சுகந்தி அமைதியாய் அமர்ந்திருக்கவே, “சுகந்திம்மா, உன் கையால பரிமாறுடா” என்றார் மாதவன்.
மாமன் பேச்சை தட்ட முடியாமல் சுகந்தி எழுந்து வர, பரிமாறிய பின்னே தன்னருகே அமர்த்திக்கொண்டவர், “கல்பனா சுகந்திக்கும் வை, என்னோடவே சாப்பிடட்டும், இல்லைனா இந்த பசங்க பிள்ளையை சாப்பிட விடாம வம்பு பண்ணுவானுங்க” என்றார்.
“நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன் மாமா” என சுகந்தி சன்னக்குரலில் சொல்ல, கடந்த ஏழு வருடங்களாகவே திருமணப் பேச்செடுத்தாலே சாப்பிடாமல் தர்கம் செய்வாள் ஆதலால், “ஏன்டாம்மா?” என கலக்கமாய் பார்த்தவர் கையிலிருந்த உணவு மீண்டும் தட்டிற்கே சென்றது.
பார்த்திருந்தவள் “சாப்பிடறேன் மாமா” என்றாள் வேறு வழியில்லாமல்.
“ம்” என்றார் நிம்மதியாக. பின்னே அனைவரும் உண்டு முடித்தனர். தந்தையிடம் தனது கார்டை நீட்டி, “மாங்கல்யம், சுகந்தி கல்யாணத்துக்கு தேவையான நகையை எடுத்துடுங்க, அப்படியே ஜனனிம்மா அத்தை, சேகர் பிள்ளைங்க, அனு எல்லாருக்கும் எடுத்துடுங்க. நாளைக்கு கல்யாணம் பண்றமாதிரி ஏற்பாடு செய்யுங்க” என்றான்.
நீயாடா இப்படி என சுகந்தி அதிர்ந்து பார்க்க, “என்னை பார்க்குறதை விட்டுட்டு பர்ச்சேஸ் பண்ண கிளம்பு, இன்னைக்கே பிளொஸ் தைச்சி வாங்கனும்” என்றான் கட்டளையாக.
“அந்த கவலை வேணாம் சத்யா, அவளே தைய்ப்பா” என்றார் கல்பனா.
“ஓ… பார்டா” என மெச்சியவன், “ஆனாலும் இன்னைக்கெல்லாம் பர்ச்சேஸ் பண்ணிட்டு சுகந்தியால தைய்க்க முடியாதுத்த. வெளில கொடுத்து தைச்சிக்கலாம்” என்றான்.
“அதுவும் சரிதான்” என்றவர், “நீ ஏன் சரவணா ஒன்னுமே பேசமாட்டேங்குற?” என்றார் கவலையாக.
“நான் சுகந்தியை நாளைலயிருந்து எப்படி அண்ணினு கூப்பிடதுன்ற கவலைல இருக்கேன்த்த, சின்ன வயசுலயிருந்து பேர் சொல்லியே பழகியாச்சு” என்றான் புன்னகையோடு.
சரவணனிற்கு இதில் பிடித்தமில்லையோ என நினைத்தவர் மனது தற்போதுதான் நிம்மதியானது.
அன்பு “எனக்கும் அந்த கவலை இருக்கு சரவணா, பேசாம அண்ணிம்மானு கூப்பிடலாமா?” என்றான் யோசனையாக.
“கார்னு சொல்லவும்தான் நியாபகம் வருது, வா சுகந்தி முதல்ல போய் காரை எடுத்துட்டு வந்துடலாம், ஷோரூம்லயிருந்து நேத்தே போன் செய்தாங்க” என்றான் அன்பரசு.
“நான் வரல” என முறைக்க, “ப்ச், அடம் பண்ணாத, உன் பேர்லதான புக் பண்ணியிருக்கு, போய் ரெடியாகு” என அதட்டினான்.
சுகந்தி நின்றே இருக்க, “சத்யா, கார் புக் பண்ணும்போது பணம் பத்தல, சுகந்தியோட நகையை பேங்க்ல வச்சித்தான் மீதி பணத்தை கட்டினேன், நான் போய் பேங்க்ல இருக்க நகையை வாங்கிட்டு வந்திடறேன். நீயும் சுகந்தியும் போய் கார் எடுத்துட்டு வந்திடுறிங்களா?” என்றான் உள்ளடக்கிய சிரிப்போடு.
“நான் மாட்டேன்” என்று சுகந்தி அவசரமாய் மறுக்க, “அப்போ ஒழுங்கா என்னோட கார் எடுக்க வா” என்றான் மிரட்டலாக.
“அவன் கல்யாணத்துக்கு கேட்டதுதான் சாக்குனு உன் இஷ்டத்துக்கு ஆடுற பார்த்தியா? என்னை யோசிக்கலயில்ல நீ?” என்று சுகந்தி பாவமாய் முணுமுணுக்க, “அப்படியில்ல சுகந்தி” என்றான்.
மனைவி மக்களோடு உள்ளே வந்தான் சேகர். சத்யனை நன்றியோடும், சரவணனை பாசத்தோடும் பார்த்தவன், அணைத்துக்கொண்டான் அன்பரசனை.
“ரொம்ப வருசம் கழிச்சு வந்திருக்கிறது நானு, அணைச்சிக்கிறது அன்பையா?” என சத்யன் பொய் கோபம் காட்ட, அன்பரசனை விடுத்து சத்யனிடம் வந்தவன், “அன்பாலதான நீ வந்த?” என்று ஆனந்த கண்ணீரோடு உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தையை விட, “என்ன சேகர் சொல்ற?” என பேரதிர்ச்சியோடு கேட்டாள் சுகந்தி.
“என் மேல உள்ள அன்பால வந்தியானு கேக்குறான் மக்கு, சத்யன் கல்யாணம் செய்துக்காம நான் செய்துக்கமாட்டேனு சொல்லியிருந்தேன்ல? அதனாலதான சத்யன் கல்யாணம் செய்துக்க முடிவெடுத்தான்? அதைத்தான் சேகர் சுருக்கமா கேட்டார். ஆமாம்தான சேகர்?” என சமாளித்தான் அன்பரசு.
“ஆமாம் அன்பு” என ஒப்புகொண்டு, “குட்டிம்மா, நாளைக்கு அத்தைக்கும் மாமாக்கும் கல்யாணம்” என்று தனது குழந்தைகளிடம் சொன்னான் சேகர்.
“வீடியோ கால் மாமாக்கும் நம்ம அத்தைக்கும்மா?” என சேகர் குழந்தைகள் கேட்க, “எனக்கு இப்படியொரு பேர் இருக்கா?” என சிரிப்போடு சேகர் குழந்தைகளை அள்ளிக்கொண்டான் சத்யன்.
பிறகு அனுவிடம் நலம் விசாரித்து, தன் நலத்தை தெரிவித்ததும், சுகந்தியை தனியே அழைத்துச் சென்றாள் அனு. தனிமை கிடைத்ததும் “அனு, என்னால அவனோட” என்று வார்த்தை முடிக்கும் முன்னே சுகந்தியின் வாயை பொத்தியவள் “ச்சு, அபத்தமா பேசாதிங்க, எல்லாம் போகப்போக சரியாகிடும்” என தேற்றி,
“சத்யன் அண்ணாவோடதான் உங்க வாழ்க்கைனு கடவுள் முடிவு பண்ணியிருக்கார். அன்பு உங்களுக்கு கல்யாணம்னு சொன்னதும் அவர் சந்தோசத்துல அழுதுட்டார் தெரியுமா?” என்று தானும் கண்கலங்கி அணைத்துக்கொண்டாள் பேரன்போடு.
“சத்யன் கார் இருக்குல்ல? எல்லாருமே ஷோரூம் போலாம். கார் எடுத்துட்டு குலதெய்வ கோவில்ல போய் பூஜை போட்டுட்டு, அப்படியே நாளைக்கு கல்யாணத்தை நல்லபடியா முடிச்சு கொடுக்கவும் குலசாமிகிட்ட வேண்டிக்கிட்டு வந்திடலாம்” என்றார் மாதவன்.
“சூப்பர் ப்பா. இப்படியே செய்துடலாம். அப்படியே ஜனனிம்மா ஸ்கூலுக்கு போய் பர்மிஷன் கேட்டு பாப்பாவையும் அழைச்சிட்டு போலாம்” என்றான் அன்பரசு.
தனக்கு திருமணம் என்பதையே இன்னும் முழுதாய் உள்வாங்க முடியவில்லை சுகந்தியால். சத்யன் தன்னை மணப்பதாக சொன்னதும் மாதவன் முகத்தில் காணப்பட்ட மலர்ச்சியும், திருமணத்தை மறுத்தால் சத்யன் மகளை அவனோடே அழைத்துச்சென்றிடுவானோ என்ற பயமும், அதனால் வரும் பின்விளைவுகளும் சுகந்தியை ஆட்டிப்படைத்தது.
தனிமை வேண்டி சுகந்தி மன்றாடிப்பார்த்தாள். சுகந்திக்கு தனிமை கொடுக்கவே கூடாதென, “நாங்க எல்லாரும் இருக்க, நீ இல்லைனா ஜனனிம்மா கேட்பானு தெரியாதா உனக்கு? அதோட அப்பா எவ்வளோ சந்தோசமா கிளம்பறார் பார். அம்மா இறந்தபின்ன இத்தனை வருசத்துக்கப்புறம் இன்னைக்குத்தான் இப்படி இருக்கார், அதை கெடுக்கனுமா?
இப்படியாக நாளை நடக்கவிருக்கும் சத்யன் சுகந்தி திருமணத்திற்கான வேலைகள் ஆரம்பமாகின இனிதாக.
*** **** **** ****
காலை ஏழு மணிக்கெல்லாம் முல்லையை பெண் பார்க்க வந்திருந்தனர். “வாங்க வாங்க” என வரவேற்று, “போன்ல பேசினபடி ஒன்பது மணிக்கு வருவிங்கனு நினைச்சேன். முல்லை இன்னும் எழல, நாம பேசிட்டிருக்கலாம்” என்று, “ஜானு முல்லையை எழுப்பு” என்றார்.
மாப்பிள்ளையாய் வந்தவனை பார்வையிட்ட ஜானகிக்கோ, உயரம் ஆறடினு போட்டிருந்ததாதானே கணவர் சொன்னார். இவன் தன் மகள் உயரத்திற்கும் குறைவாக இருப்பான் போலயே. என்ற யோசனையோடு நின்றிருக்க, “ஜானு, முல்லையை எழுப்பி விசயத்தை சொல்லிட்டு, டீ வை” என்றார் சற்று குரலுயர்த்தி.
“இதோங்க” என்று மகள் அறைக்கு சென்று எழுப்பி விசயத்தை சொல்ல, நாளை பெண் பார்க்க வருபவர்கள் முன்னே எப்படி நிற்பது என்ற வேதனையில் நள்ளிரவு வரை விழித்திருந்து பிறகு கண்ணயர்ந்ததால் “ம்மா” என சோர்வாக திரும்பிப்படுத்தாள் முல்லை.
ரங்கசாமிக்கு அழைப்பு வர, யாரோ என்று ஏற்றவருக்கு அழைப்பு வரனிடம் இருந்து என்பதால் உற்சாகமாக உணர்ந்தார். இதேபோல் அடுத்தடுத்த ஆறு அழைப்புகளில் பேசி முடித்து மனைவி, மகளிடம் கேட்டு சொல்கிறேன் என்றவர், ஒரு வரனிற்கு மட்டும் நாளை பெண் பார்க்க வர சம்மதம் தெரிவித்தார்.
முல்லை வேணாம் என மறுக்க, “இந்த ஒரு வரன்தான் இருபது கிலோ மீட்டர் தூத்துல இருக்காங்க, மத்தவங்கள்லாம் வேற டிஸ்ட்ரிக்டா. ரொம்ப தூரத்துல உன்னை கட்டிக்கொடுத்துட்டு எங்களால நிம்மதியா இருக்க முடியாது” என ரங்கசாமி கெஞ்ச, கணவனின் உடல்நிலை எண்ணி ஜானகியும் எடுத்துரைக்க வேறு வழியின்றி அமைதியானாள் முல்லை.
முல்லையின் அழகில் மயங்கியவனோ, முல்லையை தனதாக்க பெற்றோரை அவசரப்படுத்தி ஏழு மணிக்கே வந்திருந்தான்.
“பொண்ணு பார்க்க வந்துட்டாங்க முல்லை, எழுந்து ரெடியாகு” என்று ஜானகி மகளின் தோளை தட்ட, இந்த நேரத்துக்கேவா என பதறி விழித்தாள் முல்லை.
விழித்தவள் கண்கள் தன்போல் கலங்க, “கவலைப்படாத, இந்த பையனை எனக்கும் பிடிக்கல, எதாவது சொல்லி மறுத்துடலாம்” என்றார் ஆதரவாக.
“அதுக்கு எதுக்கும்மா நான் வரனும்? நீங்களே சொல்லி அனுப்பிடுங்களே” என்றாள் கெஞ்சலாக.
“உன் அப்பா மரியாதை குறைவா நினைப்பார் முல்லை. சும்மா வந்து இரண்டு நிமிஷம் நின்னுட்டு போய்டு” என்றார் தன்மையாக.
“அந்த பையனை கல்யாணம் செய்துக்கப்போறதில்லனு முடிவாகிடுச்சு, எதுக்கு நம்ம வீட்டுல அரைமணி நேரம் வெய்ட் பண்ண வைக்கனும்? சீக்கிரம் வா. வந்த வேகத்துக்கே அனுப்பிடலாம்” என்று வெளியேறினார் ஜானகி.
என்ன முயன்றும் அன்பரசு முகம் மின்னி மறைய, பத்து நிமிடம் வரை யோசனையோடு அமர்ந்திருந்தவள், தன் தந்தையோடு சம்மந்தம் வேணாம்னு சொன்னவங்க வீட்டுக்கு நாம எதுக்கு போக நினைக்கனும்? அன்பரசு நினைவிலிருந்து என்னால் சுலபமாக வெளி வர முடியும் என தன்னைத்தானே தேற்றிக்கொண்டு குளித்து, முடியை ஒரு ஹேர்பேண்டில் அடக்கி வெளியே வர எத்தனித்தவள், நிதீஷ் குரல் கேட்டு உள்ளேயே நின்றாள்.
மேட்ரிமோனியில் நிதீஷிற்கும் பதிந்திருக்க, நேற்றிரவு தனக்கான பெண்ணை தேர்வு செய்ய நினைத்து லேப்டாப்பை பார்த்திருந்தவன் பார்வையில் முல்லை பட்டாள்.
விசயத்தை அன்னையிடம் சொன்னான் நிதீஷ். இந்த நேரம் நம்ம நினைச்சதை நடத்தினாதான் ஆச்சு. யாரும் பெண் கேட்டு வரும்முன்னே நீ போய், பூர்வீக சொத்தை சட்டப்படி தனக்கு எழுதி வைக்க கேட்டுட்டு வா என்று மகனை அனுப்பி வைத்தார் வனிதா.
இந்த நேரமே பெண் பார்க்க வந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை நிதீஷ். ஆனாலும் இவர்களுக்காக நாம் ஏன் கிளம்பவேண்டும் என்று சோபாவில் அமர்ந்தான் உரிமையாக.
பெண் பார்க்க வந்தவர்கள் நிதீஷை யாரென விசாரிக்க, தன் அக்காள் மகன் என்ற ரங்கசாமி, “என்ன விசயமா வந்த?” என்றார்.
வந்தவர்கள் முன்னே யாரோபோல் தன்னிடம் வெட்டிப் பேசும் மாமன் மீது கோபம் வர, பேச வந்த விசயத்தை விடுத்து, “எந்த ஜாதினாலும் பரவால்லனு பயோடேட்டால கொடுத்திருக்கிங்க. எங்க உறவை மொத்தமா அத்துவிட முடிவு பண்ணிட்டிங்களா மாமா?” என்றான்.
முல்லையின் திருமணத்திற்கு முன்பாக சொத்தை எழுதி வாங்கும் திட்டம் ஆதலால், வந்தவர்களை அவமதிக்கும் விதமாய் பேசினான் நிதீஷ்.
பிரச்சனை செய்யத்தான் வந்திருக்கிறான் என “அது எங்க விருப்பம் நிதீஷ். நீ கிளம்பு” என்றார் ரங்கசாமி.
“என்னை ஏன் மாமா விரட்டுறிங்க? நம்ம குடும்ப பழக்க வழக்கத்துக்கும் கண்டதையும் சாப்பிடுற இவங்க பழக்கத்துக்கும் ஒத்து வருமா?”
“மிஸ்டர் மைண்ட் யுவர் வோர்ட்ஸ்” என வந்தவன் சொல்ல, நீயெல்லாம் ஒரு ஆளா என்ற பார்வை பார்த்து, “பின் விளைவை யோசிக்காம கண்டவங்களுக்கும் பொண்ணை கொடுக்க நினைச்சிட்டிங்க, உங்களுக்கு எதாவதுனா நாங்க வர வேணாமா? இவங்களும் நாங்களும் ஒன்னா எப்படி புழங்க முடியும்?” என்றான் சற்று அதட்டலாக.
மாப்பிள்ளையின் தந்தை “என்னங்க நடக்குது? பயோடேட்டால எல்லாம் தெளிவா சொல்லியிருந்தோம்தான? பார்த்துட்டுதான வர சொன்னிங்க. அவமானம் செய்யத்தான் வர சொன்னிங்களா?” என்றார் கோபமாக.
“அப்படியில்லைங்க, எனக்கும் எங்கக்கா குடும்பத்துக்கும் கொஞ்சம் மனஸ்த்தாபம், அந்த கோபத்துல பேசுறான்” என ரங்கசாமி சமாளிக்க, “இந்த சம்பந்தம் வேணாம்” என எழுந்தார் வந்தவனின் அன்னை.
“ஏங்க” என ரங்கசாமி பரிதவிக்க, “அவங்க போகட்டும் விடுங்கப்பா” என்றபடி வெளியே வந்தாள் முல்லை.
ஒப்பனை ஏதுமின்றி வெளியே வந்த முல்லையின் அழகில் மயங்கியவனுக்கோ வெளியே செல்ல மனம் மறுக்க எழாமல் அமர்ந்திருந்தான் மாப்பிள்ளை.
“பயோடேட்டால உங்க ஹைட் தப்பா போட்டுருக்கிங்க. ஆரம்பமே பொய். இது சரி வராது. நீங்க கிளம்பலாம்” என்றாள் உறுதியாக.
“ஆம்பிளை மாதிரி வளர்ந்துட்டு என் மகனை குறை சொல்றியா? உனக்கெல்லாம் கல்யாணம் ஆகிட்டாலும்” என்று முல்லையை முறைத்து, “வாடா” என மகனை அழைத்துச்சென்றனர்.
அனைவரும் கிளம்பியதும், “வந்த வேலை முடிஞ்சதில்ல? இன்னும் ஏன் நிற்குற? கிளம்பு” என்றார் ரங்கசாமி.