“என்ன மீரா இந்த நேரத்தில?”
“நாம நாளைக்கு வெளிய போறோம் தான அர்ஜுன்.”
“ம்ம்… ஆமாம்.”
“எத்தனை மணிக்கு கிளம்பனும்?”
“வீட்லயே டிபன் சாப்பிட்டுட்டு ஒரு ஒன்பது மணிக்கு அடையார் வந்திடு. நான் வந்து உன் கார்ல ஏறிக்கிறேன். உன்னோட கார்ல போகலாம் தானே மீரா. ஒன்னும் பிரச்சனை இல்லை இல்ல…”
“ஒன்னும் பிரச்சனை இல்லை அர்ஜுன். கார்லயே போலாம்.” சொன்ன மீராவின் குரலில் இருந்த துள்ளலை உணர்ந்த அர்ஜுன், “நாளைக்குப் போறதையே நினைச்சிகிட்டு இருக்காம, ஒழுங்கா தூங்கு மீரா.” என்றான். மீரா சரி என்று சொல்லி போன்னை வைத்தவள், நாளைக்கு முழுவதும் அர்ஜுனோட இருக்கப் போறோம் என்று சந்தோஷத்தில் மிதந்தவள், சிறிது நேரம் கழித்து உறங்கினாள்.
மறுநாள் காலை எழுந்தது முதல் மீரா பரபரப்பாக இருந்தாள். அர்ஜுன் அவனது வீட்டில் ப்ரண்ட்ஸ் கூட வெளிய போறேன். சாயங்காலம் வந்திடுவேன் என்று சொல்லிவிட்டு வந்தான். மீரா அவன் சொன்ன இடத்தில் காத்திருக்க… அர்ஜுன் அவன் வீட்டில் இருந்து நடந்து வந்தவன், மீராவின் காரில் சென்று ஏறிக்கொள்ள, மீரா அவனைப் பார்த்து புன்னகையுடன் ஹாய் என்றவள்,
“எங்க போகலாம் அர்ஜுன்?” என்றதற்கு,
“மஹாபலிபுரம் போவோம்.” என்றான்.
சரி என்று காரை எடுத்த மீரா… மஹாபலிபுரம் செல்லும் சாலையில் திரும்பியதும் காரை ஓரமாக நிறுத்த… அர்ஜுன் ஏன் என்று அவளைப் பார்க்க…. “நீங்க ஒட்ரீங்களா அர்ஜுன்.” என்றாள்.
“நான் உன்னளவுக்கு எக்ஸ்பெர்ட் இல்லை… என்னை நம்பி காரை தர பரவாயில்லையா…” என்றதற்கு, “அதெல்லாம் நீங்க நல்லாத்தான் ஓட்டுவீங்க.” என்ற மீரா காரின் கதவை திறக்க முயல… “இரு என்ன பண்ற? காரிலிருந்து இறங்காமலே சீட் மாறலாம்.” என்றான்.
காரில் இருந்து இறங்காம எப்படி மாறுவது என மீரா அவனை ஆச்சர்யமாகப் பார்க்க…. அவன் உட்கார்ந்து இருந்த சீட்டை பின்னுக்குத் தள்ளியவன், மீராவை இந்தப் பக்கம் வா என்று சொல்ல… மீரா அந்தப் பக்கம் செல்ல… அர்ஜுன் டிரைவர் சீட்டில் சென்று அமர்ந்தான்.
“பார்த்தியா கீழ இறங்காமலே மாறியாச்சா… இதுக்குத் தான் மூளைய யூஸ் பண்ணனும்.” என்றவன், காரை ஓட்ட… மீரா சீட்டை முன்னுக்கு இழுத்து சரி செய்தாள்.
அர்ஜுன் காரை ஓட்ட, ப்ளேயரில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. மீரா அர்ஜுனோடு இருக்கும் இந்த நேரத்தை மனதிற்குள் ரசித்தவள், அடிக்கடி அவனைத் திரும்பி பார்க்க…. அர்ஜுன் காரை ஓரமாக நிறுத்தி விட்டான்.
“இப்படி நீ என்னையே பார்த்திட்டே இருந்தா… நான் எப்படிக் கார் ஓட்றது?”
“நீங்க மட்டும் என்ன செய்றீங்க? நீங்களும் தான் என்னைப் பார்கிறீங்க.”
“வேண்டாம் மீரா… என்னைச் சீண்டாத. நான் நல்ல பையனா இருக்கனும்னு நினைக்கிறேன். என்னைக் கிளப்பி விடாத அப்புறம் உனக்குத் தான் கஷ்டம்.”
“என்ன பண்ணுவீங்க?” மீரா அர்ஜுனை அலட்சியமாகப் பார்க்க.
அர்ஜுன் பதில் சொல்லாமல்… அவள் இதழ்களில் தன் பார்வையைப் பதிக்க….. மீரா அரண்டுவிட்டாள். அர்ஜுனுக்கு அவளின் நிலையைப் பார்த்துச் சிரிப்பு வர… சிரித்துக் கொண்டே காரை எடுத்தான். மீரா அதற்குப் பிறகு அவன் பக்கம் திரும்பவே இல்லை. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.
சிறிது தூரம் சென்றதும், அர்ஜுன் ஒரு கையால் காரை ஓடிக்கொண்டே… மறுகையால் மீராவை பிடித்து அவனருகில் இழுத்தவன், அவளைத் தன் மேல் சாய்த்துக்கொண்டு “பயந்த்திட்டியா…”என்று கேட்க… மீரா அவன் தோளில் சாய்ந்து கொண்டு, இல்லை என்று தலை ஆட்டினாள். அதன் பிறகு இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டே சென்றனர்.
அர்ஜுன் மஹாபலிபுரம் ரோட்டில் இருந்த ஒரு ரெசார்டுக்குள் காரை விட… மீரா அவனைக் கேள்வியாகப் பார்த்தாள். அர்ஜுன் காரை நிறுத்தி விட்டு மீராவிடம், “இங்க பிரைவேட் பீச் இருக்கு மீரா…. அதோட நிறையக் கேம்ஸ் இருக்கும். லஞ்ச் அவங்களே தந்திடுவாங்க. நல்ல பிளேஸ் வா…” எனக் காரில் இருந்து இறங்க, மீராவும் அவனோடு இறங்கி உள்ளே சென்றாள்.
அர்ஜுன் சென்று இருவருக்கும் ஆளுக்கு ஆயிரம் என்று இரண்டாயிரம் பணம் கட்ட, மீரா “எதுக்கு அர்ஜுன் இவ்வளவு செலவு செய்யணும்? நாம பொதுவான பீச்சுக்கு போலாம்.” என்றாள்.
மீரா நான் பணம் தருகிறேன் என்று சொல்லி, தான் அவனை விட வசதியானவள் என்று காமிக்காமல்… அதே சமயம் அவனுக்கு அதிகச் செலவோ என்று அவள் கவலைபடுவதையும் பார்த்த அர்ஜுன், தான் சரியான துணையைத் தான் தேர்ந்து எடுத்திருக்கிறோம் என்று சந்தோஷபட்டான்.
நல்ல வேளை ரொம்பப் பணம் இருக்கிற இடத்தில குணம் இருக்காதுன்னு நினைச்சு இவளை போய் வேண்டாம்னு நினைச்சேனே என்று யோசித்தவன், மீராவிடம் “கவலைபடாத… இது என்னோட பாக்கெட் மணி இல்லை. நான் லீவ் நாள்ல எங்க கடைக்குப் போய் வேலை பார்ப்பேன். அதுக்கு எங்க அப்பா குடுக்கிற பணம் தான் இது. என்னோட சம்பாத்தியம்.” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
உள்ளே நிறைய விளையாட்டுகள் இருக்க அர்ஜுனும், மீராவும் சென்று ஒவ்வொரு விளையாட்டிலும் ஆர்வமுடன் பங்கேற்றனர். அங்கே இவர்களைப் போல் காதலர்கள், புதுமணத் தம்பதியர் மற்றும் சிலர் குடும்பத்துடனும் வந்திருந்தனர்.
எல்லோரும் சேர்ந்து குழு விளையாட்டில் பங்கேற்றனர். விளையாடி களைத்தவர்கள், நேரத்தை பார்க்க மதிய உணவு நேரம் ஆகி இருந்தது. “அர்ஜுன், சாப்பிடலாமா… ரொம்பப் பசிக்குது.” மீரா கேட்க… அர்ஜுன் அவளை அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றான். இருவரும் ஆளுக்கு ஒரு தட்டில் உணவை எடுத்துக் கொண்டு வெளியே கார்டனில் அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டே சாப்பிட்டனர்.
சாப்பிட்டதும் பீச்சுக்குச் சென்றவர்கள், அப்போது வெயில் நேரம் என்பதால் அங்கிருந்த குடிலில் சென்று அமர்ந்து பீச்சை வேடிக்கை பார்த்தனர். மீரா அமைதியாகக் கடலையே பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் அவள் மனதிற்குள் அலை அடிப்பத்தை உணர்ந்த அர்ஜுன், அவளை இழுத்து தன் மடியில் போட்டு தட்டி கொடுக்க…. மீரா மெதுவான குரலில் தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.
மீராவின் அம்மா ஷ்யாமளா பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டவர். ஆனால் மீராவின் அப்பா ராம்நாத்தோ சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தவர். சமுதாயத்தில் தனக்கு என்று ஒரு அந்தஸ்த்து வேண்டும் என்று அதிகமாக உழைத்தார்.
போததற்கு ஷ்யாமளா வேறு எப்போதும் உங்களைப் போய் என் தலையில கட்டிட்டாங்க. எங்க அந்தஸ்த்துக்கு நீங்க சமமா என்று வார்த்தையால் ராம்நாத்தை நோகடிக்க… அவருக்கு இன்னும் தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி அதிகமாகியது.
ராம்நாத் வெறியாக உழைக்க… அதைப் பார்த்தும் ஷ்யாமளாவுக்கு வெறுப்பாக இருந்தது. இப்படி வேலை… வேலைன்னு அலைஞ்சா வாழ்க்கைய எப்ப அனுபவிப்பது என்று அதற்கும் குறை சொன்னாள். அவளுக்கு வெளிநாட்டில் போய் இருக்க வேண்டும் என்று ஆசை. தன் கனவை நிறைவேறவிடாமல்…. ஜாதகம் பொருந்தி இருந்த காரணத்தால்…. ராம்நாத்தை தனக்குத் திருமணம் செய்து வைத்தவர்கள் மீது அவளுக்குக் கோபமாக வந்தது.
மீராவும் பிறந்து விட்டாள். அப்போதும் ஷ்யாமளாவால் ராம்நாத்தோடு மனம் ஒத்து வாழ முடியவில்லை. நினைத்த வாழ்வு கிடைக்கவில்லை என்றால்… கிடைத்த வாழ்கையை விரும்பி வாழ வேண்டும் என்பதை ஷ்யாமளாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
விருப்பம் இல்லாமலே ராம்நாத்துடன் வாழ்ந்தாள். இதனால் இருவருக்குள்ளும் எப்போதும் சண்டை தான். மீராவை இருவரும் கவனிக்கவில்லை. ஷ்யாமளாவுக்கு விருப்பம் இல்லை. ராம்நாத்திற்கு நேரம் இல்லை. நல்லவேளை ராம்நாத்தின் பெற்றோர் இருந்ததால்… அவர்கள் மீராவை பார்த்துக்கொண்டார்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இனி தாங்கள் சேர்ந்து இருப்பது நடக்காது என்று புரிந்துவிட, சரி பிரிந்து விடுவோம் என்று நினைத்தனர். அதன்படி இருவரும் விவாகரத்துச் செய்ய முடிவு எடுத்துப் பெரியவர்களிடம் சொல்ல, அவர்களும் இத்தனை நாள் இவர்கள் வாழ்ந்த வாழ்கையைப் பார்த்ததால்… நாம் சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று உணர்ந்து சம்மதம் சொல்ல… ராம்நாத்தும், ஷ்யாமளாவும் பிரிந்தனர்.
மீரா யாரிடம் இருப்பது என்ற கேள்வி வர, ராம்நாத்தின் அம்மா, இவ இங்க இருக்கும் போதே… பெத்த பெண்ணை ஒழுங்கா கவனிக்கலை. இதுல இவ இன்னொரு கல்யாணம் வேற செஞ்சா உருப்பட்ட மாதிரி தான் என்று நினைத்தவர், இன்னொன்றும் யோசித்தார்.
மீரா பெண் குழந்தை. அதனால் அவளின் பாத்துகாப்பு கருதி “நீ இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்தால், மீராவை எங்களிடமே விட்டுவிடு. ஏனென்றால் அவள் பெண் குழந்தை, என்னால் அவளை வேறு ஒரு வீட்டில் வளர அனுமதிக்க முடியாது.” என்று சொல்லிவிட… ஷ்யாமளாவும் சரி என்று மீராவை ராம்நாத்திடமே விட்டு சென்றாள்.
சில மாதங்கள் கழித்து ஷ்யாமளா வெளிநாட்டில் இருக்கும் தன் தூரத்து உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் சென்று செட்டில் ஆக. இங்கே ராம்நாத் தன் மனைவி வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்டாள் என்ற ஆத்திரத்தில், தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள… அவரைவிட வசதி குறைவான ஆனால் அழகான பெண்னான மீனாக்ஷியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
வசதி குறைவான பெண் தனக்கு அடங்கி இருப்பாள் என்று நினைத்து அவர் திருமணம் செய்ய… அவளும் அவருக்கு அடங்கித் தான் இருந்தாள். அவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டாள். ஆனால் மீராவை பார்க்கும் போது மட்டும் வெறுப்பைக் காட்டினாள். அவளுக்கு மீராவை பார்க்கும் போது எல்லாம் தான் இரண்டாம் தாரம் என்பது நினைவுக்கு வர, இவள் மட்டும் இல்லை என்றாள் தன் வாழ்வில் ஒரு குறையும் இல்லை என்று நினைத்தவள், இவள் அம்மா போனது போனா, அவ பெத்த பெண்ணை இங்க ஏன் விட்டுட்டு போனா? என்று மனதிற்குள் வெம்பினாள்.
மீனாக்ஷிக்கு ஒரு வருடத்தில் ஆண் குழந்தை பிறக்க, அவளைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. மீராவை குழந்தையின் அருகே கூட நெருங்க விட மாட்டாள். அவளைப் பார்த்தாலே எரிந்து விழுவாள். மீனாக்ஷியின் மகன் வருண் நடக்க ஆரம்பித்த பிறகு, மீரா அவனுடன் விளையாடினால் வருணுக்கு தான் அடிவிழும். அதைப் பார்த்தே மீரா அவனுடன் விளையாட பயப்படுவாள்.