திருமகளின் எண்ண அலைகள் அவளை சுழற்றி அடித்தது. இந்தியாவை விட்டு இங்கே வந்து இரண்டு முழு ஆண்டுகள் முடிந்துவிட்டது. இனி இங்கேதான் என்று சொல்லி அழைத்து வந்தவன் மருந்துக்கும் மனைவி பக்கம் திரும்பினான் இல்லை எனும் பொழுது இந்த திருமணத்தின் பெயரில் அவளுக்கு கிடைத்ததுதான் என்ன?
அவன் மட்டும் அலுவலக வேலைகள் என்று அடிக்கடி எங்காவது சென்றுவிட்டு பத்து நாட்கள் வரை வெளியே தங்குவதும்,ட்ரெக்கிங்,மாரத்தான்,பேட்மிட்டன் என்று ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டு வெளியே அதிக நேரம் இருப்பதுமாக ,இப்படித்தான் அவர்களது இரண்டுவருஷ திருமண உறவு சென்று கொண்டிருக்கிறது.
வெளியே சொன்னால் வெட்கக் கேடு.அவளுக்கு அவர்கள் வீட்டின் காம்பௌண்ட் சுவரை தாண்டி என்ன என்பது தெரியாது.அவ்வளவு பெரிய வீட்டின் தோட்டத்தில் அதிக நேரம் இருப்பதால்,அங்கே இருக்கும் புற்கள் கூட அத்துப்படி. அவன் வீட்டில் இருக்கும் நேரம் குறைந்துபோனது. தனக்கு மட்டும் சமைக்கும் நாட்களில் ஏதாவது ஒன்று என சமைத்து உயிரோடு இருக்க விழுங்குவதுடன் சரி.
தோட்டத்தில் இருக்கும் மரங்கள் தரும் கனிகளும்,காய்களும் அவளை ஓரளவு ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். பனி நேரங்களில் கணவனுடன் பனிச் சறுக்கு விளையாடவும், உரை பனியில் பொம்மைகள் செய்து மகிழவும் துணை தேடும் மனது. இன்னமும் சொல்லவேண்டும் என்றால்,குளிரின் கதகதப்புக்குகணவனை அணைத்துக்கொள்ள ஏங்கும் மனதை அடக்கும் வழி தெரியாது கண்ணீரை துணை கொள்ளும் நாட்களும் உண்டு.
வீட்டுக்கு பேசவும் இப்போதெல்லாம் பெரியதாக ஈடுபாடு இல்லை. நரேந்திரன் அப்பாவான செய்தி அறிந்ததும் சென்னை செல்ல துடித்தது அவளது மனம்.கணவனிடம் சொல்லும் பொழுது,அவனிடமிருந்து எந்தரியாக்ஷனும் இல்லை. இவள் பாதி பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ஏதோ அலைபேசி அழைப்புக்கு பதில் சொல்லிக்கொண்டு வெளியே சென்றவன் வீட்டுக்குள் நுழையும் பொழுது திருமகள் தூங்கிவிட்டாள்.
வீட்டுக்கு அழைத்து பேசலாம்தான். இங்கே நடப்பவற்றை என்னவென வீட்டில் சொல்ல முடியும்? நிவாஸ் செய்வது நிச்சயம் கொடுமைதான்.ஆனால்,எந்த வகையில்? எதிலிருந்து இந்த உதாசீனம் தீவிரம் ஆனது என்று யோசிக்கத் தொடங்கினாள் திரு.
திருமகள் அமெரிக்கா வந்த பிறகு மூன்று மாதங்கள் கழித்து,நிவாஸ் அவளிடம்,”ஏதாவது செர்டிபிகேஷன் படிக்க இன்டெரெஸ்ட் இருக்கா..வேலைக்கு போகலாமே!அங்கே கொஞ்ச மாசம் ஜூனியர் ப்ரோக்ராம்மர் வேலைல இருந்தியாமே?என்றான். கணவன் சொன்னதை மெல்ல உள்வாங்கியவள்,திருமணம் பேசும்பொழுது சொன்னதை இன்னமும் ஞாபகம் வைத்திருக்கிறான் என்று நினைத்தாள் .
“இல்லங்க..எனக்கு அந்த பீல்டுல இப்போ எந்த ஈடுபாடும் இல்லே. பட் வேலைய விட்டபிறகு டான்ஸ் அண்ட் மியூசிக் கிளாசஸ் எடுத்தேன். இப்போ அதையே இங்கேயும் கண்டின்யு பண்ணவா?என்று கண்கள் ஆசையில் மின்ன கேட்டாள் .
அவள் கேட்டதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. அவளை அவன் பார்த்த பார்வை அதன் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை. ஆனால்,அதற்குப் பிறகு அவளுடன் அதிகம் பேசுவதில்லை. அதுதான் காரணமாக இருக்குமோ?என்று திரு யோசிக்கிறாள். தீர்மானமாக அவளால் சொல்ல முடியவில்லை.
இப்படியேதான் நாட்கள் பெரும் குழப்பத்துடன் நகர்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஒரு முக்கிய குடும்ப உறவில் திருமணம் வரவே,நிச்சயம் தான் போக வேண்டும் என்று சொன்ன நிவாஸ் மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உனக்கு இஷ்டம்னாநீயும் வரலாம்.ஜஸ்ட் டென் டேஸ் தான். மறந்தும் உங்க வீட்டுக்கு போன் பண்ணவே கூடாது. அங்கே போய்ட்டு அப்பா வீட்டுக்கு போகவும் ,என்னை கூப்பிடவும் கூடாது. ஓகேன்னா உன்னையும் கூட்டிட்டு போறேன்” என்றான்.
அவனது பேச்சு சுத்தமாக திருமகளுக்குப் புரியவில்லை. ஏன் அப்படி என்று கேட்டால் கோவித்துக்கொள்வான் என்றும் தெரியும்.இந்த வீட்டுச் சிறையில் இருந்து கொஞ்சம் விடுதலை என்று யோசித்தவள்,”ம்ஹும்..கேக்க மாட்டேன்.என்னையும் கூட்டிட்டு போங்க” என்றுவிட்டாள் .
கொஞ்சமாவது திருவுக்கு அந்த நேரம் அறிவு வேலை செய்திருந்தால், சென்னையில்எப்படியாவது பெற்றோரை சந்தித்து தன் நிலை பற்றி சொல்லி,அவனிடமிருந்து விலகிஇருக்க வாய்ப்பு தேடியிருந்திருப்பாள். ஆனால்,கணவனை விட்டு இருப்பதை பற்றியெல்லாம் அவளுக்கு இன்னமும் எந்த சிந்தனையும் இல்லை. விதி விட்ட வழி என்பேன் நான். எப்பேற்பட்ட வாய்ப்பு இது என்று இந்த கதையைபடிப்பவர்களுக்கு கூட புரியும்.நம் நாயகிதான் சரியான மட்டி ஆயிற்றே!
சென்னை வந்தவளுக்கு ஜெட்லாக் குறையவே மூன்று நாட்கள் ஆனது. பிறகும் அவளால் எளிதாக அதைக் கடக்க முடியவில்லை. அது புரிந்தவனுக்கு சிரிப்புதான் வந்தது. பிறகு அவளை அழைத்துக்கொண்டு லாக்கர்சென்றவன் அவளதுவைரம் மற்றும் ரூபி செட்டை எடுத்தான்.அத்துடன் தனக்கு தேவையானவற்றையும் எடுத்துக்கொண்டான். மறுநாள் இருவரும் துணிக்கடைக்கு சென்று ஆடைகள் வாங்கினார்கள்.அவனது பெற்றோர் மற்றும் அக்கா குடும்பம் ஏற்கனவே தங்களுக்கானவற்றை வாங்கிவிட்டார்கள்.
திருவுக்கு அழகான வேலைப்பாடுகள் அமைந்த பீச் கலர் லெஹங்காவும்,தனக்கு அதற்க்கு பொருத்தமாக ஷெர்வானியும் வாங்கினான். பிறகு அவளுக்காக இரண்டு பட்டுப் புடவைகளும், அதற்கு தோதாக டிசைனர் ப்ளவுஸ்சும் வாங்கினார்கள். அவன் வாங்கும் துணிகளின் விலையை பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறை. அது வெறும் விலையால் மட்டும் இல்லை. அங்கே அமெரிக்காவில் இவளை திரும்பியும் பார்க்காதவன்,இங்கே இவளுக்காக இவ்வளவு தூரம் செய்வதெல்லாம் வேறு நிலை என்னும்பொழுது அவளது நிலையில் இருந்து பார்த்தால்தான் புரியும்.
அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த திருமணமும் வந்தது. நிவாஸின் குடும்ப அங்கத்தினர் மொத்த பேரும் இரண்டு நாட்கள் முன்னரே கல்யாணம் நடக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று விட,,நிவாஸும் திருவும் மட்டும் திருமணத்திற்கு முதல்நாள் நேரே மண்டபம் சென்று விட்டார்கள். இருவருக்கும் பலமான வரவேற்புதான். நிவாஸ் தாராளமாக பரிசு கொடுப்பான் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
முதல் நாள்ரிசப்ஷன் நன்றாகவே சென்றது.அன்று இரவு நிவாஸ் திருவுடன் வீட்டுக்கு கிளம்பிவிட்டான்.மறுநாள் முகூர்த்தம் காலை பத்து மணிக்குத்தான். கிளம்புகிறோம் என்று பிடிவாதமாக நிற்பவனை அனுப்பிவைத்தார்கள். வேறு என்ன செய்ய முடியும்?
மறுநாள் காலை ஒன்பது மணிக்கு மனைவியுடன் நிவாஸ் நுழைய, முகூர்த்த நேரத்திற்குதிருவின் பெற்றோரும், அவன் அண்ணன் ,அண்ணி,அவர்களது ஒண்ணரை வயது குழந்தை என மொத்த குடும்பமும் வந்தது. தங்களது மகளை கணவன் மற்றும் புகுந்த வீட்டினருடன் பார்த்த திரு குடும்பத்துக்கு அதிர்ச்சி.திரு வருவதாக அவளோ,மாப்பிள்ளையோ..ஏன் அவர்களது புகுந்த வீட்டில் கூட சொல்லவில்லை.அதோடுதிரு இன்னமும் வீட்டுக்கும் வரவில்லை.
நிவாஸுக்கு திருமண வீட்டார் நெருங்கிய சொந்தம். சாம்பசிவம் வீட்டுக்கு கொஞ்சம் தூரமானஉறவுமுறை.ஆனாலும்,தொழில்முறையில்நல்லபழக்கம் உண்டு. அதற்காகதான் அவர்கள் வந்தது. இங்கே பார்த்தால் மகள். தங்களது மகளுடன் அவர்கள் பேச முற்பட,கணவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த திரு மறந்தும் தன் வீட்னருடன் பேச முற்படவில்லை.
இது என்ன என்று புரியாத திருவின் வீட்டினர்,மகள் திருமணம் நிச்சயம் ஆனதில் இருந்து தொடங்கி, அமெரிக்கா கிளம்பும் வரை நடந்து கொண்ட முறை எப்படி என முன்னிறுத்தி, அவளுடன் பேசாமலே இருந்து விட்டார்கள். அவர்கள் மனம் முழுவதும் பாரம். ஆனால்,திருமண வீட்டில் முகத்தில் எந்த உணர்வுகளையும் காண்பிக்க முடியாது என விழுங்கிக் கொண்டாள் . இப்போது இருக்கும் நிலையில் தான் என்ன சொன்னாலும் தன் வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று திருவுக்கு தெரியும்.அண்ணன் மகனை பார்க்கும் பொழுது அத்தையாய் அந்த குழந்தையை அள்ளிக்கொஞ்ச அவளது தேகம் முழுவதும் பரபரத்தது நிஜம். யாரிடம் சொல்லி அழ முடியும்?
அத்துடன் தனக்கு இன்னும் அந்த பாக்கியம் இல்லை என்று அவளது மனதில் வலி வேறு. இது இந்த கணம் நிச்சயம் பொறாமை உணர்வு கிடையாது. எல்லோரும் ஒன்றாக இருக்க தனக்கு மட்டும் தனிமை என்று நொந்து போனாள் திரு. திருவையே கவனித்துக்கொண்டிருந்த நிவாஸ் அவளை தன்கை வளைவில் சாப்பிட அழைத்து சென்றான். அவளுக்கோ உணவு உள்ளே இறங்குமா.என்றது.துக்கம் தொண்டையில் கசந்தது.
இப்போது கூட அவளுக்கு வாய்ப்பு இருக்கிறது. தனது பெற்றோரை அவள் தேடி சென்றால் நிவாஸால் என்ன செய்துவிட முடியும்? அதிகபட்சம் இவளுடன் உறவை முறித்துக்கொள்ள கூடும்.அதனால் என்ன?இப்போது மட்டும் என்ன,சுவர்கத்தில்லா வாசம் செய்கிறாள்? ஏனோ அந்த பெண்ணுக்கு நிதர்சனம் புரியவில்லை.
சாப்பிட்டு முடித்து இட்டு ,இருவரும் கீழே வந்தார்கள்.உறவினர் பட்டாளம் பெண்கள் தனியாக,ஆண்கள் தனியாக என்று பிரிந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களது கலகலப்பு திருவின் மனதுக்கு கொஞ்சம் இதம் செய்தது. சிரிப்பு சப்தம் அவளுக்கும் கூட லேசாக புன்னகையை வரவழைத்தது. நிவாஸ் ஆண்களுடன் ஐக்கியம் ஆகிவிட இவள் வேறு வழியில்லாமல் பெண்களுடன் சென்று அமர்ந்து கொண்டாள் .
மணப்பெண்ணையும் ,மணமகனையும் ஓய்வுக்காக அழைத்து சென்று விட்டார்கள். வயதில் மூத்தவர்கள் குடும்ப விஷயங்கள் பேச தனியாக ஒதுங்கி விட, பெண்களுக்கு பேசுவதற்கு தயக்கம் ஏதும் இல்லை.பேச்சு அந்தரங்கம் வரை சென்றது. சில சமயம் திருவிடம் ஏதாவது கேட்டால் அவள் முகம் சிவந்தாள்.அதற்கும் கூட இருக்கும் பெண்கள் கேலி செய்து சிரித்தார்கள். ஆண்கள் பக்கமோ,இதைவிட மோசம். நிவாஸ் வாயே திறக்கவில்லை.
ஆனால் , எல்லையை தாண்டி சென்றது பேச்சு. நிவாஸிடம்,அவனதுசித்தப்பா மகன் ,”நிவாஸ் உன்னோட மனைவி செம்ம டா..நீ ரொம்ப லக்கி.இன்னும் கல்யாணம் ஆகாத கன்னிப்பொண்ணு மாதிரி ..ஹ்ம்ம்..வேற லெவல் டா“எண்டு வக்கிரத்துடன் ரசித்து சொல்லஅவனது கற்பனையை அறிந்து கொண்ட நிவாஸுக்கு கோவம் வந்துவிட்டது.அடிக்க சென்று விட்டான்.சுற்றி இருப்பவர்கள் தடுக்கவில்லை என்றால் நிச்சயம் சொன்னவனை கொன்றே போட்டிருப்பான் நிவாஸ்.
அவனது சித்தப்பா மகன் அப்போதும் நிவாஸை சீண்டினான்.“நீ இன்னும் உன்னோட பொண்டாட்டிய அப்படியே வச்சிருந்தா சுத்தி இருப்பவன் பாக்கத்தான் செய்வான். அழகை ரசிச்சா என்னடா தப்பு? ஏதோ கல்யாணம் சென்ஜோமா , சோலிய முடிச்சோமா..பொண்டாட்டிய அம்மா ஆக்கினோமான்னு இருக்கணும். அப்போ நீ ஆம்பளைன்னு ஒத்துக்கலாம்” என்று சிரிக்க , சுற்றியிருப்பவர்கள் அவனை கேலியாகவும்,கேள்வியாகவும் பார்க்க நிவாஸ் மனதில் கோவம் கொழுந்து விட்டு எரிந்தது. இதற்கு மேல் அங்கே இருக்க பிடிக்காமல் மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
யாரிடமும் சொல்லிக்கொள்ளவும் இல்லை, தாம்பூலம் வாங்கிக்கொள்ளவும் இல்லை. அவனது ஈகோ அடிவாங்கியது.” நான் ஒண்ணும் ஆண்மை இல்லாதவன் இல்லே” என்று மனதில் சொல்லிக்கொண்டான். வீடு வரும்வரை மனைவியிடம் எதுவும் பேசவில்லை. காலையில் மாமனார் வீட்டை அவமதிப்பு செய்ததில் இருந்த சந்தோசம் இப்போது எங்கே போனது என்றே தெரியவில்லை.
வீட்டுக்கு வந்து படுத்துவிட்டான். கணவனை வித்தியாசமாய் பார்த்தாள் திரு. மறுநாள் இரவு விமானம். கணவனது பொருட்கள் எதுவும் எடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. வேறு வழி இல்லை.அவனுக்கு பிடிக்காவிட்டாலும் செய்துதான் ஆகணும் என்று திரு நிவாஸுடைய லக்கேஜ்ஜுகளையும் சேர்த்து எடுத்து வைத்தாள் .
லாக்கரில் வைக்கவேண்டிய நகைகளை பத்திரபடுத்தினாள் . சோர்வாக உணர்ந்தவள் நிவாஸ் படுத்திருந்த கட்டிலின் கீழே பாயை விரித்து படுத்துவிட்டாள். உறக்கம் அவளை மெள்ள தழுவ அவள் கணவனும் அவளை சேர்த்து தழுவினான். ஆனால் அதை உணர்வதற்கு முன்பே அவள் உறங்கிவிட ‘ஜடம்‘என்று திட்டிக்கொண்டே மீண்டும் கட்டிலின் மீது ஏறி படுத்துக்கொண்டான் நிவாஸ்.