ஒரு சிண்ட்ரெல்லா கதை – 1
“மேலோகம் பூலோகம் சொந்த ஊரு மாரி
நான் வந்து வந்து போவேண்டா வெள்ளி செவ்வா தேதி”
என்று சற்றே ஹை டெசிபலில் ஒலித்த பாடல், அந்த வாடகை இன்னோவா காரினுள் கசிந்தது. இசையின் ஓசை தன் இனிய குரலின் சப்தத்தை மட்டுப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில், ஓட்டுனரின் அருகே அமர்ந்திருந்த மரகதம், “தம்பி அந்த பாட்டை கொஞ்ச மெதுவா வைப்பா” என்று கூறிவிட்டு,
தன் முழு உடலையும் பின்னால் திரும்பும் முயற்சியில் தோற்றுப் போய், தலையை மட்டும் பின்பக்கம் திருப்பினார். நடு இருக்கையில் அமர்ந்திருந்த தன் தம்பி, முத்துராமனிடம் பேசுவது போல காட்டிக் கொண்டாலும், அவர் கவனம் தம்பி மனைவி, சுகந்தி தன் பேச்சைக் கவனிக்கிறாளா என்று ஒரு முறை ஊர்ஜிதம் செய்து கொண்டது.
“பொண்ணைப் பத்தி என்ன நினைக்கற முத்து? மேற்கொண்டு பேசலாமா? எதுவுமே கலந்துக்காம வர்றீங்களே?” எனக் குரலை ஏற்றி இறக்கி வினவினார்.
“வீட்டில போய் பேசிக்கலாம்னு இருக்கோம்” என்று கணவனை முந்திக் கொண்டு சுகந்தி பதிலளித்தாள். சுகந்தி சொன்ன விதத்திலேயே “இது எங்க வீட்டு சமாச்சாரம். நாங்க பேசிக்குவோம். நீங்க உள்ள வரதீங்க” என்று சொல்லாமல் சொல்லியது போலத்தான் இருந்தது. மரகத்திற்கும் இந்த குத்தல் புரியும் தான் ஆனால் வெளிகாட்டிக் கொள்ளாமல் சமாளித்தார்.
எங்கே தன் மகன்களின் திருமண விஷயத்திலும், நாத்தனார் மரகதம் உள்ளே நுழைந்து தன் போக்கில் முடிவுகள் எடுத்துவிடுவாரோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்தது சுகந்திக்கு.
அதனால், பெண் பார்க்கும் பேச்சு எழுந்த போதே, கணவர் முத்துராமனிடம், “இதப்பாருங்க. என் வாழ்க்கை இவளோ நாள் எப்படி எப்படியோ போச்சு. எல்லா விஷயத்திலேயும் உங்க அக்கா மூக்கை நுழைச்சு முடிவெடுத்து, எனக்குன்னு இந்த வீட்டில ஒரு சுதந்திரமே இல்லாம போயிடுச்சு. அதை கூட நான் விட்டுடறேன். ரவி கல்யாண விஷயத்தில நான் அப்படி இருக்க மாட்டேன். என் இஷ்டப்படி தான் பொண்ணு பார்ப்பேன்.”
“ஏண்டி நீ? அக்கா என்ன நம்ம கெடுதலுக்கா சொல்லிடுவா? அவ சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்டீ. என் அம்மாவுக்கு அப்பறம், வீட்டுக்கு பெரியவளா இருக்கறது அக்கா தானே சுகந்தி”
“அப்போ நான் என்ன அர்த்தங்கெட்டதனமா பேசறேனா? உங்க அக்கா சொன்னாங்க, ஆட்டுகுட்டி சொல்லுச்சுன்னு என் இஷ்டம் மீறி எதையும் செய்ய நான் ஒத்துக்க மாட்டேன். எனக்கு வர்ற மருமக எப்படி இருக்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன். என் பசங்க ரெண்டும் என் சொல் பேச்சு தான் கேட்கும்” என்று திட்டமாக கூறிவிட்டாள் சுகந்தி.
அதன் பொருட்டே, திருவண்ணாமலையில் பெண்ணைப் பார்த்துவிட்டு, திண்டிவனம் நோக்கிப் பயணிக்கும் இந்த ஒன்றரை மணிநேரப் பயணத்தில், திருமணம் விஷயம் பற்றிய பேச்சு எழாமல் இருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே இருந்தாள் சுகந்தி.
திண்டிவனத்தில் மரகதத்தை அவள் வீட்டில் இறக்கிவிட்ட பின்னர், மேற்கொண்டு பேசலாம் என்று ஆசைபட்ட சுகந்தியின் எண்ணம் நிறைவேறவில்லை.
காரில் ஏறிய சற்றைக்கெல்லாம் துவங்கிவிட்டிருந்தார் மரகதம். நாத்தனாரின் கேள்விகளுக்கு தக்க விதமாக பதில் சொல்லிக் கொண்டு வந்த கணவரின் மீதும் ஆத்திரம் எழுந்தது.
“என்ன முத்து? எதுவும் பேசாம வர்ற? ஏ ரவி? நீயாவது சொல்லேண்டா. பொண்ணை பிடிச்சிருக்கா உனக்கு?” என்று அம்மாவின் அருகே அமர்ந்து கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்த ரவீந்திரனை வேறு பேச்சில் இழுத்தார் மரகதம். மகன் எங்கே பதில் சொல்லிவிடுவானோ என்ற அச்சத்தில், அவன் தொடையில் கை வைத்து அழுத்திய சுகந்தியின் எண்ணத்தை புரிந்து கொண்ட ரவி, “யோசிக்கலாம் அத்த” என்று பட்டும்படாமல் பதிலளித்தான்.
ரவியின் பதிலைக் கேட்கவும் சுகந்திக்கு அப்பாடா என்றிருந்தது. இதற்கு மேல் எதுவும் பேச மாட்டார் மரகதம் என நினைத்துக் கொண்டிருக்க, காரின் கடைசி இருக்கை முழுவதையும் தனதாக்கிக் கொண்டு கால் நீட்டிப் படுத்திருந்த ரவீந்திரனின் தம்பி சுசீந்திரன், “உங்களுக்கு பொண்ணு பிடிச்சிருக்கா அத்த? அபி அண்ணிய விடவும் பொண்ணு கொஞ்சம் கலர் தான் இல்ல. ” என வம்படியாக, மரகதத்தின் இளைய மகள் அபிராமியை பேச்சில் இழுத்து வந்தான்.
“சும்மா இருடா. சம்பந்தமில்லாம ஏதாவது உளறிகிட்டு” என்று இளைய மகனை அடக்கிய சுகந்தி சற்றே மிரட்சியுடன் தான் நாத்தனாரை ஏறிட்டாள். அவள் எதிர்பார்த்தது போலவே தன் நாடகத்தை அரங்கேற்றத் துவங்கியிருந்தார் மரகதம்.
“ம்ம்ம்ம்ம்” என்று ஒரு பெரு மூச்சுடன் ஆரம்பித்தவர், “நம்ம ரவிக்கு அபியையே பார்க்கலாம்னு நானும் தான் ஆசைபட்டேன். அதுக்கு தான் குடுப்பனை இல்லாம போயிடுச்சே. டேய் ரவி, இப்பவும் நீ உம்னு ஒரு வார்த்தை சொல்லு, உனக்கும் அபிக்கும் அடுத்து வர்ற முகூர்தத்திலை அத்தை ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வைக்கறேன். என்னடா சொல்லற?” எனத் திரும்பி ரவீந்திரனை ஏறிட்டார் மரகதம்.
இந்த பழைய பல்லவியைக் கேட்கவும், ரவி தன் ஹெட்செட்டைக் கழற்றி பேச்சில் கவனமானான். “அத்தை,னான் அன்னைக்கே என் முடிவை சொல்லிட்டேன். நீங்க எத்தனை தடவை மாத்தி மாத்தி கேட்டாலும் என் பதில் அதே தான் சரியா? இவளோ நெருங்கின சொந்தத்தில கல்யாணம் பண்ண எனக்கு இஷ்டம் இல்ல. புரிஞ்சுக்கோங்க. திரும்ப திரும்ப அதே பேச்சு பேசாதீங்க” என்று முகத்திலடித்தாற் போல பதிலளித்தான்.
சுகந்தி மகனை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, அப்பாடா என்ற பெருமூச்சு விட்டாள். திரும்பவும் அபியின் பேச்சு எழும் என்று அவர் யூகித்தது தான். ஏற்கனவே உள்ளூரில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருந்த மரகதத்தின் ராஜ்ஜியம் தான் தன் வீட்டில் நடைபெறுகிறது. இதில் பெண்ணை வேறு கட்டிக் கொண்டு வந்தால் கேட்கவே வேண்டாம்.
“இதான் சாக்குன்னு இங்கையே டேரா போட்டுடுவாங்க. நல்ல வேளை ரவிக்கு ஏனோ சொந்தத்தில கல்யாணம் பண்ண பிடிக்கலை. நல்லதாப் போச்சு. “என உள்ளுக்குள் அகமகிழ்ந்து போனாள் சுகந்தி.
ரவியின் பதிலைக் கேட்கவும் மரகதத்திற்கு இன்னமும் ஆற்றாமை அதிகமாயிற்று.
“என்னமோ சொல்லற போ ரவி. கிளி மாதிரி கையில வரன் வச்சுகிட்டு, வெளிய போய் எதுக்கு பாடுபட்டு பொண்ணு தேடணுங்கறேன். சொந்தம் விட்டுபோயிடக் கூடாதுன்னு தம்பி பையனுக்கு பொண்ணு குடுக்க நான் திண்டாடறேன். என் பாசம்லாம் இங்க யாருக்கு புரியப் போகுது?” என்று முத்தாய்ப்பாக முடித்தார்.
“அத்த, ஏன் இவளோ கவலை படறீங்க. அபிக்கு நான் வேணா வாழ்க்கை குடுக்கறேன்” என்று கடைசி இருக்கையில் இருந்து தலையை நீட்டி, இருப்பு கொள்ளாமல் பேசிய சுசீந்திரனின் தலையில்,” பேசாம இருக்கமாட்ட நீ? மொத்தல்ல காலேஜை ஒழுங்கா முடிக்கற வழியைப் பாரு” என்று சொல்லிக் கொண்டே நங்கெனக் கொட்டினார் சுகந்தி.
“அடப்போடா கிறுக்குப்பயலே! உன்னை விட அபி ஒரு வருஷம் மூத்தவடா. அப்பறம் எப்படி உனக்கு குடுக்க. ரவிக்கும், அபிக்கும் மூணு வருஷ வித்தியாசம். அதுகளுக்கு பண்ணி வச்சா, ஒண்ணுகுள்ள ஒண்ணுன்னு ஒத்தாசையா இருந்துக்குங்க. சொந்தமும் விட்டுப் போகாம இருக்கும்” என்று திரும்பவும் பல்லவி முடித்து, சரணம் பாடத் துவங்க, “ஏதாவது பேசி உங்க அக்கா வாயை மூடப் போறீங்களா இல்லையா?” என்பது போல கணவரை முறைத்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார் சுகந்தி.
மனையாளின் எண்ணத்தை புரிந்து கொண்ட முத்துராமன்,
“விடுக்கா. எங்களுக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான். அபியை கல்யாணம் பண்ணிக்க யாருக்கு குடுத்து வச்சிருக்கோ? இவன் தான் பிடிவாதமா சொந்தத்தில வேண்டாம்னு நிக்கறானே. என்னை என்ன பண்ண சொல்லற?” என்று மனைவியை சமாதானப்படுத்தும் நோக்கில் தமக்கையிடம் பதிலளித்தார்.
“ம்ம்ம்ம், என்னவோ போ முத்து. பசங்க சொல்லறதுக்குலாம் நாம தலையாட்ட வேண்டிய காலமா போயிருச்சு. சரி, சரி. இந்த பொண்ணை பத்தி என்ன அபிப்பிராயம்னு நாம பேசலையே? என்ன ரவி? இந்த பொண்ணை பிடிச்சிருக்காடா? பிடிக்கலைன்னாலும் மனசை திறந்து அத்தைகிட்ட மறைக்காம சொல்லுடா.”
“ஏன் இதெல்லாம் கேட்க பெத்தவங்க நாங்க இல்லையா? “நான் தான் உனக்கு பொண்ணு பார்த்தேன். நான் தான் முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வச்சேன்னு ஊரெல்லாம் பீத்திக்கணும். அதானே” என்று திரும்ப சுகந்தியின் உள்ளம் கருவத் துவங்கியது.
நல்லவேளையாக மரகதத்தின் கேள்விக்கு பதில் சொல்லும் முன்னர், அவரது வீடு வந்துவிட்டிருக்க, “ அக்கா, நம்ம வீட்டுக்கு வந்துட்டு போறியா? இல்லை இறங்கிக்கறியா?” என்று முத்துராமன் வினவ, சுகந்தி தன் கணவனைப் பார்த்து கண்களை பெரியதாக உருட்டினாள்.
“அம்மாவும் எவளோ நேரம் தான் நல்லவளாவே நடிப்பாங்க. பாவம் கொஞ்சம் ரெஸ்ட் குடுங்கய்யா” என்று மென்குரலில் பேசிய சுசீந்திரனின் சிரிப்பு சப்தம் வேறு சுகந்தியை எரிச்சல் மூட்டியது.
நல்லவேளையாக மரகதம் தன் வீட்டில் இறங்கிக் கொள்வதாக முடிவெடுத்திருந்தார். “அபி தனியா இருப்பா. நான் வீட்டிலயே இறங்கிக்கறேன். ஒரு தூக்கம் போட்டுட்டு சாயந்தரமா வர்றேன். மேற்கொண்டு பேசுவோம்” என்று மரகதம் சொல்லிட, அப்போதைக்கு சற்றே நிம்மதியாக உணர்ந்தார் சுகந்தி.
நாத்தனார் இறங்கியதும், கார் அவர்களது வீட்டை நோக்கி விரைந்தது. “அப்பப்பா, என்னால கொஞ்சம் கூட முடியலை. கல்யாணம் என் பையனுக்குங்கறதே மறந்து போயிடுது உங்க அக்காவுக்கு. அவங்க பையன் அபிஷேக் கல்யாணத்தப்போ நான் எதாவது தலையிட்டேனா? நாசூக்கா விலகி தானே நின்னேன். அவங்க அவங்க பையனுக்கு பெத்தவங்க இஷ்டம் போல செய்யணும் பேசணும்னு ஆசை இருக்காதா? இதப்பாருங்க. சும்மா எல்லா விஷயத்திலையும் மூக்கை நுழைக்க வேண்டாம்னு சொல்லி வைங்க உங்க அக்காகிட்ட. என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு” என்றார்.
முத்துராமனுக்கு மனைவி சொல்வது புரிந்திருந்த போதிலும், சொந்த அக்காவை விட்டுக் கொடுத்துப் பேச மனம் வரவில்லை.
“விடு சுகந்தி. சின்ன விஷயங்களை பெருசு படுத்தாத. நான் பார்த்துக்கறேன்” என்று மனைவியை சமாதானம் செய்துவிட்டார்.
“டேய், ரவி, எதாச்சும் சொல்லுடா. உன் கல்யாணத்தைப் பத்தி தானே பேசிட்டு இருக்கோம். பொண்ணு பிடிச்சிருக்கா இல்லையா. எதாவது ஒண்ணு இப்போவே சொல்லு. சாயந்தரம் உங்க அத்த வந்து பேசறப்போ நாம முடிவுமட்டும் தான் அவங்களுக்கு சொல்லணும். அவங்களை கலந்துகிட்டு முடிவெடுக்கற மாதிரி இருக்க கூடாது. நா சொல்லறது புரியுதா?” என அவன் கைப்பேசியை தட்டி விடச் செல்ல, ரவீந்திரன் அன்னையை சிரிப்புடன் ஏறிட்டான்.
“நான் என்னம்மா சொல்லணும் இப்போ? அத்தை மேல இருக்க கோபத்தை என் மேல ஏன் காட்டறீங்க?”
“உன் மேல எனக்கெண்டா கோபம். சரி, நீ என்ன நினைக்கற அந்த பொண்ணைப் பத்தி? உனக்குப் பிடிச்சிருக்கா? மேற்கொண்டு பேசலாமா?” என்று மகனின் முகத்திலிருந்து கண்களை அகற்றாமல் வினவினார் சுகந்தி.
“ம்ம்ம்ம்” என்று சிரிப்புடன் தலையசைத்தான் ரவி. அவனுக்கு செளமியாவை பிடித்திருந்தது. அதிக அலட்டல் இல்லாத, சாதாரண அழகிய முகம் கொண்ட செளமியை வேண்டாம் என்று சொல்ல காரணங்கள் இல்லை. பல நாட்கள் பார்த்து பழக்கப்பட்டது போன்ற ஒரு வாஞ்சை ஏற்பட்டிருந்தது. ஏன், ஒரு சாயலில், ரவியின் கல்லூரிக் காலக் முன்னாள் காதலி திவ்யாவை நினைவுபடுத்தினாள் இந்த செளமியா. அதே உருண்டை முகமும், பக்கவாட்டு கோணை வகிடும் அவனுக்குப் பிடித்திருந்தது. இதையெல்லாம் எண்ணி புன்னகை சிந்தியவன், அத்தை மரகதத்தின் முன்னர் தன் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டாமே என பொறுமை காத்திருந்தான்.
இப்போது அன்னை வினவவும், “எனக்கு பிடிச்சிருக்கும்மா. உங்க எல்லாருக்கும் ஒ.கேன்னு மேற்கொண்டு பேசுங்க” என்று தன் சம்மதத்தை சொல்லிவிட்டிருந்தான்.
“ஜாதக பொருத்தம் ஏற்கனவே பார்த்தாச்சு. அப்போ சாயந்தரம் நல்ல நேரம் பார்த்து எங்களுக்கு சம்மதம்னு ஃபோன் பண்ணி சொல்லிடவா?” எனத் திரும்ப வினவினாள் சுகந்தி.
“உங்க இஷ்டம் போல செய்யுங்க. எனக்கு பொண்ணை பிடிச்சிருக்கு. மேற்கொண்டு உங்க விருப்பம் தான்” என்று முடித்துக் கொண்டான் ரவீந்திரன்.
சுகந்திக்கு மகன் இறுதி முடிவை தன்னிடமே விட்டதில் இன்னமும் பரம திருப்தி. அவளுக்கு செளமியின் குடும்பம் ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. அமைதியாக வலம் வந்த பெண்ணின் அன்னை, பக்குவமாகப் பேசிய பெண்ணின் தந்தை, கொஞ்சம் குறும்புடன் சுற்றி வந்த பெண்ணின் தம்பி, தம்பியின் சேட்டைகளை ரசித்த போதும், அவ்வப்போது கண்டித்து கொண்டு நிதானமாக நடந்து கொண்ட செளமியா என அவள் எதிர்பார்த்ததைப் போன்றே சிறிய நிறைவான குடும்பம் அது என்று கருதினாள்.
நாத்தனார் மாலையில் வரும் சமயம், “பெண்ணை பிடிச்சிருக்கு. மேற்கொண்டு பேசப் போறோம். இது தான் முடிவு” என்று சொல்லிவிட்டு, “உன் நாட்டாமை இங்கே இனிமேல் தேவையில்லை” என்று சொல்லாமல் சொல்லிவிடும் தருணத்தை எதிர்பார்த்து, மரகதத்தின் முகத்தில் கொஞ்சம் கரி பூசி அழகு பார்க்கும் ஆவலில் வீடு வந்தார் சுகந்தி.
அன்னையிடன் தன் சம்பந்தத்தை சொல்லிவிட்ட ரவீந்திரன், வீடு வந்ததும், தன் கைப்பேசி வாட்சப்பில் தரகர் அனுப்பியிருந்த செளமியாவின் புகைப்படத்தை உற்றுப் பார்த்தபடிக்கே தன் கட்டிலில் விழுந்தான்.
இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு சேலையில் பாந்தமாக சிரித்தபடியிருந்த செளமியாவின் புகைப்படத்தைப் பெரிதாக்கி, அவள் முகத்தை அங்கிலம் அங்குலமாக நோட்டம் விட்டு மனதில் பதிய வைத்தான். அவள் கழுத்து, தோள்கள் என சற்றே கீழே இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டவன், சேலையின் பக்கவாட்டில் தெரிந்த இடுப்பு வளைவை தன் கைபேசி திரை முழுக்க பெரிது படுத்தி நிரப்பினான்.
“ம்ம், சும்மா சொல்லக் கூடாது. நச் ஃபிகர் தான்.” என்று வாய்விட்டு முணுமுணுத்தவன், கனவுகளில் மிதந்தபடிக்கு உறங்கிப் போனான்.