“அவரை விடு டி. நான் இப்ப கேக்குறது உன் மனசை பத்தி தான். உன் மனசுல என்ன இருக்குனு வெளிப்படையா சொல்லு? என்ன டா பாத்த கொஞ்ச நேரத்துல காதல்ன்னு சொல்றான்னு என் மேல நம்பிக்கை வரலையா? அதைக் கூட நீ ஒப்பனா சொல்லு”, என்று கேட்டான் மதன்.
“அப்படி எல்லாம் இல்லை. என்னை பிடிச்சவங்களை எனக்கு பிடிக்கும். நான் உங்களை நம்புறேன்”
“அப்படின்னா? என்ன டி சொல்ல வர?”
“அப்படின்னா அப்படி தான். எனக்கு விளக்கமா சொல்லத் தெரியலை”
“நீ சொன்னா தானே டி எனக்கு தெரியும். சரி இதையாவது சொல்லு. உன் போன்ல என்னோட நம்பர் சேவ் பண்ணிருக்குறதை பாத்த தானே? அது எப்பவும் அப்படியே இருக்கட்டுமா? அதில் உனக்கு சம்மதம் தானே?”
“ம்ம்.. ஆனா… அப்பா”
“அதெல்லாம் பாத்துக்கலாம் விடு. உன்னைப் பாத்ததுல இருந்தே நான் நானா இல்லை டி”, என்று அவன் தாபத்துடன் சொல்ல கீழுதட்டை பற்களால் கடித்துக் கொண்டாள்.
“நீ இன்னைக்கு முகம் சிவந்து நின்னப்ப அப்படியே உன்னை எங்க வீட்டுக்கு தூக்கிட்டு போயிரணும் போல இருந்துச்சு. சுஜி கல்யாணம் முடியட்டும் டி. உன்னைத் தூக்கிறேன்”
“ஆனா அப்பா”
“அதெல்லாம் பாத்துக்கலாம்னு சொல்றேன்ல? நான் இப்ப பேச வந்தது சுஜி கல்யாணம் பத்தி தான். மாப்பிள்ளை வீட்ல இருந்து எந்த தகவலும் சொல்லாம நான் எப்படி எங்க வீட்ல பேச முடியும்?”
“சரி இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கு தகவல் வரும். நான் அவங்க வீட்ல இருந்து உங்க வீட்டுக்கு யாரையாவது பேசச் சொல்றேன்”
“சரி டி, நைட் பேசுவேன். தூங்கிறாத”, என்று சொல்ல புன்னகையுடன் போனை வைத்தாள்.
போனை வைத்து விட்டாலும் சட்டென்று அவளால் எதையுமே சிந்திக்க முடியவில்லை. ஒரே நாளில் வாழ்வே அழகாகிப் போன உணர்வு. இத்தனை நாள் அவள் வாழ்வில் உணர்ந்திராத சந்தோசத்தை முதல் முறையாக அனுபவித்தாள்.
“கடவுளே எனக்கு இந்த சந்தோசத்தையாவது நிலைக்க விடு”, என்று வேண்டுதலோடு வெண்ணிலாவை அழைத்தாள்.
“சொல்லு மைத்தி, சுஜி லைன்ல இருக்காளா?”
“இல்லை டி, நான் அவ கல்யாண விஷயமா பேச தான் கால் பண்ணினேன்”
“உன் பிளான்க்காக தான் வெயிட் பண்ணுறேன். என்ன செய்யனும்? சொல்லு மைத்தி”
“இப்ப நீ என்ன பண்ணுற?”, என்று ஆரம்பித்து வெண்ணிலா செய்ய வேண்டிய வேலைகளைச் சொன்னாள். மைதிலி சொன்ன விஷயங்களை எல்லாம் கேட்டுக் கொண்ட வெண்ணிலா “சரி டி, இனி நான் பாத்துக்குறேன்”, என்று சொல்லி போனை வைத்தாள்.
தன்னுடைய ஆசையை நிறைவேற்ற இரண்டு தோழிகளும் போராடிக் கொண்டிருக்க அது தெரியாமல் அன்னையை முறைத்துக் கொண்டிருந்தாள் சுஜிதா.
“என்ன டி முறைக்கிற? வெங்காயம் தானே வெட்டித் தரச் சொன்னேன்? என்னமோ விறகு வெட்டச் சொன்ன மாதிரி முறைக்கிற?”, என்று சண்டைக்கு வந்தாள் அவள் அன்னை சுந்தரி.
“எல்லாம் நான் தான் செய்யனும். இங்க மகாராணி மாதிரி இருக்க. கல்யாணம் முடிஞ்ச உடனே உன் மாமியா வீட்ல இந்த வேலையை எல்லாம் உன் புருஷன் செய்வானா?”, என்று அன்னை கேட்க அவள் மனதில் உலா வந்தான் புவி.
“அவன் இந்த வேலை எல்லாம் செய்வானா?”, என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க “இப்படியே பண்ணிட்டு இருக்காத பாப்பா. நாளைக்கு புகுந்த வீடு எப்படி வேணும்னாலும் இருக்கலாம். கொஞ்சமா சமையல் எல்லாம் கத்துக்கோ”, என்றாள் சுந்தரி.
“அதெல்லாம் பழகிக்கலாம் விடு மா”, என்று சொல்லி அன்னையை சமாளித்த சுஜி கடைசி வரை அந்தக் வெங்காயத்தை தொட்டுக் கூட பார்க்க வில்லை.
அதே நேரம் “அம்மா, அப்பா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றாள் வெண்ணிலா.
“வேலைக்கு போறதைப் பத்தி மட்டும் பேசாத”, என்றாள் மல்லிகா.
“நீ பேச்சு மாறுவ டி. ஒழுங்கா என் தலைல கை வச்சு சத்தியம் பண்ணு, எங்க பேச்சை கேப்பேன்னு”
“அண்ணன் கல்யாணம் முடிஞ்சா நீங்க சொல்றதை கேப்பேன் போதுமா? இது சத்தியம். ஆனா அது வரைக்கும் வேலை கிடைச்சா போவேன்”, என்று வெண்ணிலா சொல்ல “சரி, இப்ப என்ன விஷயம் சொல்ல வந்த? அதைச் சொல்லு மா”, என்றார் பாரி.
“எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கா பா. அவ பேர் சுஜி. அவ நம்ம அண்ணனுக்கு பொருத்தமா இருப்பா. அவங்க வீட்ல பேசலாம் பா”
“அவ குடும்பம் எப்படி டி? நம்மளை மாதிரி பணக்காரங்க தானே? ஏன் கேக்குறேன்னா ரேணு குடும்பம் பணக்காரங்க தான். உன் அக்கா ரோஹிணியைக் கட்டிக் கொடுத்துருக்குறதும் பணக்கார இடம் தான். நாளைக்கு உனக்கும் அப்படி தான் பாப்போம். அதான் கேக்குறேன்”, என்றாள் மல்லிகா.
அதைக் கேட்டு வெண்ணிலா அன்னையை முறைக்க “அவ கிடக்குறா. நீ சொல்லு மா”, என்றார் பாரி.
“சுஜியும் நம்ம இனம் தான் பா. ஆனா பணக்காரங்க எல்லாம் இல்லை. சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் தான்”
“அப்படின்னா வேண்டாம். நம்ம ரேணுகா நூறு பவுன் நகை போட்டு வந்தா. அது மாதிரி வர பொண்ணு தான் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்”, என்றாள் மல்லிகா.
“அம்மா இவங்க வீட்ல அவ்வளவு செய்ய முடியாது. அவ அண்ணன் இப்ப ரெண்டு வருஷமா தான் வேலைக்கு போறாங்க. அது வரைக்கும் அவங்க அப்பா சம்பாத்தியம் மட்டும் தான். அவ தம்பி இப்ப டாக்டருக்கு படிக்கிறான். இவளும் இப்ப தான் பி. ஈ முடிச்சா. உடனே எப்படி அவ்வளவு நகை போட முடியும்?”, என்று கேட்டாள் வெண்ணிலா.
“அதெல்லாம் முடியாது. என் மகனுக்கு மனைவியா வரப் போற பொண்ணு பணக்காரியா தான் இருக்கணும். இன்னும் கொஞ்ச நாள் தேடுவோம்”, என்று மல்லிகா சொல்ல “அப்பா, அம்மா பேசுறதைப் பாருங்க. நீங்க என்னப்பா அமைதியா இருக்கீங்க?”, என்று தந்தையிடம் கேட்டாள் வெண்ணிலா.
“எனக்கு என் மகன் கல்யாணம் முடிஞ்சா போதும். மத்த படி பணம் முக்கியம் இல்லை”, என்றார் பாரி.
“அப்பான்னா அப்பா தான்”, என்று பாரியைக் கொஞ்சிய வெண்ணிலா “நீ ஏன் மா இப்படி சுயநலமா இருக்க?”, என்று அன்னையைச் சாடினாள்.
“நானா? நான் என்ன டி பண்ணினேன்?”
“அண்ணன் நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிற? நீயெல்லாம் ஒரு அம்மாவா? அண்ணனும் உன் பிள்ளை தானே? இல்லை அண்ணனை பஸ் ஸ்டாண்ட்ல இருந்து தூக்கிட்டு வந்தியா?”
“அடிச்சேன்னா பாரு? அவன் என் மூத்த பிள்ளை டி. அவன் என் உசுரு”
“பொய் சொல்ற. அப்படி அவன் முக்கியம்னா அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைப்ப தானே? உன் எல்லா பிள்ளைகளும் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகணும். ஆனா அண்ணாவை மட்டும் கண்டுக்க மாட்ட”
“நானா டி கண்டுக்க மாட்டிக்கேன்? அவன் கிட்ட எவ்வளவு போராடிட்டேன் தெரியுமா? பரணி கூட சேந்துட்டு கல்யாணமே பண்ண மாட்டேன்னு சொல்றான்”
“அவன் அப்படிச் சொன்னா நல்ல அம்மா என்ன பண்ணிருக்கணும்? ஏதாவது பிளாக்மெயில் பண்ணியாவது அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும்ல? நீ ஏன் அப்படி பண்ணலை? உனக்கு அண்ணான்னா இளக்காரம் தான். மகேஷ் அண்ணன் தான் உனக்கு முக்கியம். அதான் நீ புவி அண்ணனை படிக்க கூட வைக்கலை”, என்று வெண்ணிலா சொல்ல மல்லிகா அரண்டு விட்டாள். பாரி மகளுக்கு மனதுக்குள்ளே சபாஷ் போட்டார்.