“நீயெல்லாம் மனுஷனே இல்லை” என்றவள் வைக்க போக, சிரித்தவன்,
“உங்க ஆளுக்கு சன்னிதானத்துல வச்சு சந்தனம் பூசிட்டு இருக்காங்க.. வந்ததும் ரெடியான்னு கேட்டு சொல்றேன்.. ஓகேவா?” என்று கூற,
“ஸ்ஸ்! மறந்துட்டேன்!” என்றவள்,
“நீ எதையும் சொல்ல வேண்டாம்..” என்று கூறி வைத்துவிட, சிரித்தபடி ஜெய் மொபைலைப் பார்த்த சூர்யா திரும்பும் நேரம் அவனை பார்த்தபடி நின்றிருந்தாள் அஞ்சலி.
“உனக்கென்ன?” என்று அவன் புருவம் உயர்த்தி கேட்க,
“சும்மா பார்த்தேன்” என்றாள்.
“சும்மா பார்த்த மாதிரி இல்லையே!” என்று சந்தேகமாய் அவன் கேட்க,
“ப்ச்! தப்பு தான்.. தெரியாம பார்த்துட்டேன்.. போ!” என்று கூற,
“இங்க என்ன பண்ற? வந்திருக்கவங்களை கவனிக்கலாம் இல்லை?” என்றான்.
“கவனிக்குறதுன்னா?” புரியாமல் கேட்க,
“ஏன் டி! என்னனு டி நீ எல்லாம் வளந்து, படிச்சு, இவ்வளவு தூரம் வந்த?” முகத்தில் அதிருப்தி அப்பட்டமாய் தெரிய அவன் கேட்க,
இப்போதுமே தான் என்ன தான் தவறாய் கேட்டோம் என்று யோசித்தபடி அவனைப் பார்த்து விழித்து நின்றாள்.
வீட்டிலும் சரி வெளியில் சென்றாலும் சரி! அந்த குடும்பத்தில் மற்ற அனைவரும் அஞ்சலியிடம் ஒரு ஒதுக்கம் காண்பிப்பதாய் அவள் நினைத்திருக்க, அதை அவள் தான் ஆரம்பித்து வைத்தாள் என்பதை புரிந்திருக்கவில்லை.
எனவே எங்கே சென்றாலும் சூர்யா அருகில் அவன் கண் பார்க்கும் தொலைவில் மட்டுமே அவள் இருந்து கொள்வதை வழக்கமாய் வைத்திருந்தாள்.
பழக்கமாய் மாற்றி இருந்தது ஒரு கட்டத்தில் பிடித்தும் போக அதை மாற்றிட நினைக்கவில்லை.
“சூர்யா! காலேஜ்ல அத்தனை பொண்ணுங்க லவ் லெட்டர் நீட்டுச்சே டா.. உனக்கா இப்படி ஒரு கஷ்டம்… இதெல்லாம் கூட படிச்சவன் பார்த்தா என்ன நினைப்பான்?” என்று சூர்யா புலம்ப,
“ஏன் நீ எப்பவும் புரியாத மாதிரியே பேசுற?” என்றாள் அஞ்சலி.
“நான் தான் புரியாத மாதிரி பேசுறேன்? புரியுற மாதிரி பேசிட்டா உனக்கு புரிஞ்சி தள்ளிடும்ல?” கோபமாய் அவன் கேட்க,
“உன் பொண்டாட்டி கூட கொஞ்சுறதுக்கு உனக்கு நேரமே கிடைக்கலையா? போய் வந்தவங்களை கவனி டா!” என்று போகிற போக்கில் பிரேமா சொல்லி செல்ல,
“ம்மா! கெட்ட வார்த்தை கூட சொல்லி திட்டிட்டு போங்க.. இப்படி மட்டும் சொல்லாதீங்க.. அதுக்கெல்லாம் சூர்யாக்கு கொடுத்து வைக்கல” என்று அவனும் அன்னை பின் செல்ல,
“பூனைக்கு மணி கட்ட போறேன்னு நீ தானே ஒத்த காலுல நின்ன? நீ தான் மணியை கட்டி எல்லாம் சொல்லி குடுக்கணும்.. எல்லாம்னா எல்லாமே! புரியுது தானே?” என்று பிரேமா கேட்க,
“இவளுக்கு நான் சொல்லி குடுத்து அது அவளுக்கு புரிஞ்சி…” என நினைப்பதற்கே மலைப்பாய் இருந்தது சூர்யாவிற்கு.
“இந்தா! இதைக் கொண்டு அந்த ஹோம குண்டம் பக்கத்துல வச்சுட்டு வா” என்று அஞ்சலி கையில் தாம்பாள தட்டை பிரேமா கொடுக்க,
“சரி ஆண்ட்டி!” என்று அவளும் வாங்கி சென்றாள்.
“இன்னுமா அவளோட சண்டை போட்டுட்டு நிக்குற?” என்று சூர்யாவிடம் பிரேமா கேட்க, அங்கே மாப்பிள்ளை அலங்காரத்தில் சன்னதி முன் நின்று ஜெய் சூர்யாவை கையசைத்து அழைத்தான்.
அவனிற்கு கை காட்டியவன் “ம்ம்க்கும்ம் சண்டை மட்டும் தான் போட்டுக்குறோம்” என்றபடி ஜெய்யை நோக்கி சென்றான்.
“வேற என்ன பண்ணனும் ஆண்ட்டி?” என்று அஞ்சலி வந்து கேட்க, அவள் மாறுதல்கள் ஓரளவு புரிந்தது பிரேமாவிற்குமே.
“நீ போய் ஜனனி கூட ரூம்ல இரு.. பொண்ணை கூப்பிடும் போது நீயும் நிவியும் கூட்டிட்டு வாங்க..” என்று கூற, சரி என்று கூறி அங்கே சென்றாள்.
“வாங்க காஞ்சனா! வாங்க அண்ணே!” என்று மல்லிகா வரவேற்க, காஞ்சனா அவரோடு பேச, குணசீலன் தலையசைத்து உள்ளே சென்றுவிட்டார்.
வீட்டுப் பிரச்சனைக்கு பின் இன்று தான் குடும்பமாய் அனைவரும் சந்தித்துக் கொள்வது.
“எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு அண்ணி! அவர் ஏதோ புத்திக் கெட்ட தனமா பண்ணிட்டார்” தயங்கி தயங்கி காஞ்சனா மல்லிகாவிடம் கூற,
“அதையெல்லாம் விடுங்க.. எல்லார் வீட்டுலயும் நடக்குறது தானே?” என்ற மல்லிகா காஞ்சனாவை தன்னோடு நிறுத்திக் கொண்டார்.
குணசீலன் வரவே மாட்டேன் என்பவரை அஞ்சலி பெயரை சொல்லி அழைத்து வந்திருந்தார் காஞ்சனா.
கதிருடன் பேசிக் கொண்டிருந்த பால நாதன் குணசீலன் வந்ததைப் பார்க்க, குணசீலன் அவரைப் பார்த்ததும் திரும்பிக் கொண்டார்.
இருவரும் அவரவர் செய்தது தான் சரி என்பதை போல கோபமாய் திரும்பிக் கொள்ள அது மற்றவர்களை பாதிக்கவில்லை.
“அண்ணி இந்த சேரீ உங்களுக்கு செம்மயா இருக்கு” நிவி ஜனனியிடம் கூற,
“உனக்கு கூட இந்த அரக்கு கலர் லெஹங்கா ரொம்ப அழகா இருக்கு நிவி” என்றாள் ஜனனியும்.
“உன் அண்ணிக்கு மட்டும் தான் சொல்லுவியா? என்னோட சாரீ எப்படி இருக்கு?” பிரியா கேட்க,
“உங்களுக்கு சுமார் தான்!” என்று கூறி வம்பு வளர்த்தாள் நிவி.
“இரு இரு என் புருஷன்கிட்ட சொல்றேன்” என்று கூற, அனைவருமாய் சிரிக்க, அங்கே அஞ்சலியும் வந்தாள்.
உற்சாக மனநிலையில் இருந்த நிவி, “அஞ்சலி அண்ணிக்கு கூட சாரீ அழகா இருக்குல்ல?” என்று கூற, அஞ்சலியும் மெலிதாய் புன்னகைக்க, நிவி கைகளில் இருந்த மகிழினி அஞ்சலி கைக்கு தாவினாள்.
சட்டென தாவும் குழந்தையை கையில் பிடித்துக் கொண்ட அஞ்சலிக்கு முதலில் சரியாய் பிடிக்க கூட தெரியவில்லை. பின் சில நிமிடங்களில் பழகிப் போக அவளுடன் ஐக்கியம் ஆகிக் கொண்டாள்.
“ஜனனியை மேடைக்கு கூப்பிடுறாங்க” என ஒருவர் சொல்ல, பிரியா மகியை தூக்க செல்லவும் “நானே கூட்டிட்டு வர்றேனே” என்ற அஞ்சலியிடம் சரி என்றுவிட்டாள் பிரியா.
“ஆமா! விஷ் பண்ண தான் கூப்பிட்டேன்” அவளும் அவனைப் போலவே கூறினாள்.
“என்னோட டெக்ஸ்ட் பார்த்தியா?” அவன் கேட்க,
“ம்ம்ஹ்ம்ம்!” என்று தலையசைத்தாள்.
“ஏன்? ஆனா பார்த்துட்டதா காட்டுச்சே!”
“உங்களை யாரு போட்டோ அனுப்ப சொன்னாங்க? என்னால லெட்டர்ஸ்ல கான்சென்ட்ரேட் பண்ணவே முடியல” என்று கூறி ஓரக் கண்ணால் பார்க்க, அவன் தயங்காமல் நேராய் பார்த்தான்.
மாலையை சரி செய்வதை போல திரும்பிக் கொண்டான் ஜெய். சூர்யாவும் பின் நின்று சிரித்தபடி இவர்களை தான் பார்த்தான்.
“என்னால கூட நீ நடந்து வரும் போதும் கண்ணை எடுக்க முடியல” ஜெய்யும் கூற, ஜனனி முகத்தில் அத்தனை வெளிச்சங்கள் வண்ணங்களாய்.
“அழகா இருக்குல்ல?” என்றாள் ஜெய், ஜனனி இருவரின் பாவனைகளையும் பார்த்து அஞ்சலி சூர்யாவிடம்.
“ஹ்ம்ம்!” என்ற சூர்யா அப்போது தான் அஞ்சலியையும் அவள் கைகளில் இருந்த குழந்தையையும் கவனித்தான்.
“என்ன பாக்குற?” நீண்ட நேரப் பார்வையின் குறுகுறுபில் அஞ்சலி சூர்யாவிடம் கேட்டுவிட, “நத்திங்!” என்றவன் அண்ணன் புறம் திரும்பிக் கொண்டான்.
பிரேமா மீனாட்சியுடன் மணமக்கள் தெரியும்படி நின்று கொள்ள, மற்ற அனைவருமாய் முன் நிற்க, தெய்வத்தின் சாற்றியாய் கொண்டு ஜனனியின் கழுத்தினில் மங்கள நாணை ஏற்றி தன் திருமதியாய் ஏற்றிருந்தான் ஜெய்.
“வாழ்த்துக்கள் டா அண்ணா! அண்ணி!” என்று சூர்யா ஆரம்பித்து வைக்க, தொடர்ந்து ஒவ்வொருவராய் வாழ்த்துக்கள் கூறி என நேரம் நன்றாய் கழிந்தது.
எளிமையாய் நடந்த திருமணத்திற்கு பின் புதுமணத் தம்பதிகளுடன் அனைவரும் வீடு வந்து சேர, சாப்பாடு ஹோட்டலில் இருந்து வரவழைத்துவிட்டான் சூர்யா.
வீட்டின் வாசலில் ஜனனி ஜெய்யை நிற்க வைத்து பிரேமா சென்று ஆரத்தி எடுத்து வர, அவர்களுக்கு பின் நின்ற சூர்யா, அஞ்சலியை மல்லிகா அழைத்தார்.
“சூர்யா! நீயும் அஞ்சலியும் இப்படி வந்து நில்லுங்க!” என்று கூறவும் என்னவென்று கேட்டபடி இருவரும் வந்து நிற்க,
“பிரியா, நிவி ரெண்டு பேருமா சேர்ந்து இவங்களுக்கு சுத்துங்க” என்று கூறவும் மகிழ்ச்சியாய் ஆரத்தி சுற்றினர்.
அஞ்சலிக்கு அதில் இன்னும் ஒரு உவகை பொங்கியது.. தன் திருமணத்தன்று கூட அனுபவிக்காத ஒன்று.
“அன்னைக்கு சூழ்நிலை எடுக்க முடியலை! போடா! எல்லாத்துக்கும் விளக்கம் கேட்டுகிட்டு!” என்று உள்ளே சென்றுவிட்டார்.
பிரேமா அஞ்சலியை ஒவ்வொரு வேலையாய் கூறி செய்ய வைக்க, அஞ்சலியும் விரும்பியே அனைத்தையும் கற்றுக் கொள்ள, பார்த்த காஞ்சனாவிற்கு இதை விட வேறு என்ன வேண்டும் என்று இருந்தது.
“பார்த்தியா? அஞ்சலியை எப்படி நடத்துறாங்க பாரு!” என்று கோவிலில் வைத்தே குணசீலன் காச்மூச்சென்று சத்தமிட,
வீட்டிற்கு அழைத்ததற்கும் கோபமாய் வர முடியாது என்று குண சீலன் சென்றுவிட, யாரும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை அவரை.
காஞ்சனா மாலை வரை வீட்டிற்கு வந்து இருந்துவிட்டே கிளம்பி இருந்தார்.
இருள் சூழ ஆரம்பிக்கவுமே பெரும்பாலான சொந்தங்கள் சென்றுவிட, கதிர் பிரியாவை சிறியவர்கள் விருப்பப்படி அங்கே விட்டுவிட்டு மீனாட்சியும் ஜனனியிடம் கூறிக் கொண்டு கிளம்பி இருந்தார்.
பின் கீழே இருந்த சில வயதானர்வர்களை மல்லிகா பொறுப்புடன் பார்த்துக் கொள்ள, மேலே இருந்த சிறிய ஹாலில் சிறியவர்கள் எல்லாம் ஒன்று கூடி இருந்தனர்.
பிரியா கதிரும் எளிதாய் அவர்களுடன் ஒன்றி இருக்க, மகிழினி அவர்கள் நேரத்தை எல்லாம் கவர்ந்திருந்தாள்.
அதிலும் நிஜமாய் அவ்வளவு பிடித்திருந்தது குழந்தையை அஞ்சலிக்கு. இதுவரை குழந்தைகளுடன் பழகும் சூழ்நிலை அவளுக்கு வாய்த்திருக்கவில்லை. இப்பொழுது என்னவோ அவ்வளவு பிடித்தது.
அஞ்சலியுடன் அட்டையாய் மகிழினி ஒட்டிக் கொள்ள, அதை வைத்து அவளை இன்னும் வம்பு செய்தான் சூர்யா. அஞ்சலி நிஜமாய் அவ்வளவு மகிழ்ச்சியாய் உள்ளத்தில் இருந்து எழுந்த ஆனந்தத்தில் அன்று தான் பார்த்திருந்தான் சூர்யாவும். அதை அவள் உணர்ந்தாளோ இல்லையோ சூர்யா உணர்ந்தான்.
“போதும் போதும் எல்லாரும் ரூம்க்கு ஓடுங்க.. மணி என்ன ஆச்சு! இன்னும் அரட்டை!” என பிரேமா விரட்ட,
“அண்ணி! நீங்க கீழ இருக்குற ரூமை எடுத்துக்கோங்க!” என்று கதிர் பிரியாவிடம் கூறினான் சூர்யா.
“ஜனனி! வந்து சாமி கும்பிட்டுக்கோ!” மல்லிகா அழைக்க,
“நீயும் வா டா!” என்றார் ஜெய்யை பிரேமா.
“நாங்க எல்லாம் வர கூடாதா?” சூர்யா கண்ணடித்துக் கேட்க,
“உதை வாங்குவ!” என்று பிரேமா கூற,
“பொல்லாத உலகமப்பா!” என்று கூறி சென்றான் சூர்யா.
“நிவி! நீ போய் தூங்கு!” என்றுஅவளை அனுப்பிவிட்டு, ஜெய் முதலில் சென்றுவிட, பிரியா, அஞ்சலி இருவருமாய் ஜனனியை அழைத்து சென்றுவிட்டு வந்தனர்.
அகத்தில் இருந்த மலர்ச்சி முகத்தில் தெரிய தன் அறைக்கு வந்து சேர்ந்திருந்தாள் அஞ்சலியும்.