மனோரஞ்சனுக்கு விபத்து ஏற்பட்டு அன்றுடன் ஒருவாரம் கடந்திருந்தது.
மகன் கண் விழித்துவிட்டான் என்ற தெம்பில் சகுந்தலாவும் எழுந்துவிட்டார்.
அதனால் அவரை மேலும் மருத்துவமனையில் தங்க வைக்க வேண்டாம் என்று தேவேந்திரன் மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
அதன் பிறகு அவரும், சித்தரஞ்சனும் மாற்றி மாற்றி மருத்துவமனைக்கு வந்து மனோரஞ்சனின் நலம் பற்றி அறிந்து கொள்கிறார்கள்.
அவர்களின் உதவி எதுவும் மனோரஞ்சனுக்குத் தேவைப்படாது ஜெயச்சந்திரனே நேரிடையாக அவனை கவனித்துக்கொள்வதால் இருவருமே எந்தக் கவலையுமின்றி நிம்மதியாக இருந்தனர்.
கண் விழித்த பிறகும் அவன் தன் தந்தையிடம் மட்டும் பேசினான்.
மற்ற இருவரும் அவனைக் காண வந்த போது நேரிடையாகப் புறக்கணிக்காமல் உறங்குவது போல் நடித்தான்.
சித்தரஞ்சன் தன் தாயாரிடம் இப்போது தம்பியை எதற்கும் வற்புறுத்த வேண்டாம் என்று கண்டித்துக் கூறியிருந்தான்.
அதனால் சகுந்தலாவும் அவனைத் தொந்தரவு செய்ய முயலவில்லை.
உயிருக்கு ஆபத்தானக் கட்டத்தை தாண்டிவிட்டாலும் அவனால் உடனடியாக எழுந்து நடமாட முடியாமல் அவனது கால் எலும்புகள் உடைந்திருந்தன. அதற்கான சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அவன் கண் விழித்ததில் இருந்தே யாரையோ தேடிக் கொண்டிருக்கிறான்.
ஆனால் அவன் எதிர்பார்த்த யாரும் அவனைக் காண வரவில்லை. அவனது அறையில் பணியில் இருக்கும் செவிலியர்களையும் கூர்ந்து கவனித்துப் பார்த்தான்.
அவர்களில் யாரும் அவன் தேடியவர் இல்லை. ஏதோ யோசனையுடனே இருந்தான்.
ஆனால் முகத்தில் ஒரு மலர்ச்சி தோன்றியிருந்தது. எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக எண்ணி விரக்தியில் உயிரைத் துறக்க முயன்றவன் இப்போது அவனுக்கு எல்லாம் கிடைத்துவிட்டது போல் உணர்ந்தான்.
எதனால் அப்படி ஓர் உணர்வு ஏற்படுகிறது என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அப்படி நடப்பதற்கான அறிகுறிகள் எதுவுமே தெரியாவிட்டாலும் ஏதோ நல்லது நடக்கப் போவதாக நம்பினான்.
அதனாலேயே அவனது முகத்தில் ஒரு தெளிவு உண்டாகியிருந்தது.
அன்றைய பகல் பொழுதில் பொன்னிக்கு மனோரஞ்சனின் அறையில் வேலை.
“சிஸ்டர்.”
அவனருகில் வந்தாள் பொன்னி.
“சொல்லுங்க சார். ஏதாவது வேணுமா? இல்லை ஏதாவது செய்யுதா?”
“எனக்கு நினைவு திரும்பிய அன்னிக்கு யார் என்னைப் பார்த்துக்கிட்டாங்க? அதாவது யார் டியூட்டியில் இருந்தாங்க?”
“ஏன் சார் கேட்கறீங்க? நான்தான்.” என்றாள்.
“இல்ல யாரோ என்கிட்டே பேசினாங்க. அதான் கேட்டேன்.”
“உங்க அண்ணன் தான் சார் உங்க கையைப் பிடிச்சுக்கிட்டுப் பேசினாங்க. அதே மாதிரி நீங்க கண்விழிச்ச பிறகு கூட அவங்கதான் வந்து பேசினாங்க. எதற்காக சார் கேட்கறீங்க?”
ஆனால் அது அவன் கண் விழித்த பிறகு வந்ததை மட்டுமே உணர்ந்தான்.
அவன் தன் உணர்வுகள் புரிந்து ஒதுங்கியிருப்பது கண்டு அவன் மனம் இளகத்தான் செய்தது.
அவன் கூறியதால் தான் தாய் சகுந்தலா எந்த நாடகமும் போடாமல் வீட்டிற்குச் சென்றிருக்கிறார் என்பதை அவனால் உணர முடிந்தது.
ஆனால் எல்லாம் தனக்குத் தெரியும், தான் நினைப்பதுதான் சரி என்பது போல் அவன் தன்னுடைய வாழ்க்கையில் எடுத்த முடிவால் விளைந்ததை, தான் இப்போது அவனுக்கு கூறத் தேவையில்லை.
அவனே கண் கூடாக எல்லாம் கண்டுவிட்டான்.
கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தவர்களால், கட்டாயப்படுத்தி வாழ வைக்க முடியவில்லை.
லலிதா அவனைத் தன் பால்ய கால நண்பனாகக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்தாள்.
தன்னுடைய காதல் வாழ்க்கையில் வந்த வில்லனாகத்தான் அவள் மனோரஞ்சனைப் பார்த்தாள்.
முதலில் மனோரஞ்சனுக்கு அவள் அப்படி நடந்து கொள்ளும் விதம் பற்றிப் புரியவில்லை.
அவனுமே சரண்யாவினைப் பிரிந்த துயரத்தில் தான் இருந்தான்.
ஆனால் திருமணம் என்றாகிவிட்ட பின்னர் தான் சரண்யாவை நினைப்பது இரண்டு பெண்களுக்குமே செய்யும் துரோகம் என்று அவன் மனம் இடித்துரைத்தாலும், அவனால் சரண்யாவின் நினைவுகளை ஒதுக்கி வாழ முடியவில்லை.
லலிதா தனக்கு செய்த கொடுமைகளை எல்லாம் அவன் சரண்யாவின் வாழ்க்கையில் விளையாடியதற்காக தனக்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை என்றே ஏற்றுக்கொண்டான்.
தான் ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்ததால் அப்படி வெறுப்பாக நடந்து கொள்கிறாளோ? என்ற சந்தேகம் அவன் மனதில்.
ஆனால் அவள் தன்னுடைய காதல் வாழ்க்கை தனக்குக் கிடைக்காத ஆத்திரத்தில் தான் அப்படி நடந்து கொள்கிறாள் என்று அவனுக்குத் தாமதமாகத்தான் தெரிய வந்தது.
அதன் பிறகும் என்னென்னவோ நடந்து விட்டது.
லலிதாவும் பிரிந்து போய் தன் காதலனுடன் சேர்ந்து கொண்டு இப்போது அவனிடம் இருந்து விவாகரத்தும் பெற்றுவிட்டாள்.
இப்போதும் தாயாகவும் ஆகப்போகிறாள்.
இனி அவளது நினைவு கூட தனக்குத் தேவையில்லை.
அவனுக்கு விபத்து நடந்த மூன்றாம் நாள் அவனிடம் பேசிய அந்தக் குரலை அவனால் இன்னமும் உணர முடிகிறது.
ஆனால் அது பொன்னியின் குரல் இல்லை.
அந்தக் குரலில் நான் எழுந்துவிட வேண்டும் என்ற வேண்டுதல் நிறைந்திருந்தது.
சரண்யாவிற்காக நான் எழுந்து வரவேண்டும் என்று அவனது கையைப் பற்றிக்கொண்டு பேசிய அந்தக் குரலின் வீரியம் இன்னும் அவனுள் வியாபித்திருக்கிறது.
உனக்காக காத்திருக்கும் சரண்யாவிற்காக நீ எழுந்து வரவேண்டும் என்ற அந்தக் குரலின் கட்டளையை அவனால் மீற முடியவில்லை.
சரண்யா இறந்துவிட்டாள் என்ற நினைப்பில்தான் அவன் தன் உயிரைத் துறக்க முடிவு செய்தான்.
இப்போது சரண்யா தனக்காக காத்திருக்கிறாள் என்று தெரிந்ததும் அவன் உயிர் பிழைத்து வாழ ஆசைப்பட்டு கண்களைத் திறந்துவிட்டான்.
அந்தக் குரல்தான் இப்போது அவனை மீட்டு வந்திருக்கிறது.
அது யார் என்று தெரிந்தால் சரண்யா எங்கிருக்கிறாள் என்று தெரிந்துவிடும்.
அவளுக்கு நிச்சயம் தன் மீது கோபம் இருக்கும் என்று தெரியும்.
அவள் தன்னை மன்னிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.
அவள் உயிருடன் இருக்கிறாள் என்பதே போதும்.
அவளுடைய நினைவில் உயிர் வாழ்ந்துவிடுவேன் என்பதுதான் அவனது எண்ணம்.
“மனோ.” அந்தக் குரலில் திரும்பியவனின் பார்வை மலர்ந்தது.
“அரவிந்த்.”
கண்கள் மலர தன்னை வரவேற்கும் விதமாய் மலர்ந்த நண்பனைக் கண்ட அரவிந்தனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இத்தனை நாட்கள் அவனுக்கு குற்ற உணர்ச்சி மனதை அரித்துக்கொண்டிருந்தது.
அன்று மனோரஞ்சனை சந்திக்காமல் விட்டிருக்கலாம் என்று இந்த ஒரு வார காலமாக அத்தனை தவித்திருக்கிறான்.
தான் ஏதோ சொல்லப்போக அதை எவ்வாறு புரிந்துகொண்டானோ? இந்த தற்கொலை முயற்சி செய்திருக்கிறான்.
“ஏன்டா இப்படி பண்ணே?” அவனுடைய குரலில் கோபம்.
பதில் சொல்லாமல் சிரித்தான்.
“சிரிக்கிறியா? நாங்க எத்தனை தவித்துப் போயிட்டோம் தெரியுமா? இப்ப இருக்கிற நிலைமையில் உன் மீது கை வைக்க முடியாதுங்கிற தைரியத்தில்தானே இப்படி சிரிக்கிறே? நீ குணமாகி வா மகனே உனக்கு இருக்கு.” பல்லைக் கடித்தான் அரவிந்தன்.
“நான் ஏதோ நினைச்சு செஞ்சேன். இப்ப தான் தெரியுது அதுக்கு அவசியமில்லைன்னு.”
பூடகமாய் பேசினான் மனோரஞ்சன்.
“என்னடா உளர்றே? மண்டையில் அடிபட்டதுல ஏதாவது ஆயிடுச்சா?”
“அப்படி எல்லாம் இல்ல மச்சான். நான் உணர்ந்து தான் சொல்றேன்.”
“அப்படி என்ன உணர்ந்து சொல்றே?”
“சரண்யா எனக்காக காத்திருக்கிறாள்னு…”
“ஏதாவது பட்சி வந்து சொல்லுச்சா?” கோபமாகக் கேட்டான்.
“இல்லடா. ஒரு தேவதை வந்து சொல்லுச்சு.”
“யாருடா அந்த தேவதை? நீ மட்டும்தான் பார்த்தியா? இல்லை மத்தவங்களும் பார்த்தாங்களா?” கவனமுடன் கேட்டான்.
“ப்ச். நானுமே பார்க்கலடா. காதால் கேட்டதுதான்.”
“அப்படின்னா அது உன்னோட கற்பனையாதான் இருக்கும். உளறாமல் உடம்பைப் பார்த்துக்கோ. இனி இப்படி முட்டாள்தனமா ஒரு முடிவெடுத்தே மகனே என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.”
“வா. அரவிந்த்.”
அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த அறைக்குள் நுழைந்த சித்தரஞ்சன் அரவிந்தனை வரவேற்கும் விதமாய் பேசியது நண்பர்கள் இருவருக்குமே அதிசயமாய்தான் இருந்தது.
அதுவும் தன் பெயர் முதற்கொண்டு ஞாபகம் வைத்தவனாய் அவன் பேசியது அரவிந்தனுக்கு ஆச்சர்யத்தையே வரவழைத்தது.
தன்னை வரவேற்ற அவனைப் பார்த்து பதிலுக்குப் புன்னகை செய்தான் அரவிந்தன்.
வேறு என்ன பேசுவது என்று தெரியவில்லை. இத்தனை நேரம் நண்பனிடம் வாயடித்த வாய் இப்போது பேச்சை மறந்தது போல் இருந்தது.
“ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னியே மச்சான். நான் உன்னை ரொம்ப நேரம் இங்கே இருக்க வச்சிட்டேன்.”
ஜாடையாக நண்பனை அங்கிருந்து கிளம்பச் சொன்னான் மனோரஞ்சன்.
அது புரிந்தாற் போல் அரவிந்தனும் விடைபெற ஆயத்தமானான்.
“ரொம்ப முக்கியமான வேலை இருக்கா அரவிந்த்?”
சித்தரஞ்சன் குரலில் கேலியோ கிண்டலோ இருக்கவில்லை.
உண்மையை அறிந்து கொள்வதாகத்தான் இருந்தது.
“ஏன் அண்ணா?” என்றவன் நாக்கைக் கடித்துக்கொண்டான்.
அதை சித்தரஞ்சன் கண்டுகொள்ளவில்லை.
“இல்லை எனக்கு கொஞ்சம் உன்கிட்டே பேச வேண்டியிருக்கு. அதனால்தான் கேட்டேன்.”
சித்தரஞ்சன் அப்படி பேசும்போதே மனோரஞ்சன் நண்பனை அழைத்து கிளம்பிவிடுமாறு ஜாடை காட்டினான்.
ஆனால் அது அரவிந்தனுக்கு தெரியவில்லை. ஆனால் சித்தரஞ்சன் கண்டுகொண்டான்.
அதற்கு நண்பன் என்ன உளறப் போகிறானோ? என்ற கவலை கொண்டது அவன் மனம்.
சிற்றுண்டி விடுதிக்கு அரவிந்தனை அழைத்து வந்தவன் இருவருக்கும் தேநீர் வாங்கிக் கொண்டான்.
“என்னால் என்ன உதவி ஆகனும் சார்?”
அவனுடைய அழைப்பில் கண்களை சுருக்கிப் பார்த்தான் சித்தரஞ்சன்.
“சாரா? உள்ளே வேற மாதிரி கூப்பிட்டியே?”
“அது மனோவோட பேசிப் பேசி பழக்கமாயிடுச்சு. அவன் உங்களைப் பத்திப் பேசும்போது அண்ணன்னு அழைச்சுப் பழகிட்டேன். அதான்.”
தயக்கமாகக் கூறினான்.
“அப்ப ஏன் இப்ப மாத்திக்கிட்டே? சும்மா அண்ணான்னே கூப்பிடு. என் தம்பி மேல் உண்மையான பாசம் வச்ச உன்னையும் என் தம்பியாவேதான் பார்க்கிறேன்.”
பேசிய சித்தரஞ்சனை நம்ப முடியாமல் பார்த்தான் அரவிந்தன்.
“இதில் உனக்கு நம்ப முடியாமல் போவதற்கு என்ன அவசியம்?” சந்தேகமாகக் கேட்டான் சித்தரஞ்சன்.
“இல்ல நீங்க முன்னெல்லாம்….”
“அரவிந்த் நீ சின்னப் பிள்ளை இல்லை. மனோவைப் பத்தி இப்ப உனக்கு நல்லா தெரிஞ்சுருக்கும். அவன் வாழ்க்கையில் அவன் முட்டாள்தனத்தால் என்ன நடந்தது என்பதும் உனக்குத் தெரியும். அப்ப நான் எப்படி நடந்துக்கிறது சொல்லு? எல்லாத்தையும் அவன் புரிந்து கொண்டு நல்லபடியா நடந்திருந்தால் நான் ஏன் அவனைக் கண்காணிக்கப் போறேன்? இப்ப குற்ற உணர்ச்சியோட அலையறேன்.”
வருத்தம் தோய்ந்த குரலில் பேசிய அவனை கண் இமைக்காமல் பார்த்தான் அரவிந்தன்.
இந்த விசயத்தில் அவனால் சித்தரஞ்சனைப் பற்றிக் குறை கூற முடியாது.
அவன் மனோரஞ்சனை அறிவான்.
அத்துடன் அவனுடைய இளகின மனதையும்.
அதை எத்தனை பேர் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்தினார்கள் என்பதையும் பார்த்தவன்தானே?
இதில் சித்தரஞ்சனின் கண்டிப்பான குணம்தான் மனோரஞ்சனை பெரிய அளவில் பாதிக்க விடாமல் தடுத்திருந்தது என்பதையும் அரவிந்தன் அறிவான்.
அத்துடன் சரண்யாவையும், அவளுடைய பேராசையையும் அறிந்தவன்தானே?
முதலில் மனோரஞ்சனை சரண்யாவிடம் பழகாமல் தடுக்க முயன்றவன் அவன்.
ஆனால் மனோரஞ்சனின் அப்பாவித்தனம் சரண்யாவை நம்பிவிட்டது. அதன் பிறகும் என்னென்னவோ நடந்துவிட்டது. நினைவில் இருந்து நடப்பிற்கு வந்தான்.
“சாரிண்ணா. நீங்க சொல்றது எனக்குப் புரியறது. என்கிட்ட என்ன கேட்கனும்?”
“அந்த சரண்யாவோட குடும்பத்தில் நடந்த விபத்து பற்றி இப்பதான் எனக்குத் தெரிய வந்தது. அதில் அவளோட பெத்தவங்க இறந்துட்டாங்க. ஆனால் அவளைப் பத்தி எதுவுமே தெரியலை. உனக்குத் தெரியுமா?”
“இல்லண்ணா. எனக்கு சரண்யா கூட அவ்வளவா பழக்கம் கிடையாது. மனோரஞ்சன் அவகூட பழகினதால் தான் நான் அவகிட்டவே பேசுவேன். அப்படியும் விபத்து நடந்தது பற்றி கேள்விப்பட்டு மனசு பொறுக்காமல் போய்ப்பார்த்தேன். அங்கே அவளோட சொந்தக் காரங்க கூட அவள் போயிட்டதாக சொன்னாங்க. அதன் பிறகு நான் அவளைப் பார்க்கலை.”
“ப்ச். அவள் சொந்தக்காரங்க எல்லார்கிட்டயும் கேட்டுப் பார்த்தாச்சு. ஆனால் அவங்க யாருமே எதுவும் தெரியாதுன்னு அலட்சியமா சொல்றாங்க. அவளைப் பத்தின பேச்சே எடுக்கக்கூடாதுன்னு சொல்றாங்க.”
“எனக்கு என்னன்னு புரியலைண்ணா.”
“சரி அரவிந்த். உன்னால் முடிந்தால் அடிக்கடி மனோவை வந்து பார்த்துக்கோ.”
அவன் இந்த அளவிற்கு இறங்கி வருவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
தம்பியின் விபத்திற்குப் பிறகு மனம் மாறியிருக்கலாம் என்று தோன்றியது.
ஆனாலும் சரண்யாவைப் பற்றி ஏன் விசாரித்தான் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
அவன் தாயார் சகுந்தலா எந்தளவிற்கு ஜாதி, அந்தஸ்து வெறி பிடித்தவர் என்பதை அறிந்தவன் அரவிந்தன்.
தங்கள் ஜாதி, அந்தஸ்திற்குப் பொருந்தாதவர்களுடன் நட்பு கொள்வதையே பொறுத்துக்கொள்ள முடியாதவர் சகுந்தலா.
ஏற்கனவே தன் மகனை காதலிக்கிறாள் என்றுதான் அந்தப் பெண்ணின் குடும்பத்தை அத்தனை பாடு படுத்தினார். இப்போது மட்டும் ஏற்றுக்கொள்ளப் போகிறாரா என்ன?
அதனால் தான் மனோரஞ்சனுக்கு எந்தவிதமான தவறான நம்பிக்கையும் கொடுத்துவிடக்கூடாது என்றே இப்போது அவனைப் பார்க்காமல் மருத்துவமனையை விட்டு விலகினான்.
அரவிந்தன் சென்ற பிறகும் யோசனையோடு அங்கேயே அமர்ந்துவிட்ட சித்தரஞ்சன் கிளம்பும்போதுதான் அவர்களைக் கவனித்தான்.
அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்த அந்த சிற்றுண்டி விடுதி இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டிருக்கும்.
ஒரு பக்கம் அந்த மருத்துவமனையில் வேலை பார்ப்போருக்கும், மறுபக்கம் நோயாளிகள், மற்றும் அவரது உறவினர்கள் வந்து சாப்பிடுமாறும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மறுபக்கத்தில்தான் அவர்கள் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் கிருஷ்ணாவும், அபர்ணாவும். கூட மதன்ராஜ்.
அதுவும் மதன்ராஜ் சலுகையுடன் கிருஷ்ணா மீது சாய்ந்தவாறே ஏதோ சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
கிருஷ்ணா அவனை அரவணைத்துப் பிடித்திருந்தான்.
அதுவே இயல்பு போல எதிரே அமர்ந்திருந்த அபர்ணாவுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
அந்தக் காட்சியைக் காணக் காண அவனுள் எரிந்தது.
முன்பு ஒரு நாள் தான் திடீரென்று அவள் முன்னால் போய் அமர்ந்து பேசியது அவனுக்கு நினைவு வந்தது.
இப்போதும் இடையில் போய் அவர்கள் பேச்சை நிறுத்துவோமா என்று யோசித்தான்.
அப்போது அவள் இந்தப் பக்கம் அமர்ந்திருந்தாள்.
இப்போது பணியாளர்கள் பகுதியில் அமர்ந்திருக்கிறாள்.
அங்கே போய் அவளிடம் பேசுவதை யாராவது பார்த்தால் தவறாக எண்ணிவிட்டால்?
ஜெயச்சந்திரன் அங்கிள் நான் ஏதாவது தகராறு செய்கிறேன் என்று எண்ணிவிட்டால்? என்று யோசித்தவன் முகம் கடுக்க அங்கிருந்து கிளம்பினான்.
ஏனோ அந்தக் காட்சி மட்டும் அவன் மனதில் பதிந்தது.
அத்தனை உரிமையாய் மதன்ராஜ் கிருஷ்ணா மீது சாய்ந்திருக்கிறான் என்றால் இது அடிக்கடி நடக்கக்கூடியதாக இருக்கும்.
அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன சம்பந்தம்?
யோசனையுடனே மனோரஞ்சன் இருந்த அறைக்குள் நுழைந்தான்.
அவன் பின்னே யாரையோ தேடினான் மனோரஞ்சன்.
“அவன் போய்விட்டான்.” என்ற அவனது பதிலில் சோர்ந்து போய் கண்களை மூடினான் மனோரஞ்சன்.
“மனோ.” அருகில் கேட்ட அவனது குரலில் கண்களை விழிக்காமல் இருக்க முடியவில்லை.
அவன் விழித்திருப்பதை அறிந்துவிட்டானே.
கண்களைத் திறந்து சகோதரனைப் பார்த்தான்.
“உன் நண்பனுக்கு உன் மீது இருக்கும் அக்கறையில் கொஞ்சம் கூட எனக்கு இருக்காதுன்னு நினைச்சுட்டியா மனோ? நான் உன் கூடப் பிறந்தவன்டா? உன்னை சின்ன வயதில் இருந்து பார்த்தவன்டா?”
நெகிழ்வான குரலில் அவனது பேச்சைக் கேட்ட மனோரஞ்சனால் அதற்கு மேல் அவனோடு பேசாமல் இருக்க முடியவில்லை.
“அண்ணா.”
அவனது கண்ணீர்க்குரலில் அவனைக் கட்டிக்கொண்டான் சித்தரஞ்சன்.
“டேய் மனோ. என்னை மன்னிச்சிட்டியாடா? உன் வாழ்க்கையில் நான் விளையாடிட்டேன்.”
“இல்லண்ணா. என் மேல் உள்ள பாசத்தினால்தான் அப்படி நடந்துக்கிட்டே.”
சகோதரனை சமாதானப்படுத்தினான் மனோரஞ்சன்.
அதுதான் உண்மையும் கூட.
தன் தம்பியின் மீது அவன் வைத்திருந்த அளவில்லாத பாசம்தான் அவனை அப்படி நடக்க வைத்திருந்தது.
சிறிது நேரம் பேச்சில்லாமல் சென்றது.
மனோரஞ்சன் திடீரென்று பிரகாசமானான்.
சகோதரனின் முகத்தில் ஏற்பட்ட திடீர் ஜொலிப்பிற்கு என்ன காரணம் என்று அவன் பார்வை சென்ற திக்கில் பார்த்தான் சித்தரஞ்சன்.
அங்கே கிருஷ்ணாவுடன் வந்து கொண்டிருந்தாள் அபர்ணா.
யார் அந்த தேவதை என்று தேடிக்கொண்டிருந்தவனுக்குப் பதிலாக நான்தான் அது என்று அவளே வந்துகொண்டிருப்பதைக் காணவும் மனோரஞ்சன் மகிழ்ந்துபோனான்.
அப்போது நடந்தது எதுவும் கனவில்லை என்று அவனுக்குப் புரிந்தது.
அவளுடன் பேசிப் பார்க்கவில்லை என்றாலும் அன்று தன்னுடன் பேசித் தனக்கு உயிர்வாழும் ஆசையைத் தூண்டிவிட்டது அவள்தான் என்று நிச்சயமாக எண்ணினான் மனோரஞ்சன்.
சகோதரன் எதற்காக அத்தனை பிரகாசமடைந்தான் என்று புரியாமல், ஏற்கனவே இரண்டு பெண்களால் அலைக்கழிக்கப்பட்டவன்.
இப்போது இவள் வேறா?
நிச்சயமாய் என் தம்பியை இவளிடம் இருந்து நான் காப்பாற்றுவேன்.
மனதிற்குள் உறுதியெடுத்தவன் அவளை வெறித்துப் பார்த்தான்.
‘இதைத்தான் அந்த கிருஷ்ணாவுடன் கேண்டீனில் இருக்கும் போது பேசிக்கொண்டிருந்தாயா? நான் கூட தப்புக் கணக்குப் போட்டுட்டேன். நீ அந்த கிருஷ்ணாவைத்தான் கணக்குப் பண்ண வந்திருக்கேன்னு. ஆனால் உன் பார்வை அதை விட பணக்காரன் மீது பட்டுவிட்டதா? விட மாட்டேன்டி.’ மனதிற்குள் சூளுரைத்தான்.