கற்பனை 20
கணவன் தனது அருகே வந்து படுத்தது வேண்டுமானால் திரு உணராமல் இருந்திருக்கலாம்.ஆனால்,அவனது வலிமை மிக்க தேடலுடனான அணைப்பு ,அது நிச்சயம் அவளுக்குத் தெரியும். இன்று நடந்த விஷயங்களும் தெரியும்-அதன் தாக்கம் தான் இதுவென்பதுவும் தெரியும். அதனாலேயே அவளால் அவனை ஏற்க முடியவில்லை.
கணவன் மனைவி இடையேயான உடல் உறவு என்பது மனம் சார்ந்ததுவுமாக இருக்கவேண்டும். வெறும் விலங்கினங்கள் போல் தேவைக்கு கூடுவது அருவருப்பைக் கொடுக்குமே தவிர அரவணைப்பை அல்ல. அந்த நிலையில் தான் திருவும் இப்போது இருக்கிறாள். “நான் இருக்கிறேன் உனக்கு“என்ற தைரியத்தை நிவாஸ் அவளுக்கு இன்று வரை கொடுக்கவில்லை.
அவள் கண்ணெதிரில் அவள் பெற்றோரும்,பிறந்த வீட்டு உறவுகளும் இருந்தும் கூட இன்று அவர்களது முழு எதிர்ப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறாள்.அதற்கு முக்கிய காரணம் நிவாஸ் தான். ஆம்,அவன் சொன்னதற்கெல்லாம் அவளும் பும் பும் மாடு போல தலையை ஆட்டி வைத்திருக்கக் கூடாது தான் .ஆனால்,அவன் ஒன்றும் அவளுக்கு தெரிவு செய்யும் வாய்ப்பைக் கொடுக்கவில்லையே!
‘நான் சொல்வதைக் கேட்டால்‘ என்று கௌரவ பிச்சை அல்லவா போட்டான்? இந்த அரைகுறை உறக்கத்தில் யோசிக்கும் பொழுது அவள் புரிந்து கொண்டதும்,யோசித்ததும் இதைத்தான். எப்படி நினைத்தவுடன் விமான பயணச்சீட்டு எடுக்க முடியும்?அப்படி எடுத்தால் விலை எவ்வளவு அதிகமாக இருக்கும்?
அப்படியென்றால் அவளை இங்கே திருமணத்திற்க்கென அழைத்து வருவது பற்றி அவன் ஏற்கனவே முடிவு செய்து,அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும். கடைசியில் நன்றாக ஏமாந்தவள் நான்தானே? என்று கழிவிரக்கம் மிக கண்களை நீர் நிறைத்தது. சமாளித்துக்கொண்டு உறங்க முற்பட்ட பொழுதுதான் கணவனின் திடீர் நெருக்கம் அவளை கலவரம் கொள்ள செய்ய அவனை ஏற்க முடியாமல் தூங்கும் பாவனை செய்தாள் .
உண்மையாக தூங்கிக் கொண்டிருந்தால் அவன் நெருக்கத்தில் விழித்திருப்பாள். நல்லவேளை, இரண்டு வருஷங்களாக அவன் அவள் அருகில் வராது ஒதுக்கி வைத்திருக்கும் சங்கதியை அவள் இன்னமும் யோசித்திருக்கவில்லை. (இதையெல்லாம் யோசித்து மனசை குழப்பிக்கொண்டு கணவனை தூர நிறுத்தினால் ஆண் பாவம் சும்மா விடாது. சுயமரியாதை;பற்றி எல்லாம் சிந்திப்பது பெரும் குற்றம்)
அங்கிருந்து கிளம்பும் வரை நிவாஸ் அவளிடம் பரிவாகவும் ,காதலுடனும் நடந்து கொண்டான். நிவாஸின் அம்மா அவனிடம்,”கலியாணமாகி ரெண்டு வருஷம் ஆகல..இன்னும் குழந்தை ஏதும் இல்லையானு அங்கே உறவுக்காரங்க எல்லாரும் கேக்குறாங்க நிவாஸ். இவளோட அண்ணனுக்கு கூட குழந்தை இருக்கே.அதையும் வச்சுதான் பேசுறாங்க. இன்னம் கொஞ்ச பேரு ,உங்க மகனுக்கும் ஏதாச்சும் குறைபாடு இருக்கானு டாக்டர போய் பாருங்கன்னு அட்வைஸ் பண்றங்க.எனக்கும் அது சரியோன்னு தோணுது..“என்றுவிட்டு திருமகளை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்கு செண்டு அமர்ந்துவிட்டார்.
திருமகள் தலை குனிந்து நின்றுவிட்டாள் .அவமானம் பிடுங்கி தின்றது அவளை.கணவன் தன்னை இன்றுவரை அணுகியதில்லை என்று கத்தி சொல்லவேண்டும் போல் மனம் துடித்தது. ஆனால்,அவனை காட்டிக்கொடுக்கவும் மனம் வரவில்லை.
அவளது உணர்வுகளை சரியாக உள்வாங்கிக்கொண்டவன் தொண்டையை லேசாக செறுமினான் .அந்த சத்தத்தில் திருமகள் நிவாஸை நிமிர்ந்து பார்க்க ,”ஒண்ணும் பிரச்சனை இல்லே. நாம அங்கே நம்ம வீட்டுக்கு போன பிறகு பேபி பிளான் பண்ணலாம்“என்று வெகு சாதாரணமாக சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
இப்போதாவது அவள் வாயை திறந்து பேசியிருந்திருக்கலாம்.ஆனால்,ஏனோ அவளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தும் அமைதியாக இருந்துவிட்டாள் .
அதற்குப்பிறகு இரண்டொரு நாட்களில் மீண்டும் இருவரும் கிளம்பிவிட்டார்கள். திருமகளின் வீட்டிலோ அவள் மீது கோவத்தைவிட வருத்தமே அதிகம் இருந்தது. நரேந்திரன் தன் மனைவி சாருவிடம் ,”நம்ம குழந்தைக்கு எதுவும் சீர் செய்யாவெல்லாம் அவளை நான் எதிர்பாக்கல சாரு .அவ நம்ம குழந்தைக்கு சொந்த அத்தை தானே. குழந்தையை கையில கூட வாங்கல பார்த்தியா? மனசே ஆற மாட்டேங்குது“என்று மருகினான். அதற்கெல்லாம் சாரு பதில் எதுவும் சொல்லவில்லை. அவள் மனம் திருமகளிடமே நிலைத்திருந்தது. ஏனோ நாத்தனாரை குற்றம் சொல்ல அவளுக்கு தோன்றவில்லை.
தங்களை திருமண மண்டபத்தில் பார்த்தவுடன் திருமகளின் முகம் காண்பித்த அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சியை அப்போதே சாருவின் கண்கள் படம் பிடித்துவிட்டது.அப்போதிலிருந்தே திருவை சுற்றியே சாருவின் கண் பார்வை சுற்றியது. திருமகளின் நிலை என்னவாக இருக்கக் கூடும் என்பது பற்றி வெகுவாக யோசித்தாள் சாரு .
கணவனை திருமகள் பார்க்கும் பார்வையில் சத்தியமாக காதலோ, நேசமோ இல்லை.ஒருவித ஜாக்கிரதை உணர்வுதான் தெரிந்ததுஎனில், திருமகள் ஏன் எதையும் தனது பெற்றோரிடம் கொட்டிட பகிர்ந்து கொள்ளவில்லை /இதைப் பற்றியெல்லாம் எப்படி கணவனிடம் சொல்வது?
ஒருவேளை எனது எண்ணங்களும் திருவின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களும் வேறாகி இருந்து,தேவை இல்லாமல் எதற்கு பிரச்சனையை கிளப்பவேண்டும் என்று சாரு தனது மனதில் இருப்பவைகளை வெளியே சொல்லாமலே இருந்துவிட்டாள் .
நரேந்திரன் மனது சாருவின் அமைதியால் இன்னமும் வேதனைக் கொண்டது. திருமகளின் நடத்தையினால் அவள் மனமும் சரியாக இல்லையோ என்று அவனது காதல் கொண்ட மனம் தவித்தது. எப்படி அவளை சமாதானம் செய்வது என்று அவனுக்குப் புரியவில்லை.
சாருவுக்கு மனதில் திரும்ப திரும்ப திருமகளின் கண்கள் வெளிப்படுத்திய உணர்வுகளுக்கு அர்த்தம் தேடியதை நரேந்திரன் உணரவில்லை. குழந்தை ஆழந்த உறக்கத்தில் இருக்க, நரேந்திரன் தனது தோள்களில் மனைவியை சாய்த்துக்கொண்டு அவளது தலையை கோதி விட்டான். கணவனது இந்த செயலில் தன்னை தொலைத்தால் பெண். அதே சமயம்,கணவனை தான் சமாதானம் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து அவனிடம் இப்போது செல்லம் கொஞ்சிக்கொண்டிருக்கிறேன் என்று அவள் மனம் அவளை இடித்துரைக்க லேசாக வெட்கம் வந்து தொலைத்தது சாருவுக்கு.
தனது தோளில் வாகாக சாய்ந்து கொண்டிருக்கும் மனைவியின் வெட்கம் அவள் கணவனுக்கு வேறு உணர்வுகளைத் தூண்டிவிட ,சாருவின் நினைவுகள் முழுவதையும் தனதாக்கிக்கொண்டான் அவள் கணவன். நினைவுகளுடன்,உணர்வுகளையும் கணவனுக்கு கொடுத்து,அவனிடமிருந்து அவனைப் பெற்றுக்கொண்டாள் சாரு .
கணவன் மனைவி இருவருக்கும் இப்போது திருமகள் பற்றிய நினைவுகள் எங்கோ சென்று விட்டது. இங்கே இப்படி என்றால்,ஒரே மகளென்று செல்லம் கொடுத்து வளர்த்த பெண் இப்போது திருமணம் முடிந்த பிறகு வேற்றாளாக யாரோ போல் நடந்து கொண்டது சாம்பசிவத்தையும்,அவரது மனைவியையும் வெகுவாக பாதித்தது.என்னதான் மருமகள் மகளாவே நடந்து கொண்டாலும் ,பெற்ற பெண் என்பது சொந்த ரத்தம் அல்லவா..
அவளது திருமணத்திற்கு என்று சாம்பசிவம் செலவழித்தது கோடியை தொட்டது. திருமகளின் திருமணம் முடிவானதிலிருந்து,முன்னும் பின்னுமாக எவ்வளவு செலவுகள்? இன்று அவள் அணிந்திருந்த வைர நகைகள் மொத்தமும் திருமணத்திற்கு இவர்கள் வாங்கியது தானே?
இன்னமும் ஏதாவது வேண்டுமென்றால் கூட செய்வதற்கு இவர்கள் தயார்தான். பணம் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாம். மகள் எனும் உறவு எவ்வளவு மேம்பட்டது.. அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே! திருமகளாவது என்ன ஏதென்று வாயை திறந்து சொல்லலாம். ஏதாவது குறைகள் இருந்தால் சரி செய்ய இவர்கள் தயார்தான்.
என்னவாயிற்று என்று புரியாமல் இருவரும் தூக்கத்தை தொலைத்து திருவை பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். அவளுக்கு குழந்தை இன்னமும் பிறக்கவில்லை என்று திருமண வீட்டில் பேசிக்கொண்டிருந்தது வேறு இவர்களை கவலை கொள்ளச் செய்தது. பெண் ஏன் வெகு மாதங்களாய் சரியாக பேசுவதில்லை என்று அவர்களுக்கு இப்போது தவிப்பு அதிகமாயிற்று.
திருவுக்கு இன்னமும் அமெரிக்க எண் நிவாஸ் வாங்கித் தரவில்லை.அவனது சிம் கார்டுதான் அவள் உபயோகம் செய்கிறாள். வாட்ஸாப்ப் மூலம்தான் பெற்றோரிடம் பேசுவதும். ஏதோ பெரிய தவறு செய்து விட்டதாக திருமகளின் பெற்றோர் கலக்கம் கொண்டார்கள்.
இப்போது நான் ஒரு வார்த்தை சொன்னால் ஒப்புக்கொள்ள முடியுமா? “எல்லாம் குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் “என்று.
சரியாக வேண்டியது என்னவென்று இந்த கதையை படிப்பவர்களுக்கு நிச்சயம் புரியும். மீண்டும் அமெரிக்க மண்ணை மிதித்தவளுக்கு எதையோ இழந்த உணர்வு. ஒஹ்ஹ எண்டு அடைத்துக்கொண்டு வந்தது. அமெரிக்க வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வந்தது தவறு என்று அவள் மனம் யோசிக்க ஆரம்பித்தது. இங்கே அவளுக்கு சொந்தம் என்று என்ன இருக்கிறது?இல்லை,அவளுக்கு வீட்டு வாசலை தவிர வேறு என்னதான் தெரியும்?
மனதில் ஒரு யோசனையுடன் ஏர்போர்ட்டிலிருந்து கணவனுடன் கேபில் ஏறினாள். என்றாவது அவளுக்கு போராட துணிவு வரக்கூடுமா..என்று நானும் யோசிக்கிறேன். திருமணம் அது சார்ந்த பல விஷயங்கள் வாழ்க்கைக்கு அவசியம் தான்.நிச்சயம் மறுக்க மாட்டேன்.அவை எல்லாமே நாம் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்வதற்கு தானே தவிர அடிமையாக ,புழுவாக சுருங்குவதற்கு இல்லை.
நோர்த் கரோலினா வீடு அவளுக்கு இப்போது ஜெயில் மாதிரி தோன்றியது.இங்கே முதன்முதலாய் வந்த பொழுது அவளுக்கு இருந்த பிரமிப்பு இப்போது சுத்தமாகவே இல்லை. ஆயாசமும் அலுப்பும் வந்துவிட்டிருந்தது. ‘பெரிய்ய அமெரிக்கா .என்னதான் இருக்கோ இங்கே‘என்று அவள் மனம் வசை பாடியது.
தனது அறைக்கு சூட்கேஸுடன் நுழைய முற்பட்ட திருமகளை கைகளை பற்றி இழுத்தான் நிவாஸ்.அவளது தோள்பட்டை வலித்தது. வேகமாக அவனது மார்பில் வந்து விழுந்தாள் திருமகள். அவளது காது மடல்களில் முத்தமிட்டுக்கொண்டே,”இனிமே,ராத்திரில நாம ரெண்டு பேரும் ஒரே பெட்ல தூங்குவோம்.இங்கே வந்துடு” என்ற கணவனது செய்கையிலும், குரலிலும் அவள் உடலில் எந்த வேதியல் மாற்றங்களும் நிகழவும் இல்லை..அவள் உணர்வுகள் அவனுக்காக ஏங்கவும் இல்லை.
அவனை “என்ன திடீர்னு இப்படி“என்று பார்த்து வைத்தாள் .அவள் அதை புரிந்து கொண்டவனாக ,”பேபி பிளான் பண்ணலாம்னு சென்னைல சொன்னேனே..அப்போ தனித்தனியா படுத்தா பேபி வரும்மா என்ன?” என்று கேட்டான். அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமலே தனது அறைக்கு சென்று விட்டாள் திருமகள்.
அன்று இரவு எந்த மறுப்பும் சொல்லாமல் அவன் அறைக்கு சென்றவள்,”எனக்கு வயிறு ரொம்ப வலிக்குது. பீரியட்ஸ் ஆகுற நேரம்.இன்னமும் ஒரு நாலு நாள் டைம் இருக்கு.பட் இப்போ ஏதாவது ட்ரை பண்ணி ஆகிடுச்சுன்னா?’ என்று நிதானமாக கேட்டு வைத்தாள் .
நிவாஸுக்கு எரிச்சலாக இருந்தது.ஒன்றும் சொல்லவில்லை.அமைதியாக படுத்துவிட்டான். திருவுக்கு மனதில் பாரம் கூடிப் போனது. உடம்பும் மனமும் நிரம்பிய சோர்வு,அவளை தூக்கத்திற்கு இழுத்து சென்றது. ஆறுதலாக அவளை அணைத்துக்கொண்டு படுத்திருந்தால் கூட அவள் மனம் சந்தோஷம் கொண்டிருக்கும். அவனது இந்த பாராமுகம்,எவ்வளவு அனுபவித்தாலும் மனம் எதிர்பார்ப்பை விடுகிறதா?