“எல்லாம் கடைல இருந்து வர வருமானம் தானே? உன்னோட சொந்த உழைப்பு இல்லையே? அது எல்லாருக்கும் போது தான்”, என்று மல்லிகா வாயை விட பாரி கூட அவள் பேச்சில் அதிர்ந்து போனார்.
யாரும் எதுவும் பேச வில்லை. மல்லிகா இப்படி பேசுவாள் என்று யாருமே எதிர் பார்க்க வில்லை.
“ஓஹோ, சரி தான். ஆமா எனக்குன்னு எந்த வருமானமும் இல்லைல்ல? இத்தனை நாள் உழைச்சது கூட பொது தானே? எனக்கு சரியா ஒரு வாரம் டைம் கொடுங்க. அப்புறம் என்ன பண்ணலாம்னு பேசிக்கிறேன். அம்மு அம்மாவை உள்ள வரச் சொல்லு”, என்று சொன்னவன் அறைக்குள் போகப் பார்த்தான்.
அப்போதும் சும்மா இருக்காமல் “இந்த பிரியாணியை யார் டா திங்க?”, என்று கேட்டாள் மல்லிகா.
“நாய்க்கு போடு. இல்லைன்னா நீயே சூடு பண்ணி தின்னு”, என்று பதில் கொடுத்து விட்டுச் சென்றான் மகன். சுஜியும் பவித்ராவை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்று விட்டாள்.
“என்னங்க, பாருங்க அவன் எப்படி பேசிட்டு போறான்னு. எல்லாம் இந்த சுஜி தான் அவனை ஏத்தி விடுறா”, என்று சொன்னாள் மல்லிகா.
“நீயெல்லாம் மனுசியா டி? அந்த கடையே அவனும் பரணியும் சேந்து உழைச்ச உழைப்பு டி. அசால்ட்டா பொதுன்னு சொல்ற? இத்தனை நாள் ஒழுங்கா சாப்பிடாம தூங்காம அந்த கடையில உழைச்சவனோட தன்மானத்தை சீண்டி விட்டுட்ட. இனி என்ன எல்லாம் நடக்க போகுதோ? என் கண்ணு முன்னாடி நிக்காத. நீ பண்ணி வச்சிருக்குற வேலைக்கு? சீ”, என்று கத்தினார் பாரி.
“அதெல்லாம் அவன் கடையை விட்டு போக மாட்டான். அதை விட்டா அவனுக்கு வேற என்ன தெரியும்? இது சும்மா அவன் பொண்டாட்டி முன்னாடி சீன் போட்டுட்டு போறான்”, என்றாள் மல்லிகா.
அவளை அற்ப புழு போல பார்த்து விட்டுச் சென்றார் பாரி. “நீ பேசினது ரொம்ப தப்புக்கா”, என்று சொன்ன பரணிக்கு அதற்கு மேல் என்ன சொல்ல என்று தெரிய வில்லை.
அறைக்குள் வந்த புவி மதம் கொண்ட யானை போல உலாவிக் கொண்டிருந்தான். அவனையே பார்த்த படி இருந்தார்கள் மகளும் மனைவியும். இன்று புவி அவளுக்காக பரிந்து பேசியதில் சந்தோஷம் வந்தாலும் அவனை டென்ஷன் படுத்தி விட்டோமோ என்று கஷ்டமாக இருந்தது.
சிறிது நேரம் அந்த அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்த புவி தன்னுடைய போனை எடுத்து ரியல் எஸ்டேட் புரோக்கரை அழைத்தான்.
அந்த பக்கம் எடுத்ததும் “அண்ணே நான் புவி பேசுறேன். மார்க்கெட்ல ஏதோ கடை விலைக்கு வருதுன்னு சொன்னீங்களே? அதை நான் வாங்கலாமா?”, என்று கேட்டான்.
“பார்ட்டி ஒரே பேமண்ட்ல பணம் கொடுத்தா வாங்கிக்கலாம்னு சொல்றாங்க தம்பி”
“சரிண்ணே, பணம் ஏற்பாடு பண்ணிட்டு சொல்றேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கணக்கிட்டான். இன்னும் தேவையாக இருக்க வட்டிக்கு கொடுத்திருந்தவர்களிடம் பணத்தை திருப்பி தர முடியுமா என்று கேட்டான்.
அவர்கள் அனைவரும் “உடனே கேட்டால் எப்படி? நாங்க தான் வட்டியை சரியா கொடுக்குறோமே?”, என்று கேட்டார்கள். பணம் இல்லாமல் அவன் தடுமாற பவித்ரா உறங்கி இருந்தாள். சுஜி மட்டும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் தவிப்பது புரிய அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. “ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டாள்.
“எனக்கு கொஞ்சம் பணம் தேவை. அதான் என்ன செய்யன்னு யோசிச்சிட்டு இருக்கேன்”
“எங்க வீட்ல கேக்க வா?”
“வேண்டாம். அவங்களுக்கு இப்ப உடனே அவ்வளவு பணம் சேந்துருக்காது. வேற வழி தான் பாக்கணும்”
“அந்த கடையை வாங்கியே ஆகணுமா? அத்தை ஏதோ தெரியாம பேசிட்டாங்க”
“அது சாதாரண வார்த்தை இல்லை. அம்மா தானே பேசினாங்கன்னு நினைச்சாலும் பரணி மாமாவுக்காக நான் அந்த கடையில் இருந்து விலகி தான் ஆகணும். எனக்காவது வட்டித் தொழில் இருக்கு. ஆனா மாமாவுக்கு கடையை விட்டா வேறு எதுவும் தெரியாது. மகேஷ்க்கு அந்த கடை அமைஞ்சிருச்சு. அதனால அவன் இங்க வர மாட்டான். நான் பரணி மாமாவுக்கு விட்டுக் கொடுத்துட்டு எப்படியும் விலகத் தான் செய்யணும். எல்லாம் நல்லதுக்கு தான். ஆனா பணம்…”
“நீங்க கோபப் படலைன்னா நான் ஒரு விஷயம் சொல்லவா?”
“என்ன? சொல்லு”
“ஒரு நிமிஷம்’, என்று சொன்னவள் தன்னுடைய நகைப் பெட்டியை அவனிடம் நீட்ட அதைக் கண்டு வியந்து போனான்.
“என்ன இது?”
“நகை”
“யாரோடது”
“என்னோடது தான். இதை வச்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க”
“இதுல நூறு பவுன் தான் இருக்கு. அப்படியும் பத்தாது”
“நூறு எங்க வீட்ல போட்டாங்க. மீதி நூறு நீங்க கொடுத்த பணத்துல வாங்கினது”
“நான்…”
“நீங்க பணம் கொடுத்தது எனக்கு தெரியும். நாங்க கஷ்ட படுறோம்னு தானே நீங்க பணம் கொடுத்தீங்க?”
“இல்லை, எங்க வீட்ல எல்லாரும் உன்னை பெருமையா நினைக்கணும்னு தான் அதை செஞ்சேன். ஆனா அது நடக்கவே இல்லை. எல்லாம் என்னோட தப்பு தான். நான் உனக்கான மரியாதையை வாங்கிக் கொடுத்துருக்கணும். எங்க? நானே ஸ்டேடியா இல்லாம இருந்தேன். சரி அந்த நூறு பவுன் எப்படி உங்க வீட்ல போட்டாங்க? உங்க வீட்ல ஏற்கனவே சேத்து வச்சிருந்தாங்களா?”
“கொஞ்சம் வச்சிருந்தாங்க. அப்புறம் நீங்க பெரிய இடம்னு அண்ணா அப்புறம் ரகு பேர்ல வாங்கின இடங்களை அடகு வச்சு எனக்கு நகை போட்டாங்க. அதனால தான் ரகுக்கு பீஸ் கட்ட கொஞ்சம் கஷ்டம் வந்துருக்கும். நீங்க கொடுத்து சரி பண்ணிருக்கீங்க. தேங்க்ஸ்”, என்றாள் சுஜி.
இவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவளை இந்த வீட்டில் எந்த அளவுக்கு போராட விட்டோம் என்று அவன் மனது உறுத்தியது.
“ஒரு நிமிஷம், என் கூட வா. ஒரு முக்கியமான வேலை இருக்கு”, என்று சொல்லி அந்த பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளிய வந்தான். அவள் குழப்பமாக அவனை பின் தொடர “அப்பா”, என்று அந்த வீடே அதிரும் படி கத்தினான்.
அனைவரும் வெளியே வர அந்த பெட்டியை அங்கிருந்த டேபிளில் வைத்தான்.
“என்ன புவி? என்ன நகை இதெல்லாம்?”, என்று கேட்டார் பாரி.
“இது எல்லாம் என் பொண்டாட்டியோட நகை. இருநூறு பவுன் போட்டுட்டு தான் வந்திருக்கா. எனக்கே அது இப்ப தான் தெரியும். இனி யாராவது அவளை ஒண்ணும் இல்லாதவன்னு பேசினா நான் மனுசனா இருக்க மாட்டேன். பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. இனி எனக்கு அது இல்லை. மார்க்கெட்ல ஒரு கடை விலைக்கு வருது. நான் அதை வாங்கப் போறேன்”, என்று புவி சொன்னதும் பாரியும் பரணியும் எதுவோ பேச வர புவி அவர்களை பேச விட வில்லை.
“அப்புறம் இனி என் பொண்டாட்டி இங்க இருக்குற யாருக்கும் ஒரு வேலையும் செய்ய மாட்டா. அவங்க அவங்க வேலையை அவங்களே செய்ங்க. இல்லை வேலைக்காரி வைங்க. என் பொண்டாட்டி மட்டும் இந்த வீட்ல வேலை செய்யணும்னு தலை எழுத்தா?”, என்று கேட்டவன் மனைவி புறம் திரும்பி “இனி நீ எந்த வேலையும் செய்யக் கூடாது”, என்றான். என்ன சொல்ல என்று தெரியாமல் மண்டையை ஆட்டி வைத்தாள்.
மல்லிகாவும் ரேணுகாவும் “இருநூறு பவுனா போட்டுட்டு வந்தா?”, என்று அதிர்ந்து தான் போனார்கள்.
அடுத்த நாள் காலையில் ஏதோ நினைப்புடன் சுஜியிடம் “டீ போடு”, என்று சொல்லி விட்டாள் மல்லிகா. சுஜியும் எப்போதும் போல டீ போட்டுக் கொண்டு வந்தாள். அப்போது அங்கே வந்த புவி அடக்கப் பட்ட கோபத்துடன் அவளை முறைத்துப் பார்த்தான். அவன் முறைப்பில் சுஜி மிரண்டு போய் பார்க்க “என்ன இது?”, என்று கேட்டான்.
“டீ“, என்று அவள் நடுக்கத்துடன் சொல்ல “யாருக்கு?”, என்று கூர்மையாக கேட்டான்.
“அத்தைக்கு”, என்று அவள் சொன்னது தான் தாமதம் அதை அப்படியே விசிறி அடித்தான். காபி வீடு முழுக்க சிதறி டம்ப்லர் நங்கென்ற சத்தத்துடன் கீழே விழுந்தது. புவியின் புதிய பரிணாமத்தில் மிரண்ட ரேணுகா மகேஷின் கையை பயத்துடன் பற்றிக் கொண்டாள்.
சுஜி திகைத்துப் போய் நிற்க “இதை சுத்தம் செய்யுற வேலையைக் கூட நீ செய்யக் கூடாது. போ உள்ள”, என்றான். சுஜியும் அறைக்குள் சென்று விட்டாள். ஆனாலும் மனதுக்கு கஷ்டமாக தான் இருந்தது.
“புவி, நான் ஏதோ தெரியாம பேசிட்டேன் பா”, என்று மல்லிகா சொல்ல “இன்னொரு தடவை என் பொண்டாட்டியை வேலை ஏவினீங்கன்னா நான் வேற வீட்டுக்கு போறதைப் பத்தி யோசிக்கணும்”, என்று சொல்லி விட்டான்.
புவி போட்ட போட்டில் அம்மா வீட்டில் ஓய்வு எடுக்க வந்த ரோஹினி அவளது கணவன் வீட்டுக்கே சென்று விட்டாள்.
சற்று நேரம் கழித்து புவியை தனியே அழைத்துப் பேசினார்கள் பாரியும் பரணியும். “மாப்பிள்ளை நீ தங்கச்சிக்கு சப்போர்ட் பண்ணி பேசுறது சந்தோஷமா இருக்கு டா. ஆனா கடை விஷயம் மட்டும் கொஞ்சம் யோசியேன். அது உன் கடை டா. அதை விட்டுட்டு நீ போகக் கூடாது”, என்றான் பரணி. ஆனால் புவி நிலையாக இருக்க “பணத்துக்கு என்ன செய்யப் போற?”, என்று கேட்டார் பாரி.
“சுஜியோட நகையை அடகு வைக்கப் போறேன்”, என்று புவி சொன்னதும் “நகையை எல்லாம் அடகு வைக்க வேண்டாம். அந்த பணத்தை நான் தரேன்”, என்றார் பாரி.