“ அக்கா….. அக்கா….” என கனகம் தெய்வானையை அழைத்துக் கொண்டு ஸ்வாமிநாதன் இல்லத்திற்கு சென்றார்.
“ அடடே!!… வா வா கனகு. என்ன அம்மா வீட்டுக்கு ஒருவழியா போய்ட்டு வந்துட்டியா??” என தெய்வானை கேட்க
“ ஹ்ம்ம் ஆமா அக்கா இந்தாங்க எங்க அண்ணிங்க பலகாரம் போட்டு குடுத்தாங்க அதான் உங்களுக்கு குடுக்கலாம்ன்னு வந்தேன்” என கூறி கனகம் பெரிய தூக்கு சட்டியை குடுத்துவிட்டு அந்த முற்றத்தில் அமர கையில் இருந்த சிறு மஞ்சள் பையையும் தனது மடியில் வைத்துக்கொண்டிருந்தார்.
“ ஹ்ம்ம் எல்லாரு நல்லா இருக்காங்க அக்கா ” என மேலும் பல விஷயங்களை பேசிக் கொண்டிருக்கயில்
ஸ்வாமிநாதன் வீட்டிற்குள் நுழைய அவரை கண்ட கனகு,
‘ அப்பாடி ஒருவழியா இந்த மாமா வந்துட்டாரு. இவரு வயலுல இருந்து கிளம்புறத பார்த்துட்டு தானே வந்தோம். காணோம்ன்னு நினைச்சு பக்குன்னு ஆகிடுச்சு ’ என மனதில் பேசிக்கொண்டு முகத்தில் சிறு புன்னகையுடன் எழுந்து நிற்க,
“ வா கனகு. என்னத்தா வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?? ”
“ ஹ்ம்ம் எல்லாரும் நலம்தான் மாமா ” என ஸ்வாமிநாதனிடனும் கனகம் பேச ஆரம்பிக்க சிறுது நேரம் சென்று
“ ஆமா அக்கா என்ன கதிருக்கு பொண்ணு பார்த்துகிட்டு இருக்கீங்களாமே என் வீட்டுக்காரரு சொன்னாரு ” என மெதுவாக தான் வந்த நோக்கத்திற்காக பேச ஆரம்பிக்க
“ ஹ்ம்ம் ஆமா கனகு பொண்ணு பார்த்துக்கிட்டுதான் இருக்கோம்…….” என இழுத்து பெரும்மூச்சுனை விட்ட தெய்வானையை கண்டு
“ என்னக்கா பொண்ணு ஏதும் ஒழுங்கா அமைய மாட்டேங்குதா இல்ல ஜாதகத்துல ஏதும் பிரச்சனையா??? ” என கனகம் கேட்க ஸ்வாமிநாதனோ ஜாதகம் என கேட்டவுடன்,
“ ஜாதகத்துல என்ன இருக்கப்போது அதுல எல்லாம் ஒன்னும் இல்ல மனசுக்கு ஒன்னும் ஒப்ப மாட்டேங்குது ” என ஸ்வாமிநாதன் அவசரமாக பதில் கூற
“ ஹம்ம்ஹும் மனசுக்கு ஒப்பலையாம் நல்லா இருக்கு நீங்க பேசுறது. கனகு நீ சொல்லு இதுவரைக்கும் எத்தனை பொண்ணை பார்க்க போயிருக்கோம்ன்னு ஒண்ணுமே இல்ல. எதாவது பொண்ணுன்னு ஆரம்பிச்சாலே ஓராயிரம் குறை சொல்றது. கேட்டா எனக்கு தெரியும் நான் பார்த்துகிறேன்னு சொல்றது.
பொண்ணா இல்ல இங்க. எங்க அண்ணா சொந்தத்துல அம்புட்டு பொண்ணுங்க இருக்கு ” என தெய்வானை பேசிக்கொண்டிருக்க
‘ ஆத்தி இந்த அக்கா மறுக்க அவுங்க அண்ணா வழில சமம்பந்தம் பேச பாக்குது போல இப்போ என்ன செய்றது ’ என கனகம் யோசிக்க
“ இவ வேற கனகு சும்மா அண்ணா சொந்தம் அண்ணா சொந்தம்ன்னு. ஒரு மாட்டுக்கு ஒரு சூடு அதான் ஏற்கனவே போட்டாச்சு. மறுக்க மறுக்க சூடுபோட நானும் என் மகனும் தயாரா இல்ல. அதனால அந்நியத்துலதான் எடுக்கணும் சொல்லிட்டேன் ” என ஸ்வாமிநாதன் கடுப்புடன் கூற தெய்வானை ஹம்ம்ஹும் என முகத்தை திருப்பிக் கொண்டார்.
“ அவருக்கு ஒரு சின்ன பிள்ளை கைப்பிள்ளை இருந்ததா நியாபகம்….” என ஸ்வாமிநாதன் இழுக்க
“ அட மாமா அவருக்கு மூணு பொண்ணுங்க அதுல இந்த மூணாவது பொண்ணு எங்க அண்ணனுக்கு கொஞ்சம் வயசானாப்புறம் பிறந்தது. எங்க கல்யாணத்தபோ அந்த பிள்ளைக்கு ஒன்னோ ரெண்டு வயசு ”
“ ஹ்ம்ம் எனக்கு நியாபகம் வந்துடுச்சு அவரு வீட்டுக்காரம்மாவுக்கு கை எல்லாம் பச்சை குத்திருக்குமே ” என தெய்வானை கூற
“ ஹ்ம்ம் ஆமா அக்கா அவுங்கதான்…”
“ அடேங்கப்பா அந்த அம்மாவுக்கு சம்பந்தி ஆகணும்ன்னா பெரிய ஆளாதான் இருக்கனும் ” என தெய்வானை கூற
“ என்னக்கா இப்படி சொல்றிங்க ”
“ பின்ன அந்த அம்மாவுக்கு வாயா அது. அண்டாக்குள்ள செம்ப போட்ட மாதிரி கலகலன்னு எதையாவது பேசிக்கிட்டே இருந்துச்சு. அதோட கையெல்லாம் பச்சை குத்திருந்துச்சு. என்னமா ஏன் இப்படி குத்திருக்கிங்கன்னு கேட்டா என் புருஷனோட சண்டைன்னா அந்த கோவத்துல கைல பச்சை குத்திக்குவேன்னு சொல்லுது.
என்னம்மா வலிகளையான்னு கேட்டா என் கோவத்துல அவரை குத்தமுடியல அதான் பச்சை குத்திகிட்டேன் என சிரிச்சுகிட்டே சொன்னுச்சு பாரு நான் மிரண்டுட்டேன். அந்த அம்மாவை நான் மறக்கவே முடியாது ” என கூறிய தெய்வானையிடம்
“ அது எல்லாம் சும்மா சொல்றதுக்கா. எங்க அண்ணனும் மதினியும் அப்படி அந்நியோநியமான தம்பதி. அதிகம் அவுங்களுக்குள்ள சண்டையே வராது. அதோட நான் சொல்ற பொண்ணு அதான் இந்த மூணாவது பொண்ணு பார்க்க அப்படியே மகாலெட்சுமி மாதிரியே இருக்கும். ஹ்ம்ம் யாருக்கு குடுத்து வச்சுருக்கோ ” என கூறிய கனகுவிடம்
“ ஏன் கனகு பொண்ணு போட்டோ வச்சுருக்கியா???..” என ஸ்வாமிநாதன் கேட்க
“ ஹ்ம்ம் இருக்கு மாமா” என மஞ்சள் பையிலிருந்து எடுத்து காட்ட அதனை வாங்கி பார்த்த ஸ்வாமிநாதன் விழிகளை விரித்தார்.
போட்டோவை பார்த்து எதுவும் கூறாது அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த சுவாமிநாதனின் அருகில் சென்று போட்டோவை பார்த்த தெய்வானையும் விழிகளை விரித்தார் ஆச்சரியத்தில்.
போட்டோவில் இளஞ்சிவப்பு நிறத்தில் கோலிக்குண்டு கண்களும் நல்ல சிவந்த இதழும் சற்றே உப்பிய கன்னங்களும் குழந்தைத்தனம் மாறாத அந்த முகம் பார்ப்போரை முதல் பார்வைலையே ரசிக்கவைக்கும் எழிலின் உருவம் கண்டு,
“ அடிஆத்தி!!….. கனகு என்ன இந்த பிள்ளை இம்புட்டு கலரா இருக்கு. நெஜமாவே மஹாலெட்சுமிதான் போ….” என அதிசயத்துடன் கூறிய தெய்வானையிடம்
“ அட ஆமா அக்கா நானே பார்த்து அசந்துட்டேன். என்ன அழகு தெரியுமா???…… நேர்ல இன்னும் அழகா இருக்கும் அக்கா ” என கனகம் கூற
“ ஏன் கனகு இந்த பிள்ளை என்ன பேரு??….” என ஸ்வாமிநாதன் வினவ
“ எழில்விழி மாமா ”
“ ஹ்ம்ம் ஆனா ரொம்ப சின்ன பிள்ளையோ?? ”
“ இல்ல மாமா நெருக்கி இருபது ஆரம்பிக்கபோகுது. இந்த வைகாசி வந்தா பிறந்தநாளு போல அதான் எங்க மதினி சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்ன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சு ” என கூறிய கனகுவிடம்
“ ஜாதகம் இருந்தா குடேன் கனகு. ஒரு தடவை பொருத்தம் பார்த்துட்டு அதுக்கப்புறம் மேற்கொண்டு விசாரிக்கலாம் ” என கூறிய ஸ்வாமிநாதனிடம்
“ எல்லாம் என்கிட்டே இருக்கு மாமா. இங்க நம்ம சொந்தத்துல நல்ல சம்பந்தமா பார்க்க சொல்லி எங்க மதினி ஜாதகம் போட்டோ எல்லா குடுத்திடுச்சு. நீங்க பொருத்தம் பாருங்க. நல்லா எல்லா பொருத்தமும் அமைஞ்சு கதிருக்கு பிடிச்சா நாம மேற்கொண்டு பேசலாம். அதுவரைக்கு நான் ஒன்னும் தகவல் சொல்லல மாமா” என் கூறிய கனகாவிடம்
“ அதுவும் சரிதா” என கூறி ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அப்பொழுதே ஜோசியரை பார்க்க ஸ்வாமிநாதன் சென்றுவிட கனகாவும் தெய்வானையிடம் கூறிக்கொண்டு அவர் வீட்டிற்கு சென்றுவிட தெய்வானை யோசனையில் நின்றுகொண்டிருந்தார்.
‘ என்ன இவருவாட்டுக்கு ஜாதகம் பார்க்க போய்ட்டாரு ஒன்னும் விசாரிக்கவே இல்ல பொண்ண பத்தி. ஒரு வேலை இந்த இடம் அமைஞ்சுடுமோ??….. பொண்ணு நல்லாத்தான் இருக்கு. ஆனா அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும் இவரு வந்தவுடன் ” என எண்ணிக்கொண்டு சென்றுவிட்டார்.
“ அம்மா…. அம்மா…..” என கத்திய அன்னலட்சுமி வெங்கடேசன் தம்பதியின் ரெண்டாவது மகள் சரஸ்வதியை கண்டு
“ என்னடி காலையில வெள்ளன வந்துட்ட” என கேட்டுக்கொண்டே கதவை திறந்த அன்னலெட்சுமியிடம்
“ ஹ்ம்ம் இன்னைக்கு உன் மருமகனுக்கு மேலுக்கு சுகம் இல்ல. அதான் காலையில கடைக்கு போய் கீரையை மட்டும் வித்திட்டு இடியாப்பம் போட்டேன். அதான் உனக்கும் அப்பாவுக்கும் எழிலுக்கும் கொண்டுவந்தேன் ” என கூறிக்கொண்டு ஹாலில் அமர்ந்த சரஸ்வதியை கண்டு,
“ சரசு வா வா. என்னத்தா பத்து நாளா ஆளையே காணோம் ” என வெங்கடேஷன் கேட்க
“ என்ன அப்பா செய்ய வேலை சரியா இருக்கு ” என கூறிக்கொண்டிருக்கையில் அங்கு வந்த எழில்விழியிடம்
“ அட இவ ஒருத்தி அவ ஊருக்கே நேத்துதான் போயிருக்கா அதுக்குள்ள எல்லாம் முடிச்சுடுமா நீ வேற ” என அன்னலெட்சுமி சலிக்க
“ ஏன் சரசு இந்த போலீஸ் மாப்பிள்ளைதான் வேணுமா???…. வேற நல்ல இடமா இங்க பக்கத்துல பார்க்கலாம்ல. ரொம்ப தூரமா வேற இருக்குதே” என வெங்கடேசன் புலம்ப
“ என்னப்பா சொந்தத்துல வேணாம்ன்னு அக்காவை (அன்னலெட்சுமி வெங்கடேஷன் தம்பதியின் முதல் மகள்) அந்நியத்துல குடுத்திங்க. அவ மாமியார் மாமனார் பேச்சு மீறமுடியாம இங்க உங்கள பார்க்க வரமுடியாமா கஷ்டப்படுது. நீங்களும் போய் ஒரு எட்டு பார்க்க முடியுதா அதுவும் இல்ல.
போனா உங்களுக்கு மதிப்பு இல்லைன்னு அக்கா வரவேணான்னு சொல்லுது. சரி அதுவாது சந்தோசமா இருக்கான்னா மாமாவுக்கு வேலை இல்லாததால அடிமை மாதிரி இருக்கு.
அதனால என்னைய சொந்தத்துல பக்கத்துக்கு தெருல கட்டிகுடுத்தீங்க நானாவது நல்லா இருக்கேனா??….. அஞ்சுக்கு பத்துக்கும் நானும் என் புருஷனும் மாடா உழைக்குறோம். எதோ நான் வாய் இருக்கக்கண்டு ஒரு காய்கறி கடைய போட்டு எங்க வாழ்க்கை ஓடுது.
எழிலுக்கு அக்கா மாதிரி நம்மள எல்லாம் ஒதிக்கிட்டு மனச தேத்திகிட்டு வாழ்க்கையை ஓட்ட தெரியாது. என்னைய மாதிரி வாயை வச்சு பொழைக்கவும் தெரியாது. ஒரு அரசாங்கத்து உத்தியோகம்னா எழிலும் கஷ்டப்படாம வாழுவாப்பா” என சரஸ்வதி கூற
“ இல்ல தெரியாத இடம்…..” என வெங்கடேசன் இழுக்க
“ என்னப்பா கனகு அத்தை பெத்தவங்க வீட்டுக்கு வரலைன்னாலும் அந்த வீரா மாமா நல்லாத்தானே வச்சுருக்காரு. அதோட எழிலுக்கு ஏதாவதுன்னா கனகு அத்தையும் பார்த்துக்கும்ல பயப்புடாதிங்கப்பா” என சரஸ்வதி கூற
“ என்னமோ போத்தா மனசு ஒப்பலை எனக்கு….” என மீண்டும் வெங்கடேசன் கூற
“ உங்களுக்கு எப்பதான் ஒப்பிற்கு. என்னைய கட்டிக்கிட உங்க வீட்ல சொன்னப்பவே மனசு ஒப்பலைன்னு சொல்லி தட்டிக்கழிக்க பார்த்தவாறுதானே இப்பமட்டும் என்னவாம். சும்மா எதையாவது சொல்லி கடுப்பேத்தாதிங்க. முதல்ல அங்க எல்லாம் சரி ஆகி பொண்ணு பார்க்க வரட்டும் பார்த்துக்கலாம்” என கூறிவிட்டு அன்னலெட்சுமி சென்றுவிட வெங்கடேசன் பெருமூச்சினை விட்டு தனது மகள்களை பாவமாக பார்த்தார்.
அதில் சரஸ்வதி சத்தமாக சிரித்துவிட எழில்விழி சிறிது புன்னகை சிந்தினாள். அதனை கண்டு,
“ ஆத்தி!!…. எழிலு அப்போ அப்போ பேசு சிரி இல்ல சும்மா மண்டையாவது ஆட்டு ரொம்ப அடக்கமா இருக்கேன்னு அமைதியா இருந்தன்னு வையி இப்ப உள்ள காலத்துக்கு அடக்கம் பண்ணிட்டு போய்டுவாய்ங்க. போற இடத்துல நல்லா பொழைக்குற வழிய பாரு ” என கூறிவிட்டு எழுந்து சென்று விட,
ஏனோ எழில்விழி மனதில் போலீஸ் மாப்பிளை கோவக்காரர் என கேள்விப்பட்டதில் இருந்து ஒரு வித படபடப்புடனே இருந்தது.
ஜோசியரிடம் ஜாதகத்தை காட்டிய ஸ்வாமிநாதனிடம்,
“ ஐயா இந்த ஜாதகம் ரொம்ப பொருத்தமா இருக்கு நம்ம கதிர் தம்பிக்கு. அதனால் இந்த இடத்தை முடுச்சசுடுங்க. பரிகாரம் ஒன்னும் தேவை இல்ல ” என நல்லசிவம் கூறிவிட ஸ்வாமிநாதன் மிகவும் சந்தோசத்துடன் மின்னல் வேகத்துடன் செயல்பட்டு தெய்வானை, கணேஷன், சாரதா, கனகு மற்றும் வீரநாயகத்துடன் மதுரையில் அன்னலெட்சுமி வெங்கடேசன் வீட்டில் பொண்ணு பார்க்க அமர்ந்திருந்தனர்.
அவரவர் ஒரு மனநிலையில் இருக்க வீரநாயகம் மட்டும் கனகு பார்த்த சம்பந்தம் என ஸ்வாமிநாதன் கூறியதில் இருந்து மனைவியை பார்வையால் எரித்துக்கொண்டிருக்க கனகமோ வீரநாயகரின் பார்வைக்கு அகப்படாமல் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தார்.
அனைவரும் நலம் விசாரித்துவிட்டு பொதுவாக சில விஷயங்களையும் பேசிவிட்டு பெண்ணை அழைத்து வர சொல்ல சரஸ்வதி எழில்விழியை அழைத்து வந்தாள்.
தன் நிறத்திற்கு பொருத்தமாக மயில் நிற பச்சை வண்ண காட்டன் புடவையில் தன் இடைவரை நீண்ட கூந்தலை தளர பின்னி மல்லியும் கனகாம்பரமும் கலந்து கட்டிய பூவை வைத்து நீண்ட புருவங்களுக்கு மத்தியில் சிறு சிவப்பு நிற பொட்டும் வைத்து,
கையில் கண்ணாடி வளையலும் கழுத்தில் சிறு கிரிஸ்டல் பாசியும் காதில் வெள்ளை கல் வைத்த சிறு ஜிமிக்கியும் மூக்கில் ஒற்றைகல் மூக்குத்தியும் என எளிய அலங்காரத்தில் தேவதையென வந்து நின்ற எழில்விழியை,
அவளின் குழந்தைத்தனமான முகத்தையும் நிறத்தையும் கண்டு தெய்வானை மற்றும் சாரதாவை தவிர அனைவரும் உடனடியாக முகத்தில் திருப்தியை காட்ட, சாரதா எழிலின் எழிலில் பொறாமைப்பட தெய்வானையோ எழிலின் ஆபரணங்களை பார்த்து முகத்தை சுளித்தார்.
“ அப்புறம் மச்சான் எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சுருக்கு. பையன் போட்டோ இதுல இருக்கு உங்களுக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம் நாம ” என ஸ்வாமிநாதன் உடனடியாக கூறிவிட தெய்வானையோ மெதுவாக ஸ்வாமிநாதனிடம்,
“ என்னங்க நாம ஊருக்கு போயிட்டு அப்புறம்…” என கூற வருகையில்
“ எங்க இருந்தாலும் இதான் என் முடிவு. அதனால நீ கொஞ்சம்……” என கூறி ஒரு பார்வை பார்க்க அதில் மனதில் பொறுமலுடன் தெய்வானை அமர்ந்திருந்தார்.
கதிரின் போட்டோவை பார்த்த அன்னலெட்சுமியும் வெங்கடேசனும் திருப்தியான பார்வை பார்த்துக்கொள்ள சரஸ்வதியும் அவரின் கணவரும் சரி என தலையை அசைத்து சம்மதம் கூறிவிட,
‘ ஏனோ திருமண பந்தத்தில் இணைய போகும் வதுவையிடம் கேட்கவோ இல்லை போட்டோ காட்டவோ யாருக்கும் மனதில்லையோ இல்லை நினைவில்லையோ ’.
பின் சீர் வரிசை பேசபட ஸ்வாமிநாதனோ,
“ என் மகனுக்கு சீர் வாங்குறது சுத்தமா பிடிக்காது. சீர் குடுக்கணும்ன்னு முடிவுபண்ணுனா இந்த சம்மந்தத்தை மறந்துட வேண்டியதுதான். ஏன்னா அவன் சொன்னது அவனுக்கு வர பொண்டாட்டிக்கு என்ன வேணுமோ அதை அவன் பார்த்துக்குவான். அதோட கடனை வாங்கி நீங்க செஞ்சு அப்புறம் அதுல நீங்க கஷ்டப்பட்டா எங்க வீட்டு மருமகளும் கஷ்டப்படும். அதுவும் நிம்மதியா இருக்காது. அதனால உங்க மகளுக்கு நீங்க என்ன செய்யணுமோ செஞ்சுக்கோங்க செய்யலைனாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை ” என கூறிவிட ஏனோ வெங்கடேசனுக்கு அந்த நிமிடம் மனதில் ஒரு நிம்மதி வந்தது என்னவோ உண்மை.
அவரின் பயமே அரசாங்க உத்தியோகம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் மகளை திருமணத்திற்கு பின் கஷ்டப்படுத்துவார்களோ என பயந்து கொண்டிருந்தவற்கு சுவாமிநாதனின் இந்த பேச்சு நிம்மதியை தந்தது.
இருந்தாலும் தங்களால் இவ்வளவு செய்ய முடியும் என வெங்கடேசன் கூற ஸ்வாமிநாதன் உங்கள் விருப்பம் என கூறிவிட்டார்.
ஆனால் தெய்வானைக்கு தான் இதில் சுத்தமாக உடன்பாடு இல்லை. அவர் பார்த்த பெண்களுக்கு செய்வதில் ஐந்தில் ஒரு மடங்குதான் செய்யமுடியும் என வெங்கடேசன் கூற ஸ்வாமிநாதன் சிரிப்புடன் தலை ஆட்டிவிட்டு ரெண்டு மாதத்தில் திருமண நாளும் குறித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டனர்.
அந்த எரிச்சலை வீட்டில் காட்ட இதில் ஸ்வாமிநாதனுக்கும் தெய்வானைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தான் நினைத்ததை செய்து பழக்கம் உள்ள தெய்வானை எப்பிடியாவது இந்த சம்பந்தத்தை நிறுத்திவிட எண்ணி வீட்டிற்கு வந்த கதிரிடம்,
“ கதிரு உனக்கு அப்பா பொண்ணு பார்த்து கல்யாண தேதி முடிவு பண்ணிருக்காங்க”
“ தெரியுமா அப்பா நேத்தே போன்ல சொல்லிட்டாங்க” என கதிர் கூறிக்கொண்டு திண்ணையில் அமர
“ உனக்கு அம்மா எப்பிடி எல்லாம் பொண்ணு பார்த்தேன் உங்க அப்பாவுதான் பார்த்துருக்காரே. டேய் தம்பி இந்த இடம் வேண்டாம்டா. இந்த மதுரை சம்பந்தம் சரி இல்லடா என தெய்வானை கூற “
“ ஏன்??…” என ஒற்றை கேள்வி எழுப்பின கதிரிடம்
“ ஏன்னா??… எனக்கு பிடிக்கல”
“ உங்களுக்கு பிடிக்கலைன்னா நேத்து நீங்க அங்க போயிருக்க கூடாது. எல்லாம் பேசி ஒரு பொண்ணுக்கு நம்பிக்கையை குடுத்துட்டு பிடிக்கலன்னு வந்து கத்திக்கிட்டு இருக்கீங்க. சரி காரணம் சொல்லுங்க உங்களுக்கு ஏன் பிடிக்கல??….. பொண்ணு கேரக்டர் சரி இல்லையா??…..” என கதிர் கேட்க
“ டேய்!!!… அதை பத்தி ஒன்னும் தெரியல விசாரிச்ச வரைக்கும் அமைதிதான் சொன்னாங்க ” என தெய்வானை கூற
“ அப்புறம் என்னமா??….”
அவனிடம் வரதட்சனை பற்றி பேசமுடியாது, பேசியதற்கு வாங்கி கட்டிக்கொண்டதும் நியாபகம் வர,
“ டேய்!!… அது…. அது…” என இழுத்தார்
“ என்ன சொல்லுங்க?? ”
“ இல்லை அந்த பொண்ணுக்கு ரெண்டுமே அக்கா ”
“ சரி ”
“ அதான் பையன் இல்லாத வீடு வேற ”
“ சரி ”
“ ஒரு அண்ணன் தம்பி இருந்தா…..” என தெய்வானை கூறி நிறுத்த
“ ஹ்ம்ம் சொல்லி முடிங்க சொல்ல வந்ததை ”
“ இல்லை உனக்கும் நாளபின்ன உதவின்னா மச்சான்னு ஒருத்தன் இல்லை. உன் பிள்ளைகளுக்கு தாய் மாமன் சீரு யாரு செய்வா அதான் ”
“ என்னைய என்ன ஒன்னத்துக்கும் வக்கு இல்லாதவன் அடுத்தவன் உழச்சுக்குடுப்பான் அதுல உட்கார்ந்து மானம்கெட்டு சோறு தின்கிறவன்னு நினைக்குறியா??…. இல்லை பிள்ளை பெத்துக்க தெரியுற எனக்கு அந்த பிள்ளைக்கு என்ன என்ன செய்யணும்ன்னு தெரியாதுன்னு நினைக்குறியா??…. இல்லை என்னால என் பிள்ளைகளுக்கு செய்ய முடியாதுன்னு நினைக்குறியா சொல்லும்மா. என்னைய பத்தி என்ன நினைச்சு இப்படி எல்லாம் யோசிக்குற ” என கத்திய கதிரிடம் பதில் கூற இயலாது அமைதியாக தெய்வானை
“ இல்லடா உன் நல்லதுக்கு….”
“ என்ன என் நல்லது??…. என் நல்லதுக்குதான் என்னைய படிக்க வச்சுட்டியே. அப்புறம் என்ன கூட துணைக்கு ஒருத்தன தேடுற எதுக்கு ” என மீண்டும் கதிர் கத்த கலங்கிய கண்களுடன்
“ இல்ல கதிரு….”
“ இங்க பாருமா குறிச்ச நேரத்துல என் கல்யாணம் நடக்கட்டும் இதுல இனிமே நீ ஒன்னும் சொல்லவேண்டாம். இப்போ பார்த்துக்குற அந்த பொண்ணுதான் உனக்கு ரெண்டாவது மருமக. அவ எப்படி இருப்பான்னு கூட நான் இன்னும் பார்க்கல. எப்படி இருந்தாலும் அவதான் உனக்கு மருமக சொல்லிட்டேன் ” எனகூறிவிட்டு கதிர் தனது அறைக்கு சென்றுவிட தெய்வானை ஏதும் கூறாது அமைதியாக சென்றுவிட்டார்.
கதிரின் அறைக்கு வந்த விஜயன்,
“ அண்ணா ” என அழைக்க
“ என்னடா ”
“ அப்பா அண்ணி போட்டோவை உனக்கு காட்ட சொல்லி குடுத்தாங்க ”
“ ஹ்ம்ம் வச்சிட்டு போ ” என கதிர் கூறிவிட விஜயன் கதிரின் அருகில் வைத்துவிட்டு சென்றுவிட்டான்.
சிறுது நேரம் யோசனையில் இருந்த கதிரும் போட்டோவை அலட்சியமாக பார்வை இட ஏனோ பார்க்க பார்க்க எழில்விழியின் விழியில் விழுவதைப்போல பிரம்மை ஏற்பட உடனடியா போட்டோவை வைத்துவிட்டான்.
“ என்ன இந்த பிள்ளை இவ்வளவு கலரா இருக்கு. ஹ்ம்ம் மூக்கு குத்திருக்கோ???…” என மீண்டும் போட்டோவை பார்வையிட மீண்டும் தலையை குலுக்கிவிட்டு போட்டோவை வைத்துவிட்டான்.
“ பொண்ணு சின்னப்பிள்ளையா தெரியுதே ” என மீண்டும் போட்டோவை பார்வையிட எழில்விழியின் குழந்தைத்தனமான முகத்தை எவ்வளவு நேரம் பார்த்தானோ அவனே அறியவில்லை. எழில்விழியின் முகம் அவன் மனதில் பதிந்ததையும் அவன் உணரவில்லை.
கல்யாண வேலைககள் இரு வீட்டிலும் வேகமாக நடைபெற இன்னும் ஒரு மாதம் இருந்த நிலையில் மதுரையில் எழில்விழியின் வீட்டின் முன் கதிரவன் நிற்க எழில்விழியோ மன்னவனை இதற்கு முன் பார்த்திராததால் இடுப்பில் தண்ணீர் குடத்துடன்,
“ யாரு வேணும்?? ” என கேள்வியுடன் நிற்க
“ ஹ்ம்ம் நீதான் ” என்ற கதிரின் பதிலில் அதிர்ந்து விழித்த எழிலின் விழியில் உறைந்தானோ என உணரும் முன் ……