“நான் எனக்கு மட்டும் தான் சொல்றேன்” என்ற பிரஷாந்த், மீண்டும் சர்வரிடம், “மயோனிஸ் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொண்டு வாங்க… தென் புதினா லெமன் போட்டு ஒரு ஜூஸ்” என்று முடிக்க, அடுத்து சர்வர் பவித்ரா பக்கம் திரும்பினான்.
அவள் எண்ணமே அடுத்து பேசப்போகும் விஷயத்தில் மூழ்கியிருக்க, மனசுக்குள் ஒத்திகை நடத்திக்கொண்டிருந்தாள்.
“பவி… பவி???” அவள் முகத்தின் முன்னே கைகளை அசைத்ததும் கலைந்தவள், சூழ்நிலை புரிந்து, “வேகன் ஃபூட்ஸ் இருக்கா?” என்றாள் சர்வரிடம்.
“மிஸ்டர் பிரஷாந்த்!” என அவள் ஆரம்பிக்க, “ஒவ்வொரு முறை என்னை பேசும்போதும் மிஸ்டர் போட்டுட்டே இருப்பியா என்ன? மரியாதை எல்லாம் வேண்டாம் எனக்கு” என்றான் இலகுவாய்.
அவளுக்கு தான் பேசுவது இன்னும் கடினமாய் போனது. ஆனாலும் முயன்று, “பிரஷாந்த், நீங்க அழகா இருக்கீங்க! இன்ஃபேக்ட் ரொம்பவே அழகா, மேன்லியா இருக்கீங்க” என்றாள்.
பிரஷாந்தை கேட்கவும் வேண்டுமா? ஒரு பெண் தானே முன்வந்து ஒரு ஆணை அழகன் என்று சொன்னால், அது எட்டாம் அதிசயம் அன்றோ! அது தந்த பூரிப்பில் அவன் பறக்க, அவனை ‘டமார்’ என பாதாளத்தில் தள்ளும்படி, “ஆனா, எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்! நீங்க தான் ‘கால் ஆஃப்’ பண்ணனும்” என்றாள் பளிச்சென.
பிரஷாந்த் துளியிலும் துளியாய் கூட இதை எதிர்ப்பார்க்கவில்லை. அவள் மறுப்பை முதலில் எதிர்ப்பார்த்தவன் தான். ஆனால் எப்போது எந்தவித மறுப்பும் இன்றி அவள் நிச்சய மேடையில் வந்து நின்றாலோ அப்போதே அவனது அந்த கலக்கம் மறைந்துவிட்டது.
இப்போது ‘பழகிப்பாக்கலாம் வா’ என்று அவள் அழைப்பதாய் தான் நினைத்து வந்தான். திடீரென இப்படி சொன்னதில் பேச்சற்று திகைத்தவன், எதிரே இருந்த குவளையை எடுத்து நீரை மொத்தமாய் விழுங்கினான், கூடவே அவன் அதிர்வையும்.
சில நொடிகள் கண் மூடினான். பின்னே ஆழ மூச்செடுத்தான். பின் நேரே அவளை பார்த்து, “சார்’கிட்ட சொல்லிருக்கலாமே!?” என்றான்.
“பிரஷாந்த் டு பி ஃபிரான்க், எனக்கு பெருசா ‘நோ’ சொல்ல எந்த காரணமும் இல்ல அப்போ!”
“இப்போ மட்டும் என்ன ஆச்சு?”
“இப்போ… இப்போ உங்ககிட்ட பேசி பழக தான் புரியுது! வீ ஆர் நாட் மேட் ஃபார் ஈச் அதர்”
“நம்ம இன்னும் பேசி பழகவே இல்ல பவி”
“அதுக்கு முன்னாடியே எனக்கு புரியுதுன்னு சொல்றேன்!”
“என்ன புரியுது?”
‘ஐயோ எப்படி புரியும்படி சொல்வது?’ என மண்டை காய்ந்தது அவளுக்கு. சில விஷயங்களை வார்த்தைகளில் வடிக்க இயலாது. உணர்வுகளில் வெளிப்படும் எண்ணங்கள் வார்த்தைகளில் அடங்க மறுக்க, சொல்லிதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் வேறு அவளுக்கு.
அவள் அமைதியை கண்டவன், “என் வேலை… அது பிடிக்கலையா? இல்ல நான் இன்னும் சொல்லிக்குற மாதிரி பேர் எடுக்கலன்னு நினைக்குரியா?” என்றவன், “பவி இன்னும் ரெண்டே வருஷம்… சினிமால ஒன் ஆஃப் த லீடிங் கொரியோக்ராபேர்’ரா நான் இருப்பேன்! ஐ ப்ராமிஸ்!” என்றான்.
“ஒன் ஆஃப் த லீடிங் கொரியோக்ராபேர்’ஸ்’” என்று சொன்னவளை புரியாத பார்வையால்
“என்ன?” என்றான் அவன்.
“ஒன் ஆஃப் த சொல்லும்போது அடுத்து வர வார்த்தை ப்ளூரல்’ல இருக்கணும்!” என்றாள்.
அதற்குள் உணவுகள் வந்து மேசையை நிறைத்தது. வரும்போது நல்ல பசியோடு தான் வந்தான். ஆனால் இப்போது கண்முன் இருந்த உணவுகளை அவன் நாசி கூட சீண்ட மறுத்தது. கிரில் சிக்கன் அவன் கேட்ட எக்ஸ்ட்ரா மயோனிஸ் உடன் நடுநாயகமாய் அவன் புறம் இருக்க, இருபுறமும் ஷவர்மா அரணாய் வீற்றிருந்தது. அவள் புறமோ ஒரு நீண்ட கண்ணாடி குடுவையில் பளிசென்ற வெண்மையில் தேங்காய்பால் மட்டும்!
மேசையை சில நொடிகள் பார்த்த பவி, “இங்க பாருங்க பிரஷாந்த், சாப்புடுற விஷயத்துல கூட நமக்கு ஒத்துப்போகல!” என்றவள், “நான் வேகன்!” என்றாள்.
புருவம் சுருக்கியவன், “நானும் வெந்ததை தான் சாப்பிடுவேன்” என்று சொல்ல, தலையை உலுக்கியவள், “இது.. இது தான் பிரச்சனை பிரஷாந்த். நான் பேசுறது, என் விருப்பம், பழக்க வழக்கம் எதுலையும் நீங்க ஒத்து வரமாட்டீங்க!” என்றாள்.
“கிரில் சிக்கன் சாப்பிட்டா பிடிக்காதா?” என்றான். அவனுக்கு சத்தியமாய் ஒன்றுமே விளங்கவில்லை. எதற்காக என்னை வேண்டாம் என்கிறாள் என்பதே புலப்படவில்லை. அழகாய் இருக்கிறேன் என்று எடுத்ததுமே சொல்லிவிட்டதால் அதை கேட்க முடியாது. நடனம்? அது அவர் தந்தையிடமே இருக்கிறதே… அதை ஒரு காரணமாய் அவளால் சொல்ல முடியாது! வேறு என்ன? என்ன யோசித்தும் அவள் சொல்வது விளங்கவில்லை.
அவனுக்கு விளங்க வைக்கும் அளவு அவளிடம் வார்த்தைகள் இல்லை. அவளது உள்ளுணர்வு அது. ‘இது சரி வராது’ என்று திடமாய் தோன்றும் ஒன்றை எப்படி சம்பந்தப்பட்ட அவனுக்கு விளங்க வைக்க என்ற கையறு நிலை கோவமாய் உருமாற,
“ஆமா, எனக்கு க்ரில் சிக்கன் சாப்பிட்டா பிடிக்காது… சோ இந்த கல்யாணம் வேண்டாம்! கால் இட் ஆஃப்” என்றவள் கைப்பையை எடுத்துக்கொண்டு விறுவிறுவென வெளியேற,
“பவி… பவி?” என கத்திக்கொண்டே பதட்டமாய் அவளை பின்தொடர்ந்து ஓடினான் பிரஷாந்த்.
“பவி…. ஸ்டாப்! ஒரு நிமிஷம்…” அவன் வரவர இவள் வேகமாய் சென்றாள். அவளை பிடித்து விட வேண்டும் என்ற வேகத்தில் விரைவாய் நகர்ந்தவன் புதியதாய் உள்ளே நுழைந்த இருவரில் ஒருவர் மீது பலமாய் மோதிவிட, அவன் அந்நேரத்திலும் திரும்பி, ‘சாரி’ என சொல்கையில்,
“பொ…று…க்…கி!” என பல்லிடுக்கில் திட்டியிருந்தாள் சம்யுக்தா.