வித்தகனின் கரத்தை கெட்டியாய் பற்றிக்கொண்டு அந்த திறந்தவெளி உணவகத்துக்குள் நுழைந்தாள் சம்யுக்தா. எப்போதும் அவளாய் தான் அவனை அழைப்பாள். இன்றோ அவனே அதிசயமாய் அழைத்து ‘வெளில போலாம் வா’ என்றதும் அப்படியொரு மகிழ்ச்சி ஊற்று அவளுக்கு. பிடித்த கையை விடாமல் அவனோடு பாதையை அடைத்துக்கொண்டு அவள் நடந்து வர, திடீரென எதிரே வந்த ஒருவனை அவள் எதிர்ப்பார்க்கவில்லை.
உணர்ந்து நகர்வதற்குள் அதிவேகமாய் இடித்துவிட்டான். தோள்ப்பட்டை கழண்டுவிடும் அளவுக்கு அப்படி ஒரு வலி. அனிச்சையாய் உதடுகள் ‘அம்மா’வை அழைக்க, கைகள் நோகும் இடத்தை தேய்க்க, அவள் கண்களுக்கு மட்டும் எருமைமாடாய் தெரிந்த அந்த ஆஜானுபாகுவை அவள், ‘பொறுக்கி’ என கடிவதற்க்கும் அவன் திரும்பி ‘சாரி’ என சொல்வதற்கும் சரியாய் இருந்தது.
அவள் சொன்னது தெள்ளத்தெளிவாய் கேட்டதன் அடையாளமாய் அந்த அவசரத்தில் ஓடியவன் கூட கொடூரமாய் ஒருமுறை இவளை முறைத்துவிட்டு போக, சம்யுத்தாவின் கரங்கள் இன்னும் அழுத்தமாய் கட்டிக்கொண்டது வித்தகனின் கரத்தை.
ஒருவழியாய் உள்ளே நுழைந்து இருக்கைகளில் இடம் பிடித்தனர். அப்போதும் அவன் கரத்தை விடாமல் பற்றிக்கொண்டு அவன் அருகே அவள் அமர்ந்ததும், “ஒருத்தன் என்னை இடிச்சதும் இல்லாம, முறைச்சு பார்த்துட்டு போறான்… கூடவே இருக்கீங்க… ஒண்ணுமே கேட்கல” உரிமையாய் முகத்தை தூக்கி கொண்டாள் அவனிடம்.
“ஒருத்தர் மட்டுமே போற வழில ரெண்டு பேரா வந்தது நம்ம தப்பு… இன்னும் சொல்லனும்ன்னா உன் தப்பு! இதுக்கு அவனை எப்படி திட்ட முடியும்!? மோர்ஓவர் நான் பாத்தேன், அவன் வேணுன்னே இடிக்கல” என்றான்.
இவன் இப்படித்தான்… நீதி, நேர்மை, நியாயம், நாணயம், கைராசி என பெயருக்கு பின்னே பல அடுக்குமொழிகளை அடுக்கிக்கொள்ளுமளவு நல்லவன். அதெல்லாம் தெரிந்து தானே இவன் பின்னே சுற்றினாள். அதனால் அவன் பதிலில் பெருத்த ஏமாற்றம் எல்லாம் எழவில்லை அவளுக்கு.
“எதிர்ல போய் உட்காருமா! பக்கத்துல இருந்தா முகத்தை பார்த்து எப்படி பேச முடியும்?” என்று சொன்னான் அவன்.
“பரவால்ல ஜி… எனக்கு இதே கம்போர்டபில்’லா தான் இருக்கு” என்றவள் பிணைந்திருந்த கரங்களை ஆசையாய் பார்த்தாள்.
“யூ ஆர் கம்போர்டபில்… பட் நாட் மீ! நான் பேசணும் உன்கிட்ட! சோ எதிர்ல உட்காரு!” அவனது இந்த தொனியை அவளால் எப்போதும் மீற முடியாது.
லேசாக சுனங்கிக்கொண்டே எதிர் இருக்கையில் சென்று அமர்ந்தாள். சர்வர் வர அவளுக்கு பிடித்தது இவனுக்கு பிடித்தது எல்லாம் வஞ்சனை இன்றி ஆர்டர் செய்தவன் அவள் போதும் என்று சொல்லியும் கேளாமல் அவளுக்கு பிடித்த ஜிகர்தண்டா வேறு சொல்ல, சம்யுக்தாவிற்கு மனதுக்குள் ஜில்ஜில் கூல்கூல்.
சாப்பிடும்வரை பெரிதான பேச்சுகள் இல்லை. இவள் மட்டுமே அவ்வப்போது எதாவது கேட்டுக்கொண்டிருக்க, அவன் அதற்கு தகுந்த பதிலை சுருக்கமாய் சொல்லிக்கொண்டிருந்தான்.
இறுதியில் உணவெல்லாம் முடிந்து ஜிகர்தண்டா கைக்கு வந்த போது அவன் ஏதோ பேச ஆரம்பிக்க, இடையூறு செய்தது அவன் அலைபேசி.
“ஒன் செக்!” என்றுவிட்டு அழைப்பை ஏற்றான். அவன் நண்பன் தான் அழைத்தது. அவன் என்ன கேட்டானோ இவளுக்கு தெரியாது. ஆனால் பதிலுக்கு வித்தகன்,
பேசிட்டு கூப்பிடுறேன்… புரிஞ்சுப்பா!!!” இப்படி என்னவென்றே அவள் புரிந்துக்கொள்ள முடியாதபடி புதிரான அவன் பதில்களை கேட்டுக்கொண்டிருந்தவள் கண்கள் எப்போதும் போல அவனை ரசிக்க ஆரம்பித்துவிட்டது.
மாநிறம் தான்! ஆனால், அத்தனை வசீகரம்! கொஞ்சமும் செயலில் பந்தா இருக்காது, அப்போதும் சரி, இப்போதும் சரி!
சிரிக்க சிரிக்க பேச மாட்டான்! ஆனால், பேச்சில் ஒரு கவர்ச்சி… காந்தம் இருக்கும்! அதுதான் அவளை அவன் புறம் கட்டி இழுத்தது.
மேனியுரச நெருங்க மாட்டான்… பார்வையில் கூட கண்ணியம் இருக்கும்!
உணர்வுகளை கொட்ட தெரியாது… ஆனால் அவன் அருகே இருக்கும்போது ஆயிரம் வயலின் அவளை சுற்றி வாசிப்பதை போன்ற ஒரு சுகானுபாவத்தை அவளால் உணர முடியும்!
அவன் பேச்சை, விரல் அசைவுகளை, சுற்றுப்புறத்தை அசிரத்தையாய் அலசும் அவன் கண்களை, தன்னை பார்க்கும்போது சட்டென மேல்மாடிக்கு உயர்ந்து இறங்கும் புருவங்களை… கொஞ்சம் கூட லஜ்ஜையின்றி ரசித்தாள்.
இப்போது மட்டுமல்ல… அவனை பார்த்த முதல் தினத்தில் இருந்தே அவளது இந்த ரசனை தொடர்கிறது. அவள் படித்த கல்லூரியில் சீனியர் அவன். வழமையான கல்லூரி கலாட்டாக்கள், ரகளைகள், சண்டைகள், சீண்டல்கள் எல்லாம் இருந்த அந்த நேரத்தில் அவன் சற்றும் எதிர்ப்பார்க்காவண்ணம் அவனிடம் சென்று காதலை சொல்லிவிட்டாள்.
இவள் அழகி தான்! கூடவே பணக்காரியும்! எவனாவது வேண்டாம் என்று சொல்வானா என்று அவள் தோழிகள் அவளை உசுப்பேற்ற அதை பொய்க்கும்படி ‘நோஓஓஓ’ என ஒரேயடியாய் மறுத்துவிட்டான் அவன்.
அவளும் அவன் பின்னால் சுற்றி திரிந்து கெஞ்சி என்னென்னவோ செய்தும் வேலைக்கு ஆகவில்லை. காதல் தோல்வியில் வளராத தாடியை ஹாலோசினேஷனில் வளர்த்து அவள் சோககீதம் வாசிக்க, கல்லூரியை விட்டே போனவன், திடீரென ஒருநாள் அவள் கண்முன்னே வந்தான்.
அவளுக்கே ஆச்சர்யம் வருடங்கள் ஓடிவிட்ட பிறகும் கூட அவனை கண்டதும் உண்டாகும் உணர்வுகள் கொஞ்சமும் மரிக்கவில்லையே என்று…!!!
இரு படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறான் என தெரிந்தபோது அவனை சந்திக்க வேண்டும் என்று பேராவல் எழுந்தது தான் அவளுக்கு. ஆனாலும் முயன்று அடக்கிக்கொண்டாள். மீண்டும் அவனை சந்தித்து பின் அவனை மறக்க முதலில் இருந்து பிரயத்தனப்பட வேண்டுமே என்று பயமே அவளை தடுத்தது.
ஆனால் அந்த பயத்தை எல்லாம் சுக்குநூறாக்கும்படி அவனே வந்தான்… நன்றாய் பழகினான்… ஒருநாள் தன் காதலை சொன்னான்… அவள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவள் தந்தையிடம் பேசிவிட்டான்.
ஒரே மகளின் ஆசையை முன்னமே அறிந்தவரும் அவனின் பின்புலம், நன்னடத்தை மட்டும் கருத்தில் கொண்டு சம்மதித்துவிட்டார். இதோ இரு திங்களில் திருமணம்…!
“இல்லமா! அவன் என்கிட்ட கதை கேட்குறான்! அவனுக்கு நான் எழுதி தரனும்… ஸ்க்ரீன் ப்ளே’ல என் பேர் போட்டுட்டு டைரெக்ஷன்ல அவன் பேர் போட்டுக்கலாம்ன்னு ப்ளான்…”
“சூப்பர் ஜி! அதே மாதிரி பண்ணுங்க”
“ம்ம்ம்… அதுக்கு நான் கொஞ்சம் எக்ஸ்ப்ளோர் பண்ண வேண்டி இருக்கு”
“புரில ஜி”
“ம்ம்ம்… அதாவது… ப்ரொட்யூசர் வழக்கமான ஹாரர் கதையா இல்லாம ஸ்க்ரீன் ப்ளே வித்தியாசமா வேணுன்னு கேட்குறாராம்! என் பிரன்ட்’க்கு தெரிஞ்சு ஒரு இடம் இருக்கு… அதை மையமா வச்சு எழுதலாம்ன்னு இருக்கோம்! ஒருமுறை நேர்ல பார்த்துட்டு அப்படியே டிஸ்கஷன் இருக்கும்… எப்டியும் ஒரு மாசம் தேவைப்படும்!” என்றான்.
வெறும், “ஓ” மட்டுமே அவளிடம்.
“இன்னும் வெட்டிங் கார்ட்ஸ் பிரிண்ட் பண்ணல தானே!? கொஞ்சம் வெய்ட் பண்ண சொல்லு அங்கிள! இந்த படம் ரிலீஸ் ஆகிட்டா கண்டிப்பா என் பேரு இண்டஸ்ட்ரி’ல பாப்புலர் ஆகும்! அங்கிளுக்கும் என்னை மருமகன்னு காட்ட நல்லா இருக்கும்ல?”
“இருக்கும் தான் ஜி! ஆனா அப்பா அதெல்லாம் பாக்குற ஆள் இல்ல”
“நீங்க இல்ல… ஆனா எனக்கு இருக்கு! ரொம்ப கில்ட்’டா! உனக்கு என்னை பிடிச்சுருக்குங்குற ஒரே ஒரு ரீசன் தான் உங்கப்பா எனக்கு ஓகே சொன்னதுக்கு காரணம்… அதை தாண்டி எனக்குன்னு அடையாளமே இல்லை! அதை தேடிக்க ஒரு வாய்ப்பு அமைஞ்சுருக்கு… லெட் மீ யூட்டிலைஸ் தட்….” உணர்ச்சிவசமாகாமல், கத்தாமல், நிதானமாய் வார்த்தைகளில் மட்டும் அழுத்தம் கூட்டி பேசுபவனை அந்த நொடியில் கூட ரசித்தாள்.
“நீங்க சொல்றது புரியுது! ஆனா, ‘எனக்கு பிடிக்குது’ங்குற’ பாயிண்ட தவிர வேற எந்த அடையாளத்தையும் எங்கப்பா கன்சிடர் பண்ணவே மாட்டாரு! எனக்கு பிடிக்கலன்னா அவன் எப்பேர்ப்பட்ட கொம்பன்னாலும் ரிஜெக்டட் தான்” தந்தையை எண்ணி பெருமிதமாய் அவள் சொல்ல, எதிரே இருந்தவனிடம் கணத்த மௌனம்.
லேசாக பதறியது அவளுக்கு. சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டானோ? முதல் முறையாய் அவன் கோபத்தை சந்திக்க நேருமோ என்ற அச்சம், “ஜி… நான் தப்பா சொல்லல! எனக்கு பிடிச்சுருக்குங்குற ஒரே விஷயத்தை மட்டும் தான் என் அப்பா பாப்பாரு’ன்னு சொன்னேன்… ஹோப் யூ கெட் இட் இன் அ குட் வே!” அவளை துரிதமாய் சொல்ல வைக்க, அழுத்தமாய் ஒரு வேக மூச்சை வெளியிட்டவன்,
“புரியுது சம்மு! ஆனா என்னோட கில்ட்’க்காக… அது போகுறதுக்காக கிவ் மீ எ சான்ஸ்!” என்றான்.
இப்போது மறுக்க தோன்றவில்லை அவளுக்கு. அவன் பார்வையில் அவன் சொல்வது சரி தானே! ஆனாலும் தந்தையை நினைத்து அவள் மௌனிக்க, “நான் அங்கிள் கிட்ட பேசுறேன்… நீயும் எனக்கு சப்போர்ட் பண்ணா, கண்டிப்பா ஓகே சொல்லிடுவாரு! அதான் உன்கிட்ட முதல்ல சொல்றேன்” என்றான்.
அவள் தலை தானாக சம்மதமாய் ஆடியது.
“நாளைக்கே கிளம்பிடுவேன்! திரும்பி வர ஒரு மாசம் ஆகும்! போன் டவர் இருக்காது போற ஏரியாக்கு… சேஃப்’பா இரு! ஐ வில் பி பேக் சூன்!” என்றான் அக்கறையாய். சரி என தலையாட்டும்போதே சம்முவின் சேட்டைக்கார மூளை ஒரு குறுக்கு திட்டம் போட, அதை நடத்திவிடும் வேகம் அவள் விழிகளில்.
இரு ஜோடிகளின் திருமணமும் நடக்குமா? நடக்காதா? என்ற நிலையில் ஊசலாட, அங்கே ஒரு குடிசை வீட்டுனுள் தாயின் அதிக பட்ச அலறலை கேட்டபடி பூவுலகிற்குள் பிரவேசித்தது ஒரு சிசு.
ரத்தம் தோய்ந்த பிசுபிசுப்பான அந்த சிசுவின் உடலை கையில் ஏந்திய கூன் விழுந்த பழுத்த கிழவி, “ஏ… ராசா” என உச்சி முகரப்போக, “என்னை வெளில எடுக்க இவ்ளோ நேரமா கிழவி?” என்றது அது.
கண்கள் இரண்டும் தெறித்து நிற்க, கையில் இருந்த சிசுவை பயத்தில் உதறினாள் கிழவி. கீழே விழுந்த சிசுவோ விழுந்த வேகத்தில் எழுந்து நின்று, “எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா எனக்கு? ஏற்கனவே நான் பத்து மாசம் லேட்டு!” என்றுவிட்டு, பிரசவ அயர்வையும் மீறி வாய் திறந்து பார்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம், “நீங்களும் எனக்கொரு அம்மா தான்! என்னை எப்போ பார்க்கனும்ன்னு நினைச்சாலும் கண்ணை மூடி, ‘லட்டுகுட்டி’ன்னு என்னை எப்பவும் கொஞ்சுற மாதிரி கூப்பிடுங்க… ஓடி வந்துடுவேன்! சரியா? இப்போ நான் போயே ஆகணும்… பை!” என்றுவிட்டு பிஞ்சுக்கால்கள் தரையில் பதிய ஓடி, ஒரு கணத்தில் காணாமலும் போக….
பார்த்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு கண்ணை சுழற்றி மயக்கம் வந்ததென்றால், அடுத்த வருடம் நூறடிக்க வேண்டிய பிரசவம் பார்த்த கிழவி, உச்சகட்ட அதிர்ச்சி தாக்கியதில் அல்பாய்சில் பொட்டென போய்விட்டது.