இரண்டு நாளில் இத்தனை வருட மனபாரம் தீரும் என்று நினைத்தே பார்க்கவில்லை மாதவன். சுகந்தி சத்யன் திருமணம் முடிந்ததோடு அன்பரசும் திருமணத்திற்கு சம்மதிக்கவே, மனதின் சந்தோசம் முகத்தில் பிரதிபலிக்க தந்தை அத்தனை அழகாய் தெரிந்தார் அன்பரசு கண்களுக்கு.
“அன்பு, அத்தைக்கு போன் செய்து நாம அங்க போகனுமா? இல்ல அவங்க இங்க வராங்களா கேளு” என்றார்.
“வந்துடுவாங்கதான்… அவங்க வரும்வரை முல்லை விசயத்தை சொல்லாம இருக்க முடியலயே” என்றார் உற்சாகத்தோடு.
“அப்போ போன் செய்து சொல்லுங்க”
“போன்ல சொன்னா ஆர்வத்துல இங்க வர அவசரம் காட்டும், சுகந்திமாக்கு இப்போ சேகர் துணை தேவை. சேகர்கிட்ட சுகந்தி மனசு விட்டு பேசும். சத்யனை திட்டும். இப்படி கொஞ்சம் மனசை ஆத்திக்கிட்டு இங்க வரட்டும். அதோட இந்த சந்தோசமான விசயத்தை கல்பனாகிட்ட நேர்லதான் சொல்லனும்” என்றார் ஆசையாக.
“சரி அப்போ வந்த பின்னயே சொல்லிக்கலாம்” என்றான் மகிழ்வோடு.
“ம்” என்க, கல்பனாவிடமிருந்து அழைப்பு வந்தது மாதவனுக்கு.
அழைப்பை ஏற்க, “என்னண்ணா இன்னும் காணோம்?” என்றார்.
“நாங்க இங்கையே இருக்கோம் கல்பனா”
“மதிய சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவிங்க? கல்யாண வீட்டுல நீங்க இல்லாம எப்படி? அங்க தனியா இருந்து என்ன பண்ணபோறிங்க? கிளம்பி வாங்க இரண்டு பேரும்” என்றார் கல்பனா.
மாதவன் சிரிக்க, “என்னப்பா?” என்றான் அன்பரசு.
“உன் அத்தை என்னை உண்மையை சொல்ல வச்சிடும் போல” என கிசுகிசுக்க, “என்னண்ணா பதிலை காணோம்? அங்க எதாவது பிரச்சனையா? அதனாலதான் இரண்டு பேரும் வரலையா?” என பதறினார் கல்பனா.
“அதெல்லாம் ஒன்னுமில்ல கல்பனா, அன்பு பக்கத்துல இருக்கும்போது எனக்கென்ன பிரச்சனை வரும்?” என தேற்றி, “அன்பும் வந்ததுலயிருந்து ரெஸ்ட்டே எடுக்கல, நாளைக்கே ஊருக்கு போகனும்னு சொல்றான். இன்னைக்கு ரெஸ்ட் எடுத்தாதான் ஆச்சு. எனக்கும் அலுப்பா இருக்கு, அதான் வரல” என்றார்.
“மதிய சாப்பாட்டுக்கு” எனும்போதே “என் சுகந்திம்மா கல்யாண சாப்பாடு சாப்பிட்டது இன்னும் இரண்டு நாளைக்கு எனக்கு பசிக்காது. ஒரு நாள், ஒரு பொழுது எங்களை நாங்க பார்த்துக்க மாட்டோமா?” என மகிழ்வோடு எடுத்துரைத்து, “சாங்கியம்ன்ற பேர்ல இதை செய் அதை செய்னு சுகந்திம்மாவை படுத்தாம நல்லபடியா இங்க கூட்டிட்டு வா” என்று இணைப்பை துண்டித்தார்.
பிறகு இருவரும் வீட்டிற்கு வந்திருக்க, “நான் சித்த படுக்குறேன் அன்பு” என்று அறைக்குள் சென்றார் மாதவன்.
ஹாலில் உள்ள சோபாவில் படுத்தவன் மனதை மொத்தமாய் முல்லை ஆக்ரமித்திருந்தாள். முல்லையின் முக பாவனையை யோசிக்க, உறுதியாக தன்னை மணக்க சம்மதிப்பாள் எனப்புரிந்தது. ஆனால் தன்னை பிடித்து சம்மதிப்பாளா? இல்லை அவங்கப்பா சொல்றதுக்காக சம்மதிப்பாளா? இல்லை அப்பாம்மாவை பார்த்துப்பேன்ற நம்பிக்கையில சம்மதிப்பாளா? என எண்ணங்கள் அவளை சுற்றியே வந்தது.
முல்லையை நினைக்க நினைக்க தனக்காக சம்மதித்தால் மகிழ்வேன் என்ற பேராசை போய், எப்படியாவது சம்மதித்தால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தான் அன்பரசு. ஹம்… ஒரே நாள்ல இப்படி நினைக்க வச்சிட்டாளே என நினைக்க சிரிப்பு வந்தது.
பயண அலுப்போடு, இங்கும் இரண்டு நாளாய் கல்யாண அலைச்சல் என்பதால் முல்லையை நினைத்தவாறே அவனறியாமல் உறங்கிப்போனான்.
மாலை மூன்று மணிபோல் சத்யன் அன்புக்கு அழைக்க, “ஹம் என்ன விசயம் சொல்லுடா?” என்றான் தூக்க கலக்கத்தோடு.
“எதே… என்ன விசயமா? இன்னைக்கு எனக்கு கல்யாணம் ஆகியிருக்குடா, அதுவும் கலப்பு திருமணம் பண்ணியிருக்கேன். எனக்கு பாதுகாப்பு கொடுக்காம அங்க என்ன பண்ணிட்டிருக்க?”
“என்ன? கலப்பு திருமணமா?” என அன்பரசு புரியாமல் கேட்க, “ஆமாம்டா, எருமையை கட்டிக்கிட்டா கலப்பு திருமணம்தானே?” என்றான்.
“சுகந்தி இந்த வீட்டு மருமக, நீதான்டா குரங்கு. சுகந்திதான் உன்னை கலப்பு திருமணம் செய்திருக்கு” என்று சுகந்திக்காக பேசி, “பொண்டாட்டிகிட்ட அவ்வளோ பயமா?” என சிரித்தவன், அங்க என்ன பிரச்சனை உனக்கு?” என்றான்.
“சுகந்திலாம் பிரச்சனையில்லடா, இந்த அத்தைதான் இதை செய், அதை செய்னு அவளை படுத்திட்டிருக்காங்க, இவ அத்தை மேல உள்ள கோபத்துல என்னை முறைக்கிறா” என்றான் பாவமாக.
“டேய்… நீ நிஜமாவே சுகந்திக்கு பயப்படுறியா?” என அதிசயித்து, “சரி சரி நான் அத்தைகிட்ட பேசுறேன்” என்று இணைப்பை துண்டித்து, கல்பனாவிற்கு அழைத்தான்.
“அச்சோ… இந்த சுகந்தி படுத்துற பாட்டுல உங்களை மறந்துட்டேன், இரண்டு பேருமே சாப்பிடலயா? இதுக்குத்தான் இங்க வர சொன்னேன்” என கடிந்து, “இதோ கிளம்பறோம்” என்று அன்பரசுக்கும் மாதவனுக்கு உணவை எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானார் கல்பனா.
தந்தையறைக்கு சென்று பார்க்க, மாதவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். கிச்சன் வந்தவன் நாலு வாழைப்பழங்களை உண்டு தண்ணீர் குடித்து, மேலே ஜிம்மிற்கு சென்றான்.
நீண்ட நாள்கள் கழித்து ஜிம்மிற்கு வந்த அன்பரசனை பிடித்துக்கொண்டனர் வருங்கால ஆணழகன்கள். அவர்களிடம் பேசியவாறு ட்ரெண்ட்மில்லில் சற்று நேரம் நடந்து, பின்னே லேசான உடற்பயிற்சி, அதன்பின் தண்டால், வெயிட்லிஃப்ட் என ஒருமணி நேரம் செய்தவன், பின்னே வீடு அலங்கோலமாய் இருந்ததை நினைத்து கீழே இறங்கினான்.
மூன்று மகன்களுக்கும், தனக்கும் என நான்கு படுக்கையறையும், பெரிய ஹால், கிச்சன், தங்கை குடும்பம் வந்தால் தங்குவதற்கு ஏதுவாக மாடியில் இரண்டு படுக்கையறை என மாதவன் தனது சொந்த உழைப்பில் ஆசையாய் கட்டிய இல்லம்.
சத்யனின் முதல் திருமணத்திற்கு பின்னேதான் மாடியறைகளை சீர் திருத்தம் செய்து ஜிம்மாக மாற்றியிருந்தான் அன்பரசு. சில வருடங்கள் கழித்து தற்போது அனைத்து அறைகளுக்கும் உரிமையானவர்கள் இருக்க, இரண்டு நாட்களாய் விழாக்கோலம் கண்டிருந்தது வீடு.
அத்தை வந்தால் தனியாக சிரமப்படுவார்கள் என ஒரு மணிநேரம் வரை வீட்டை ஒழுங்கு படுத்தி சுத்தம் செய்து குளிக்க சென்றான் அன்பரசு.
புதுமணத் தம்பதியோடு அனைவரும் வந்தனர் வீட்டிற்கு. ஆரத்தி எடுக்க வேண்டி உள்ளே வந்த கல்பனா, “அன்புதான் சுத்தம் செய்திருப்பான். எங்க போய்ட்டான்? பசியோட இதெல்லாம் யார் இவனை செய்ய சொன்னது?” என புலம்பியபடியே ஆரத்தி தயார் செய்து மகள் மருமகனுக்கு சுற்றி முடித்து உள்ளே வந்தவர், மாதவன் அறைக்கு சென்று எழுப்பி விட்டு, “முகம் கழுவிட்டு வாண்ணா, சாப்பாடு எடுத்து வந்திருக்கேன்” என்று “அன்பு” என குரல் கொடுக்க, “குளிச்சிட்டிருக்கேன்த்த” என்றான்.
“சீக்கிரம் வா” என வீட்டிலிருந்து எடுத்து வந்த குழம்பை சூடேற்ற அடுப்பில் வைத்து வெளியே வர, ஜனனியோடு சுகந்தி அறைக்குள் சென்று கதவை தாழிட்டிருந்தாள்.
“கதவை ஏன் தாழ் போட்ட சுகந்தி? திற” என தட்ட, குளித்து வெளியே வந்த அன்பரசு, “அத்தை சுகந்தியை எதுக்கு டிஸ்டர்ப் பண்ற? காலைல நேரமா எழுந்தது டையர்டா இருக்கும். ஃப்ரீயா விடுங்க கொஞ்ச நேரம்” என்றான்.
“அப்போ சத்யன் ரெஸ்ட் எடுக்க வேணாமா?” என முறைக்க, “சத்யன் ரூம் ஃப்ரீயாதான இருக்கு, அங்க போய் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றபடி அத்தையருகே நெருங்கி, “சுந்தியை சங்கடப்படுத்தாதத்த, இனி சத்யன் பார்த்துப்பான். அவங்களுக்கு எப்போ வாழத் தோணுதோ அப்போ வாழ்க்கையை ஆரம்பிக்கட்டும்” என்றான் கட்டளைபோல்.
“அவளை அவ இஷ்டத்துக்கு விட்டா வேலைக்காகாது அன்பு” என தயக்கத்தோடு எடுத்துரைக்க, “கல்யாணமே வேணாம்னு சொன்னுச்சு, இப்போ பண்ணிக்கிச்சுதானே? இனி கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் வரும். நாம ப்ரஸர் பண்ணக்கூடாது” என்றான்.
“எப்பவும் சுகந்திக்குத்தான் சப்போர்ட் பண்ணுவ” என முணகி, “சரி சாப்பிட வா” என்று அனைத்தும் பரிமாறி மாதவனையும் அழைத்தார்.
இன் முகத்தோடு மாதவன் உணவுண்ண, அன்பரசு முகமும் சற்றே பொலிவை காட்ட, “என்னடா விசயம்?” என்றான் சத்யன்.
“வசமா சிக்கிட்டேன்டா” என பாவம்போல் சொல்ல, மாதவன் சிரிக்க, “டேய்… நீயாடா இது?” என கண்களை அகல விரித்தான் சத்யன்.
“இதென்னடா வம்பா போச்சு? எனக்கெல்லாம் ஆசை வரக் கூடாதா?” என இலகுவாய் கேட்க, “என்னண்ணா என்னென்னமோ பேசிக்கிறானுங்க? நீயும் சிரிக்கிற?” என அதிர்ந்து விழித்தார் கல்பனா.
சுகந்தி வெளியே வர, “வாம்மா, இப்படி வந்து உக்காரு” என்று பக்கத்து இடத்தை காண்பித்தார்
மாதவன் அருகே போய் அமர, “இருபது நாளுக்கு முன்னவே நம்ம அன்புக்கு ஒரு இடம் வந்தது. இவன் கல்யாணம் வேணாம்னு சொல்லவும் ரொம்ப வருத்தத்தோட அந்த இடத்தை வேணாம்னு சொன்னேன்” என்றவர் பிறகு நடந்த விசயத்தை சொன்னார் மகிழ்வோடு.
தன் திருமண சங்கடத்தையும் மீறி “காஷ்மீர் ஆப்பிளா?” என சுகந்தி கண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. சரவணன், “எங்க எல்லார் கண்லயும் மண்ணை தூவிட்டு எந்த கேப்லடா போய் அவங்களை பார்த்த?” என்றான் ஆச்சர்யமாக.
“சத்யன் கல்யாணம் முடிஞ்சதும் முக்கியமான கால் பேச உன்கிட்ட சொல்லிட்டுதானடா போனேன்?” என்றான் இலகுவாக.
“அடப்பாவி, எனக்கு தெரியாமலே என்னை காவல் காக்க வச்சியா?” என பொய்யாய் வருந்த, சத்யன் கல்பனா என அனைவரும் தனது மகிழ்ச்சியை புன்னகை மூலம் வெளிப்படுத்தினர்.
ரங்கசாமியிடமிருந்து அழைப்பு வந்தது அன்பரசுக்கு. “அப்பா உங்க சம்மந்தி பேசுறார்” என்க, “ஓ… சம்மந்தினு சொல்ற அளவுக்கு ஆகிடுச்சா?” என சரவணன் கிண்டல் பேச, சிரித்தவன், முல்லை பேசுவாளா என்ற எதிர்பார்ப்போடு அழைப்பை ஏற்றான் அன்பரசு.
“காலைல போன் செய்திருக்கிங்க, அப்போ இருந்த டென்ஷன்ல கவனிக்கல” என வருந்தினார் ரங்கசாமி.
“இதுக்கா போன் செய்திங்க?” என்றவன், ‘ஹம்… நான்கூட உங்க பொண்ணுதான் பண்றாளோனு நினைச்சேன்’ என நினைத்து பெரு மூச்சிழுக்க, “பொண்ணு, மாப்பிள்ளை வீட்டுக்கு வந்துட்டாங்களா?” என்றார் ரங்கசாமி.
“ம் வந்துட்டாங்க”
“ஓ சரி சரிப்பா” என்றவர் இணைப்பை துண்டிக்கவில்லை.
எதோ சொல்ல தயங்குகிறார். முல்லை தன்னோடு திருமணத்தை விரும்பவில்லையோ? அதை சொல்ல தயங்குகிறாரோ என யோசித்தவன் “எதாவது பிரச்சனைங்களா?” என்றான்.
ரங்கசாமி சொன்னதிலேயே எதோ இருப்பதாய் தோன்ற, “உங்ககிட்ட பேசனுமாம்” என்றவன் ஸ்பீக்கரை ஆன் செய்து தந்தையிடம் கொடுத்தான் மொபைலை.
“மருமகள் சம்மதிச்சிடுச்சுங்களா?” என்றார் மாதவன்.
“இதுக்கு முன்ன மாப்பிள்ளை பார்க்க வந்தப்போ இருந்த முக வாட்டத்தையும் இப்போ இருக்க முகத்தையும் வச்சே முல்லைக்கு இதுல சம்மதம்னு புரிஞ்சிக்கிட்டேன். பிரச்சனை அது இல்லங்க.
இன்னைக்குத்தான் உங்க வீட்டுல ஒரு கல்யாணம் நடந்திருக்கு. உங்க சூழ்நிலை எனக்கு புரியுது, ஆனாலும் என் அக்கா மகனை நினைச்சாத்தான் கவலையா இருக்கு. அவனை எதிர்க்குற சக்தி என் மனசு, உடம்பு இரண்டுக்கும் இல்லைங்க.
என் பொண்ணு சந்தோசமா வாழுறதை பார்க்கனும். நாமளா எப்படி கேக்குறதுனு ஜானகி கூட தயங்கினா. ஆனா எனக்கு உங்ககிட்ட தயக்கம் இல்ல. முடிஞ்சவரை கல்யாணத்தை சீக்கிரம் வச்சிங்கனா ரொம்ப சந்தோசப்படுவேன்” என்றார் ரங்கசாமி.
“யார் என்ன பண்ணிடுவாங்க? எதுக்கு பயப்படுறிங்க?” என்று அன்பு உரிமையாய் அதட்ட, “ப்ச் இரு அன்பு” என மகனை அடக்கி, “என் தங்கையும் மருமகளும் இல்லாம ஏதும் செய்யக்கூடாதுனுதாங்க காலைல ஜுஸ் மட்டும் குடிச்சிட்டு வந்தோம். இல்லைனா மோதிரம் போட்டு நிச்சயமே பண்ணியிருப்போம்.
இப்போவும் ஒன்னும் பிரச்சனையில்ல, நாளைக்கு காலைல முறைப்படி வந்து நிச்சயம் செய்துக்குறோம். கவலைப்படாம இருங்க” என்றார் மாதவன்.
“ரொம்ப சந்தோசம்ங்க” என்று அதீத மகிழ்வோடு இணைப்பை துண்டித்தார் ரங்கசாமி.