“ என்னடா????……. உன்கிட்ட சொன்னா மட்டும் நான் ஆசைப்படுறது எல்லாம் நடந்துடுமா சும்மா காலைலயே என் வாயில விழுகாத சொல்லிபுட்டேன்” என எரிந்து விழுந்த தெய்வானையை கண்டு விஜயன்
“ என்னமா???” என மீண்டும் விஜயன் கேட்க
“ ஏன் அவனை கூப்புடனும்ன்னா உன்கிட்ட கேட்கணுமா??” என தெய்வானை எரிந்துவிழ
“ எதுக்குன்னு கேட்ட என்கிட்டே ஏன்மா கடுபடிக்குற. போம்மா அங்குட்டு. கிரகம் காலைலயே உன்கிட்ட பேசவந்தேன் பாரு என்னைய சொல்லணும் என கூறிவிட்டு விஜயன் வெளியே சென்றுவிட”
“ சொல்லிக்க எனக்கென்ன. இந்த வீட்டுல நான் வாய திறக்க முடியுதா???…. ஏன் எதுக்கு என்னன்னு கேள்விய கேட்டுகிட்டு வரிசையா வந்துருங்க. எல்லா என் தலை எழுத்து” என புலம்பிக்கொண்டு கூடத்தை தாண்டி திண்ணைக்கு செல்ல அங்கு செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த தன் கணவன் சுவாமிநாதனை கண்டும் காணாதவாறு நகர்ந்த தெய்வானையிடம்
“ என்ன தெய்வா காலைல காப்பின்னு ஒரு களனி தண்ணி கொண்டுவருவியே எங்க இன்னும் காணோம்” என தன் கம்பீரமான குரலில் கேட்ட சுவாமிநாதனை கண்டு மனதுக்குள் நடுக்கம் வந்தாலும் வெளியே சற்றே தைரியமாக,
“ இதோ கொண்டுவரேங்க நீங்க எழுந்து கடைக்கு போய்ட்டீங்கன்னு நினைச்சேன் உங்கள நான் கவனிக்கலைங்க என பவ்வியமாக கூறிய தெய்வானையை தன் அழுத்தமான பார்வையால் கவனிக்க”,
‘ அந்த பார்வையே கூறியது நீ சொல்வதை நான் நம்பவில்லை’ என அதனை சரியான புரிந்துகொண்ட தெய்வானையும்
“ இதோ….. இப்…. இப்போ போய் காப்பி கொண்டுவரேங்க என வேகமாக அடுக்களைக்குள் நுழைந்தார்.”
தெய்வானை காபி போடுவதற்குள் இவர்கள் பற்றி அறிந்துவிடுவோம்,
தெய்வானை தனது பதினாறு வயதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆளப்பிறந்தான் என்ற கிராமத்தில் ஒரு அண்ணன் தம்பி தங்கை என உடன்பிறப்புகளுடன் இருந்த இருபத்தியேழு வயது சுவாமிநாதனை திருமணம் செய்து இந்த குடும்பத்துக்குள் வந்தார். சுவாமிநாதனின் தம்பி தங்கை திருமணம் முடிந்தவுடன் அனைவரும் சொத்தை பிரித்துக்கொண்டு தனிகுடும்பமாக செல்ல விவசாயத்தை தொழிலாக கொண்ட ஸ்வாமிநாதன் தெய்வானை தம்பதியும் விவசாயம் மூலம் வந்த சொற்ப வருமானத்தில் தனது ஐந்து மக்களுடன் நிம்மதியாக வாழ்ந்தனர்.
மூத்தவன் கணேஷிற்கு பதினைந்து வயது இருக்கும் பொழுது வயலில் இருந்த நண்டு பொந்துக்குள் காலைவிட்ட சுவாமிநாதனின் கணுக்கால் உடைந்துவிட ஊன்றுகோல் மூலம்(கைத்தடி) நடக்க ஆரம்பித்தார். இதனால் குடும்பமும் சற்றே சறுக்க உதவிக்கு சுவாமிநாதனின் உடன்பிறப்புகள் முன்வரவில்லை.
இந்நிலையில் தெய்வானையின் அண்ணன் காளிங்கன் மாதம் சிறுதொகையை தங்கைக்கு உதவியாக அனுப்ப அதனுடன் தெய்வானையும் தனது வயலில் காய்கறிகள் விளைவித்து பால் விற்று என குடும்பத்தை தூக்கி நிறுத்தினார்.
காலில் பிரச்சனை ஏற்பட்டாலும் தனது கம்பீரத்தாலும் நேர்மையான குணத்தாலும் ஊரின் சில பிரச்சனைகளை தீர்த்துவைக்க ஊரின் முக்கியஸ்தர்களில் சுவாமிநாதனும் ஒருவர் ஆவர். மூத்தவன் கணேஷன் தலையெடுக்க இப்பொழுதும் சொல்லிக் கொள்ளும்படியான வருமானம் தான்.
தெய்வானை தான் நினைத்ததை எப்பிடியாயினும் நடத்திக்கொள்ளும் குணம் கொண்டவர் அனைவரிடமும் கறார் பேர்வழி. தெய்வானை பயந்து பதுங்கும் ரெண்டே நபர் ஒன்று ஸ்வாமிநாதன் இன்னொன்று கதிரவன்.
“என்னங்க காபி”
“ ஹ்ம்ம்” என காபியை வாங்கிக்கொண்ட சுவாமிநாதன்
“ஆமா என்ன காலையில இந்த பாட்டு சத்தத்தைவிட அதிகமா கத்திக்கிட்டு இருக்க???”
“ இல்லங்க சும்மா கதிரை தேடிகிட்டு இருந்தேன்”
“ நீ சும்மா எல்லாம் தேடமாட்டியே. என்ன??… என்ன விஷயம் சொல்லு”
“ இல்லங்க சும்மாதான் சாப்புட என்ன வேணும்ன்னு கேட்க….”
“ இங்க பாரு தெய்வா இந்த சும்மா கூப்புட்டேன் சுமந்துக்கிட்டு கூப்பிட்டேன் இந்த கதை எல்லாம் வேணாம். என்ன விஷயம் அதை மட்டும் சொல்லு”
“ ஹ்ம்ம்” என தனது எச்சிலை முழுங்கிக்கொண்டு தலையை ஆட்ட
“ போமா போ. அதோ அங்க உருவாராம் செய்ற இடத்துல இருக்குறான் பாரு கதிரு. போ போய் கேட்டுட்டு வா” என கூறிய சுவாமிநாதனின் குரலில் ஏகத்துக்கு நக்கல் வழிய
‘ இந்த மனுசனுக்கு இருக்குற ஏத்ததுக்கு என்னையாவா கிண்டல் செயிறிங்க. கதிரை எப்பிடியாவது ஒத்துக்க வச்சுட்டு இந்த மனுஷன் கிட்ட பேசிக்குறேன்’ என மனதில் கூறிக்கொண்டு தலையை மட்டும் ஆட்டிவிட்டு கதிரை நோக்கி சென்றார் தெய்வானை.
“ டேய்!!… கதிரு இங்கன கொஞ்சம் வந்துட்டு போடா” என பக்கத்து வயலில் இந்த வருட ஆடி திருவிழாவிற்கு உருவாராம் செய்துக்கொண்டிருந்த தனது நடு மகனை அழைத்த தெய்வானையின் வெண்கல குரலை கிஞ்சித்தும் கவனியாது தனது செயலையே கருத்தாக செய்துகொண்டிருந்தவனின் அலட்சிய போக்கை என்றும் போல் இன்றும் எண்ணி வாயில் இருந்த சொற்ப பற்களை கடித்த தெய்வானை,
தனது சேலை முந்தியை இழுத்து சொருகி கொண்டு கால்களை எட்டி வைத்து வேக நடையுடன் கதிரவன் முன் நின்றார். அதனை கண்டும் காணாதது போல தனது வேலையை தொடர்ந்தவனை கண்டு,
“ ஏண்டா உன்னையதான் கூப்பிட்டேன்”
“ கேட்டுச்சு கேட்டுச்சு”
“ அப்போ என்னன்னு கேட்குறது. இந்த வயசான காலத்துல ஏன்தான் என்னைய படுத்தி எடுக்குறீங்களோ. நான் கட்டுனதும் சரி இல்ல நான் பெத்த அஞ்சு மக்களும் சரி இல்ல” என கூறி மூக்கை உறிஞ்ச
“ இங்க பாருமா ஒப்பாரி வைக்கணும்ன்னா அங்குட்டு போய் வை. எனக்கு ஆயிரம் ஜோலி இருக்கு” என கூறி தனது வேலையை தொடர
“ அப்போ நான் என்ன சும்மா இருக்கேனா??” என அதுக்கும் எகுறிய தெய்வானை கதிரவனின் முறைப்புக்கு கப்சிப்பென அமைதியாகிவிட்டார்.
ஏனனெனில் கதிரவனுக்கு கோவத்தில் முதலில் கை பேசும் என்பதை விட கை மட்டும் தான் பேசும். ஏதோ அம்மா அப்பாவை அடித்தால் பாவம் வரும் என யாரோ கூறியதை கேட்டு சற்றே அடக்கி வாசிப்பது தெய்வானையிடம் மட்டும் தான்.
அதுவும் கதிரவனின் கோவம் எல்லை கடப்பதற்கு முன் அவனின் பார்வையை வைத்தே அமைதியாகிவிடுவார்.
“ டேய் பக்கத்து ஊரு பரஞ்சோதி இருக்காருல அவருக்கு ஒரு மாந்தோப்பு நாலு பசு மாடு பத்து ஆடு சொத்து இருக்குடா. அவுரு ஒரே பொண்ணுக்கு உன்னைய மாப்பிள்ளையா….” என தெய்வானை கூறிக்கொண்டிருக்கையில்
“ அடிங்க யாரும்மா??… அவன்????…. என்னைய ஒன்னத்துக்கும் வக்கு இல்லாதவன் நான் சம்பாரிக்க மாட்டேன்னு நினைச்சனா??….. அவன் சம்பாரிச்சு வச்சுருப்பான் நான் அவனுக்கும் அவன் பொண்ணுக்கும் சேவகம் பண்ணணுமோ??… எனக்கு பொண்டாட்டியா வரவ எனக்கு அடங்கி இருந்தா போதும்.
எதாவது அப்பன் வீட்டுல இருந்து கொண்டு வந்துட்டு என்னைய கா காசு மதிக்காம போறதுக்கா. இன்னொருமுறை எவனாவது பொண்ணு இருக்கு கண்ணு இருக்குன்னு வீட்டு வாசற்படியை மிதிச்சான் கால வெட்டிடுவேன்” எனகதிரவன் கோவமாக கூற தெய்வானை முழுத்திக்கொண்டிருந்தார்.
சிறுது நேரம் சென்று வீட்டிற்கு சென்ற தெய்வானையை கண்ட சுவாமிநாதன்,
“ அப்புறம் தெய்வா எப்போ ஜோசியரை பார்த்து நாள் குறிக்கிறது கல்யாணத்துக்கு” என கேட்க அவரை முறைத்துக்கொண்டிருந்தார் தெய்வானை.
அதனை கண்டு, “ என்ன என்னைய…. முறைக்குற??…. உன் மகன் என்னமோ வெட்டுவேன் சொன்னது என் காதுல கேட்டுச்சு. அதான் கல்யாணத்துக்கு கிடா வெட்ட போறிங்களோன்னு நினைச்சேன்” என சுவாமிநாதன் நக்கலுடன் பேசிக்கொண்டிருக்க,
தெய்வானை, “ எனக்கு நேரமாச்சுங்க நம்ம ரெண்டு பொண்ணுகளும் மதிய விருந்துக்கு வரதுக்குள்ள நான் சமைக்கணும்” என கூறிக்கொண்டு பதிலுக்கு காத்திருக்காது உள்ளே சென்றுவிட சுவாமிநாதன்,
“ இவ எல்லாம் பட்டாலும் திருந்தமாட்டா” என புலம்பிக் கொண்டிருக்கையில்
“ யாருப்பா திருந்தமாட்டா???” என கேட்க்கொண்டு வந்த மூத்த மகன் கணேஷிடம்
“ எல்லாம் உங்க அம்மாதான். ஆமா இம்புட்டு நேரம் எங்க போன காலைல இருந்து ஆளை காணோம்”
“ இன்னைக்கு திருவிழா விருந்துக்கு பெரிய தங்கச்சியும் சின்ன தங்கச்சியும் வருவாங்கல்ல அதான் கறி எடுக்க போய் இருந்தேன்”
“ ஏன் உன் பொண்டாட்டியும் பிள்ளையும் இன்னைக்குத்தான் வராங்கன்னு சேர்த்து சொல்லவேண்டியது தானே” என சுவாமிநாதன் சிடுசிடுக்க
“அப்பா… அப்பா…. விடுங்க என்ன இப்போ”
“ என்ன இப்போவா???…ஏன் சொல்லமாட்ட ??… . நான் அப்பவே சொன்னே அந்த காளிங்கன் பொண்ணு வேணாம் நீ நல்ல படிச்சுருக்க வாத்தியாரா இருக்க நல்ல இடமா பார்ப்போம்ன்னு. நீயும் உன் ஆத்தாவும் தான் மாமா கேட்குறாங்க நமக்கு கஷ்டத்துல உதவி இருக்குறாங்கன்னு எதோ எதோ சொல்லி சாரதாவை கல்யாணம் கட்டிகிட்ட. ஒரு பொம்பள பிள்ளையும் ஆச்சு.
இன்னும் வருசத்துல முக்கால்வாசி நாள் அவ அப்பா வீட்டுலதான் அந்த பிள்ளை இருக்கு. எதாவது காரணத்தை சொல்லிட்டு போயிடும் நீயும் உன் ஆத்தாளும் பூம்பூம் மாடு மாதிரி எல்லாத்துக்கும் தலையை ஆட்டிகிட்டு இருக்கீங்க. இந்த லட்சணத்துல கதிருக்கு உன் ஆத்தாவும் மாமனும் பொண்ணு பார்த்துருக்காங்க” என சுவாமிநாதன் பொரும
“ என்ன நம்ம கதிருக்கா???”
“ ஆமாடா”
“ அவன் என்ன அப்பா சொன்னான்”
“ என்ன சொன்னான்னு தெரியல ஆனால் கடைசியில எவனாவது பொண்ணு கேட்டுவந்தா வெட்டுவேன்னு கத்தினான். அது மட்டும் என் காதுல கேட்டுச்சு” என கூறி சுவாமிநாதன் சிரிக்க
“ அதுசரி அவன் குணம் தெரிஞ்சும் அம்மா இப்படி பன்றாங்களே”
“ சரிவிடு கணேஷா கதிருக்கு ஏத்த பொண்ணை நான்தான் பார்த்து முடிப்பேன். அவன் கல்யாணம் என் விருப்பப்படிதான்” என கூறிக்கொண்டு அங்கிருந்து சுவாமிநாதன் சென்றுவிட கணேசனும் வீட்டின் உள்ளே சென்றுவிட்டார்.
தமிழ் நாட்டில் மிக தொண்மையான நகரங்களில் ஒன்றும், நகர்ப்புற பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய நகரமும் ஆனா மதுரையில் வாழும் தம்பதி அன்னலட்சுமி வெங்கடேஷன்.
அதிகாலையில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய வெங்கடேசனை கண்ட அன்னலட்சுமி,
“ அரசாங்கத்துக்காரரு எங்குட்டு போய்ட்டு வறாப்புல??…” என தனது காப்பியை அருந்திக்கொண்டு கேட்க அதற்கு பதில் கூறாது
“ ஹீ…. ஹீ…. என சிரித்த வெங்கடேசனை கண்டு “
“ அங்க வாயில என்ன பல்லு இருக்குன்னு சிரிக்கிறீக. நாட்டு மருந்து தயாரிக்குறேன்னு சொல்லி அதை நீங்களே சோதிச்சு பார்த்தே அம்புட்டு பல்லு கொட்டிபோச்சு. இதுல கிழவனுக்கு சிரிப்பு வேற” என நொடித்த அன்னலெட்சுமியிடம் மீண்டும் தனது சிரிப்பை காட்டிவிட்டு,
“ ஹ்ம்ம் சேர்த்துட்டாராம். ஏன் அன்னம் சும்மா பாஸ் ஆன அந்த பிள்ளையே காலேஜ் போய் படிக்குது. நம்ம பிள்ளை எழிலு ஸ்கூல் முதல் மார்க்கு. அத எதாவது காலேஜ்ல சேர்த்து படிக்க வச்சுடுவோமா??. மூணு வருசம்தானே என் பென்ஷன் பணமே போதும் அன்னம். பிள்ளை மார்க்குக்கு கடன் கூட வாங்க வேணாம்” என கெஞ்சல் குரலில் வெங்கடேசன் கேட்க
“ இங்க பாருங்கங்க திரும்ப திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்காதீங்க. எனக்கு வயசென்ன 58 ஆச்சு. முதல்ல நமக்கு முதல்ல பிறந்த ரெண்டுமே பொம்பள பிள்ளைதான். அடுத்து பிள்ளை எனக்கு தங்கல.
சரி நமக்கு ஆம்பள பிள்ளை யோகம் இந்த ஜென்மத்துல இல்ல போலன்னு நாமவாட்டுக்கு இருந்தா மூத்த பெண்ணுக்கு கல்யாணம் பண்ணும் போது நாப்பது வயசுல கர்ப்பம். இந்த வயசுல வேணாம்ன்னு எல்லா நாட்டு மருந்து தின்னும் ஒன்னும் பிரோயோஜனம் இல்ல. சரி அதுவாது ஆம்பள பிள்ளையா இருக்கும்ன்னு பார்த்தா அதுவும் பொம்பள பிள்ளை. அவளுக்கு பத்து வயசுல நீங்க உங்க உத்தியோகத்துல ஓய்வு வாங்கிட்டீங்க.
ரெண்டாவது மக கல்யாணம் ரெண்டு மகளுக்கும் பிரசவம் இதோ இந்த வீடு கட்டுறதுன்னு எல்லா காசும் காலியா போச்சு. இதுல எழிலுக்குன்னு ஒருகுண்டுமணி நகைகூட இல்ல. படிக்க வச்சாலும் வரவன் படிப்பையா பார்ப்பான் நகை எம்புட்டு சீரு எம்புட்டுன்னுதான் பார்ப்பான்”
“ இல்ல அன்னம் பிள்ளை படிச்சா அது அறிவுக்கு கண்டிப்பா வேலை கிடைச்சுடும். அப்போ சீரு நகை எல்லாம் கேட்க மாட்டாங்க”
“ ஆமா நீங்க கண்டீங்க…..”
“ இங்க பாரு அன்னம் சும்மா காரணம் தேடாத உன் தங்கச்சி மக சொன்னான்னுதானே சந்தேகப்பட்டு பிள்ளையை படிக்க அனுப்ப மாட்டேங்குற” என வெங்கடேஷன் கடுப்படிக்க
“ இங்க பாருங்க என்ன பேசுறீங்க நானே எம்பிள்ளைய சந்தேகப்படுறேனா??” என அன்னலட்சுமி கத்த
“ அப்புறம் என்ன உனக்கு நகை காசுதான் பிரசச்னைன்னா அதை என்கிட்ட விடு நான் பார்த்துக்கறேன்” என வெங்கடேஷனும் கத்த
“ என்னங்க என் தங்கச்சி மக சொன்னா பயலுக பொம்பளபிள்ளைக எல்லாம் ஒண்ணா சுத்துவாங்க காலேஜ்ல. இதுல எழிலு வேற நல்ல அழகா இருக்கா பார்த்துக்கோங்க பெரியம்மான்னு.”
“ அதனால சந்தேகப்பட்டு பிள்ளையை அனுப்ப மாட்டேங்குற”
“ என்னங்க பேசவிடுங்க சொல்லிட்டேன். என் பிள்ளைய சந்தேகப்பட்டா என்னைய சந்தேகப்படுறமாதிரி. பிரச்சனை அது இல்ல நமக்கு ஆம்பள பிள்ளை இல்ல. உங்களுக்கு வயசு 66 ஆச்சு இதுல காலேஜ்ல எவனாவது எழிலுகிட்ட வம்பிழுத்தா நம்மளால சமாளிக்க முடியுமா. அதோட நாம நல்லா இருக்கும்போதே நம்ம பிள்ளைக்கு ஒரு நல்லதை செஞ்சுடுவோம்ங்க. ஒரு நல்லவன் கையில பிடிச்சுக்குடுத்தா நம்ம கடமைமுடிச்சுடும்.”
“ அன்னம் நீ சொல்றது எல்லாம் சரிதான் ஆனா நடக்குமா நடக்காதான்னு தெரியிரதுக்கு முன்ன நாம எதுக்கு பயந்து நம்ம பிள்ளை ஆசையை முடக்கணும்”
“ பிரச்சனை வந்தா துணிஞ்சு நிக்கலாம்ங்க. ஆனா பிரச்சனை வர வாய்ப்பு இருக்குன்னா நாம ஒதுங்கி இருக்குறதுல தப்பு ஒன்னு இல்லையே”.
“ அன்னம் நல்லா யோசிச்சுப்பாரேன். பாவம் எழிலு” என கூறிய வெங்கடேஷிடம்
“ இங்க பாருங்க நான் ஒன்னும் வில்லி இல்ல. என் மக ஆசையை கனவை உடைக்க. ஆனா நடைமுறைன்னு ஒன்னு இருக்குல்ல. காசு இல்லைனாலும் என் உடம்புல தெம்பும் எனக்கு வயசும் இருந்தா நான் என்னத்துக்கு இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணனும் நினைக்க போறேன் சொல்லுங்க.
நானும் பொம்பளதாங்க என் மக மனசு என்ன பாடுபடும்ன்னு எனக்கு தெரியும்ங்க. ஆனா நானும் இயலாமைலதாங்க இருக்கேன்” எனகூறி அன்னம் கலங்கிய கண்களை தன் புடவை முந்தானையால் துடைத்துக்கொண்டு நிமிர கலங்கிய கண்களுடன் தன்னையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்த எழில்விழியை கண்டு,
“ இங்குன வாத்தா” என கூற அமைதியாக அன்னத்தின் அருகில் அமர்ந்த எழில்விழியிடம்,
“ நானும் உன் அப்பாரும் பேசிகிட்டு இருந்தத கேட்டுட்டுகிட்டு இருந்ததானே. நீ சொல்லு நீ படிக்குறியா??” என கேட்ட அன்னலட்சுமியிடம் ஒன்னும் கூறாது அமைதியாக தனது தந்தையை காண,
அறுபத்து ஆறு வயதில் எழுபத்தி ஐந்து வயது தோற்றத்துடன் கண்கள் பார்வை குறைபாடு காரணமாக கண்ணாடியுடன் வழுக்கை தலையுடன் மெல்லிய ஒடுங்கிய தோற்றத்துடன் இருந்த ஆஸ்துமா நோயாளியான வெங்கடேஷனை கண்டு மீண்டும் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு அன்னலெட்சுமியிடம் பார்வையை திருப்ப,
நல்ல திடகாத்திரமான உடல்வாகுடன் புடவையை பின்கொசுவம் வைத்து கண்டாங்கி கட்டி நெற்றில் பெரிய ஒரு ரூபாய் நாணயம் அளவில் பொட்டுவைத்து முடியை அள்ளிமுடிந்து கண்களில் பரிதவிப்புடன் தன்னையே பார்த்துக்கொண்டிருக்க…… எழில்விழிக்கு புரிந்த ஒரே விஷயம் ‘ அப்பா நன்றாக இருக்கும் போதே தனக்கு கல்யாணம் செய்ய நினைக்கும் அன்னையின் எண்ணம் என்பதுதான்’.
யோசனைக்கு பின் எழுந்து வெங்கடேஷின் அருகில் சென்ற எழில்விழி அவரின் கைகளை பிடித்துக்கொண்டு,
“ அப்பா எனக்கு அம்மா என்ன செய்யணும்ன்னு நினைக்குறாங்களோ அதை செய்யட்டும் விட்டுடுங்கப்பா. அம்மா முடிவெடுத்தா சரியாதான் இருக்கும்” என கலங்கிய கண்களுடன் புன்னகையுடன் பேசிய எழில்விழியை கண்டு தானும் தனது விழிகளை துடைத்துக்கொண்டு எழில்விழியின் தலையில் கையை வைத்து,
“ உன் மனசுக்கு நல்லா வாழுவத்தா. உன்னைய புரிஞ்சுக்குறமாதிரி நல்லவன் கையில உன்னைய ஒப்படைச்சுட்டா நானும் உன் அம்மாவும் நிம்மதியா இருப்போம்த்தா” என கூற அன்னலெட்சுமியும் தனது கண்களை துடைத்துக்கொண்டார் .