அதற்கு மேல் புவியும் ஒன்றும் கேட்க வில்லை. சுஜியும் ஒன்றும் சொல்ல வில்லை. வெண்ணிலாவுக்கு தான் விஷயம் சப்பென்று போன உணர்வு.
அன்றே வெங்கட்டுடன் அவளுடைய வீட்டுக்குச் சென்று விட்டாள். அடுத்த ஒரு வாரம் அமைதியில் கழிய அப்போது ஒரு நாள் புவிக்கு வெண்ணிலாவின் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
சந்தோஷமாக போனை எடுத்த புவி “எப்படி இருக்க வெண்ணிலா?”, என்று கேட்கும் போது அந்த பக்கம் “சார் நான் ஏ.கே ஹாஸ்பிட்டல்ல இருந்து நர்ஸ் வைஷ்ணவி பேசுறேன்”, என்று ஒரு பெண் பேசினாள்.
“ஹாஸ்பிட்டலா? என்ன ஆச்சு சிஸ்டர்? என் தங்கச்சி மொபைல் உங்க கிட்ட எப்படி வந்தது?”, என்று கொஞ்சம் பதட்டமாக தான் கேட்டான்.
“உங்க தங்கை தான் சார் உங்களுக்கு போன் பண்ணச் சொன்னாங்க”
“அவளுக்கு ஒண்ணும் இல்லையே?”
“கொஞ்சம் பிரச்சனை தான் சார். இப்ப அவங்களுக்கு டிரீட்மெண்ட் நடந்துட்டு இருக்கு. வீட்ல குக்கர் வெடிச்சி இங்க அட்மிட் ஆகிருக்கங்க. கூட யாருமே இல்லை. நீங்க கொஞ்சம் வறீங்களா?”, என்று சொன்னதும் அதிர்ச்சியானவன் “பத்து நிமிசத்துல அங்கே இருப்பேன்”, என்று சொல்லி போனை வைத்தான்.
அவன் கண்கள் கோபத்தில் தீக்கங்குகளாக ஜொலித்கன. கூடவே தங்கையை நினைத்து கண்ணீரும் வந்தது. அவன் முக மாற்றத்தைக் கண்ட பரணி “என்ன ஆச்சு மாப்பிள்ளை? போன்ல யாரு?”, என்று கேட்டான்.
“போயிட்டு வந்து சொல்றேன் மாமா”, என்று சொன்னவன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றான். ஹாஸ்பிட்டல் போன போது அவள் மயக்கத்தில் இருந்தாள். தங்கையை அந்த நிலையில் அவனால் பார்க்க முடியவில்லை.
“ஏன் அவ கூட யாருமே வரலை? அவளுக்கு அங்க பிரச்சனையோ? அப்படின்னா அந்த சிகரட் சூடு எல்லாம் உண்மை தானா? சுஜியின் பேச்சை நான் அன்னைக்கே கேட்டுருக்கனுமோ?”, என்று எண்ணி கவலை கொண்டான்.
ஆனாலும் எந்த விவரமும் தெரியாமல் தங்கையின் வாழ்க்கையை சிக்கலாக்க அவன் தயாராக வில்லை. வெண்ணிலா கண் விழிப்பதற்காக காத்திருந்தான். அப்போது அவனை அழைத்த டாக்டர் “இது குக்கர் வெடிச்சதுனால ஏற்பட்ட காயம் இல்லை. யாரோ அவங்க தலையில குக்கர் மூடியை வச்சு அடிச்சிருக்காங்க”, என்று சொல்ல திகைத்துப் போனான்.
வெங்கட் மற்றும் அவனுடைய குடும்பத்தின் மீது கோபமாக வந்தது. வெண்ணிலா கண் விழித்து ஒரு வார்த்தை பேசின பிறகு அவர்களுக்கு இருக்கு என்று கருவிக் கொண்டான்.
வெண்ணிலா கண் விழித்ததும் அவளை நெருங்கியவன் “இப்ப எப்படி டா இருக்க? ரொம்ப வலிக்குதா?”, என்று கேட்டு அவள் தலைக் கட்டை வருடினான்.
உண்மையிலே வலி உயிர் போனதால் அவள் கண்கள் கலங்கியது. அதைக் கண்டவன் “வெண்ணிலா என்ன நடந்துச்சு? எனக்கு இன்னைக்கு உண்மை தெரியணும்”, என்று சற்று கோபமாகவே கேட்டான்.
“அண்ணா அது வந்து….”
“உண்மையைச் சொல்லு மா. அன்னைக்கு சுஜி உன் கால் காயத்தைப் பத்தி சொன்னா. இன்னைக்கு இவ்வளவு பெரிய அடி பட்டு நீ தனியா ஹாஸ்பிட்டல் வந்துருக்க? உன்னோட இந்த நிலைமைக்கு யார் காரணம்?”
“அண்ணா என்னை எதுவும் கேக்காத. எனக்கு அவர் கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கித் தா அண்ணா. அப்படி இல்லைன்னா அடுத்த தடவை என்னோட பிணம் தான் நம்ம வீட்டைத் தேடி வரும்”, என்று சொல்ல தங்கையின் பேச்சில் அதிர்ந்து விட்டான்.
“அவனை என்ன பண்ணுறேன் பார்”, என்று அவன் கோபப் பட அவனை தடுத்து நிறுத்தி விட்டாள் வெண்ணிலா.
வீட்டுக்கு வந்ததும் விஷயம் கேள்விப் பட்டு அனைவரும் உடைந்து போனார்கள். பரணியோ நொந்து விட்டான். தன்னால் தான் அவள் வாழ்க்கை இப்படி ஆகி விட்டது என்று கூனி குறுகிப் போனான்.
இது தான் சாக்கென்று மல்லிகா வேறு சுஜி கண் வைத்ததால் தான் வெண்ணிலா வாழ்க்கை இப்படி ஆகி விட்டது என்று பேசி டார்ச்சல் செய்தாள். பாரியோ மிகவும் உடைந்து விட்டார்.
“மாப்பிள்ளையை பற்றி இன்னும் நன்றாக விசாரித்திருக்க வேண்டுமோ?”, என்று மனதுக்குள் புகைந்து கொண்டிருந்த புவி தங்கை சொன்னது போலவே விவகாரத்துக்கு விண்ணப்பித்தான்.
முடிவில் கேஸ் கோர்ட்டுக்கு வந்தது. புவியும் வெண்ணிலாவும் தான் கோர்ட்க்கு வந்தார்கள். வெங்கட் கொஞ்சம் படபடப்புடன் அங்கே வர கோர்ட் என்றும் பாராமல் அவனை அடிக்க கிளம்பினான் புவி. ஆனால் வெண்ணிலா அவன் கையைப் பற்றி தடுத்து விட்டாள்.
ஜட்ஜ் வெண்ணிலா மற்றும் வெங்கட்டை விசாரித்தார். வெண்ணிலா வெங்கட் கொடுமை படுத்தியதை அங்கே சொல்வாள் என்று புவி எதிர் பார்க்க அவளோ கருத்து வேறுபாடு காரணமாக பிரிகிறோம் என்று சொன்னாள். வெங்கட்டும் சம்மதம் கொடுக்க இருவருக்கும் விவாகரத்து வழங்கப் பட்டது.
வெளியே வந்ததும் “ஏன் மா அவனைப் பத்தி நீ எதுவும் சொல்லலை?”, என்று புவி கேட்க வெண்ணிலாவுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை.
அப்போது வெங்கட் வர அவன் சட்டைக் காலரைப் பற்றிய புவியை வெண்ணிலா தான் தடுத்தாள். புவி கோபத்துடன் காரைக் கிளப்ப வெண்ணிலா திரும்பி வெங்கட்டைப் பார்த்தாள்.
வெங்கட் இரு கரம் கூப்பி அவளைக் கும்பிட வெண்ணிலா அவனைக் கண்டு சிரித்து தன்னுடைய கட்டை விரலை உயர்த்தி காண்பித்தாள். அதைக் கண்ணாடி வழியாக பார்த்த புவி அதிர்ந்து போனான்.
இருவருக்கும் இடையே ஏதோ பெரிய விஷயம் மறைந்திருக்கிறது என்று புரிந்தது. சிறிது நாட்கள் கழித்து பேசிக் கொள்ளலாம் என்று எண்ணி விட்டு காரைக் கிளப்பினான்.
ஆனாலும் மனது கேட்காமல் வீட்டுக்கு வந்ததும் “நான் வெங்கட் கிட்ட பேசவா மா?”, என்று கேட்டான் புவி. ஒரு வேளை வெண்ணிலாவுக்கு வெங்கட்டை பிடித்திருக்கிறதோ என்று அவனுக்கு தோன்றியது. அவன் அப்படிக் கேக்கவும் திகைத்த வெண்ணிலா “முதல்ல உன்னோட வாழ்க்கையை சரி பண்ணு. அப்புறம் என்னைப் பத்தி யோசி”, என்று பட்டென்று சொல்லி விட்டாள். அதற்கு மேல் புவி எதுவும் பேச வில்லை.
அடுத்து வந்த நாட்களில் அந்த வீட்டில் யாரும் இயல்பாக இல்லை. அப்போது ஒரு நாள் சாமி கும்பிட்டு விட்டு அறையில் இருந்து வெளியே வந்த சுஜியைக் கண்ட மல்லிகா மனதில் வன்மம் வளர்ந்தது.
“ஏய் இங்க வாடி”
“என்ன அத்தை ஏதாவது வேணுமா?”
“இப்ப உனக்கு சந்தோஷமா?”
“அத்தை”
“உன்னால தான் டி என் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிருச்சு. நீ தான் கருவிருப்ப? உனக்கு கிடைக்காத வாழ்க்கை என் பொண்ணுக்கு கிடைச்சதுக்கு பொறாமை பட்டே அவளை வாழ விடாம ஆக்கிட்டியே? நீ ஒரு ராசி கெட்டவ. உன்னால என் பொண்ணு வாழ்க்கையும் போச்சு. என் பையன் வாழ்க்கையும் போச்சு”, என்று மல்லிகா பேச சுஜிக்கு மன வேதனையாக இருந்தது. மகேஷ் மற்றும் ரேணுகா கூட அங்கே வந்து விட்டார்கள்.
சுஜி அழுத படி நிற்க “அம்மா என் வாழ்க்கைக்கும் சுஜிக்கும் என்ன சம்பந்தம்? நீ தேவையில்லாம பிரச்சனை பண்ணுற? சே வீட்ல நிம்மதியே இல்லை”, என்று வெண்ணிலா கத்த இந்த பிரச்சனையில் சமையல் அறை வாசலில் மயங்கி விழுந்திருந்த சுஜியை யாரும் கண்டு கொள்ள வில்லை.
அப்போது டீ குடிக்க வீட்டுக்கு வந்தான் புவி. வெண்ணிலா சத்தமாக பேசவும் “என்ன ஆச்சு? அம்மா வெண்ணிலாவை ஏதாவது சொன்னீங்களா? அவளே மனசு உடைஞ்சு இருக்கா. நீங்களும் ஏன் அவளைக் கஷ்டப் படுத்துறீங்க?”, என்று தங்கைக்காக பரிந்து வந்தான்.