ஜனனி வீட்டில் சென்று முறைப்படி பார்த்து பேசி என எல்லாம் திருப்தியாய் முடிய, அவர்களிடம் கூறிக் கொண்டு கிளம்பினர் ஜெய் குடும்பத்தினர்.
மாலை நான்கு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி சென்று பேசி முடித்து நிவி ஜனனியில் தலையில் பூவை வைத்து கல்யாணத்தினை உறுதி செய்து நாளையும் குறித்துவிட்டு வீடு திரும்பிய போது மணி ஏழாகி இருந்தது.
இருட்டிக் கிடந்த வீட்டிற்குள் வந்து மல்லிகா சுவிட்ச்சைத் தட்ட, அங்கே சட்டமாய் ஹாலில் அமர்ந்திருந்த உருவத்தில் நொடியில் பதறி நெஞ்சம் அடித்துக் கொள்ள,
“ச்ச! நீ தானா டா.. பயந்துட்டேன்!” என்று தன்னை ஆசுவாசப்படுத்தி அங்கே அமர்ந்திருந்த ஜெய் அருகே வந்தார் மல்லிகா.
ஒவ்வொருவராய் வீட்டிற்குள் வர, “நீ எப்ப டா வந்த?” என்றார் பிரேமா.
“ண்ணா! நீங்களும் வந்திருக்கலாம்ல? செம்ம ஜாலி டைப் அண்ணி தெரியுமா?” என்று நிவி அண்ணனிடம் கேட்க, எதற்கும் பதில் சொல்லாமல் சோஃபாவில் அமர்ந்து கை கோர்த்திருந்தவன் தரையை தான் வெறித்து அமர்ந்திருந்தான்.
அஞ்சலியும் அவனைக் கண்டவள் கடந்து தன் அறைக்கு படியேறி செல்ல,
“ஜெய்! என்னாச்சு?” என்று அவனாருகே வந்தது சூர்யா.
“கல்யாணத்தை பேச சொல்லிட்டு எங்க போனானாம்? நமக்கு முன்னாடி வந்து இருக்கவனுக்கு கொஞ்சம் முன்னாடி வந்து நம்ம கூட வர முடியாதாமா?” என்றபடி பால நாதன் தன் அறைக்கு செல்ல திரும்ப,
“ஒரு நிமிஷம் நில்லுங்க ப்பா!” என்ற அழைப்பில், கால்கள் தன்னைப் போல நின்றது பால நாதனுக்கு.
நேரடியாய் தந்தையிடம் பேசுகிறான் என்று ஆச்சர்யப்படவா இல்லை அவனின் அப்பா என்று விளிப்புக்கு ஆச்சர்யம் காட்டவா என அனைவரும் அதிர்ந்து நின்றிருக்க,
பாலா நாதனுமே அந்த விளிப்பில் தான் நின்றார்.
“பிரகாஷ்!” என்று மல்லிகா ஜெய் கரத்தினைப் பற்ற, அதை மென்மையாய் எடுத்துவிட்டவன் எழுந்து தந்தை அருகே செல்ல, சூர்யா கேள்வியாய் நோக்கினான் அவனை.
“ஏன் ப்பா?” என்று கேட்ட கேள்வியை விட அவன் கேட்ட விதத்தில் பால நாதனுக்கு என்னவோ செய்ய,
“ஜெய்! என்ன கேட்குற?” என்றது பிரேமா.
“நான் அப்படி உங்களுக்கு என்ன பண்ணிட்டேன்?” ஜெய் மீண்டும் கேட்க, அங்கிருந்தவர்கள் யாருக்குமே அது புரியவில்லை. பாலாவும் புரியாமல் தான் விழித்தாரே தவிர என்னவென்று கேட்காமல் நிற்க,
“டேய் ண்ணா! என்ன சொல்ற? புரியுற மாதிரி சொல்லு” என்றான் சூர்யா.
“ஆடிட்டர் சங்கரனைப் பார்த்தேன்!” என்ற ஜெய் கூற்றில் கண்கள் விரிய மகனைப் பார்த்தார் பால நாதன்.
“மல்லிகாவிற்கு புரிவது போல இருக்க, நடந்து வந்து ஜெய் அருகே நின்றார்.
அவர் கரங்கள் மகன் கரங்களைப் பற்றவும் அன்னையை திரும்பிப் பார்த்தவன்,
“உனக்கு தெரியுமா ம்மா அப்பா என்ன பண்ணி இருக்கார்னு?” வார்த்தைக்கு வார்த்தை அப்பா என்றதே தொண்டக்குள் இப்பொழுது ஏதோ கவ்வியது தந்தைக்கு.
“கடன் வாங்கி இருக்கார்..” என்றவன் பேச்சில், இதிலென்ன என்பதாய் தான் பிரேமா, நிவி விழித்தனர்.
பால நாதன் தொழிலில் கடன் வாங்குவது, இன்வெஸ்ட் செய்வது தெரிந்தது தானே என்று பார்க்க, சூர்யாவிற்கு இப்பொழுது தான் புரியவே ஆரம்பித்தது.
“ண்ணா!” என்று அழைக்கவுமே,
“உனக்கு தெரியுமா சூர்யா?” என்றான் ஜெய்.
“தெரியும்! ஆனா அது எந்த சிடுவேஷன்ல பெரியப்பா வாங்கினார்னு தெரியாதே! யார் என்ன கட்டாயப்படுத்தினாங்களோ!” என்றவன் குறி குணசீலனிடம் தான் இருந்தது.
அவனுக்கும் பால நாதன் கடனில் இருப்பது தெரியும் என்று ஆடிட்டர் மூலம் தான் அறிந்திருந்தான் ஜெய்.
“எப்படி? கோடில இருக்குற கடன் எப்படி என்ன சிடுவேஷன்னு தெரியாம வந்துச்சாமா?” என்றவன் பேச்சில் அனைவருமே திகைத்துப் பார்க்க, மல்லிகா அமைதியாய் நின்றார்.
அவர் தான் முழுதாய் கேட்டுவிட்டாரே! கணவன் குணசீலனுடன் பேசும் பொழுது கேட்டவருக்கு எழுந்த தவிப்பு இன்னும் அடங்காமல் தானே கணவனை பார்வையால் வதம் செய்து கொண்டிருக்கிறார்.
“கோடியா?” என்று சூர்யா திகைக்க, வீட்டில் அனைவரும் இருந்தால் தன் அறை வரை காதை பிளக்கும் சத்தம் இல்லாமல் வீடே அமைதியாய் இருப்பதை போல இருக்கவும் அஞ்சலி மேலே நின்று எட்டிப் பார்க்க, ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் நின்றனர்.
என்னவோ என்ற எண்ணத்துடன் அஞ்சலி கீழே இறங்கி வர,
“இங்க பாரு கண்ணா! கலங்காத! நாம பார்த்துக்கலாம்.. பணம் தான டா” கணவன் மேல் கோபம் இருந்தும் பணத்திற்காக மகன் கலங்குகிறானா என மல்லிகா தவித்துக் கூற,
“ண்ணா! ஒன்னும் இல்லை.. நான் இருக்கேன் உனக்கு..” என்று தோள் கொடுத்தான் சூர்யா.
“ஜெய்! என்ன டா நீ? அதெல்லாம் ஒன்னும் இல்லை.. இத்தனை பேர் இருக்கோம் இல்ல? மாமாக்கு எதாவது லாஸ் ஆகி இருக்கும்.. நாம என்ன நினைப்போம்னு கூட சொல்லாம இருந்திருக்கலாம் இல்ல?” என்று பிரேமாவும் ஆறுதல் வார்த்தை கூற,
“பணத்துக்காக தான் நான் இப்படி கேட்குறேன்னு நினைச்சுட்டீங்களா எல்லாரும்?” என்ற ஜெய் கேள்வியில் மீண்டும் புரியாது அனைவரும் பார்த்தனர்.
“இவர் என்ன பண்ணினார்னு தெரியாது இல்ல..” என்று ஜெய் கூற நா வறண்டு விட்டது பால நாதனுக்கு.
எதுவும் வரும் போது வரட்டும் என தகிரியமாய் இருப்பவர் மகன் ஒவ்வொன்றாய் நிறுத்தி நிதானமாய் பேசியதில் கொஞ்சம் வியர்த்து வர,
“வாங்கின கடனுக்கு பெத்த மகனை அடகு வச்சிருக்கார் ம்மா!” என்று கூற, புரியாமல் தான் விழித்தனர் அனைவரும் முதலில்.
ஆனால் முதலில் அதை புரிந்து கொண்டது என்னவோ சூர்யா தான். குணசீலனிடம் கடன்.. அதை அடகு என்று ஜெய் கூற புரிந்து அத்தனை பெரிய அதிர்ச்சி அது அவனுக்குமே. கண்கள் தன்னைப் போல அஞ்சலியை நோக்க, அவள் அங்கு நடப்பதையே புரியாமல் பார்த்து நின்றாள்
“என்ன ப்பா சொல்ற?” பிரேமா கேட்க,
“சித்தி! குண சீலன்கிட்ட வாங்கின கடனுக்கு வட்டியோட சேர்த்து கடனை அடைக்க தான் நான் ஊர்ல இல்லாத நேரமா பார்த்து அவர் பொண்ணோட சம்பந்தம் பேசி முடிச்சிருக்கார் இவர்” என்று கூறவும், மல்லிகா கணவனை பார்க்க, அவர் பெரிதாய் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் நின்றார்.
“என்ன சொல்ற ஜெய்?” என்ற பிரேமாவின் பார்வை நேராய் அஞ்சலியிடம் செல்ல, அவளுக்குமே இது தெரியாதே! மலங்க விழித்து நின்றாள்.
“ஒவ்வொரு முறையும் பிரச்சனை வர காரணம் என்கிட்ட பேசாம ஏன் உங்ககிட்ட அந்தாளு பேசுறாருன்னு நான் சந்தேகப்பட்டேன்.. சோ அவரு மிரட்டி நீங்க என்கிட்ட பேசி இருக்கீங்க? எல்லாம் இந்த பணத்துக்காக.. இல்ல?” என்று கேட்க, பாலா பதில் கூறாமல் நின்றார்.
“அவன் சொல்றது உண்மையா சில நொடி மௌனங்களுக்கு பிறகு மல்லிகா கணவனிடம் கேட்க, அமைதி.
“உங்களை தான் கேட்குறேன்.. சொல்லுங்க!”
“ஆமா! வேற என்ன பண்ண சொல்ற? நான் என்ன கடன் வாங்கி வெட்டியா செலவு பண்ணினேனா இல்ல வேற எங்கயும் கொண்டு போட்டேனா?” என்று கேட்க, வாயடைத்து போயினர் அவரின் நியாயத்தில்.
“நான் ஒன்னும் நானா போய் கேட்கல.. அவர் பெண்ணுக்காக கேட்கவும் தான் சரினு சொன்னேன்” என்று வேறு அவர் கேட்க,
“எப்படி ப்பா கூச்சமே இல்லாம உங்களால இதை சொல்ல முடியுது?” என்றான் ஜெய்.
“நீங்கல்லாம் மனுஷன் தானா? இவ்வளவு நாளும் உங்களைப் போய் நம்பிகிட்டு இருந்தேனே.. ஒத்த வார்த்தை சொன்னிங்களா நீங்க?” என்று கேட்க,
“மல்லி ம்மா!” என்று பிடித்துக் கொண்டான் சூர்யா.
“என்ன மாமா இப்படி சொல்றிங்க? நடந்ததை பார்த்தீங்க தானே? ஜெய் புடிக்கலனு அவ்வளவு சொன்னான்னே அப்பவாச்சும் நீங்க பேசி இருக்கலாம் இல்ல? புள்ளைய வச்சு என்ன மாமா இதெல்லாம்?” பிரேமாவும் ஆதங்கத்தை தான் காட்டினார்.
இல்லை என்று தலையாட்டியவளும் விக்கித்து தான் நின்றிருந்தாள் கேட்ட செய்தியில்.
“உன் அப்பா இன்னும் என்னவெல்லாம் செஞ்சு வச்சிருக்கார் இந்த குடும்பத்துக்கு? நாங்க நல்லாருக்கது அவருக்கு பொறுக்கலையா? மாமா இப்படி ஆனதுக்கு காரணமே அவரா தான் இருக்க முடியும்..” என்று பிரேமா தன் கோபத்தை எல்லாம் பொரும, அஞ்சலிக்கு விம்மிக் கொண்டு வந்தது.
“ப்ச்! ண்ணா! இப்ப என்ன ஆச்சு? நீ ங்க போன?” என்று சூர்யா கேட்க,
“சங்கரன் தான் போன் பண்ணி முக்கியமான விஷயம் பேசணும் ம்னு கூப்பிட்டார்.. யார்கிட்டவும் சொல்ல வேண்டாம்னு வேற சொன்னார்.. அதனால தான் சொல்லாம போனேன்” என்றவனின் அடுத்த செய்தி அனைவர் தலையிலும் குண்டை தூக்கி போடுவதாய் இருந்தது.
“வீட்டை குணசீலன் அவர் பேருக்கு எழுதிக்க போறாராம்.. அதுக்கும் உன் பெரியப்பா சரினு கையெழுத்து போட்டு நம்மளை நடு தெருவுல நிறுத்த தான் செய்வார்” என்று ஜெய் கூற,
“இதெல்லாம் எனக்கு தெரியாது.. அவர் என்கிட்ட அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லல.. கடனை தான் திருப்பி சீக்கிரம் அடைக்குற வழியை பார்க்க சொன்னார்” என்று பால நாதன் மெதுவாய் கூற,
“ஏன் இப்ப மட்டும் என்னவாம் அந்த ஆளுக்கு? இப்பவும் நம்ம புள்ளைக்கு தான அவர் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்துருக்கார்.. போதாதாமா?” என்று மல்லிகா ஆத்திரத்தில் கூற,
‘உன் அண்ணன் மகன் தம்பி மகனுக்காக எல்லாம் என் பணத்தை உனக்கு விட்டு கொடுக்க முடியாது.. பேசின படி கல்யாணம் நடக்கல.. பணத்தை திரும்ப கொடுத்திடு’ என்று குணசீலன் கூறியதை எப்படி கூற என தெரியாமல் நின்றார் பால நாதன்.
“இன்னொன்னு தெரியுமா ம்மா? வீட்டை எழுதி வாங்கி அதை அவர் பொண்ணுக்கு சீதனமா கொடுக்குறது தான் ப்ளனாம்.. சூர்யாவை அவர் பக்கம் இழுக்க தான் இவ்வளவும்.. இப்ப புரியுதா உங்களுக்கு? சூர்யாவை அவர் மாப்பிள்ளையா ஏத்துகிட்டவருக்கு இந்த வீட்ல ஒருத்தனா ஏத்துக்க முடியல.. அவனை நம்மகிட்ட இருந்து பிரிக்க தான் எல்லாம்.. இதெல்லாம் யாரால? எல்லாத்தையும் நம்மகிட்ட மறைச்சு ஒன்னுமே தெரியாத மாதிரி நிக்குற இந்த மனுஷனால” என்று ஜெய் கோபத்தில் கத்திவிட,
“அந்த ஆளை…” என குண சீலனை நினைத்துப் பல்லைக் கடித்தான் சூர்யா.
அஞ்சலிக்கு இன்றைய நாளின் அதிகபட்ச தலைக்குனிவு. அங்கே நிற்பவர்களின் முன் நிற்கவே உள்ளங்கால்கள் கூசியது. நிமிர்ந்து பார்க்கவும் முடியாத நிலையில் தன்னையே வெறுத்து நின்றிருந்தாள்.