சற்று நேரம் அழுதாலே கண்களும் முகமும் சிவந்திடும் முல்லைக்கு. கடந்த ஒரு மணி நேரமாக அழுது கொண்டிருக்கவே நன்றாக வீங்கி சிவந்திருந்தது முகம். அதனால்தான் அன்பரசிடம் முகம் காட்ட தயங்கினாள்.
மீண்டும் அழைப்பானோ என்று முகத்தை நன்றாக கழுவிக்கொண்டிருந்தாள். ஒரு மணிக்கெல்லாம் மதிய உணவு உண்டதும் ரங்கசாமி காம்ப்ளக்சிற்கு சென்றிருக்க, வழக்கமாய் உண்டதும் சற்று நேரம் தூங்கும் ஜானகியும் தனதறைக்கு சென்றிருந்தார்.
அன்பரசு முல்லை வீட்டிற்கு வர, “வாங்க தம்பி, நல்லாயிருக்கிங்களா?” என்று விசாரித்தபடி காவலாளியும் அன்பரசோடே வந்து, “அய்யா காம்ப்ளக்ஸல இருக்கார், அம்மா தூங்க போயிருப்பாங்க, பாப்பா ரூம்ல இருக்கும், நான் அம்மாவை கூப்பிடறேன்”
“தூங்கறவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ண்ணா, முல்லைகிட்ட பத்து நிமிஷம் பேசிட்டு கிளம்பிடுவேன்” என்றதும் காவலாளி வெளியே செல்ல, இவன் முல்லை அறையருகே சென்று, “முல்லை வெளில வா” என்றான்.
கதவருகே வந்தவள், “அம்மாக்கு நான் அழுத்து தெரிஞ்சா பயந்துடுவாங்க” என்றாள் குனிந்த முகத்தோடு.
“என்னடி முகம் இப்படி சிவந்திருக்கு? அந்த நாதாரிப்பையனேது எதாவது சொன்னானா?” என்றான் கோபத்தோடு.
“இல்லயில்ல” என்றாள் அவசரமாக.
முல்லையருகே சென்று முகத்தை நிமிர்த்தி, “இப்படி அழற அளவுக்கு என்ன நடந்தது?” என்றான் விசாரணையாக.
“எல்லாம் உங்களாலதான்” என வெம்பி முகம் திருப்ப, “என்ன?” என்றான் அதிர்வாக.
முல்லை கண்கள் கண்ணீரை வெளியனுப்ப, “நான் என்ன பண்ணினேன்?” என்றான்.
“என்னை பிடிக்காம நிச்சயம் செய்துட்டிங்க”
“என்ன… தெளிவா சொல்லு”
“மாமா சொன்னாங்கனும், என் அப்பாம்மா பாவம்னும் என்னை நிச்சயம் செய்துகிட்டிங்க” என்றாள்.
எதையோ தன்னிடம் எதிர்பார்க்கிறாள் என்பதை முல்லையின் முகம் விளக்க, “நியாயமா பார்த்தா போன் செய்ய சொல்லியும் செய்யலையேனு நான்தான் உன்மேல கோபப்படனும். நீ என்ன புதுக்கதை சொல்லிட்டிருக்க?” என்றவன், “ஹம்… எதை வச்சு அப்படி சொல்ற?” என்றான்.
“நான் போட்டுவிட்ட மோதிரத்தை அன்னைக்கே கழட்டிட்டிங்க” என்றாள் மிகப் பெரிய குற்றமாக.
அன்று தன்னை இத்தனை கவனித்தாளா என்று வியந்து “லூசு… ஷுட்டிங்ல டைரக்டர் சொல்றதைதான் போடனும். போற இடத்துல தொலைஞ்சிட்டா என்ன பண்றதுனு வீட்டுல கழட்டி வச்சிட்டு போனேன். இதை தப்பா நினைப்பியா? இந்த கோபத்துலதான் போன் பண்ணலயா?” என்றான் இலகுவாக.
“ஆமாம்” என்ற பாவனையிலேயே இன்னும் எதோ இருக்கிறது என்று தோன்ற, “இதை கேட்கவாவது போன் செய்திருக்கலாமில்ல?” என்றான்.
முல்லை அமைதியாக இருக்க, “இன்னைக்கு போன் செய்தியே, கோபம் போய்டுச்சா?” என்றான்.
முல்லை முகம் வருத்தத்தையே காண்பிக்க, மண்டைக்குள்ள நிறைய ஓடும் போலயே என நினைத்து “ஒரு மாசத்துக்கு முன்ன மோதிரம் கழட்டி வச்சதுக்கு இன்னைக்கு அழுதியா?” என்றவன், கதவை பாதிவரை சாற்றி முல்லையருகே நெருங்க, பதட்டமானாள் முல்லை.
“மோதிரத்தை கழட்டி வச்சிட்டா உன்னை பிடிக்கலனு ஆகிடுமா? நீ கூடத்தான் செயினை கழட்டி வச்சிட்ட. அப்போ உனக்கும் எனக்கு பிடிக்கலனு நினைச்சுக்கட்டுமா?”
“செயின் ரொம்ப கிராண்டா இருக்குனு கழட்டி வச்சேன். அதுவும் அன்னைக்கெல்லாம் போட்டுருந்து நைட் தூங்கும்போதுதான் கழட்டினேன். மோதிரம் போட்டுட்டுத்தான் இருக்கேன்” என்று காண்பித்தாள் விரலை.
விரலைப் பற்றியவன் “இந்த அழுகை நான் மோதிரம் கழட்டி வச்சதுக்கானது இல்ல. உண்மையை சொல்லு” என்றான்.
“ஆறு மாசம் கழிச்சுதான் கல்யாணம்னு சொன்னிங்களாம், என்னை பிடிச்சிருந்தா அப்படி சொல்லியிருப்பிங்களா?” என்று அன்பரசிடமிருந்து விரலை உருவிக்கொண்டாள்.
“இல்ல, நீ என்னை நம்பமாட்டேங்குற, திரும்ப இப்படி முகம் வீங்குற அளவுக்கு அழ வைக்க எனக்கு பிடிக்கல. ப்ரூஃப் பண்ணித்தான் ஆகனும்” என்று முல்லையை கதவிற்கு பின்னே அழைத்துச்சென்று நெருங்கி நின்றான்.
சுகந்தியிடமிருந்து அழைப்பு வர, “ப்ச்” என்ற சலிப்போடு ஏற்றவன், “என்ன அண்ணிம்மா?” என்றான்.
“எங்கடா இருக்க?”
“என் பொண்டாட்டி வீட்ல”
“அடப்பாவி, மாமா கேட்டா நான் என்ன சொல்லுவேன்? ஏண்டா இப்படி பண்ற? நீ வந்திருக்கிறேனு சொல்லவும் இன்ஸ்டியூட்லயிருந்து வீட்டுக்கு வரேன்னாருடா” என்றாள் தவிப்பாக.
“ப்ச், எப்போ வந்தாலும் இப்போதான் வெளில போனானு எதையாவது சொல்லி சமாளி, வந்துடறேன்” என்று இணைப்பை துண்டித்தவன் முல்லை மீதுள்ள பித்திலிருந்து சற்று தெளிந்திருந்தான்.
முல்லையாக கல்யாணம் செய்ய கேட்டும் உடனே செய்து கொள்ளும் நிலை இல்லாமல் போகவே, “ஆறு படங்களுக்கு மேல கமிட் ஆகியிருக்கேன், எல்லாம் பெரிய பெரிய டைரக்டர்ஸ்.
கதாநாயகனுக்கு ஈக்வலான ரோல் கொடுத்திருக்காங்க, ஃபாரின்லதான் அதிகம் இருப்பேன். பங்ச்சுவாலிட்டியை மெயின்டைய்ன் பண்ணலைனா தலைகனம்னு முத்திரை குத்திடுவாங்க” என வருத்தத்தோடு எடுத்துரைத்தான் தன் நிலையை.
சரி என்பதாய் தலையசைத்தாள். ஆனாலும் முல்லை முகத்தின் சோர்வை பார்த்து, “உங்கப்பாம்மாக்கு நீ ஒரே பொண்ணு, உன் கல்யாணத்தை ஏனோதானோனு செய்தா வருத்தப்படுவாங்கதான? எங்க வீட்டுலயும் என் அண்ணன் கல்யாணம் ரொம்ப சிம்பிளா நடந்தது. என் கல்யாணத்தை பெருசா பண்ணனும்னு அப்பா ஆசைப்படுவார்.
வாழ்க்கையில ஒரே ஒருமுறை நடக்குற அழகான மொமண்ட். ரசிச்சு அனுபவிச்சு பண்ண வேணாமா? அதுக்குத்தான் கமிட்மண்ட்ஸ் ஓரளவுக்கு முடிஞ்ச பின்ன பண்ணலாம்னு நினைச்சேன்” என்றான் பொறுமையாக.
“ப்ரோகிராம் பார்த்தியா?” என சந்தோசித்தவன், “இந்தளவுக்கு அழற மாதிரி அந்த ப்ரோகிராம்ல ஒன்னும் இல்லையே, வேற எதோ இருக்கு” என்றான் நம்பாமல்.
“எனக்கு… எனக்கு” என திணறியவள், தலைகுனிந்து, “அது ஒரு மியூச்சுவல் ஹக்னு புரியுது. ஆனாலும் பிடிக்கல” என்றாள் வெம்பியபடி.
“ஹேய்… என்னோட கோ ஆக்ட்ரஸை ஹக் பண்ணினதையா சொல்ற?” என்று அன்பரசு கண்கள் மின்ன, சட்டென்று மாறிய இவனின் பொலிவில் “ஆமாம்” என வெடித்தாள் கோபமாக.
“ஹேய்” என முல்லையை அணைக்கப்போக, விலகினாள் பிணக்கோடு.
“இதுக்கே இப்படி அழுதா, படம் ரிலீஸ்க்கப்புறம் என்ன பண்ணுவ? அந்த பொண்ணுவேற எனக்கு லவ்வரா நடிச்சிருக்கு. கொஞ்சம் அப்படியிப்படினு இரண்டு மூனு சீன்ஸ் வேற இருக்கு” என்று நெருங்கினான் தவிப்போடு.
“அதெல்லாம் நடிப்புனு புரிஞ்சிக்காத அளவுக்கு நான் முட்டாளில்ல, ஆனா ப்ரோகிராம்ல நீங்களா விரும்பி செய்திங்க. ஆனாலும் ரொம்பலாம் அழல, கொஞ்சம் அழுதாலே என் முகம் இப்படி ஆகிடும்” என்றாள் ரோசமாக.
“அப்படியா?” என்று சிரிப்போடு அருகே சென்றவன் “அன்னைக்கு பக்கத்துல நின்னதுக்கே அப்படி திணறுன? ஒரு மாச கேப்ல இவ்வளோ முன்னேற்றமா?” என்று அணைத்தான் மென்மையாக.
அன்பரசின் அணைப்பு பிடித்தமாகவும், அவஸ்த்தையாகவும் இருக்க, “கல்யாணம்தான் வேணாம்னு சொல்லிட்டிங்களே… இது மட்டும் எதுக்கு?” என விலக முயற்சித்தாள்.
“நான் எங்கடீ வேணாம்னேன். ஆறு மாசம் கழிச்சி பண்ணிக்கலாம்னுதான சொன்னேன்?” என்று முல்லையை முன்புறம் திருப்பி அவளின் தோளில் தாடையை வைத்து, “இப்படிலாம் பண்ணினா ஆறு மாசத்தை எப்படி ஓட்டுறது?” என்றான் ஏக்கமாக
“அதைத்தான் நானும் யோசிச்சிட்டிருக்கேன்” என்றவள் குரல் கரகரப்பாக இருக்க, தன்புறம் திருப்பினான் வேகமாக. முல்லை கண்கள் கலங்கியிருக்கவே, “ஹேய்…” என பதற, “ஒன்னுமில்ல ஒன்னுமில்ல” என கண்களை துடைத்தாள்.
கல்யாணம் சீக்கிரம் செய்ய சொல்லி முல்லை கேட்டதில் எதோ வேறு காரணம் இருப்பதாக தற்போதுதான் தோன்ற, முல்லையை விடுவித்து, கதவை நன்றாக திறந்து விட்டு சற்று தள்ளி அமர்ந்து, “கல்யாணம் எப்போ வச்சிக்கலாம்?” என்றான்.
“நீங்க சொன்னிங்களே… அப்போவே வச்சிக்கலாம்”
“அது நான் என் வசதிக்கு சொன்னது. உனக்கு என்ன தோணுதோ அதை சொல்லு”
முல்லை தயங்க, “ப்ச், பேசு முல்லை, ரொம்ப நேரம் இங்க என்னால இருக்க முடியாது” என்றான்.
மாதவனிடமிருந்து அழைப்பு வர, ஏற்றதும் “எங்கடா இருக்க?” என்றார் கோபமாக.
இந்த அண்ணிம்மா இருக்கே… என நொந்துகொண்டவன், “முல்லை ரொம்ப டல்லா இருக்காப்பா, என்னனு கேட்டுட்டு வந்திடறேன்” என்றான்.
“அதை நான் கேட்டுக்கிறேன், நீ கிளம்பு”
“அப்பா” எனும்போதே “கல்யாணத்துக்கு முன்ன நம்ம வீட்டு பொண்ணோட இப்படி யாரையாவது விடுவோமாடா?” என்றார் கோபமாக.
“வரேன்ப்பா” என்று இணைப்பை துண்டித்து முல்லையை முறைக்க, “நீங்க வீட்டுக்கு போங்க, நான் கால் பண்றேன்” என்றாள்.
அன்பரசு நம்பாமல் பார்க்க, “நீங்க கிளம்புங்க, மாமா தப்பா நினைக்கப்போறார், போய் அவரை சமாதானம் செய்ங்க, கொஞ்ச நேரம் கழிச்சு கண்டிப்பா பண்றேன்” என்றாள் பதட்டமாக.
“அப்பாகிட்ட பேசிட்டு நானே பண்றேன். அட்டன் பண்ணனும்” என்று அன்பரசு கிளம்ப, அன்னை அறையை மெல்ல எட்டிப்பார்த்தாள். ஜானகி உறங்கிக்கொண்டிருக்க நிம்மதியானவள், அன்பரசு அழைப்புக்காக காத்திருந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் “எனக்கு சோறு வேணா, ஒன்னும் வேணா” என சுகந்தியை முறைக்க, “நான் என்னடா பண்றது?” என்று சுகந்தி பாவமாய் பார்க்க, “சின்ன விசயம், இதை கூட சமாளிக்கமாட்டியா?” என்றான் கோபமாக.
“நீ பண்றதே தப்பு. அதுக்கு நான் துணை வரனுமா?” என்று இவளும் கேட்க, “என்ன தப்பு?” என அன்பு முறைக்க, மாதவன் வரவும் அமைதியானார்கள் இருவரும்.
“சாப்பிடலயாடா?” என்று மாதவன் கேட்க, “இதோப்பா” என்று உண்ண அமர்ந்தவன் உண்டு முடித்ததும், “தூங்கி இரண்டு நாளாகுது அண்ணிம்மா, ஜனனிம்மா வரும்வரை எழுப்பாத” என்று தந்தைக்கும் சேர்த்தே சொல்லி தனதறைக்கு சென்று கதவை தாழிட்டு, முல்லைக்கு அழைத்தான்.