அர்ஜுன் உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டதும்தான், மீரா தான் அவசரப்பட்டுச் சொல்லிவிட்டோமோ, அவனின் அண்ணனின் நிச்சயத்திற்குச் சென்று இருக்கும் போது… இதைப் பற்றி விரிவாகப் பேச வேண்டாம் என்று நினைத்தவள், “ஏன் நீங்க சொல்லலைனா தெரியாதா?” அவள் விளையாட்டு போலவே பேச… அர்ஜுனுக்குச் சூர்யா சொல்லி இருப்பான் என்று தோன்றவில்லை…. இந்த ஆரு தான் உளறி இருப்பாள் என்று நினைத்தான். “ம்ம்…நான் இன்னும் முடிவு பண்ணலை மீரா.. போகலாமா, வேண்டாமான்னு… அதனால் தான் சொல்லலை.” “இதுல யோசிக்க என்ன இருக்கு அர்ஜுன், இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்குமா…. என்னைப் பார்க்காம இருந்திருந்தா போயிருப்பீங்க தான?” “என்ன சொல்ற மீரா? புரியற மாதிரி சொல்லு.” “இல்லை… என்னை ஒருவேளை லவ் பண்ணலைனா போயிருப்பீங்க தான, என்னால தான போக யோசிக்றீங்க.” “அப்படியெல்லாம் இல்லை, நீயா எதாவது கற்பனை பண்ணாத.” “பொய் சொல்லாதீங்க அர்ஜுன். எனக்குத் தெரியும், நீங்களே விருப்பபட்டு எல்லாம் பண்ணிட்டு இப்ப யோசிச்சா என்ன அர்த்தம்? என்னால தான. நானே உங்க முன்னேறத்துக்குத் தடையா இருக்கனே.” மீரா புலம்ப… அர்ஜுன் விஷயம் சீரியஸ் ஆவதை உணர்ந்தவன், யாரும் இல்லாத இடமாகச் சென்று நின்று, “மீரா… இப்ப எதுக்குடி இப்படிப் பேசுற? நீ இல்ல காரணம் போதுமா…” என்றான். “இல்லை… நான் தான் காரணம். நீங்க ஆஸ்திரேலியா போயிட்டா நான் தனியா இருப்பேன்னு உங்களுக்குக் கவலை. அதனால தான் போக யோசிக்றீங்க. உங்களுக்கு என் மேல பரிதாபம் தான் அர்ஜுன் இருக்கு. உங்ககிட்ட நான் காதலை தான் எதிர் பார்கிறேன், பரிதாபத்தை இல்லை.” மீரா மூச்சு விடாமல் தன் ஆதங்கத்தைக் கொட்ட…. அதைக் கேட்ட அர்ஜுன் கண்கள் சிவக்க பல்லை கடித்துக் கொண்டு நின்றிருந்தான். அர்ஜுன் “எல்லாம் பேசிட்டியா இல்ல இன்னும் எதாவது பாக்கி இருக்கா… எனக்கு உன் மேல பரிதாபமா… ஏன் மீரா? அது காதலா இருக்க முடியாதா. எனக்கு உன்னை விட்டுட்டு போக இஷ்டம் இல்லைதான். ஆனா அது உன் மேல இருக்கிற பரிதாபத்தில இல்லை, காதல்னால தான்.” “எனக்கு உன் கூடவே இருக்கணும், உன்னைப் பார்க்கணும், பேசணும், அப்புறம் அடிக்கடி உன்னைக் கட்டிக்கணும், முத்தம் குடுக்கணும். இதெல்லாம் நான் ஆஸ்திரேலியா போனா பண்ண முடியுமாடி? லூசு… வைடி போன்னை நாளைக்கு இருக்கு உனக்கு.” என்றவன் போன்னை வைத்துவிட்டுக் கோபத்தை அடக்க முயன்று கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த சஞ்சனா “சாப்பிட வாங்க… எல்லோரும் சாப்பிட போய்டாங்க.” என்று சொல்ல… அர்ஜுன் எதுவும் பதில் சொல்லாமல் உள்ளே செல்ல… சஞ்சனாவும் அவனுடன் உள்ளே சென்றாள். அவர்கள் இருவரும் சேர்ந்து உள்ளே வருவதைப் பார்த்த சஞ்சனாவின் தோழிகள், அவளையும், அர்ஜுனையும் சேர்த்து வைத்து கிண்டல் செய்ய… சஞ்சனா கனவு லோகத்தில் மிதந்து கொண்டு இருந்தாள். இதெல்லாம் தெரியாத அர்ஜுன், ஆருவின் அருகே அமர்ந்து பெயருக்கு சாப்பிட்டு விட்டு எழுந்தான்.
அவனுக்கு எப்போதுடா மீராவை பார்ப்போம் என்று இருந்தது. எல்லோரும் சாப்பிட்டு முடித்துப் பெண் வீட்டாரிடம் விடைபெற்று சென்னையை நோக்கி கிளம்பினர். மறு நாள் காலையில் அர்ஜுனும், மீராவும் கல்லூரியில் சந்தித்துக் கொண்ட போது… இருவரும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர். அர்ஜுன் மீராவுடன் பொறுமையாகப் பேச வேண்டும் என்று நினைத்தான். அதனால் “சாயங்காலம் பார்க்கலாம் மீரா.” என்று சொல்லிவிட்டு தன் வகுப்பிற்குச் சென்றான். மாலையில் கல்லூரி முடிந்து வந்த மீராவை பார்த்த அர்ஜுன், “இங்க பேச வேண்டாம், வெளிய எங்காவது போகலாம்.” என்றவன், அவளின் காரின் அருகே செல்ல…. “உங்க வண்டி” மீரா கேட்க… “நான் இன்னைக்கு என் பைக்ல வரலை… சூர்யாவோட வந்தேன்.” என்றான். “நீங்க ஓட்டுங்க அர்ஜுன்.” மீரா காரின் சாவியை அர்ஜுனிடம் கொடுக்க… சரி என்று அவன் காரை எடுக்க…. மீரா அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். அர்ஜுன் காரை கொண்டு போய் ஒரு பெரிய ஷாப்பிங் மாலின் கார் பார்கிங்கில் சென்று நிறுத்தியவன், ஜன்னலை திறந்துவிட்டு, சீட்டை நன்றாகச் சாய்த்து அதில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, “ம்ம்.. நேத்து எதோ சொன்னியே இப்ப சொல்லு.” என்று கேட்க…. பாருடா, எதோ சினிமா காட்றா மாதிரி உட்கார்ந்திட்டு கேட்கிறதை என்று நினைத்த மீரா, அர்ஜுனின் தோளில் சென்று சாய… அவளை நிமிர்த்தி நேராக உட்கார வைத்தவன், “நேத்து நீ என்ன சொன்ன? எனக்கு உன் மேல பரிதாபம்னு எதோ சொன்னியே… அதை முதல்ல சொல்லு. மத்தது அப்புறம் பார்க்கலாம்.” என்றான் குரலில் அழுத்தத்துடன். மீராவின் முகம் வாட அர்ஜுன் அதைக் கண்டும் காணாமல் இருந்தான். “இதுக்கு முன்னாடி நீங்க ஆஸ்திரேலியா போக ரெடியா தான இருந்தீங்க, இப்ப ஏன் போக இஷ்டம் இல்லை? நான் தனியா இருப்பேன்னு தான…” அர்ஜுன் பதில் சொல்லாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தான். மீரா அர்ஜுனின் முகத்தைத் தன் பக்கம் திருப்பியவள், “அர்ஜுன்… நீங்க உங்க அம்மாவோட ரொம்ப க்ளோஸ் இல்லையா… அவங்களை விட்டு ஆஸ்திரேலியா போக முடிஞ்ச உங்களால… ஏன் என்னை விட்டு போக முடியலை? நான் தனியா இருப்பேன்னு தான… அது பேர் பரிதாபம் இல்லாம வேற என்ன?” என்றாள். அர்ஜுன் மீராவின் முகத்தையே பார்த்தவன், “திரும்பத் திரும்பப் பரிதாபம்னு சொன்ன அறைஞ்சிடுவேன் மீரா… ஆமாம் நீ தனியா இருப்பேன்னு நினைச்சது உண்மை தான். அது பேர் பரிதாபம்னு நீ சொல்றது தான் எனக்குக் கஷ்டமா இருக்கு…” “அர்ஜுன், உண்மையான காதல் தான் காதலிக்கறவங்களை உயர்த்த தான் பார்க்கும். என்னால நீங்க உங்களுக்கு வர்ற நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணா… அது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். நாளைக்கு இது உங்க வீட்ல தெரியும் போது…. அவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? அவங்களுக்கு என் மேல நல்ல எண்ணம் வருமா?”
“அர்ஜுன் உங்க முன்னேற்றத்துக்கு நான் தடையா முடியாது. இதுக்கு மேலயும் நீங்க போகலைனன்னா… எனக்கு உங்களை விட்டு விலகிறது தவற வேற வழி இல்லை.” மீரா கண் கலங்கி குரல் அடைக்கப் பேச… அர்ஜுன் அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துவிட்டான். “நீ என்ன மீரா சொல்ற?” என்றவன், அவளை இழுத்து அனைத்துக் கொண்டு, “எதாவது லூசு மாதிரி பேசாத… நான் ஆஸ்திரேலியா போறேன் போதுமா… இனிமே இப்படிப் பேசாத.” என்றவனின் கண்களும் கலங்க…. சிறிது நேரத்தில் தன்னை மீட்டுக்கொண்டவன், “மீரா, நம்ம கல்யாணம் ஒன்னும் ஈஸியா நடந்திடாது, பிரச்சனை வரும். நாம அதைச் சேர்ந்து சந்திக்கலாம். ஆனா எப்பவும் என்னை விட்டு பிரிய மட்டும் நீ நினைக்கக் கூடாது… எனக்கு நீ மட்டும் தான் மீரா மனைவியா வர முடியும். நாளைக்கு நம்ம கல்யாணத்துக்கு எதிர்ப்பு வருதுன்னு, அப்பவும் நீ இந்த மாதிரி என்னை விட்டு விலக நினைச்சா…. ஒன்னு மட்டும் நியாபகம் வச்சிக்கோ, நான் கடைசி வரை உன்னை நினைச்சிட்டுத் தனியா தான் இருப்பேனே தவிர, வேற யாரையும் கல்யணம் பண்ணிக்க மாட்டேன்.” என்றான் உறுதியாக. “எனக்குத் தெரியும் அர்ஜுன்.” என்ற மீரா அவனை இன்னும் இறுக்கமாகக் கட்டி கொள்ள… சிறிது நேரம் அப்படியே இருவரும் இருந்தனர். அர்ஜுன் போகலாமா என்று கேட்க…. மீரா “வேண்டாம் அர்ஜுன், எனக்கு இந்த மாதிரி மூட்ல வீட்டுக்கு போக இஷ்டம் இல்லை.” என்றாள். அர்ஜுன் அவளை அழைத்துக் கொண்டு மாலின் உள்ளே சென்றான். இருவரும் அங்கே சேர்ந்து சிறிது நேரம் சுற்ற… இருவரின் மனமும் இயல்புக்கு திரும்பியது. இருவரும் சென்று அங்கிருந்த புட் கோர்ட்டில் உணவு அருந்திவிட்டு வீட்டுக்கு கிளம்பினர். அர்ஜுன் மீராவை காரை எடுக்கச் சொன்னவன், தான் வழியில் இறங்கி கொள்வதாகச் சொல்ல… மீரா AC போட்டுவிட்டு காரை ஸ்டார்ட் பண்ண… அர்ஜுன், “இருந்தாலும், நீ அப்படிப் பேசி இருக்கக் கூடாது மீரா… எனக்கு மனசு கஷ்டமா இருக்கு.” என்றான். மீரா காரை நிறுத்திவிட்டு அவன் முகம் பார்த்தவள், “சாரி அர்ஜுன், அதை மறந்திடுங்க நான் தெரியாம சொல்லிட்டேன்.” என்றவள், அவன் முகம் வாடி இருப்பதைப் பார்த்து… அவன் முகத்தை அருகில் இழுத்து, “என்னோட பர்த்டேக்கு நான் தர வேண்டிய ரிடர்ன் கிப்ட் இப்பவே தரட்டுமா…” என்று கிசு கிசுப்பாகக் கேட்க… அர்ஜுனின் முகமும் மாறியது. “அவன் உன் இஷ்டம்” என்றான். மீரா வெளியே சுற்றி பார்க்க…. அங்கே யாரும் இல்லை. அவர்களுக்கு எதிரையும் சுவர் தான் இருந்தது. மீரா அர்ஜுனின் நெற்றியில் தன் முதல் முத்தத்தைக் கொடுத்தவள், அடுத்து முத்தத்தை அவன் கன்னத்தில் பதித்தாள். அடுத்து அவன் இதழை பார்த்தவள் தயங்கி பின் வாங்க… அவள் எண்ணத்தைப் புரிந்த அர்ஜுன், சட்டென்று அவளை அனைத்து அவள் இதழோடு இதழ் பதிக்க… இருவரும் சிறிது நேரத்திற்கு இந்த உலகத்தில் இல்லை…. (சரி நாம அவங்களை வேடிக்கை பார்க்காமல் வெளியே பார்ப்போம்.) சிறிது நேரம் சென்று இருவரும் பிரிய…. மீரா போகலாமா என்று கேட்க… அர்ஜுன் இன்னும் ஒரு தடவை… ஒரு தடவை என்று வெற்றிகரமாக மூன்று சுற்றுக்களை முடித்த பின்புதான் மீராவை காரை எடுக்க விட்டான். இப்போது இருவர் முகமும் புன்னகையில் மிளிர, இருவரும் ஒருவரை ஒருவர் ஓரக்கண்ணால் பார்ப்பதும், ரகசியமாகச் சிரிப்பதுமாக இருந்தனர். அர்ஜுன் வழியில் இறங்கிக்கொள்ள… மீரா அவள் வீட்டுக்கு சென்றாள். அதன் பிறகு அர்ஜுன் முழுமூச்சாகத் தான் ஆஸ்திரேலியா கிளம்பும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். அவனுக்கு இப்போது இன்டர்ன்ஷிப் நடப்பதால் அவன் தினமும் கல்லூரிக்கு வருவதில்லை. அதனால் மீராவை வார இறுதியில் தான் பார்க்க முடிந்தது. ஒருபக்கம் அர்ஜுனின் வீட்டில் ஆதியின் கல்யாண வேலை வேகமாக நடந்தது. திருமணம் திருச்சியில் தான். வரவேற்பு இங்கே சென்னையில் ஒரு பெரிய மண்டபத்தில் நடத்த ஏற்பாடு நடந்து கொண்டு இருந்தது. (இப்ப முதல் பகுதி நியாபகத்துக்குக் கொண்டு வாங்க) அர்ஜுன் மீரா கடத்தப்பட்டதை அறிந்து ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தவனின் விமானம் சிங்கப்பூரை அடைய… அர்ஜுனும் தன் கடந்த காலத்தில் இருந்து நிகழ காலத்திற்கு வந்தான். விமானம் நின்றதும் முதல் ஆளாக வெளியே வந்தவன், வேகமாகச் சூர்யாவை அழைத்து மீராவை பற்றி விவரம் கேட்க… “அவங்க ஆள் ஜெயில்ல இருக்கானாம். அவனை வெளிய விட வைக்கத் தான் கடத்தி இருக்காங்க. மீராவோட அப்பா பெரிய ஆளுங்க மூலமா முயற்சி பண்ணிட்டு தான் இருக்கார். அநேகமா நீ இந்தியா வந்து சேரும் போது மீராவும் வந்திடுவான்னு நினைக்கிறன்.” என்று அர்ஜுனின் நெஞ்சில் சூர்யா பால் வார்க்க… அர்ஜுன் அதுவரை பயத்தில் அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியில் விட்டான். அர்ஜுன் சிறிது நேரம் சூர்யாவுடன் பேசிவிட்டுப் போன்னை வைக்க… அந்தப் பக்கம் சூர்யாவிடம் ஆரு, “அர்ஜுன் சிங்கப்பூர் வந்துட்டானா…” என்று கேட்க… “ஆமாம் நீ தூங்கு… இன்னும் கொஞ்ச நேரத்தில பெங்களூர் போய்டுவோம்.” என்று சொல்லி அவளைத் தன் மடியில் போட்டு தட்டி கொடுத்தான். அர்ஜுன் சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் அடுத்திருந்த பெங்களூர் விமானத்திற்காகக் காத்திருந்தவன், நியூஸ் சானல் பார்க்க… அதில் கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட செய்தி தான் ஓடிக்கொண்டு இருந்தது. அதில் மீராவின் பெயரை சொல்லிவிட்டு, அவள் புகைப்படத்தைக் காட்ட…. அர்ஜுனின் முகம் ஒளிர்ந்தது. அர்ஜுன் தன் செல்லை எடுத்து ஆதியை அழைத்தான். அர்ஜுனிடம் ஆறுதலாகப் பேசிய ஆதி “நீ கவலைப்படாத அர்ஜுன். மீரா பத்திரமா திரும்பி கிடைச்சிடுவா. நானும் பெங்களூர் வரேன்னு சொன்னேன், சூர்யா தான் வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டான்.” என்றவன், இரு அப்பா பேசணுமாம் என்று கணேசனிடம் போன்னை கொடுத்துவிட்டு சற்று தள்ளி நின்றிருந்த ரஞ்சனாவை பார்த்து முறைக்க… அவள் தலை குனிந்தாள். “அர்ஜுன், டென்ஷன் இல்லாம வா… இங்க மீரா அப்பா எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டு தான் இருக்கார்.” கணேசன் சொல்ல, “சரிப்பா… அம்மாவை கொஞ்சம் நியூஸ் சேனல் பார்க்க சொல்லுங்க.” என்று சொல்லிவிட்டு அர்ஜுன் போன்னை வைத்தான். கணேசன் அர்ஜுன் சொன்னதைச் சொல்லி நியூஸ் சேனல் வைக்க…. அதில் திரும்பத் திரும்ப மாணவர்கள் கடத்தப்பட்ட நியூஸ் தான் வந்து கொண்டிருந்தது. இதுல புதுசா பார்க்க என்ன இருக்கு என்று எல்லோரும் கவனமாக நியூஸ் கேட்க… மீராவின் புகைப்படம் வர… செய்தி வாசிக்கும் பெண், “திருமதி. மீரா அர்ஜுன். இவர் பரத நாட்டியம் கற்று தரும் ஆசிரியராக அந்தப் பள்ளியில் வேலை பார்கிறார்.” என்று சொல்ல…. எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அடுத்து பெங்களூர் செல்லும் விமானத்தில் ஏறிய அர்ஜுனின் நினைவு தன் கடந்த காலத்தில் விட்ட இடத்திற்குச் சென்றது.