Skip to content
Post Views: 4,055
சகோதரர்களுடன் தோட்டத்திற்கு சென்றனர் குருவும் அருணாவும்.
நீண்ட நாட்களுக்கு பின் ஒன்று சேர்வதால், மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தனர் ஐவரும்.
Advertisement
நீர் மோர் கலந்து கொண்டுவந்து கொடுத்தார் சொர்ணம் பாட்டி.
“அம்மாடி, நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத, பேச்சை எப்பவும் மிச்சம் வைக்கணும். எல்லா நேரத்திலும் பேசி தான் ஜெயிக்கனும்னு கிடையாதுடா. வார்த்தையால ஏற்படற காயங்கள் கேட்கிறவங்களுக்கு மட்டும் இல்லை பேசுறவங்களுக்கும் ஏற்படும்டா ” என்றார் அருணாவிடம்.
Advertisement
Advertisement
“நானும் மூணு வருசமா அமைதியா தான் இருந்தேன் பாட்டி. எனக்கு சின்ன வயசுல இருந்தே உங்களை ரொம்ப பிடிக்கும். உங்க அமைதி அனுசரணை எல்லாம். நீங்களும் தாத்தாவும் ஒருத்தர் கண்ணை பார்த்து ஒருத்தர் வாழ்ந்த அழகை பார்த்துட்டே இருக்கலாம்னு தோணும். என் ரோல் மாடல் நீங்க தான் பாட்டி. ஆனா, என்னால இவங்களை சமாளிக்க முடியலை பாட்டி. நான் என்னையே தொலைக்க ஆரம்பிச்சிட்டேன். எங்க தங்கத்தை.. தங்கத்தை.. தங்கத்தையும் தொலைச்சிட்டேன் பாட்டி” என்று பேசிக்கொண்டே அழுகத் தொடங்கினாள்.”
“அம்மாடி “ என்று அருணாவை மடித் தாங்கிக்கொண்டார்.
Advertisement
“அழாதடாம்மா, உங்க தங்கம் எங்கேயும் போகல. சீக்கிரமா உங்க கிட்ட வந்துடும். அழக்கூடாது” என்று வெகுவாக அவளை சமாதானப்படுத்தினார்.
கனத்த மனதுடன் பாட்டி உள்ளே சென்றுவிட்டார். சிறியவர்கள் பேச்சை மாற்றி, சூழலை சற்று இலகுவாக்கினார்கள்.
மதிய உணவு அமைதியாகவே சென்றது.
“நாங்க சாயுங்காலம் ஊருக்கு கிளம்பறோம்” என்றான் குரு பொதுவாக.
“சரி “ என்று முடித்துக்கொண்டனர் பெரியவர்கள்.
ஆடுன காலும் பேசின வாயும் நிக்காது என்பார்கள்.
“ஏன் அருணா, அங்க போய் உனக்கு எப்படி பொழுது போகும்” என்ற ஆரம்பித்தார் பாரு பாட்டி.
“எப்படி போகும்னா? இங்க மாதிரி தான் அங்கேயும்” என்றாள் அருணா.
“இங்க வேலைக்கு போன. அங்க வீட்ல சும்மா தானே இருக்கனும். எதாவது மேல படிக்க முடிஞ்சா படி. பின்னாடி உபயோகமா இருக்கும்” என்றார்.
அவர் அப்படி தான். பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும். முன்னேற வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார் எப்பொழுதும்.
“நான் இனி நல்ல குடும்பத்தலைவியா என் புருஷன் பிள்ளைகளை பார்த்துட்டு இருக்கலாம்னு இருக்கேன்” என்றாள் அருணா.
“குருவை அவனே பார்த்துப்பான். இப்ப பிள்ளையும் கைல இல்ல. அடுத்த பிள்ளை பிறக்க வரைக்கும் வெட்டியா இருக்க போறீயா?”
“நம்மளால ஒரு நாளே இதை பார்க்க முடியலையே? எப்படி மூணு வருஷம் எல்லாரையும் சமாளிச்சாங்களோ? கண்ணை கட்டுதே?” என்றாள் அபி தன் சின்ன அண்ணனிடம்.
“மீண்டுமா?” என்று ஆயசமாக இருந்தது அனைவருக்கும்.
“இல்லத்தரசின்றது உங்களை பொறுத்தவரைக்கும் பெரிய விஷயமா இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல இல்லத்தரசியா இருக்கிறது எவ்வளவு பெரிய சவாலான விஷயம் தெரியுமா? உங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. விட்டுடுங்க” என்றாள் அருணா பொறுமையாகவே.
“இல்லத்தரசின்னு பெருசா சொல்றீயே, ஒரு இட்லி ஒழுங்கா சுட தெரியுமா உனக்கு? அது தெரிஞ்சாகூட அவசரத்துக்கு ஒரு இட்லி கடை போட்டு பிழைச்சுகலாம்” என்றார் நக்கலாக.
“தெரியாது தான் பாட்டி. இட்லி ஒழுங்கா சுட தெரியாது தான். ஆனால் இல்லத்தரசின்னா இட்லி சுடத் தெரியனும்னு பேசுற உன்கிட்ட எந்த விளக்கமும் வேஸ்ட் தான்.”
“அத்தை சொல்றதுல என்னடி தப்பு. உனக்கு வீட்டு வேலை ஏதாவது தெரியுமா? சீரியல் பார்த்திட்டு உட்கார்ந்து இருக்க போறீயா?” என்றார் மஞ்சுளா.
“மாமியாரை மிஞ்சின மருமகள் பட்டம் உங்களுக்குதான் ம்மா கொடுக்கனும். வீட்ல இருக்கிறவங்க டிவி சீரியல் தான் பார்க்கிறாங்கன்னு உனக்கு தெரியுமா? உங்க கிட்ட எல்லாம் விளக்கம் கொடுக்க முடியாதும்மா”
“இப்ப கொஞ்ச நேரம் முன்னே அஞ்சுன்னு ஒரு வார்த்தையிலே அவங்க மருமகளை கட்டுக்குள் கொண்டுவந்தாங்களே பாட்டி. அவங்க இல்லத்தரசி. சாதாரண காய்கறி வியாபாரம் செய்த தாத்தாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவர் தொழிலில் வளர பக்க பலமா நின்று, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, பேரப்பிள்ளைகளையும் வளர்த்து, இந்த குடும்பத்தை தாங்கி நிக்குறாங்களே? அவங்களை மாதிரி நான் இருக்கனும்னு நினைக்கிறன்”
“எது சரி எது தப்புன்னு நான் சொல்ல வரல. எனக்கு எது இஷ்டம்னு சொல்லிட்டு இருக்கேன். என் புருஷனுக்கு சம்மதம்னா போதும். எங்க குடும்பம் நல்லா வரும். நாங்க இனி எங்களை பார்த்துப்போம்” என்றாள் அருணா.
குரு அருணாவின் அருகில் அமர்ந்து அவள் கரத்தை பிடித்து கொண்டான். அதுவே அனைவருக்கும் சொன்னது இந்த முடிவு இருவருடையது என்று.
“பட்டு திருந்தட்டும்” என்று நினைத்தனர் அஞ்சுவும் மஞ்சுவும்.
“இனியாவது சந்தோசமா இருக்கட்டும்” என்று நினைத்தனர் ஆனந்தனும் வடிவேலுவும்.
“அவங்களை பார்த்துக்கோங்க” என்று கணவரிடம் வேண்டிக்கொண்டார் சொர்ணாம்பிகை.
“என்னை போல இருக்கனும்னு நினைக்கலையே? அப்ப நான் எங்கே தோற்று போனேன்.”என்று சுய அலசலில் இறங்கினார் பாரு பாட்டி.
“நிஜமா இவங்க அமெரிக்கா தான் போறாங்களா?” என்று கேட்டாள் ரித்விகா இரண்டு அபிகளிடம்.
“எங்களுக்கும் சந்தேகமா இருக்கு” என்று மூவரும் தாத்தாவை பார்த்தனர்.
“சத்தமா சொல்லாதீங்கடா. அடுத்த பிரச்னையை ஆரம்பிச்சிடுவாங்க. எதுவா இருந்தாலும் நல்லா இருக்கட்டும்” என்றார் தாத்தா மெதுவாக.
error: Content is protected !!