னுடைய இருப்பை காட்ட கொம்பினால் மண்ணை வெட்டி தேவாவின் பக்கம் வீச சில மண் துகள்கள் அவன் மேல் பட வெற்றியோடு கடைக்கண்ணால் திமிராக பார்த்தான் காளையன்.
“உன்கிட்ட வந்தா முகத்தை தான் நீ தொட விட்ருவியா?” பேசிக்கொண்டே காளையன் பக்கம் செல்ல வீறாப்பாக கம்பீரமாக நின்றவனை யோசனையே இல்லாமல் முகத்தை வருடினான் தேவா.
எந்த எதிர்ப்பும் சொல்லாமல் அப்படியே நின்றவனிடம் ஆச்சிரியமாக, “என்னடா காளையா எதுவும் செய்ய மாட்டிக்கிற?” என்றான்.
காளையன் முதல் முதலில் தேவாவின் கைகளுக்கு வரும் பொழுதே சிலுப்பிக்கொண்டு நின்றானெனில், புலி வேந்தனோ தேவாவின் கை பட்டாலே சாதுவாகி அவனை முத்தம் வைத்து கொஞ்சிவிடுவான்.
இருவரும் இரு துருவங்களாய் இருக்க, தேவாவை தவிர அவர்களை அடக்கும் வழி யாவருக்கும் புதிரே. காளைகளை குளத்திற்கு அழைத்து செல்வதாக கூறி நண்பர்களுக்கு தகவல் கூறி குளத்திற்கு வர பணித்தான்.
காளைகளை பிடித்து குளத்திற்கு சென்ற பொழுது அதே நேரம் மயிலப்பன், அய்யனாரின் காளையை அழைத்து குளத்தின் கரையில் கட்டிக்கொண்டு நிற்க, அவனுக்கு துணையாக மூன்று பேர் இருந்தனர்.
இவனை பார்த்ததும் மயிலப்பன் கண்ணை காட்ட உடன் இருந்த ஒருவன், “என்ன தேவா தம்பி தோரணையா வந்து மிரட்டுவன்னு பாத்தா சாதுவா வர்ற?” இளக்காரமாக கூறி சிரிக்க அவர்களை பார்த்த தேவா எந்த பாவனையும் காட்டவில்லை.
பேச்சை வளர்க்க தொடுக்கப்பட்ட கணை என புரிந்தவன், “எனக்கென்ன? ஒரு பக்கம் புலி இன்னொரு பக்கம் சிங்கத்தோட வர்றேனே இதுக்கு மேல தோரணை வேணும்னா ஜல்லிக்கட்டுல ஜெயிச்சு மாலையோட வந்து நிக்கிறேன் போட்டோ புடிச்சுக்கோ” அவன் பதிலில் வாயடைத்து போய் மயிலப்பனின் ஆள் நிற்க அதோடு ஓயவில்லை அந்த கூட்டம்.
“இம்புட்டு நம்பிக்கை ஆகாது தேவா உனக்கு” சிரித்தவன், “எங்க காளையை பாத்தியா நாலு பேரு சேந்து ஒட்டுக்கா புடிச்சும் புடிக்க முடியல, இதுல வெறும் ஒத்த கையாள புடிச்சிட்டு வர்ற உன் மாடு ஜெய்க்கும்ன்னு இம்புட்டு வீம்பா பேசுற உன்னோட தாட்டியம் தான் எனக்கு பாவமா இருக்கு”
ஒப்பிற்கு பாவப்பட்டவனை பார்த்து காளைகளோடு தேவா நெருங்கி வர தன்னை உக்கிரமாக பார்த்து நின்ற காளையின் கம்பீரத்தில் கால்கள் பின்னுக்கு நகர்ந்தது. புலி வேந்தனின் கயிற்றை தூக்கி தரையில் போட்டு,
“இந்த கயித்த புடிச்சு அந்த கரை வர அவனை கூட்டிட்டு போய் காட்டு, அப்போ தெரியும் என் தாட்டியம்” சவால் விட்டு தெனாவெட்டாக நின்ற தேவாவிடம் தோற்க விரும்பவில்லை.
காளையை அவன் பார்க்க, தன்னை நெருங்கி வந்தவனின் செயல் புடிக்காமல் கால்களை நிலத்தில் வைத்து தேய்த்து தலையை மணலில் விட்டு புலி வேந்தன் குத்த முன்னேறியவனின் கால்கள் தன்னை போல் பயத்தில் பின்னால் சென்றது.
தன்னுடைய மீசையை முறுக்கி பல் வரிசை தெரிய சிரித்த தேவா, “இந்த தேவாவோட வளர்ப்பு என்னைக்கும் சோடையே போகாது டா”
எண்ணிலடங்கா கர்வத்தோடு நெஞ்சை நிமிர்த்தி நின்ற தேவாவின் ஆங்காரத்தை அடித்து உடைக்கும் ஆத்திரம் தீயாய் மயிலைபன்னின் மனதில் வேரூன்றியது.
“ஏழு கடலை தான்டி, ஏழு மலையை தான்டி வருவான் பூச்சாண்டி மலையை உடைப்பான்டி… மனச புடிப்பான்டி சபதம் முடிபான்டி” அய்யனாரின் ஆட்களை கிண்டல் செய்யவே பாட்டு பாடி உல்லாசமாக அவன் காளையனை பிடித்து முன்னே நடக்க, பின்னாலே சென்றான் புலி வேந்தனும்.
“என்ன அசிங்கப்படுத்தன்னே வருவீங்களா டா? வந்த சோழிய மட்டும் பாருங்க” மயிலப்பனின் வசவில் மாட்டை குளிப்பாட்டும் வேலையில் இறங்கினர்.
குளத்தினுள் காளைகளை இறக்கி அதற்க்கு நீச்சல் பயிற்சி அளித்து குளிப்பாட்டி வெளியில் அழைத்து வந்து நடைப்பயிற்சியும் மணலை வெட்டும் பயிற்சியும் இருவருக்கும் கொடுக்கவே காலை மணி ஒன்பதை தாண்டிவிட, மாடுகளுக்கு பசிக்கும் என ஈர உடையோடு தோப்பிற்கு அழைத்து செல்ல நடந்தவனுக்கு எதிரில் வந்தாள் அவன் உறவுக்கார பெண் ஒருத்தி.
சாம்பல் நிற பட்டு பாவாடையும், அரக்கு நிற தாவணியோடும் வந்தவள் கண்களில், உடல் எல்லாம் சொட்ட சொட்ட நனைந்து உடலோடு ஒட்டிநின்ற உள் பனியன் அவனது படிக்கட்டு தேகத்தை அழகாய் எடுத்துக்காட்ட, இரு பக்கமும் சிங்கமென காளைகள் என வந்தவன் பட்டென மனதில் ஒட்டிக்கொண்டான்.
“என்ன மச்சான் தலய துவட்டி விடவா?”
சிரிப்போடு தாவணி முந்தானையை தூக்கி அவனை நெருங்கி வந்தவள் காளைகளை பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.
தேவாவோ நிற்காமல், “பொண்டாட்டிய தவற வேற யார்கிட்டயும் தலை குனிய மாட்டான் இந்த தேவா… கட்டுகிறேன் சொல்லு மூணே மாசத்துல கல்யாணத்த வச்சு தலையை கொடுக்குறேன்”
உதட்டை சுளித்து அவனை தாண்டி சென்றவள், “நானும் பாக்குறேன் ஊர்ல இன்னும் எத்தனை பேர் கிட்ட தான் இதையே சொல்ல போறன்னு” முணுமுணுப்பதை கேட்டும் நிற்காமல் நடக்க, வெற்றியின் கைபேசிக்கு அழைப்பு வந்தது.
“ஏய் மாப்பிள்ளை குணா தா கூப்ட்டான், நம்ம கணக்கு புள்ளையோட மக குளத்துல விழுந்துடுச்சு ய்யா, என்ன பண்றதுன்னு தெரியாம அல்லாடிட்டு இருக்காம் கூட்டமே, வேகமாவா” வெற்றியின் தகவலில் வேகமாக காளைகளை தோட்டத்தில் வேலை பார்ப்பவரோடு விட்டு விட்டு குளத்திற்கு ஓடினான்.
“இல்ல மாப்பிள்ளை பயலுக உள்ள குதிச்சிருக்கானுங்க ஆனா இப்போ வர எதுவும் தகவல் இல்ல” கரைக்கு ஏற கூட்டமே கூடியிருந்தது. ஐந்தாறு ஆண்கள் ஏற்கனவே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
“இந்த பக்கம் இல்ல”
“நல்லா பாருங்க ய்யா, இங்கன தான் புள்ள போச்சு” தாமரை ஆங்காங்கு படர்ந்திருக்க அதனை பறிக்க சென்ற குழந்தை ஆழத்தை கவனிக்காமல் மூழ்கி போனது.
பல நிமிடங்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தும் தோல்வியே கிடைக்க என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்தது கிராமமே.
வேஷ்டியை மடித்து கட்டி அவ்விடத்தை நோக்கி தேவா செல்ல அங்கிருந்தவர்களை விசாரித்தான், “ண்ணே நல்லா ஆழமா போய் பாத்தியா?”