Skip to content
Post Views: 1,547
நாட்கள் அதன் போக்கில் சென்றது … அர்ஜுனன் முதலில் செய்ய நினைத்தது ஊர் திருவிழா … திருவிழா வர இன்னும் ஒரு மாதம் தான் இருந்தது …. எனவே முதலில் நல்லபடியாக திருவிழா நடக்க வேண்டும் என நினைத்து ஊர் பெரியவர்களிடம் பேசி அதை நடத்த அதற்கான ஏற்பாடை செய்ய ஆரம்பித்து இருந்தான் …
ஆரவ் ரித்திகா இருவரும் வேறு ஊர்களில் படிப்பதால் நிரவி அர்ஜுனனுடன் தான் சுத்தி கொண்டு இருந்தாள் … இரண்டு ஆண்டுகள் அவனுடன் இருக்காத ஏக்கத்தை தற்போது தீர்த்து கொண்டாள் .. ரித்திகா சனி ஞாயிறு ஊருக்கு வந்து விடுவாள் … அப்போது நிரவி குட்டி கொஞ்சம் சுணங்கினாலும் ரித்திகா அதிகம் சுபா வுடன் தான் இருந்தாள் … அதனால் அவளை அதிகம் கண்டுகொள்ளவில்லை …
நடுவில் அர்ஜுனன் நந்தினியுடன் பேச முயற்சி செய்தலும் நந்தினியே அவனிடம் பேச முடியாமல் குற்றவுணர்ச்சியில் அவனை தவிர்த்தாள் …. சுபாவிற்கு இன்னும் பயம் போகவில்லை … அர்ஜுனன் சொன்ன நேரத்தை விட வீட்டிற்கு வர தாமதம் ஆனால் மிகவும் பயந்து விடுகிறாள் …. அவனுக்கு நொடிக்கு ஒரு முறை அழைப்பு விடுத்து கொண்டே இருந்தாள் …
Advertisement
அர்ஜுனனுக்கு அவளின் பயம் புரிந்து தான் இருந்தது … எனவே அவளுக்கு புரிய வைக்க முயன்றான் … ஆனால் அவள் புரிந்துகொள்ளவே இல்லை .. அவன் தான் அவளுக்காக இறங்கி வர வேண்டியதாய் போயிற்று ..
அவளின் பயத்தை புரிந்த மற்றவர்களும் அர்ஜுனனுடன் யாரோ ஒருவர் இருந்து கொண்டே இருந்தனர் … முகுந்தன் சசி கர்ணன் மூவரும் மாறி மாறி இருந்து கொண்டே இருந்தனர் …. அப்போது தான் அவளுக்கு கொஞ்சம் குறைந்தது … அப்போதும் அர்ஜுனன் வீடு வரும் வரை வாசலையே பார்த்து கொண்டு இருப்பாள் …
கோவில் வேலையை பார்த்து கொண்டாலும் அவன் ஆசையாய் ஆரம்பித்த கம்பெனியை நீண்ட நாள் களைத்து சென்று பார்த்த நாள் அவனால் விவரிக்கவே முடியாது …. என்ன தான் விவசாயம் செய்ய அவனுக்கு பிடித்தம் இருந்தாலும் அந்த கம்பெனி அவனின் மிக பெரிய கனவு .. மிக பெரிய கப்பணி எல்லாம் இல்லை … கொஞ்சம் சிறிய சாப்ட்வேர் கம்பெனி தான் … ஆனால் அது அவனுக்கு மிகவும் பிடித்thu இருந்தது … அவனுக்கு பெரிய பெரிய கம்பெனி எல்லாம் கட்ட ஆசை இல்லை … சிறியதாக இருந்தாலும் நல்லபடியாக நடத்த வேண்டும் … அது தான் அவனின் கனவு … அதை நடைமுறையும் படுத்தி இருந்தான் …
Advertisement
அவன் திரும்பி வந்தது தெரிந்து அவனின் நண்பன் அப்துல் மற்றும் அப்துலின் மனைவி ஆஷாவும் அவனை தேடி அவனின் வீட்டிற்கே வந்துவிட்டனர் … சுபாவிற்கு அர்ஜுனன் தேவியின் காதல் தெரிவதற்கு முன்பே இருவரும் அர்ஜுனனை சந்திக்க விரும்பினாலும் அவளுக்கு தெரியாமல் தான் பார்த்துகொள்ளவர் … வீட்டிற்கு அழைத்து செல்ல மாட்டான் … எங்கு அவளுக்கு தெரிந்து விடுமோ என்று பயந்தே அவள் முன் இவர்களிடம் பேச மாட்டான் ….
Advertisement
அர்ஜுனன் தேவியின் காதல் தெரிந்த பின் அவர்களுடன் பேசுவதை கொஞ்சம் குறைத்து கொண்டான் என தான் கூற வேண்டும் … எங்கு மீண்டும் அதை பேசி அவளை கஷ்டப்டுடத்தி விடுவோமா என்று பயந்து குறைத்து கொண்டான் ….
ஆனால் அவன் ஒன்றை யோசிக்க மறந்து விட்டான் … அவள் பெற்றோர்கள் அவளுக்கு ஞாபக படுத்த மாட்டாரங்களா என … அவர்களை காண காண அவளுக்கு ஞாபகம் வருமே என்பதை மறந்து விட்டான் … அர்ஜுனனை காண விடாமல் சுபா தான் தடுக்கிறாள் என ஆஷா தவறாக புரிந்து கொண்டு இருந்தாள் … தேவியின் பெற்றோரிடம் அடிக்கடி அ வனை பற்றி கேட்டு தெரிந்து கொள்வார்கள் …
அப்படி தான் அவன் இல்லை என அவர்கள் கூறியதும் அவனை கடைசியாக கூட அவனை பார்க்கவில்லையே என மிகவும் கஷ்டப்பட்டனர் … ஆஷாவிற்கு உடன்பிறந்த அண்ணன் தம்பி என யாருமில்லை … பள்ளியில் கிடைத்த அவனை ஒரு ரத்த உறவாக தான் பார்த்தாள் … ஆனால் அவனும் இல்லை என அறிந்து மிகவும் கவலையில் ஆழ்ந்தாள் …
Advertisement
அப்போதும் சுபா மீது தான் கோவப்பட்டாள் … அதை தேவியின் பெற்றோரிடம் கூறவும் செய்தாள் … அதன் பின் அவர்கள் மூலம் சுபா பட்ட கஷ்டத்தை கேட்டவள் தான் தேவை இல்லாமல் அவள் மீது கோவப்பட்டு உள்ளோம் என வருத்தமும் பட்டாள் … அவள் சீக்கிரம் கிடைக்க வேண்டும் என அல்லாவிடம் வேண்டியும் கொண்டாள் …
ஆனால் சுபாவிற்கு அப்துல் ஆஷாவை பற்றி ஒன்றும் தெரியாது … தற்போது அர்ஜுனன் உயிருடன் உள்ளான் என தேவியின் பெற்றோர் கூறியவுடன் உடனே அவனை பார்க்க அய்யனார்புரம் வந்து விட்டனர் …
அர்ஜுனன் அப்போது தான் கோவில் விஷயமாக வெளியே செல்ல தயாராகி இருந்தான் … அவன் எழுந்து செல்லும் போது தான் உள்ளே நுழைந்த னர் ஆஷாவும் அப்துலும் … அர்ஜுனனை பார்த்து உணர்ச்சி வயப்பட்ட ஆஷா “அண்ணா” என்று அழுது கொண்டே வந்தவள் அவனை அணைத்து கொண்டாள் … முதலில் அர்ஜுனனுக்கு ஒன்றும் புரியவில்லை … அதன் பின் அப்துலை அடையாளம் கண்டு கொண்டு தன்னை அணைத்து இருக்கும் பெண் ஆஷா என கண்டுகொண்டான் … அதன் பின் தான் அழுது கொண்டு இருந்தவளை தானும் அணைத்து தட்டி கொடுத்தான் ..
சத்தம் கேட்டு வந்த சுபா தன் கணவனை அணைத்து கொண்டு இருக்கும் பெண்ணை பார்த்து குழம்பினாள் ….அர்ஜுனன் தன்னையே பார்த்து கொண்டு இருந்த அப்துலை பார்த்து வா என்று கை அசைக்க அவனும் பாய்ந்து வந்து அணைத்து கொண்டான் …. இருவரும் அவனை அணைத்து கொண்டு அழுது விட்டனர் …. இருவரையும் சமாதானம் செய்ய நீண்ட நேரம் ஆனது … அதன் பின் தான் தன்னையே குழப்பத்துடன் பார்த்து கொண்டு நிற்கும் தன் அம்முவை பார்த்தான் …
இருவரையும் தன்னிடம் இருந்து பிரித்து அப்துலை காட்டி தன் நண்பன் என கூறி அறிமுகம் செய்தான் … அதன் பின் ஆஷாவை காட்டி தன் தங்கை என அறிமுகம் செய்தான் … சுபா எந்த கேள்வியும் கேட்கவில்லை … அவர்களை அன்புடன் வரவேற்றாள் … ஏற்கனவே முகுந்தனுடன் சேர்த்து மூன்று அண்ணன்களை கொண்டவள் எளிதாக அப்துலை யும் அண்ணன் என்று அழைத்து பழகி விட்டாள் … அதே போல் ஆஷாவையும் அண்ணி என அழைத்தாள் … இப்படி அன்பாக பேசுபவளையா தாம் தவறாக நினைத்தோம் என தன்னையே திட்டி கொண்டாள் …
அதன் பின் தான் தேவி போல் மச்சம் கொண்டு இருக்கும் நிரவியை பார்த்து கண் கலங்கி விட்டனர் … அவளை மடியில் அமர்ந்து பேச ஆரம்பித்தவர்கள் அவளை கீழேயே இறக்கவில்லை … மாலை வரை இருந்து விட்டு அப்துல் ஆஷா இருவரும் கிளம்புகிறோம் என கூற அவர்களை இரண்டு நாள் இருந்து விட்டு தான் செல்ல வேண்டும் என கூறி விட்டான் அர்ஜுனன் … அவர்களும் சரி என கூறி விட்டனர் ….
அப்துல் ஆஷா இருவருக்கும் ஒரு மகன் உள்ளான் … அவனின் பெயர் ரியாஸ் … அவனுக்கு பதினான்கு வயது … அவனுக்கு நிரவியை பார்த்ததும் பிடித்து விட்டது … அவனுடனே விளையாடி கொண்டு இருந்தான் … நீண்ட நாள் கழித்து சிவனேஸும் அன்று தான் அர்ஜுனன் வீட்டிற்கு வந்தான் … எப்போதும் அவனுடனே இருந்தவள் தன்னை கண்டுகொள்ளாமல் ரியாஸுடன் விளையாடும் நிரவியை தான் பார்த்து கொண்டு இருந்தான் … அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது … ஆனால் நிரவி குட்டி அவன் வந்ததையே கவனிக்காமல் ரியாஸுடன் விளையாடி கொண்டு இருந்தாள் ..
என்ன வென்று தெரியவில்லை ரியாஸ் காரணமே இல்லாமல் ரித்திகாவை முறைத்து கொண்டே இருந்தான் ….இரண்டு நாள் அங்கு இருந்துவிட்டு மனதே இல்லாமல் விடைபெற்றனர் அப்துல் குடும்பத்தினர் …
ஊரே அந்த ஒரு நாளுக்காக தான் காத்து கொண்டு இருந்தது …. அந்த நாளும் நல்லபடியாக விடிந்தது … அர்ஜுனனுக்கான முதல் மரியாதை யை மீண்டும் கொடுத்து அவனை கவுரவித்து இருந்தனர் … மக்கள் மகிழ்வுடன் அய்யனாருக்கு பூஜைக்கு கொடுத்து வணங்கினர் …. மக்கள் கூட்டம் இருந்து கொண்டே தான் இருந்தது …
அனைவரையும் ரா பூசைக்கு (இரவு பூசை க்கு ) வர கூறியவன் கொஞ்சம் ஓய்வு எடுக்க வீட்டிற்கு சென்றான் … சிறிது நேரம் ஓய்வு எடுத்தவன் இரவு ஆறு மணிக்கு கோவிலுக்கு சென்று விட்டான் … ஆண்கள் அனைவரும் அவனுடனே சென்று விட்டனர் … பெண்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு ஒன்பது மணி மேல் தான் கோவிலுக்கு சென்றனர் ..
அய்யனாரை வணங்கி விட்டு அனைவரும் ஒரு இடத்தில நிற்க அர்ஜுனனுக்கு அருவாளை குடுத்து உடுக்கை அடிக்க ஆரம்பித்தனர் … ஒரு ஐந்து நிமிடம் உடுக்கை சத்தம் தவிர்த்து வேர் எந்த சத்தமும் கேட்கவில்லை …
ஐந்து நிமிடம் கழித்து அர்ஜுனன் ஏய் என சத்தமிட்டு சாமி ஆட ஆரம்பித்தான் … ஊர் மக்கள் அனைவரும் கன்னத்தில் போட்டு கொண்டு அர்ஜுனனை தான் பார்த்து கொண்டு இருந்தனர் …. இரண்டு வருடம் யார் மீதும் வந்து இறங்காத அய்யனார் இன்று மீண்டும் அர்ஜுனன் மீது வந்து இறங்கி ஆட மக்கள் அனைவரும் சந்தோஷமடைந்தனர் ….
ஊர் மக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்கு கூறிய அய்யனார் முன்பு சுபா போய் நின்றாள் … “அது தான் உன் புருஷன் திரும்ப வந்துட்டானே இனிமே உனக்கு என்ன பயம் … அவனை இனிமே நான் பாத்துப்பேன் அவன் என் பிள்ளை .. அவனுக்கு அப்போ அப்போ கஷ்டத்தை கொடுத்தாலும் அவனை நான் பாத்துப்பேன் .. கவலைப்படாத … தப்பு செய்யுறவங்க திரும்பி திருந்துறது எல்லாம் அதிகம் நடக்காது … உன் வீடு பொண்ணு திருந்தி இருக்கா … மன்னிச்சு ஏத்துக்கோ .. நீ மன்னிக்காம உன் அண்ணன் நிம்மதி அடைய மாட்டான் … உன்னால மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சிக்கோ … இப்போ ரெண்டு புள்ளைங்களோட சேர்த்து மூனு பிள்ளை … எந்த பாகுபாடும் காட்டாம இருங்க … நல்லா இருப்பிங்க …” என்று கொஞ்சம் சாந்தமாகவே கூறினார் …
பிள்ளைகள் மூவருக்கும் விபூதி பூசி விட்டவர் நிரவியை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவர் அதன் பின் சசி கர்ணன் இருவரையும் அழைத்தார் … “உங்க அண்ணனுக்காக வனவாசம் இருந்தது போது ம் அவன் கூட இருந்தா தான் உங்க குடும்பம் முழுமை அடையும் .. எப்போதும் குடும்பமா சந்தோசமா இருங்க ….” என்று கூறி அவர்கள் இருவர் குடும்பத்துக்கு விபூதி பூசியவர் வாணன் முன்பு நின்றார் …
“இனிமே கவலை இல்லாம நிம்மதியா இரு …” கொஞ்சம் தள்ளி நின்ற நந்தினியை சத்தமாக அழைத்தார் … அவளும் கண் கலங்கி அவர் முன்பு நிற்க “உன் கெட்ட காலம் எல்லாம் போயிடிச்சு … ஆனா நீ செஞ்ச கர்ம வினை இருக்கு .. அதுக்கான தண்டனையை அனுபவிப்ப …. உன் கூட நான் இருக்கேன் … தைரியமா இரு …” என்று கூறி விட்டு வர்ணன் ஜனனிக்கும் நல்லபடியாக கூறிவிட்டு ஜனனியின் அம்மாவிற்கும் “மகளோட எப்பவும் சந்தோசமா இருப்பிங்க ” என்று கூறியவர் முகுந்தன் முன்பு வந்து நின்று சத்தமா க சிரித்தார் …
“என்ன குடும்பத்தோட மொத்த பாரத்தையும் சுமந்துட்ட … இதுக்கு மேல எது வந்தாலும் தாங்குவ … உனக்கு இருந்த கஷ்டகாலம் போயிடிச்சு …. . எப்பயும் நீ நல்லா இருப்ப … இது நான் குடுக்குற வாக்கு உனக்கு ” என கூறி அவனுக்கு விபூதி பூசி விட்டவர் அவனின் குடும்பத்தினர் அனைவர்க்கும் பூசி விட்டார் …
மாரியப்பன் செண்பகம் அம்மாவிற்கு பூசி விடும் போது “வீட்டுக்கு மூத்தவங்களா இருந்து எல்லாத்தையும் நல்லபடியா செய்ங்க …” என்று கூறினார் …
மருதாயி பாட்டிக்கு பூசி விடும் போது “என்ன இப்போவே என் கிட்ட வர ஆசையா … அதுக்கு இன்னும் நாள் இருக்கு… உன் குடும்பத்துல அடுத்த தலைமுறையும் பார்த்துட்டு தான் நீ என்கிட்ட வருவ …” என்று கூறி தேவியின் பெற்றோர் முன்பு நின்று “நல்லா இருங்க ” என்று மட்டும் கூறி பாலாவின் முன்பு நின்றார் அவர் அமைதியாக நிற்க “எப்போதும் அமைதி மட்டும் உதவாது …” என்று கூறி விட்டு தேவியின் பெற்றோரை அழைத்து “நல்ல மனசுக்கு எப்பவும் சந்தோசமா இருப்பிங்க…” என்று கூறினார்….
மீண்டும் நிரவியை தன் அருகில் அழைத்தவர் பூசாரியிடம் அய்யனார் சிலை கால் அடியில் இருக்கும் கயிற்றை எடுத்து வர கூறி அவள் கையில் கட்டி விட்டு அவளுக்கு மீண்டும் ஒருமுறை அவளுக்கு விபூதி பூசியவர் மயங்கி சரிந்தார் …
முகுந்தனும் வர்ணனும் அவனை தாங்கி அங்கு இருந்த மண்டபத்தில் அமர வைத்தனர் …. சுபா சாமி கூறியதை தான் யோசித்து கொண்டு இருந்தாள் … அது மட்டுமில்லாமல் இரண்டாவது முறை நிரவிக்கு விபூதி பூசி கயிறு கட்டி விட்டது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது ….
அர்ஜுனன் மயக்கத்தில் இருந்து எழுந்ததும் அனைவரும் வீட்டிற்கு சென்று உறங்க அய்யனார் இளைய தலைமுறையின் வாழ்க்கையில் திருவிளையாடலை ஆரம்பித்து இருந்தார் …..
error: Content is protected !!