Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 25

“அப்புவுக்கு விசம் வைத்துவிட்டார்கள். எங்களுக்கு உங்கம்மா மீதுதான் சந்தேகம். அப்படியிருக்க அதை எப்படி உங்ககிட்ட வெளிப்படையா சொல்ல முடியும்?”

என்று கூறிய கிருஷ்ணாவை கோபத்தோடு பார்த்தான் சித்தரஞ்சன்.

“என்ன பேத்தல் இது?”

“ப்ளீஸ் அண்ணா. எங்களுக்கும் இது சந்தேகம்தான். அவங்களுக்கு அப்புவை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கலை. உங்க வீட்டில் சமையலையும் அப்புதான் பார்த்துக்கிட்டாள். வீட்டில் வெளியாட்கள் யாருமில்லை. அப்புறம் யார் மீது சந்தேகப்பட?”



Advertisement

“அவர்கள் என் அம்மா கிருஷ்ணா? உனக்கு இப்படிப் பேச என்ன தைரியம்? அவங்க நிச்சயமா இந்தக் காரியத்தைப் பண்ணியிருக்க மாட்டாங்க.”

“அப்புவும் அதேதான் சொல்கிறாள்.”

அவன் சொன்ன அடுத்த கணம் அவன் கோபம் இருந்த இடம் காணாமல் போனது.

Advertisement

“எப்போது சொன்னாள்?”

Advertisement

“இப்பக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் உங்ககிட்ட பேசினேனே? அதுக்கு முன்னாடி அவ என்கிட்டதான் பேசிக்கிட்டிருந்தாள். லேப் ரிசல்ட் பார்த்த உடனே அதிர்ச்சி. யார்கிட்டயும் வெளிப்படையா சொல்லவும் முடியலை. அவளைப் பாதுகாப்பாவும் பார்த்துக்கனும். அதுதான் அப்படி ஒரு பொய்யைச் சொன்னோம்.”

“யார் யார்?”

“நானும் நவீனும்தான்.”

Advertisement

“நினைத்தேன். இந்த மாதிரி சின்னப்பிள்ளைத்தனமான முடிவை நீங்க இரண்டு பேரும்தான் எடுப்பீங்கன்னு நினைச்சேன்.”

“அண்ணா.”

“நீ என்கிட்ட அப்பவே சொல்லியிருந்தால் நான் யாருன்னு கண்டுபிடிச்சிருப்பேன். அதை விட்டுட்டு தப்புத்தப்பா யோசிச்சு நீங்களா ஒரு நாடகத்தை நடத்திட்டீங்க. இப்ப குற்றவாளியைப் பிடிக்கிறது எப்படி? எப்படி ப்ரூப் பண்றது?”

“சாரிண்ணா.” என்றான்.

“பரவாயில்லை விடு. நான் பார்த்துக்கறேன்.”

“அப்பா அப்பவே உங்ககிட்ட சொல்லச் சொன்னார். நான்தான் முட்டாள்தனம் பண்ணிட்டேன்.”

“நீ உன் தோழியோட நன்மையை நினைச்சுத்தான் செஞ்சே. சரி வர்றேன் கிருஷ்ணா.” என்றவன் விடைபெற்றான்.

போகும் வழியெல்லாம் அதை யார் செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் மனதை அரித்துக்கொண்டிருந்தது.

அவர்கள் வீட்டில் சிசிடிவி கேமிரா இருக்கிறது. முதலில் அதைப் பார்க்க வேண்டும். அன்று யாராவது சந்தேகத்துக்கு உரியவர்கள் வீட்டிற்கு வந்தார்களா? என்று பார்க்க வேண்டும்.

அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் அனைவருமே விசுவாசமானவர்கள். அதனால் வெளியில் இருந்து வந்த யாரோதான் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தவன் வண்டியை வேகமாக ஓட்டினான்.

வீட்டிற்கு வந்த உடனே மனோரஞ்சனை மட்டும் அழைத்து விசயத்தைக் கூறினான்.

மற்றவர்களிடம் பிறகு கூறிக்கொள்ளலாம் என்று தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டனர்.

அன்றைய நாளுக்கான வீடியோ பதிவை எடுத்து, காலையில் இருந்து ஓட விட்டுப் பார்த்தனர்.

அதில் அன்று வித்தியாசமாக இருந்த வரவு என்றால் அது சந்தானத்தின் பங்காளியின் வரவுதான். வேறு யாரும் வெளியாட்கள் வரவில்லை.

அவன் சந்தேகம் வலுத்தது.

“என்ன செய்யலாம் அண்ணா?”

“நாம முதல்ல சந்தானம் மாமா வீட்டுக்குப் போவோம்.” என்றான்.

மனோரஞ்சனும் சம்மதித்தான்.

அவர்கள் திருமணம் முடிந்த பிறகு ஒரு நாள் மனோரஞ்சனையும், சரண்யாவையும் தனியே சந்தித்த அவர் தன்னுடைய செய்கைக்கு மன்னிப்புக் கேட்டார்.

அப்போதே அவர் மீதிருந்த கோபம் எல்லாம் போயிற்று.

அவர்கள் சொன்னதைக் கேட்ட சந்தானம் அதிர்ந்து போனார்.

“என்ன சொல்றீங்க மாப்பிள்ளை? அவன் எதுக்கு அங்க வந்தான்? அதுவும் அவன் பொண்டாட்டியையும் அழைச்சுட்டு வந்திருக்கான்.”

“தெரியலை மாமா. நான் வீட்டில் இதைப் பத்திப் பேசலை.”

“சரி பொறுங்க. நான் அக்காக்கிட்ட கேட்டுப் பார்க்கறேன்.”

அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியில் போனவர் சிறிது நேரத்தில் வெளியில் வந்தார்.

“அவன் தன் பொண்ணுக்கு கல்யாணம் தகைஞ்சுடுச்சுன்னு பேச வந்தானாம். அதை ஏன் வேலை மெனக்கெட்டு என்கிட்ட வந்து சொன்னான்னு தெரியலைன்னு அக்கா புலம்புது. அவன் பொண்டாட்டி சமையல்கட்டில் போய் அபர்ணா பொண்ணுக்கிட்ட ஏதோ பேசிட்டு வந்தாள்னு சொல்லுது. அவன் பொண்ணுக்கு இன்னும் கல்யாணம்லாம் தகையல மாப்பிள்ளை. இவன் ஏதோ காரணம் சொல்லிக்கிட்டு வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான்.”

“அப்பதான் மாமா எதிலோ கலந்திருக்கனும்.”

“அவன் செஞ்சாலும் செய்வான் மாப்பிள்ளை. வாங்க போய் அவனை என்னன்னு கேட்போம்?”

ஆனால் சந்தானத்தின் பங்காளி அத்தனை எளிதில் ஒத்துக்கொள்ளவில்லை.

எகிறிக்குதித்தான்.

சிசிடிவியில் வீட்டிற்கு வந்ததற்கு சான்று இருக்கிறது என்றதும் எகத்தாளமாய் சிரித்தான்.

“அப்ப நான்தான் விசத்தைக் கலந்தேன்னு சொல்றதுக்கு என்ன சாட்சி? எப்படி ப்ரூவ் பண்ணுவீங்க? அது நடந்து எத்தனை நாளாச்சு?” என்று கிண்டலுடன் பேச அவனை அடிக்கச் சென்றுவிட்டான்.

“வேண்டாம் மாப்பிள்ளை.” என்று அவனைத் தடுத்தார் சந்தானம்.

“விடுங்க மாப்பிள்ளை. எனக்கு ஆண்டவன் தண்டனை கொடுத்த மாதிரி அவனுக்கும் ஏதாவது வச்சிருப்பான்.”

“ஆமா வச்சிருப்பான்.” என்று மேலும் கிண்டல் செய்தான் அவன்.

“நீ நிம்மதியா இருந்துட முடியாது. நானும் பார்க்கத்தானே போறேன்.  ஆனாலும் உனக்கு ரொம்ப நன்றி.”

என்றான் சித்தரஞ்சன்.

அவன் குழம்பிப் போய் பார்த்தான்.

“ஒரு வருடத்தில் பிரியனும்னு அக்ரிமெண்ட் போட்டுத்தான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நீ எதுவும் செய்யாம விட்டிருந்தா கூட நாங்க ஒரு வருசத்தில் பிரிஞ்சிருக்கலாம். ஆனால் அவளைக் கொல்ல நீ செஞ்ச முயற்சியில்தான், அவள்தான் என்னோட உயிர். அவள் இல்லாமல் நான் இல்லைங்கிறதே எனக்குப் புரிஞ்சுச்சு. வரட்டுமா?”

அவனுடைய முகத்தில் ஈயாடவில்லை.

“என்ன மாப்பிள்ளை அவனுக்குப் போய் நன்றி சொல்லிக்கிட்டு. நம்ம பொண்ணுக்கு ஏதாவது நடந்திருந்தால்?”

“அப்ப அவன் உயிரோட இருந்திருக்க மாட்டான் மாமா.” என்றான்  தீர்க்கமான குரலில்.

சந்தானமும் வீட்டுக்கு வந்தார். மற்றவர்களிடம் நடந்ததைக் கூறினர்.

அப்போதுதான் இன்னொரு முறை இந்தத் தவறு நடக்க முடியாமல் தடுக்க முடியும் என்று சந்தானம் சொன்னதால் அனைவரிடமும் உண்மையைக் கூறிவிட்டனர்.

தேவேந்திரன் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தார்.

சந்தானம் கிளம்பிவிட்டார்.

சகுந்தலாவைத் தனியே சந்தித்த சித்தரஞ்சன், “அம்மா. அபிக்கு சாப்பாட்டில் விசம் கலந்திருந்தது நம்ம வீட்டில் யாருக்கும் தெரியாது. ஆனால் மத்தவங்களுக்கு உங்க மேல்தான் சந்தேகம். என்னை மன்னிச்சிருங்கம்மா. இதை என்னால் உங்ககிட்ட சொல்லாம இருக்க முடியலை. இதைக் கேட்ட அபி என்னை மாதிரியே நிச்சயமா இருக்காது. அவங்க செஞ்சிருக்கமாட்டாங்கன்னு சொல்லியிருக்கிறாள். அவளைப் புரிஞ்சுக்குங்கம்மா.” என்று கரகரத்த குரலில் கூறியவன் வெளியேறிவிட்டான்.

சகுந்தலா திகைத்துப்போய் அமர்ந்திருந்தார்.



இரவு நேரமாகிவிட்டது. இன்னும் சித்தரஞ்சன் வீட்டிற்கு வரவில்லை.

வேலை இருக்கிறது. இரவு உணவு வேண்டாம் என்று சண்முகத்திடம் கூறியிருக்கிறான்.

அவளிடம் எதுவும் பேசவில்லை.

காலையில் கோபத்தில் அடித்துவிட்டு, அதன் பின் அணைத்து நின்றவன் போகும்போது அவள் முகத்தைக் கூட திரும்பிப் பார்க்காமல் போனான்.

பிறகு வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் பேசியவன், அறைக்குள் வராமலேயே அப்படியே வெளியில் கிளம்பிவிட்டான்.

இத்தனை நாட்கள் உடல்நிலை சரியில்லை என்று தாங்கியவன், இப்போது அதற்கு அவசியமில்லை என்று நினைத்துவிட்டான் போலும்.

அவளும் சாப்பிடவில்லை.

ஒரு போர்வையை எடுத்துக் கீழே விரித்தவள் உறக்கம் வராமல் புரண்டு படுத்தாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டவள் கண்களை மூடிக்கொண்டாள்.

அவளருகில் வந்து நின்றான்.

‘என்ன செய்யப் போகிறான்?’

சட்டென்று அவள் உடல் மேலே பறந்தது போன்று உணர்ந்தாள்.

அவன் அவளைத் தன் கைகளில் ஏந்தியிருந்தான்.

“இத்தனை நாளா நல்ல பிள்ளையாத்தானே இருந்தே? இப்ப ஏன் கீழே படுத்துட்டே?”

அவன் பேச்சே குழறலாய் வந்தது. அவன் மூச்சுக்காற்றில் தேவை இல்லாத நெடி வேறு.

அவள் சட்டென்று அவன் கையில் இருந்து குதித்தாள்.

“குடிச்சிருக்கீங்களா?”

“ஆமாம். மனசு என்னவோ போல இருந்துச்சு. அதான்.”

அவளால் நம்ப முடியவில்லை. அவனுக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை என்று தேவேந்திரன், சண்முகம் எல்லோருமே கூறியிருக்கிறார்கள்.

அவளுமே இங்கு வந்ததில் இருந்து கவனித்திருக்கிறாளே.

மீண்டும் அவளைத் தூக்கினான்.

‘எத்தனை அசால்ட்டாக தூக்குகிறான்?’ மனதிற்குள் வியந்தாள்.

அவள் உடல்நிலை சரியில்லாமல் போன அன்றும் அவளை அலேக்காகத் தூக்கிச் சென்றதாகத்தான் மருத்துவமனை ஊழியர்கள் சொன்னார்கள். அவளுக்கு அதெல்லாம் நினைவில்லை.

அவளை அப்படியே கட்டிலில் கிடத்தினான்.

அவளை அணைத்துக்கொண்டவன், சும்மாயிருக்காமல் கணவனின் உரிமையை எடுத்துக் கொள்ளத் தொடங்கினான்.

“ப்ளீஸ் சித்து. வேண்டாம். இது தப்பு.” என்றாள் கெஞ்சலாய்.

“ப்ளீஸ் அபி. எனக்கு வேணுமே. இது தப்பில்லை.”

மேலும் வாயைத் திறக்கப் போனவளின் இதழ்களைத் தன் இதழ்களால் மூடினான். அவன் வேகத்திற்கு முன் அவள் துவண்டு போனாள்.



மறுநாள் காலை. அவள் எழுந்த போது சித்தரஞ்சன் சென்றுவிட்டிருந்தான்.

நேற்று மது அருந்திவிட்டு தன்னிலை மறந்து தப்பு செய்தவனுக்கு போதை தெளிந்த உடன் தப்பு என்று புரிந்திருக்கும். அதனால் தான் காலையிலேயே அவளைப் பார்க்காமல் சென்றுவிட்டான் என்று புரிந்தது.

அவள் வெளியில் சென்றாள். சண்முகம் அவளை எந்த வேலையும் செய்ய விடவில்லை. மற்றவர்களின் உபச்சாரத்தில் பயந்து போய் அறைக்குள்ளேயே நுழைந்து கொண்டாள்.

அங்கே சித்தரஞ்சன் இருந்தான்.

“அபி டார்லிங். எங்கடா போயிருந்தே.”

“ப்ளீஸ். என்னை அப்படி கூப்பிடாதீங்க.”

“ஏன் இத்தனை நாளும் நான் கூப்பிட்டப்ப சும்மாதானே இருந்தேடா. இப்ப என்ன? என்னால் உன்னை அம்முன்னோ, அப்புன்னோ கூப்பிட முடியாதுடா.”

பேசிக்கொண்டே அவளருகில் வந்தவன் அவள் கன்னத்தை வருடினான்.

அவளுக்குக் கூசியது.

“எவ்வளவு சாஃப்ட்?” என்றவன் அழுந்த முத்தமிட்டான்.

“இப்படிச் செய்யாமல் நேத்திக்கு நான் அறைஞ்சிட்டேனே.” என்று தனக்குத்தானே வருத்தப்பட்டுக்கொண்டான்.

அவளை கட்டிலில் அமர வைத்துக் கையை அவள் இடுப்பைச் சுற்றி படர விட்டான். அவள் நெளிந்தாள்.

“கமகமக்கிறேடா அபி.” என்றான்.

“ப்ளீஸ். இப்படி எல்லாம் செய்யறது, பேசறதை நிறுத்துங்க.” என்று கத்தினாள்.

அவன் விழிகளைத் திறந்து அவளையேப் பார்த்தான்.

“என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி நடந்துக்கறீங்க?”

“எப்படி நடந்துக்கிறேன்? நல்லாத்தானே நடந்துக்கிறேன்.”

“சும்மா நடிக்காதீங்க.”

“எங்கம்மா நடிக்கிறேன். கல்யாணமானவங்க இப்படி நடந்துக்கலைன்னா அது ரொம்பத் தப்பும்மா.”

“நம்ம கல்யாணம் ஒரு கண்துடைப்புக்காக பண்ணினது. இன்னும் சில மாதங்களில் பிரிஞ்சுடுவாம்.”

“அதை எல்லாம் மறந்துடு.”

“அப்படின்னா?”

“அது அப்படித்தான்.”

அவள் அவனை வெறித்துப் பார்த்தாள்.

“என்னால் ஏத்துக்க முடியாது.” என்றாள் திட்டவட்டமாய்.

“ஏன்? உன் கற்பைக் காப்பாத்தி அந்த கண்ணன்கிட்ட கொடுக்கப்போறீயா?” என்றான் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தவாறே.

அவள் உதட்டைக் கடித்து நின்றாள்.

“அது முடியாதே. நான் நேத்தே உன் கற்பை சூறையாடிட்டேனே.” என்றவன் வில்லன் சிரிப்பு சிரித்தான்.

“அப்ப தெரிஞ்சுதான் செஞ்சீங்களா?”

“ஆமாம். கண்ணுக்கு லட்சணமா ஒரு பொண்டாட்டியை வச்சுக்கிட்டு என்னை சாமியாரா இருக்கச் சொல்றியா?”

“நீங்க கல்யாணமே வேண்டாம்னு சொன்னவராச்சே?”

“ஆமாம் சொன்னேன்தான். அதுதான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ல. என் பிரம்மச்சர்யத்தை யார் நம்புவா?”

“அப்ப அடுத்தவங்க நினைக்கிறதுதான் உங்களுக்கு முக்கியம்?”

“ஆமாம். அது ரொம்ப முக்கியம்மா.”

“சரி. நேத்து நடந்ததை விட்டுடுவோம். இனி இந்த மாதிரி தப்பை செய்ய முயற்சி செய்யாதீங்க. எனக்குப் பிடிக்கலை.”

“பட். எனக்குப் பிடிச்சிருக்கேம்மா. உனக்குத் தெரிஞ்சுடுச்சு. அப்ப இனி அந்தக் கருமத்தைத் தொடாமலே என் காரியத்தை சாதிச்சுக்குவேன்.”

“அப்ப நேத்தைக்கு நீங்க ப்ளான் பண்ணித்தான் குடிச்சுட்டு வந்தீங்களா?”

“இன்னும் பாப்பா மாதிரியே கேள்வி கேட்கறியே அபி. ப்ச். அத்தான் ரொம்ப டயர்டும்மா. இப்ப ரெஸ்ட் எடுக்க விடு. ராத்திரிக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு.” என்றவன் அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

அவள் பல்லைக்கடித்தாள்.



இப்போதெல்லாம் அபர்ணா முகத்தில் சுரத்தேயில்லை.

அதற்கு மாறாக சித்தரஞ்சன் மிகவும் மலர்ச்சியுடன் இருந்தான்.

அவன் சொன்னபடியே நடந்து கொண்டான். அவன் மிகவும் அருமையான கணவன்.

அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. அவளை அடிக்கடி கொஞ்சினான். தன் வாழ்க்கையில் நடந்தவற்றைப் பகிர்ந்து கொண்டான்.

இரவு நேரங்களில் அவளைத் தொல்லை செய்தான். அவள் இல்லாமல் உறங்க முடியாது என்று அடம்பிடித்தான்.

அவன் என்ன செய்தாலும் அபர்ணாவிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. அவன் செய்வதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

ஆனாலும் சித்தரஞ்சன் தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.

இந்த நிலையில்தான் அருண்பிரசாத்திற்கும், மகாலட்சுமிக்கும் திருமணம் முடிவாகி அவர்களுக்கு அழைப்பு கொடுக்க வந்திருந்தனர் ராம்பிரசாத் தம்பதியினர்.

குடும்பத்துடன் வரவேண்டும் என்றுவிட்டுக் கிளம்பினர்.

இவர்களும் இரண்டு நாட்கள் முன்பாகவே கிளம்பினர். ஜெயச்சந்திரனும் தன் மனைவி, மகனுடன் வந்திருந்தார்.

மற்றவர்களுக்குத் தனித்தனியே அறையை ஒதுக்கிக்கொடுத்தவர்கள், அபர்ணாவின் அறையிலேயே அவர்கள் இருவரையும் தங்கச் சொன்னார்கள்.

அபர்ணா அந்த வீட்டை விட்டுப் போயிருந்தாலும், அறையை சுத்தமாக பராமரித்து வைத்திருந்தார் ராஜலட்சுமி.

அவர்களின் செல்வ செழிப்பை நேரில் கண்ட சகுந்தலா மலைத்துப் போனார். ஆனால் எந்த இடத்திலும் ஆடம்பரம் இல்லை.

அவர்களுக்கும் புத்தாடைகள் எடுத்திருந்தனர். வீட்டைச் சுற்றிப் பார்க்கும்போது நிறைய ஓவியங்கள் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.

“இதெல்லாம் எங்க வாங்கினது?” என்றான் சித்தரஞ்சன்.

“மாப்பிள்ளை. அதெல்லாம் அம்மா வரைஞ்சது.” என்றான் அருண்பிரசாத்.

“அப்படியா? அருமையா இருக்கு.” என்று பாராட்டினான்.

“அப்புவும் அம்மா கூட போய் டிராயிங்க் கத்துக்கிட்டா. அவங்க வரைஞ்சதை வச்சு கண்காட்சி கூட நடத்திருக்கோம். அப்பு உங்ககிட்ட சொல்லலையா?” என்றான் யோசனையாய்.

அபர்ணா என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்து நின்றாள்.

“அதுக்கெல்லாம் நேரம் எங்க மச்சான்?” என்றான் கண்சிமிட்டியவாறே.

‘அவன் இப்படி எல்லாம் பேசுவானா?’ என்று அருண்பிரசாத் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

“என்ன மச்சான் அப்படியே திகைச்சுப் போய் நின்னுட்டீங்க. நீங்க போகப்போக புரிஞ்சுப்பீங்க.” என்றான் புன்னகையுடன்.

“ஹலோ மாம்ஸ். நாங்க ரெண்டு சின்னப் பசங்க இருக்கிறதை மறந்துட்டுப் பேசறீங்க.” என்று கண்டன குரல் எழுப்பினான் நவீன் பிரசாத்.

“யார் அது? மதுவோட குரல் இப்படியிருக்காதே?” என்று தேடுவது போல் நடித்தான்.

“நடிக்காதீங்க. அப்புறம் உங்க ஆளோட ஓவியங்களை காண்பிக்கனும்னு நினைச்சேன். அந்த நினைப்பை மாத்திக்குவேன்.”

“சாரி மச்சான். நான் வேணும்னா தோப்புக்கரணம் போடவா?”

“அதெல்லாம் அப்புக்கிட்ட போட்டுக்குங்க. இப்ப வாங்க போகலாம்.” என்று அழைத்துச் சென்றான்.

வரவேற்பறை முழுவதும் ராஜலட்சுமி வரைந்த ஓவியங்கள்தான் மாட்ட வேண்டும் என்று அபர்ணா சொல்லிவிட்டதால் அவளுடைய ஓவியங்கள் அறைகளை அலங்கரித்தன.

ராஜலட்சுமி ஓவியங்களில் ராஜி என்று தன் பெயரைப் பொறித்திருப்பார்.

அபர்ணாவின் ஓவியங்களை பார்வையிட்டனர். அத்தனையும் தத்ரூபமாய் வரையப்பட்ட காட்சிகள். இவளுக்குள் இத்தனை திறமையா? அவள் வீட்டினர் ஆச்சர்யப்பட்டனர்.

அவளுடைய ஓவியங்களில் பெயருக்குப் பதிலாக சிறிய ஆலிலை கண்ணனை வரைந்திருந்தாள். சித்தரஞ்சன் அதைக் கண்டதும் சோர்ந்து போனான்.

திருமணம் நல்லபடியாக முடிந்தது. அபர்ணா நாத்தனாராக நின்று அவளுடைய கடமையைச் செய்தாள்.

பரிசுப் பொருட்களை நிரக்கக் கொடுத்தனர். சித்தரஞ்சனும், மனோரஞ்சனும் தனித்தனியே தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

அடிக்கடி வரப்போக இருக்க வேண்டும் என்று இரண்டு குடும்பத்தவரும் முடிவு பண்ணி, விடைபெற்றுக் கொண்டனர்.



நாட்கள் விரைந்தன.

அன்று காலையில் சரண்யா மயங்கி விழுந்தாள்.

மனோரஞ்சன் அவளிடம் ஓடிவந்து உடனே அவளைப் பார்க்குமாறு அழைத்தான்.

அபர்ணா அவளைப் பார்த்துவிட்டு, “நாட்கள் தள்ளிப் போயிருக்கா?” என்றாள்.

“ஆமாக்கா.”

“சரி. நான் சொல்றபடி செய்.” என்றவள் கர்ப்பத்தை சோதனை செய்யும் கருவியைக் கொடுத்தாள்.

அதன் முடிவில் அவள் கர்ப்பம் உறுதியானது.

வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

சகுந்தலா தன் கழுத்தில் இருந்த இரட்டைவடச் செயினைக் கழட்டி சரண்யாவின் கழுத்தில் போட்டுவிட்டு அவளை அணைத்து முத்தமிட்டார்.

மாமனார், மாமியார் இருவரின் கால்களில் விழுந்தாள்.

“டக்குன்னு ஏம்மா விழுந்துட்டே. இந்த மாதிரி நேரத்தில் கவனமா இருக்கனும்.” என்றார் பதட்டத்துடன்.

இதை எல்லாம் மனம் கனிய புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த அபர்ணா உடனே சமையல் அறைக்குச் சென்றாள்.

“என்ன செய்யனும்னு சொல்லுங்கம்மா.” என்றவரை ஒதுக்கிவிட்டு அவளே கேசரி செய்தாள். கையோடு அதைக் கொண்டு வந்துவிட்டாள்.

“இந்தாங்க மாமா இனிப்பு. உங்க மருமகளுக்குக் கொடுங்க.” என்று எந்த பொறாமையும் இல்லாமல் வந்து நிற்கும் மூத்த மருமகளைக் கண்டு பெருமிதம் கொண்டார் தேவேந்திரன்.

இனிப்பை வாயில் வாங்கிக் கொண்ட சரண்யா கண்ணீரோடு அவளருகில் வந்தாள். சித்தரஞ்சனும் அருகில் நிற்க அவர்கள் காலிலும் விழுந்தாள்.

“என்ன பொண்ணும்மா நீ? சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்தில் கண்ணீர் விட்டுக்கிட்டு.”

“இது ஆனந்தக் கண்ணீர் அத்தான். இந்த வாழ்க்கை நீங்கள் போட்ட பிச்சை.”

“இனி இப்படி எல்லாம் பேசாதே.” என்று கடிந்தவன் மனோரஞ்சனைப் பார்த்தான்.

அவன் நெகிழ்ந்து போய் நின்றான்.

“டேய்.  அப்பாவாயிட்டே. சந்தோசமா இருடா.” என்று அவனை அணைத்துக்கொண்டான்.

மகன்களின் அன்பைக் கண்டு தன் கண்ணே பட்டுவிடும் என்று திரும்பிக்கொண்டார் தேவேந்திரன்.

‘இப்படி ஒரு நாள் வருமா?’ என்றுதானே அவர் ஏக்கமுடன் காத்திருந்தார்.

அவர் ஜெயச்சந்திரனிடம் இந்த மகிழ்வான செய்தியை பகிர்ந்து கொள்ள, அவர் சிறிது நேரத்தில் ஒரு மகப்பேறு மருத்துவரை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.

“சந்திரா வா வா. அம்மாடி அபர்ணா. ஸ்வீட் கொண்டு வாம்மா.” ஆர்ப்பாட்டமாய் தன்னை வரவேற்ற நண்பனை ஆனந்தத்துடன் பார்த்தார்.

நண்பன் கொடுத்த கேசரியை வாங்கி உண்டார்.

எத்தனை நாள் ஏக்கம்?

அவர் சிரித்த முகத்துடன் நின்றிருந்த அபர்ணாவைப் பார்த்தார்.

‘எத்தனை அருமையான பெண்?’

‘அப்பவே தேவா சொன்னான். இந்தப் பொண்ணுக்கிட்ட என்னவோ இருக்கு. இவ என் வீட்டுக்குள் அடியெடுத்து வச்சா எல்லாம் சரியாப் போயிடும்’ என்று அத்தனை நிச்சயமாய் சொன்னானே. அதன்பிறகுதானே அவளை அவன் வீட்டுக்கு அனுப்ப சம்மதித்தேன்.

மகப்பேறு மருத்துவர் சரண்யாவை பரிசோதித்துவிட்டு மருந்துகள் எழுதிக் கொடுத்தார். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

அவர்கள் விடைபெற்றனர்.



சில நாட்கள் கடந்திருந்தன.

அன்றைய இரவு அபர்ணாவிடம் பேசிக்கொண்டிருந்தான் சித்தரஞ்சன்.

“அபி. நீ ஏதாவது என்கிட்டே மறைக்கறியா?” என்றான்.

அவள் திடுக்கிட்டாள்.

“என்ன?”

“என்னன்னு நீ சொன்னால்தான் தெரியும். ஒருவேளை குழந்தை வந்துட்டா என்னைப் பிரிய முடியாதுன்னு கவலைப்படறியா?” என்றான் அவளைக் கூர்ந்து பார்த்தவாறே.

அவள் எதுவும் பேசும் முன்னே, “ரஞ்சன். ரஞ்சன்.” என்ற சகுந்தலாவின் குரல் பதட்டத்துடன் கேட்க இருவரும் விரைந்தனர்.

“உன் அப்பாவை வந்து பாரு. எனக்கு என்னவோ பயமாயிருக்கு.” என்றார் கண்ணீர்க்குரலில்.

உடனே விரைந்தனர்.

அவரை பரிசோதித்த அபர்ணா, “சித்து உடனே மாமாவை ஹாஸ்பிட்டல் கொண்டு போகனும்.” என்றாள்.

“என்னாச்சு?”

“ஹார்ட் அட்டாக்.”

 

காதல் வளரும் ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!