அண்ணன், அக்காளின் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த வீட்டின் கடைக்குட்டி ஸ்ரீவர்த்தன் வேகமாய் வந்து, “ப்ரோ… நைஸ் ப்பேர்”(pair) என்று கண்சிமிட்ட, கோவர்த்தன் பெரும் சங்கடத்துடன் வாணிலாவை பார்த்தான். அவள் முகம் அதனிலும் மிகுந்த சங்கடத்தை காட்ட, அவளை அங்கிருந்து போக சொல்லி அவன் சொல்லவும், விட்டால் போதுமென அவள் எழுந்துக்கொள்ள, “எங்க முகத்தை காட்டு” என்ற அம்சவர்த்தினியின் குரல்.
“ஹ்ம்ம்… அதான் நான் சொன்னேன்” என்றவர், “டேய், உன் கூட்டாளி, புள்ளைக்கு காது குத்துன்னு பத்திரிக்கை வச்சான்… எவ்வளவு மொய் எழுத?” என்று கேட்டதும், இவன் யோசிக்க, அங்கோ விஷ்ணு வர்த்தன், “சம்பாரிக்குறதை மொத்தத்தையும் எழுத சொல்லு… அந்த புண்ணியத்துலயாது இவனுக்கு ஒரு கல்யாணம் கூடி வரட்டும்” என்றார் மனைவியிடம்.
குரலில் நக்கல் தொனியே பிரதானமாய் இருக்க, இங்கே இவனுக்கு ரோஷம் வந்துவிட்டது.
“எல்லாருக்கும் அவங்க வீட்டுல பொண்ணு பாத்து கட்டி வைக்குறாங்க… காலா காலத்துல எல்லாம் நடக்குது, நீங்க அப்படி பொறுப்பா இருந்தா நான் ஏன் தனியா நிக்கப்போறேன்?” என்றான் இவனுமே நக்கல் தொனியில்.
“ஆமா, துரைக்கு பொண்ணு தர க்யூ’ல வராங்க பாரு… நாங்க தான் தட்டிவிட்டுட்டு நிக்குறோம்” அவரும் விடாமல் சொல்ல, “ஏன் எனக்கென்ன குறைச்சல்?” என்றான் முகத்தை கடுமையாய் வைத்து.
சண்டை போடுவானோ? இவனுக்கு கோபமெல்லாம் வருமா? என்று வியந்து பார்த்துக்கொண்டிருந்த வாணிலா, ‘வேண்டாம்’ என அவன் கரம் பற்ற, அதை ‘இதுதான் சாக்கென’ இறுக பற்றிக்கொண்டவன், “எனக்கு பொண்ணு தர கசக்குதா என்ன?” என்றான் கர்வமாய்.
அதற்கு விஷ்ணுவர்த்தன் ஏதோ சொல்ல வரவும், அவரை முந்தி, “என்ன பந்தா வேண்டிக்கடக்கு உனக்கு? பொண்ணை குடுக்குறவன், அவன் கண்ணு முன்ன அது பொழைக்குறதை பாக்கணும்ன்னு தானே நினைப்பான்? நீ ஏதோ அக்கரை சீமைல பொழப்பை ஓட்டிக்கிட்டு, அங்கேயே வீடு வாங்கி, ரேஷன் கார்டு வாங்கி கிடையா கடந்தா, எந்த நம்பிக்கைல அப்பன்காரன் பொண்ணை குடுப்பான் சொல்லு?” என்றார் அம்சவர்த்தினி.
“ஏன்ம்மா? வெளிநாட்டுல இருக்கவனுக்கு எல்லாம் கல்யாணமே நடக்கிறது இல்லையா என்ன?” இவனும் கேட்க, “எல்லாருக்கும் எப்படியோ? உன்னை யாரும் இதுவரை விரும்பி கேட்கல சாமி” என்றுவிட்டார் திண்ணமாய்.
வாணிலா முன்பு ஒரே அவமானமாய் போய்விட்டது அவனுக்கு. தன்னை விலைபோகாத சரக்கு ரேஞ்சுக்கு அன்னை பேசியிருக்க, அத்தோடு விடவும் முடியவில்லை.
“அப்போ எனக்கு கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ற எண்ணமே இல்ல… அப்படி தானே?”
“யார் சொன்னது அப்படி? அடுத்த விமானம் புடிச்சு நேரே வா இங்க… ஒரு கிளீனிக் வை… ஆறு மாசத்துல பொண்ணு அமையலைன்னா என்னை என்னன்னு கேளு!” சவாலாக சொன்னார் அவர்.
“அங்க வந்து உட்காந்து நான் ‘ஈ’ தான் ஓட்டனும். சைகேட்றிஸ்ட்’டை எல்லாம் டாக்டராவே மதிக்க மாட்டாங்க அங்க. அதை விட என்கிட்ட ட்ரீட்மென்ட்’க்கு வந்தாலே அவங்களை பைத்தியம்’ன்னு சொல்ற ஆளுங்க நீங்கல்லாம்! உங்களுக்கு மத்தில நான் எப்படி நிம்மதியா என் பொழப்பை பாப்பேன்?” கடுகடுவென அவன் சொல்ல,
“சரி, நம்மூரு வேணாம்… வெளில சென்னை, கோவைன்னு போயேன்!” என்று ஹர்ஷா சொல்ல, “அதுக்கு நான் ஸ்பெயின்’லயே இருப்பேன்… எல்லாம் ஒன்னு தான்” என்றான்.
“கல்யாணம் உனக்கு தான் வேணும்… உனக்கு புடிச்சாப்ள ஒரு பொண்ணை பார்த்து கட்டிக்கிட்டு உன் இஷ்டப்படி இருந்துக்கோ… எப்படியும் உன் பொண்டாட்டி எனக்கு வந்து சேவை செய்யப்போறது இல்ல… வருஷம் ஒருக்கா எட்டிப்பார்க்க போறீங்க” அம்ஸா பேச பேச, ஓரக்கண்ணால் அவன் வாணிலாவை தான் பார்த்தான்.
“உனக்கு என்ன தோலு புடிச்சுதோ கட்டிக்க! எங்களை ஆளை விடு” மறைமுகமாய் வெளிநாட்டுக்காரி என்றாலும் சரி என்று அம்ஸா சொல்லிவிட, “நான் சொல்லல! என்னை தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க… நானா கூப்பிடலன்னா இப்படி ஒரு பையன் இருக்குன்னு கூட நினைப்பு இருக்காது” என்று முணுமுணுப்பாய் அவன் வாணிலாவிடம் சொல்ல அவளுக்கு பாவமாய் போனது.
மகன் வீட்டில் ஒரு பெண் குடியிருக்க, அதை பற்றி எதுவும் பேசுவார்களோ என அவள் பயந்ததற்கு மாறாக அவர்கள் ஒரு வார்த்தை கூட கேட்காமல் இருக்க, அதைத்தாண்டி அவர்களின் பேச்சு, கோவர்த்தன் மீது அவர்களுக்கு பாசம் இல்லையோ என்ற எண்ணத்தை உண்டாக்கி விட்டது. அந்த எண்ணம், அவன் மீது ஒரு துளி கூடுதல் ஒட்டுதலை கொடுக்க, அவனை பிறந்தவீட்டு ஏக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது.
அதுநாள் தொட்டு கோவர்த்தனிடம் நன்றாக பழக ஆரம்பித்தாள் வாணிலா. முன்பும் பழகுவாள் தான். ஆனால் அதில் ஒரு கவனம் இருக்கும். இப்போது எந்த தடையும் இன்றி பழக்கம் இயல்பாக வளர ஆரம்பித்தது.
அவளை அலுவலகத்தில் இருந்து அழைத்து வருவது, விடுமுறை தினங்களில் ஸ்பெயினின் அழகிய நகர்களில் உலா வருவது, அதோடு அவள் பயந்து வேண்டாம் என்று மறுத்த ‘டிரைவிங் லைசென்ஸ்’ வாங்க வைத்தது என அவளுடனான ஒற்றுதல் ஒற்றுக்கொண்டே போனது அவனுக்கு.
வாணிலாவுக்கு அவன் பார்வைகளின் வித்தியாசம் இப்போதெல்லாம் நன்றாக உரைக்க ஆரம்பித்தது. முதலில் தயங்கி, தடுமாறி, தெரியாமல் பார்த்தவன் நெருக்கம் கூடிய பின், தைரியமாய் பார்க்க ஆரம்பித்தான். விரசமான பார்வையோ, விவகாரமான பார்வையோ அல்ல… ஆளை விழுங்கும் பார்வை!!! அவன் விழியில் தானே சென்று விழும்படி இழுக்கும் பார்வை! பார்க்க மறுத்துவிடுவாள் பெண்!
அவளாக நெருங்காமல் தான் நெருங்குவதில்லை என்ற முடிவு அவனது! வெறும் பார்வையால் மட்டுமே பகிரப்பட்டுக்கொண்டிருந்த அவன் காதல் கங்குகள், அன்றொருநாள் வார்த்தையாலும் பொறி பறந்தது.
தன் சில்க் புடவையின் முன் கொசுவ மடிப்புகளை நேராக இழுத்துவிட்டுக்கொண்டிருந்தாள் வாணிலா. அவள் அலுவகலத்தில் ‘ட்ரடிஷனல் டே’ கொண்டாட, அதற்கு கிளம்பிக்கொண்டிருந்தவளை கன்னத்தில் கைவைத்த வண்ணம் வைத்த கண் வாங்காமல் லஜ்ஜையின்றி பார்த்துக்கொண்டிருந்தான் கோவர்த்தன்.
அவன் பார்கிறான் என்பதாலேயே அதிகமாய் தடுமாறியது அவளுக்கு.
அவளை முதன்முறையாய் புடவையில் பார்ப்பவன், மிட்டாய்க்கடையை வெறிக்கும் பட்டிக்காட்டான் நிலையில் இருக்க, “ஹெல்ப் பண்ணலாம்ல?” என்று சத்தமாய் கேட்டவள், ‘வெறிச்சு வெறிச்சு என்னத்த தான் பாக்குறானோ?’ என்று முனகினாள்.
அவளை பார்த்தபடியே எழுந்து வந்தவன், டிரெஸ்ஸிங் டேபிள் முன்னே நின்றவளை நகர சொல்லாமல் இடையே புக, பாதி உரசிய நிலையில் அவசரமாய் பின்னே நகர்ந்தாள் வாணிலா, சிறு முறைப்போடு!
அவன் கண்கள், அவள் கண்களில் இருந்து இன்ச் இஞ்சாக கீழே இறங்கிக்கொண்டு போனது. படபடப்பு எகிற அவன் கன்னத்தில் பட்டென தட்டியவள், “கீழ போ” என்றாள் முறைப்புடன்.
“நேரா கீழயே போயிடவா?” அவன் ஒரு மாதிரி பார்வையில் கேட்டுவைக்க, விழி விரித்தவள், “மடிப்பு எடுத்து விட சொன்னேன் கோ!” என்றாள் பல்லைக்கடித்து.
“மேல மடிப்பு எடுக்க ஹெல்ப் வேண்டாமா? கீழ மட்டும் போதுமான்னு தான் நானும் கேட்டேன்” என்றவன் மெதுவாய் முட்டிப்போட்டு அமர்ந்து, ஒவ்வொரு மடிப்பையும் கையாலேயே அவள் உடலோடு அயர்ன் செய்து நீட்ட, நெளிய ஆரம்பித்தாள் அவள்.
‘உதவி கேட்டது எத்தனை பெரிய தவறென்று அப்போது தான் புரிந்தது’
மூன்றாவது மடிப்புக்கு அவன் போனபோது, “போதும் விடு” என்று அவசரமாய் அவள் நகர, அவளை இடிப்பது போலவே எழுந்து நின்றவன், சொக்கி நின்ற கண்களோடு, “இஸ் யுவர் பாடி அ மேப்?” என்றான் கண்கள் மின்ன. (is your body a map? – உன் உடல் என்ன வரைபடமா?)
புருவம் சுருக்கியவள், “ஏன்?” என்று கேட்க, அவளை சற்றே நெருங்கி வந்தவன், “பிகாஸ், ஐ லவ் டு ட்ராவல்” என்றான். (because, I love to travel- ஏன்னா? எனக்கு பயணம் செய்ய விருப்பம்)
அவனிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை அவள் சத்தியமாய் எதிர்ப்பார்க்கவில்லை. அதிர்ந்து அவள் வாய் பிளக்க, அவன் ரம்யமாய் சிரித்துக்கொண்டு நின்றிருந்தான்.
அதிர்வை தொடர்ந்து கோபம் வர, “வாட்?” என்ற ஒருவார்த்தையில் அவள் சினத்தை காட்ட, “ஹே… ஜஸ்ட்… ஸ்லிப் ஒப் தி டன்க்” என்று சிரித்து சமாளித்தான் அவன். (just slip of the tongue- வாய் தவறிடுச்சு)
“இன்னும் ஒரு முறை தவறுச்சு… வெட்டிடுவேன்!” என்றவள் சொன்னதும், “ஹான்?” அவன் பீதியுடன் முழிக்க,
“நாக்கை சொன்னேன்!” என்றவள், தன் பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
‘டேய், கோவர்த்தா… மொத்தத்தையும் சுருட்டிக்கிட்டு இருடா! நேரமே சரியில்ல உனக்கு’ என்று தனக்கு தானே பயத்துடன் அவன் புலம்ப, அவனை புலம்ப வைத்தவளோ, உதட்டில் புன்னகையுடன் காரை செலுத்திக்கொண்டிருந்தாள்.