Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 2

அத்தியாயம் 2

 

கள்ளம் கபடம் இல்லா பல்லவியின் அந்த பார்வையில் மொத்தமாய் உருகிவிட்டார் லதா.


Advertisement

 

மகன் சொல்வது தனக்கு நன்றாய் புரிந்தது. ஆனாலும் புரியாத பார்வை பார்த்து வைத்த பல்லவியைல கண்டு வருந்தியவர்,

Advertisement

Advertisement

 

“ஈஸ்வர்!” என அழைத்து அவன் பக்கம் திரும்ப, அதை எதிர்பார்த்தது போன்றே அன்னையை முறைத்தபடி பார்த்து நின்றான் கீர்த்திஸ்வரன்.

Advertisement

 

‘இதுக்கு இவன் அப்பாவே தேவல போல’ என்றும்,

 

‘உன்கிட்ட போய் உதவி கேட்டேனே!’ என்றும் தான் நினைக்க முடிந்தது அந்த நிமிடம் லதாவிற்கு.

 

கீர்த்திஸ்வரனுக்குமே அவ்வளவு கோபம். இத்தனை சிறிய பெண்ணுக்காக தான் அன்னை தன்னிடம் சிபாரிசு கேட்டாரா என பொங்கி வந்த போதும் அந்த இடத்தில் நாகரீகம் கருதி அமைதியாய் அவன் இருக்க,

 

“ஈஸ்வர்! பல்லவி சிட்டுவேஷன் அப்படி டா. டிகிரி முடிக்கலை தான். ஆனா வேலை குடுத்தா அவ அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அவ படிப்பையும் பார்த்துப்பா இல்ல? கொஞ்சம் யோசி டா” என எத்தனை சத்தமின்றி கூற முடியுமோ அவ்வளவு சத்தமின்றி கிட்டத்தட்ட அவன் காதுக்குள் ரகசியம் பேசினார் லதா.

 

“சாப்பிட வாங்க ம்மா. அந்த பொண்ணையும் கூட்டிட்டு வாங்க!” அவர் கேள்விக்கு பதில் கூறாமல் இப்படி சொல்லி செல்பவனை இப்பொழுது லதாவுமே பாவமாய் பார்க்கும் நிலை தான்.

 

 

“வா பல்லவி! சாப்பிடுட்டே பேசுவோம்!” என அப்போதும் ஒரு நம்பிக்கையாய் அழைத்தார் அவளை லதா.

 

“இல்ல இல்ல.. அம்மா எனக்காக வெயிட் பண்ணுவாங்க!” பல்லவி சொல்ல, இவர்கள் பேசுவதை கேட்டபடி தான் நகர்ந்தான் கீர்த்திஸ்வரன்.

 

“ரெண்டு தோசைல என்ன ஆக போகுது? நீ வா!” என அவள் கைபிடித்து இழுத்து சென்றார் லதா.

 

மகன் வேலை கொடுக்க போவதில்லை என்று புரிந்து போனவருக்கு அவளை அதுவும் தன்னை நம்பி வந்தவளை அப்படியே அனுப்பி வைக்க மட்டும் முடியவே இல்லை.

 

எதாவது செய்ய சொல்லி மனமும் கெஞ்ச, அதன் அழுத்தங்களோடு தான் பல்லவியையும் அழைத்துக் கொண்டு சாப்பிடும் இடம் வந்து சேர்ந்தார்.

 

“அப்பா எங்கே ம்மா?” என்றவன் கேட்கும் பொழுது சுட சுட தோசையும் அதற்கான சட்னி சாம்பார் என வேலைக்கார பெண் எடுத்து வந்தார் சரியாய்.

 

“பரவால்ல எனக்கு வேண்டாமே!” என்று மெதுவாய் லதாவிடம் சொல்லிய பல்லவிக்கு இது என்ன தன் வேலைக்கான பதிலை சொல்லாமல் இப்படி வந்து அமர்ந்துவிட்டான் என்று உள்ளுக்குள் அல்லாடல்.

 

“மூச்!” என்ற லதா,

 

“அப்பா தான் காலைலயே சைட்க்கு கிளம்பிட்டாங்களே! உங்கிட்ட சொல்லல?” என்று கேட்டு,

 

“தேவி! ரெண்டு தோசை மெல்லிசா போடேன்!” என இங்கிருந்தே குரல் கொடுத்தார்.

 

“நான் ஆபீஸ் தான் போறேன். அப்பா வந்தா மதியமா அங்க வர சொல்லுங்க” என்றும் மகன் சொல்லவும் அதை மனதில் குறித்துக் கொண்டு,

 

“தண்ணி இல்லையா?” என்றபடி ஜக்கை எடுத்துக் கொண்டு இரண்டடி எடுத்து வைத்தவர் நொடியும் எதிர்பாராத நேரத்தில் கீழே விழுந்திருக்க, சில நொடிகள் தேவையாய் இருந்தது பல்லவிக்கு அந்த சூழ்நிலை புரிய.

 

“ம்மா!” என கீர்த்திஸ்வரன் ஓடி சென்று அன்னையை தூக்க முயல, தானுமாய் எழுந்து ஓடினாள் பல்லயும் லதாவிடம்.

 

“அச்சச்சோ!” என பதறி ஓடி வந்தார் வேலை செய்யும் பெண் தேவியும்.

 

“எந்திரிங்க ம்மா!” என சொல்லி அவனும் தூக்க முயல,

 

“காலை அசைக்க முடியல டா. அம்மா!” என அழுதேவிட்டார் லதா.

 

“ஷிட்!” என்றவன் அங்கே தண்ணீர் கொட்டி இருப்பதையும் அப்பொழுது தான் கண்டான்.

 

“என்ன தேவிக்கா இது?” என அவரிடம் கோபமாய் அவன் கேட்க,

 

“அஞ்சலி பாப்பா டப்பால தண்ணி எடுத்துட்டு இருந்துச்சு தம்பி. நானும் அப்புறம் கவனிக்கல!” என்றார் தேவி.

 

பேசவே முடியவில்லை லதாவிற்கு. தூக்கவும் வேண்டாம் என்றுவிட்டார் மகனிடம். பல்லவிக்கு என்ன செய்வதேன்றே தெரியாத நிலை.

 

“ம்மா! ஹாஸ்பிடல் போய்டலாம்!” என்று கீர்த்திஸ்வரன் சொல்ல, காலை அசைத்தாலே உயிர் வலி அவரிடம்.

 

“முடியலையே டா!” என்றவர் கண்ணீர் முகம் கண்டு அவன் இன்னும் தடுமாற,

 

“நீங்க கார் எடுங்க சார். நானும் இந்த பொண்ணும் அம்மாவை மெதுவா கூட்டிட்டு வர்றோம்!” என்று சமையல் பெண் தேவி சொல்ல,

 

“அதான் எழுந்துக்க முடியலைன்னு சொல்றாங்களே அம்மா!” என்றான் அவரிடம் பதட்டமாய்.

 

“மெதுவா தூக்கிடுவோம் சார். முடிஞ்சவரை காலை அசைக்காம. இப்படியே பார்த்துட்டு இருக்க முடியாதே!” என பல்லவியும் சொல்ல,

 

“வலிக்குது டா ஈஸ்வர்!” என்றவர் குரலில் அத்தனை கரகரப்பு. அதை தாண்டி எதுவும் யோசிக்க முடியாமல் போக,

 

“ஓகே!” என்றவன் சொல்படி மற்ற இருவரின் உதவியோடு காருக்கு தூக்கி தான் வந்தனர்.

 

தேவியை வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு காரை எடுத்த கீர்த்திஸ்வரனிடம் எதுவும் சொல்லாமலே தானும் லதாவோடு அமர்ந்து கொண்டாள் பல்லவி.

 

லதா காலுக்கு என்னவோ என்று ஒரு கவலை என்றால் இருந்திருந்து நான் வரும் பொழுதா இப்படி நடக்க வேண்டும் என்று ஒரு கவலையானது பல்லவிக்கு.

 

வழியிலேயே சத்தமின்றி சித்ராவிற்கு அழைத்து விஷயத்தை சொல்ல, “அய்யயோ! அண்ணி பாவம் டா. கொஞ்சம் என்னனு கூட இருந்து பார்த்துட்டு வா!” என்று சித்ரா சொல்லிவிட, சரி என்று சொல்லி வைத்திருந்தாள்.

 

“அய்யோ! ம்மா! முடியலை ஈஸ்வர். வலிக்குது டா!” என லதாவின் சத்தமும் கேட்டுக் கொண்டே தான் இருந்தது காரினுள்.

 

“இப்ப போய்டலாம் ம்மா!” என ஈஸ்வரும் அவரிடம் சமாதானம் சொல்லி தான் அழைத்து வந்தான்.

 

வழியில் மகேஸ்வரனுக்கு மகன் அழைத்து மருத்துவமனை வர சொல்ல,

 

“கண்ணை ஒழுங்கா தரையில வச்சு நடக்க மாட்டாளா அவ. எங்கேயாவது விழுந்து வாரிக்கிட்டு. கால் இருக்குதா இல்லையா?” என எரிந்து விழுந்தார் மகேஷ்வரன்.

 

காரில் ப்ளூடூத் மூலம் இணைத்திருக்க, தந்தை இப்படி பேசுவார் என கீர்த்திஸ்வரனும் எதிர்பாராதவன்,

 

“ப்பா!” என்ற ஒற்றை கண்டிப்பு மிகுந்த அழைப்பிற்கு பின் அமைதியாகி,

 

“எந்த ஹாஸ்பிடல்!” என உறுமலுடன் கேட்டிருந்தார் மகேஸ்வரன்.

 

“எனக்கு கால் இல்லைனா சந்தோசமாமா அவருக்கு?” என்று லதா கேட்க,

 

“வலி இல்லையா உங்களுக்கு?” என்ற பல்லவி கேள்வியில் கீர்த்திஸ்வரனும் திரும்பிக் கண்டு முறைத்தான் அவளை.

 

மருத்துவமனை வந்து சேர்ந்த போது லதாவின் ஒரு கால் மட்டும் வீங்கி தடித்திருக்க, “ஓஹ் ஷிட்!” என்றவனுக்கு அதிகத்திற்கும் பயமாகிவிட்டது.

 

லதாவினை அழைத்து சென்று உரிய சிகிச்சை கொடுத்து என அரைமணி நேரம் கடந்திருக்க, “அவங்களுக்கு கால்ல எலும்பு வீக்கமாகி இருக்கு” என்ற மருத்துவர் எதனால் வலி எப்படி அடிபட்டது என்று கேட்டு தெரிந்து கொண்டிருக்க,

 

“சீக்கிரம் சரியாகிடும்ல டாக்டர்?” என்று கேட்டான் ஈஸ்வர்.

 

“கொஞ்சம் பலமா தான் அடிபட்டிருக்கு. ரெண்டு மாசமாவது அவங்க பெட் ரெஸ்ட்ல தான் இருக்கனும்!” என்று சொல்ல, அவன் அதிர்ந்து நின்றிருக்கும் போதே,

 

“கால் கொஞ்சம் உயரமா தான் இருக்கனும். அதை மைண்டைன் பண்ணிக்கோங்க!” என்று பலவித மருத்துவ குறிப்புகளையும் கூறி செல்ல, பல்லவி தான் அவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டாள்.

 

“ம்மா! ஆர் யூ ஓகே?” என அன்னை அருகில் வந்தவன்,

 

“அப்படி எப்படி ம்மா விழுந்திங்க.. பார்த்து வந்திருக்க கூடாது? இது தேவையா?” என்றவன் நிஜத்திற்கும் அதிகத்திற்கு பயந்துவிட்டான்.

 

“வீட்டுக்கு போக சொல்லிட்டாங்களா ஈஸ்வர்?” என்றவர் குரலில்,

 

“ஈவ்னிங் வரை செக் பண்ணனும் சொல்லிருக்காங்க!” என்றான்.

 

கூடவே தான் பல்லவியும் நின்றிருந்தாள். “ஓகே வா நீங்க?” என்றும், “சரியாகிடும் பயப்படாதீங்க!” என்றும் அவள் சொல்ல, மகேஸ்வரன் வருகை.

 

மகன் கைப்பிடித்து லதா என்னவோ சொல்லிக் கொண்டிருக்க, மருந்து மாத்திரைகள் வாங்கி வர சொல்லி ஒரு நர்ஸ் பேப்பரை கொண்டு வந்து நீட்டவும் கையில் வாங்கிக் கொண்ட பல்லவி,

 

“நீங்க அம்மாவை பாருங்க சார். நான் வாங்கிட்டு வர்றேன்!” என்று சொல்லி கிளம்பி செல்லும் நேரம் தான் மகேஸ்வரன் வந்திருந்தார்.

 

“என்ன டா? என்ன தான் ஆச்சாம்? வீட்டுக்கு போக சொல்லிட்டாங்களா இல்லையா?” என்று வந்தார் மகேஸ்வரன்.

 

கீர்த்திஸ்வரன் நடந்ததை சொல்ல, “ஏன் டி ஏழு கழுதை வயசாகுது. இப்படி தான் கண்ணை மேல வச்சுட்டு நடப்பியா நீ? ஆளைப் பாரு. இப்ப யாருக்கு வலியும் வேதனையும்!” என்றவர்,

 

“இருக்குறவன் வேலையை எல்லாம் கெடுத்துட்டு இங்க வந்து படுத்தாச்சு!” என்று முணுமுணுக்க,

 

“ப்பா! ஹாஸ்பிடல் வந்து இதென்ன பேச்சு?” என்று கீர்த்திஸ்வரன் கொஞ்சம் அதட்டவும் தான் அமைதியானார்.

 

பல்லவி சில நிமிடங்களில் மருந்துகளுடன் உள்ளே வந்தவள் லதா அருகே அவற்றை எல்லாம் வைக்க, கேள்வியாய் பார்த்தார் மகேஸ்வரன்.

 

லதா பேச வந்தவரை தடுத்து, “நீங்க ரெஸ்ட் எடுங்க ம்மா!” என்று சொல்லி வெளி வந்தவன் தந்தையிடம் பல்லவிப் பற்றி சொல்ல,

 

“சித்ரா பொண்ணா? என்கிட்ட சொல்லாம நீங்க ரெண்டு பேரும் முடிவெடுக்குற அளவுக்கு வந்தாச்சா?” என்றார் மகனை முறைத்த மகேஸ்வரன்.

 

“வேண்டாம்னு தான் ப்பா சொல்லிட்டு இருந்தேன். அதுக்குள்ள அம்மா வழுக்கி விழுந்து இங்க வர்ற மாதிரி ஆகிடுச்சு.” என்று கூறினான் கீர்த்திஸ்வரனும்.

 

லதாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப தயாராகி இருந்தாள் பல்லவி.

 

“ஈஸ்வரை கொண்டு வந்து விட சொல்லவா பல்லவி?” என லதா கேட்க,

 

“அதெல்லாம் வேண்டாம். நான் பாத்துக்குறேன். நீங்க கவனமா இருங்க. நல்லா ரெஸ்ட் எடுத்தா ரெண்டு மாசத்துல சரியாகிடும். நடக்க ஆரம்பிச்சிடலாம்!” என்று அவள் பேச, மீண்டும் லதாவிற்கு கவலையானது அவளை எண்ணி.

 

“வர்றேன்!” என சொல்லிக் கொண்டு அவள் வெளிவரவும் மகேஸ்வரன் அவளிடம் தலையை மட்டும் அசைத்துவிட்டு லதா அருகே சென்றார்.

 

“வர்றேன் சார்!” என கீர்த்திஸ்வரனிடமும் அவள் சொல்ல,

 

“ரொம்ப தேங்க்ஸ் ஹெல்ப் பண்ணினத்துக்கு!” என்று அவனுமே விடைபெற தலையசைக்க, தயக்கமாய் தலையை ஆட்டி திரும்பி நடந்தவள் இரண்டு எட்டுக்கள் வைத்துவிட்டு பின்,

 

‘இப்ப கேட்கலைனா எப்ப கேட்குறது?’ என நினைத்து மீண்டும் அவன்முன் வந்து நின்றாள்.

 

என்ன என்று ஈஸ்வர் கேள்வியாய் அவளைப் பார்க்க, “தப்பா நினைச்சுக்காதீங்க சார்! மருந்துக்கு மொத்தம் ரெண்டாயிரத்து நூறு ரூபாயை நான் தான் குடுத்தேன். அந்த காசு இருக்குமா?” என்றவள், அவன் பார்வையில்,

 

“இப்ப இல்லைனாலும் நாளைக்கு கூட வாங்கிக்குறேன். நோ ப்ரோப்லேம் சார்!” என்றிருந்தாள் பெரிய மனதுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!