ஹாஸ்டலில் இருந்தபோதும் இதே பாடு தான் என்றாலும், அடிக்கடி வீட்டுக்கு வந்து அதை சரிகட்டிவிடுவாள். வேலைக்கு போன பின்பு, பெங்களூரு ருசி அவளுக்கு பிடித்துப்போனதால் கவலை இல்லாமல் கழிந்தது.
இப்போது மனமும் உடலும் அவளை தாங்கிப்பிடிக்க ஒரு அக்கறையான ஆளை தேடியது.
யார் இருக்கிறார்கள் என்று தோணும்போதே, சம்பந்தமின்றி அந்த ‘ஓசிக்குடிக்காரன்’ நினைவு வர, அவன் கொடுத்த கார்டும் சேர்த்தே நினைவு வந்தது. அதை தேடி எடுத்தவள், அதிலிருந்த பிரபல மருத்துவமனையின் விலாசத்தை பார்த்தாள். சில நொடி தயக்கம் என்றாலும், உடனே அதன் எண்ணுக்கு தொடர்புக்கொண்டு, ‘சைக்கியாட்ரிஸ்ட் அப்பாயின்ட்மென்ட்’ கேட்டாள்.
அவள் நேரத்திற்கு அன்றே ஸ்லாட்ஸ் இருக்க, நேரத்தை கேட்டுக்கொண்டவள் சற்று தெளிந்ததை போல உணர்ந்தாள். ஏதோ ஒரு நம்பிக்கை. கோவிலுக்கு சென்று முறையிட்டால், தங்கள் பிரச்சனைகள் குறையும் என்ற பழங்கால நம்பிக்கை போல, மருத்துவரை சந்தித்து பிரச்சனையை சொல்லிவிட்டால், அவர் அதை தீர்த்துவிடுவார் என்று!
நம்பிக்கையோடு கிளம்பி ஹாஸ்பிடல் சென்றவள், அவர்கள் காட்டிய மருத்துவரின் அறைக்கு கதவை தட்டிவிட்டு செல்ல, உள்ளே அமர்ந்திருந்த மருத்துவனை பார்த்ததும் அவள் சுமந்து வந்த நம்பிக்கை எல்லாம் கற்பூரமாய் கரைந்துப்போனது.
“ஹலோ நிலா… வெல்கம்!” என சிரித்தான் கோவர்த்தன்.
“நீங்க டாக்டரா?” வாசலிலேயே நின்று நம்ப முடியாமல் கேட்டாள் வாணிலா.
தன் முன்னிருந்த பெயர் பலகையை அவளை நோக்கி திருப்பி வைத்தான் அவன்.
‘கோவர்த்தன், சைக்கியாட்ரிஸ்ட் ‘ என்று பளிச்சென இருக்க, உள்ளே போகலாமா வேண்டாமா என்ற குழப்பம் அவளுக்கு.
“வேற நல்ல டாக்டர் எதிர்ப்பார்த்தீங்களோ?” என்றவன் கேட்டதும், இதற்கும் மேல் இப்படி நிற்பது நாகரீகம் அல்ல என்று நினைத்தவள் உள்ளே வந்து சேரில் அமர்ந்தபடி,
“நீங்க டாக்டர்ன்னே நான் எதிர்ப்பார்க்கல” என்றாள்.
என்னவோ ஜோக்கை கேட்டவன் போல சத்தமாய் சிரித்தான். அவனையே பார்த்தவள், “நிஜமாவே டாக்டர் தானா?” என்று கேட்டுவிட, “ஏங்க இப்படி ஒரு டவுட் உங்களுக்கு? இங்கேயே படிச்சு இங்கேயே டாக்டரா இருக்கேன். செவன் ப்ளஸ் இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. வேணுன்னா என் சர்டிபிக்கேட் காட்டவா?” என்றான் வேகமாய்.
“வேண்டாம்!” அவள் வாய் சொன்னாலும், ‘எங்கே காட்டு’ என்று தான் சொன்னது அவள் விழிகள்.
“உங்க பார்வையே சொல்லுது, நீங்க இன்னும் நம்பலன்னு” அவன் சிரிக்க, அவள் ‘இல்லை’ என்றெல்லாம் சொல்லவில்லை. தன் மனக்கவலையை பகிர்ந்து நல்ல மனநிலையோடு வீடு திரும்புவோம் என்ற அவள் ஆசை நிராசையாய் போன உணர்வு.
முன்பின் அறியாதவர்களோடு கூட பேசிவிட முடியும் போல. ஏனோ அறிமுகமானவர்களோடு கஷ்டங்களை பகிரவே வருவதில்லை.
அவன் அவளிடம் என்ன பிரச்சனை என்று ஆரம்பிக்கவில்லை.
“ஏன் உங்களுக்கு என்னை ஒரு டாக்டரா அக்சப்ட் பண்ணிக்க முடியல?” என்று தான் ஆரம்பித்தான்.
அவள் தயங்க, “ஸீ நிலா… எந்த தயக்கமும் இல்லாம நீங்க என்கிட்டே பேசலாம். உங்களை ஜட்ஜ் பண்றது இங்க என் வேலை இல்லை. என்னை இப்போ தான் முதல்முறையா பாக்குறதா நினைச்சுக்கோங்க” என்றவன் சொல்ல, “ஓகே சார்” என்றாள்.
“கால் மீ ‘கோ’”
“கோ? கோ’ன்னு எப்படி கூப்புடுறது?” சொல்லிபார்க்க நல்லாவே இல்லை அவளுக்கு.
“உங்களுக்கு ஓகேன்னா ‘வா’ன்னு கூட கூப்பிடலாம்” அவன் நமட்டு சிரிப்போடு சொல்ல, சுர்ரென முறைப்பு அவளிடம்.
“ஜோக்கு கூட சொல்ல கூடாதா என்ன?” அவன் பாவமாய் கேட்க, “டாக்டரா இருந்துட்டு அந்த குடி குடிக்குறீங்க அன்னைக்கு” என்றுவிட்டாள்.
“ஜஸ்ட் மன்த்லி ஒன்ஸ் மட்டும் தான். அப்போ கூட நான் ஸ்டெடி தான். மேடம் தான்…” அவன் சொல்லி முடிக்கும் முன் அவள் கோபப்பார்வையில் முடிக்காமல் நிறுத்திவிட்டான்.
“அதோட உங்க பார்வையும் சரி இல்ல” அவனை பார்க்காமல் அவள் சொல்ல, அவன் திகைத்துவிட்டான்.
“வாட் டு யூ மீன்? உங்களை நான் தப்பா பாத்துட்டேனா என்ன?” லேசான பதைப்பு அவனுக்கு.
முழு இரவு இல்லை என்றாலும் குறைந்தது நான்கைந்து மணி நேரம் அவன் பாதுகாப்பில் இருந்திருக்கிறாள். அசௌகர்யமாய் எதுவும் அவள் உணர்ந்துவிடவில்லை என்றாலும், அவன் அந்த பெண்ணை பார்த்த பார்வையும், பாடிய பாட்டும் நினைவு வர, “ஒரு டாக்டர் மாறியா பீகெவ் பண்ணீங்க அங்க? ஒரு பொண்ணை பார்த்து அப்டி பாடுறீங்க?” அவள் முகத்தை சுளித்து சொல்ல, அவன் யோசித்தான்.
‘எப்போ?’ என்பது போல. சற்று ஆழ்ந்து யோசிக்க, சரக்கோடு சேர்த்து நாட்டு சரக்கும் நினைவு வர, “ஏங்க? நான் முதல்ல ஒரு ஆம்பளை, அப்புறம் தான் இந்த டாக்டர்” என்றான், ‘இதெல்லாம் இரு விசயமா?’ என்பது போல.
“நீங்க இப்படி இருந்தா உங்கக்கிட்ட எப்படி நம்பி ட்ரீட்மென்ட் வரது?”
“இங்க இந்த இடத்துல என் மேல எந்த தப்பும் நீங்க சொல்ற மாதிரி நடக்காது” திடமாய் சொன்னான் அவன்.
“அப்போ வெளில? மோசமா தான் இருப்பீங்க… ரைட்?” அவள் இருக்கும் மனநிலையில், பேசி சண்டையிடக்கூட ஆளில்லாமல் காய்ந்து போய் இருந்ததற்கு இவன் சிக்கிக்கொண்டான்.
“கண்டதும் காதல் வழியாது,
கண்களால் கற்பும் அழியாது,
பூனையில் சைவம் கிடையாது,
ஆண்களில் ராமன் கிடையாது”
அவன் திடுமென இப்படி சொல்ல, திடுக்கிட்டவள், “அப்போ உங்க பீகேவியர் சரின்னு சொல்றீங்களா?” என்றாள்.
‘பேசி பிரயோஜனமில்லை’ என்பது போல அவள் தலையாட்ட, “உங்களுக்கு ஒன்னு சொல்லவா? பொண்ணுங்களுக்கு ஒருத்தரை பிடிச்சுதுன்னா அவங்க செய்யுற எல்லாமே சரின்குற மாறி பாப்பாங்க… அதே பிடிக்கலன்னா அவங்க மூச்சு விடுறது கூட எரிச்சல் ஆகும் அவங்களுக்கு” என்றிட,
“ரிடிகுலஸ்” என்றுவிட்டாள். (முட்டாள்த்தனம்)
“உண்மைங்க! உங்களுக்கு என்னை பிடிக்கல… ஐ கேன் சென்ஸ் இட்! இப்போ நான் உங்ககிட்ட என்ன சொன்னாலும் உங்களுக்கு தப்பா தான் தெரியும், அது ஒரு ஜோக்காவே இருந்தாக்கூட” உறுதியாய் அவன் சொல்ல, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. கண்ண மூடிட்டு தப்புன்னு சொல்ல மாட்டாங்க யாரும்” என்றாள்.
“அப்கோர்ஸ், சொல்ல மாட்டாங்க. ஆனா இவன் தப்பா தான் பேசுவான்னு முடிவுக்கு வந்துடுவாங்க” அவன் திடமாய் சொல்ல, “இப்போ நீங்க பேசுறீங்க, நான் தப்புன்னா சொல்லிட்டு இருக்கேன்?” என்றாள் கேள்வியாய்.
மேசையில் கையூன்றி அவள் முகத்தையே சில நொடிகள் பார்த்தவன், “சரி, ஒரு ஜோக் சொல்லவா?” என்றான்.
‘இதென்ன? சம்பந்தமில்லாமல்?’ என்று தோன்றியபோதும், வேண்டாவெறுப்பாய் தலையாட்டினாள் வாணிலா.
“ஒரு தமிழ் பொண்ணு, ஸ்பானிஷ் பையனை கல்யாணம் செஞ்சுட்டு ஸ்பெயின்’க்கு குடித்தனம் வந்தாளாம். அவளுக்கு ஸ்பானிஷ் தெரியாதனால வெளில கடைக்கு போகும்போது அவளுக்கு வேண்டியதை எல்லாம் சைகைல கேட்டு தான் வாங்குவா.
அதுமாறி ஒருமுறை சிக்கன் லெக் சாப்பிட ஆசை வந்துச்சாம். கடைக்கு போனவ, அவளோட ட்ரெஸ்’ஸ தூக்கி தொடையை தொட்டுக்காட்டி வெட்டுற மாதிரி சைகை செய்யவும் அதே போல கடைக்காரனும் வெட்டிகுடுத்தானாம்.
அடுத்து அந்த பொண்ணுக்கு வாழைப்பழம் சாப்பிட ஆசை வந்துச்சாம். எப்படி சைகை’ல காட்டுறதுன்னு தெரியாம, தன்னோட புருஷனை கடைக்கு கூட்டிட்டு போய்….” அவன் சொல்லும்போதே “ச்சீ” என எழுந்துவிட்டாள்.
அவள் எழுந்ததும் கையை கட்டிக்கொண்டு சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்தான் கோவர்த்தன்.
“என்ன கன்றாவி இதெல்லாம்? இதை ஒரு ஜோக்குன்னு ஒரு பொண்ணுக்கிட்ட சொல்றீங்க… ஹவ் ச்சீப் யு ஆர்… இதுல டாக்டர் வேற! அதெப்படிங்க முன்னப்பின்ன தெரியாத பொண்ணுக்கிட்ட ‘ஏ’ ஜோக் பேச முடியுது… ச்சீ, ச்சீ…” அவள் கோவத்துடன் முகத்தை சுளித்து கத்த,
“அந்த பொண்ணு அவன் புருஷனை கடைக்கு கூட்டிட்டு போய்…” அவன் தொடர,
“ஹவ் டேர்… வாயை மூடுங்க” கத்தினாள்.
“கடைக்கு கூட்டிட்டு போய்… வாழைப்பழம் வாங்கிக்கிட்டா… அவ புருஷனுக்கு தான் ஸ்பானிஷ் தெரியும் ல…” அவன் செய்தி வாசிப்பதை போல எக்ஸ்ப்ரெஷன் இல்லாமல் சொல்லி முடிக்க, இவளுக்கு தான் ‘ஐயோ’ என்றானது.
அவள் அப்படியே நிற்க, “ஐ டோல்ட் யூ க்நொவ்! பிடிக்காதவங்க தப்பா தான் பேசுறாங்கன்னு நம்ம மைன்ட் முன்னாடியே முடிவு பண்ணிடும்” என்றவன், “இதையே உங்களுக்கு பிடிச்ச ஆட்கள் உங்கக்கிட்ட சொல்லிருந்தா இதை வல்கரா யோசிக்காம, சிரிச்சுருப்பீங்க!” என்று சொல்ல, ‘இருக்குமோ!?’ என்ற எண்ணத்தில் பதிலின்றி நின்றாள்.