Skip to content
Post Views: 483
அவளாக அணைத்ததில் விக்னேஷூக்கு ஆச்சரியம்.
“காலங்காத்தால காதலா பேபி?” என்று கேட்டான்.
Advertisement
அவனை இறுக்க அணைத்திருந்தவள் “என்னை விட்டு போகாத..” என்றாள் பச்சை நிற கனவிலிருந்து வெளி வராமல்.
“கல்யாணமான இரண்டாவது நாளே பாத்ரூமுக்கு சேர்ந்து போக முடியாது செல்லம். நீ அஞ்சி நிமிசம் வெயிட் பண்ணு. எனக்கு ஒன்பாத்ரூம் ரொம்ப அர்ஜென்ட். போனதும் வந்துடுறேன்..” என்று அவளை விலக்கி நிறுத்தினான்.
Advertisement
Advertisement
அவள் வெளுத்து போன முகத்தோடு நகர்ந்து நின்றாள்.
அவன் உள்ளே சென்றான்.
Advertisement
இவள் அறைக்குள் நடைப் போட்டாள்.
‘விஷம் எப்படி காப்பியில் வரும்? இது நிச்சயம் அந்த கனகவதிதான். அவளுக்குதான் இது போன்ற கேவலமான ஐடியாக்கள் உதிக்கும். இப்போது என்ன செய்வது? இந்த வீட்டை விட்டு போய் விடலாமா? நமக்கு ஆபத்து வந்தால் கூட பரவாயில்லை. நேர்மையின் பக்கம் நிற்கும் விக்னேஷூக்கு எந்த ஆபத்தும் வர கூடாது. அவனிடம் உண்மையை சொல்லி அழைத்து போய் விடலாம்..’ என்று நினைத்தாள்.
காப்பி கொண்டு வருபவளை பார்ப்பதற்காக வெளியே வந்தவள் மாடி கைப்பிடியை நெருங்கி கீழே கவனித்தாள். ஹாலில் ஒரு தூணின் பின்னால் நின்றிருந்த கனகவதி தன் எதிரில் இருந்த பணிப்பெண் ரேவதி வைத்திருந்த காப்பி கோப்பையில் விஷத்தை கொட்டினாள்.
“சரியா ஒரு நிமிசம். என் பையன் மயங்கிடுவான். கீழே கார் ரெடியா இருக்கும். என் பையனை ஹாஸ்பிட்டல் கொண்டு போயிடுவேன். போலிஸூம் என் பையனும் கேட்கும்போது மாயாதான் விஷத்தை தந்தான்னு நீ சொல்லணும். சரியா?” எனக் கேட்டாள்.
“சரிங்க மேடம்..” அந்த பணிப்பெண்ணும் தலையை ஆட்டினாள்.
“இப்ப இதை கொண்டுப் போய் பொன்னம்மாக்கிட்ட கொடு..” என்று அவள் ரேவதியை அனுப்ப, மாயா சத்தமில்லாமல் ரூமுக்கு வந்தாள். கதவை சாத்தி அதன் மீதே சாய்ந்து நின்றாள்.
விக்னேஷ் பாத்ரூம் கதவை திறந்து வெளியே வந்தான்.
இவளுக்குள் மீண்டும் குழப்பங்கள். திட்டமிட்டு இப்படி செய்யும் மாமியார் நிச்சயம் நாளை நாம் வெளியே சென்ற பிறகும் ஏதாவது ஆபத்தை தருவாள். மாமியாரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் இங்கேயே இருந்துதான் ஏதாவது யோசிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
விக்னேஷ் இவளை நெருங்கினான். இருவருக்கும் இடையில் அரை இன்ச் இடைவெளி மட்டும் இருந்தது. கதவில் அவளின் இரு பக்கமும் உள்ளங்கைகளை ஊன்றியவன் “என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?” எனக் கேட்டான்.
அவனின் வாயிலிருந்து மவுத் பிரஸ்னெர் வாசம் அளவுக்கு அதிகமாக வந்தது.
“எவ்வளவு பிடிக்கணும்ன்னு நீ சொல்றியோ அவ்வளவு பிடிக்கும்..” என்றவள் தன்னை மறந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவன் அருகில் சுயம் இழப்பது பிடித்திருந்தது. நிலையில்லா உலகில் அந்தந்த நொடி உணர்வுகள் எவ்வளவு உன்னதம் என்பது அவளுக்கும் தெரியும்.
“நான் கிஸ் பண்ணா கோப்ரேட் பண்ணும் அளவுக்கு பிடிக்குமா?” எனக் கேட்டான்.
இவள் அவன் கழுத்தை சுற்றி கைகளை போட்டாள். “நீ யாரையாவது கொலை பண்ணா உனக்கு ஐடியா சொல்லி பாடியை டிஸ்போஸ் பண்ணும் அளவுக்கு பிடிக்கும்..” என்றாள்.
“காட்.. காலையிலேயே கொலையா? ஏதாவது கலையை பத்தி பேசலாமே! ஆய கலைகள்..” என்றவன் முழுமையாக முடிக்கும் முன் கதவு தட்டப்பட்டு விட்டது.
மாயா அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள். “ஆய கலைகளை பத்தி அப்புறம் பேசலாம்..” என்று சொல்லி கதவை திறந்தாள்.
வெளியே பொன்னம்மா நின்றிருந்தாள். காப்பியை நீட்டினாள்.
“இவள் அதை உடனே பிடுங்கினாள். “தேங்க் யூ..” என்றவள் அதை பருக முயல, “அது சின்ன தம்பிக்கு..” என்றாள் பொன்னம்மா.
“ஆமா. நீ இன்னும் பல் விளக்கல. விளக்கிட்டு வந்து குடி..” என்று கப்பை வாங்கினான் விக்கி.
“ஆனா எனக்கு காப்பி இப்பவே வேணும்..” என்று பிடுங்கியவள் கை தவறி கீழே விடுவது போல் கோப்பையை கீழே விட்டாள். அது மூவருக்கும் இடையில் இருந்த தரையில் விழுந்து டொம்மென்று உடைந்தது.
“அச்சோ.. சாரி..” என்றாள் மாயா.
“பரவால்ல. நகரு. சுடு காப்பி காலை சுட்டுட போகுது..” விக்னேஷ் அவளை தள்ளி நிறுத்தினான்.
கோப்பையின் உடைந்த பகுதிகளை கையில் சேகரித்தான்.
“காலை வச்சிடாதா..” என்று இவளை எச்சரித்தான்.
“நான் க்ளீன் பண்றேன் தம்பி..” என்றாள் பொன்னம்மா.
“பரவால்லக்கா..” என்றவன் உடைந்த கோப்பை துண்டுகளோடு அங்கிருந்து செல்ல, “நீங்க போய் வேற காப்பி கொண்டு வாங்க. நீங்களே அதை போட்டு கொண்டு வாங்க..” என்றாள் மாயா.
பொன்னம்மா குழம்பினாள். “சரிங்க பாப்பா..” என்று கிளம்பி போனாள்.
அவள் புது காப்பி கொண்டு வர செல்ல, விக்னேஷ் வாக்குவம் க்ளினரை கொண்டு வந்து தரையை சுத்தம் செய்தான்.
பொன்னம்மா கிச்சனுக்கு வந்து புது காப்பியை தயார் செய்தாள். கிச்சன் வாசலில் போன் பேசுவது போல் நின்றிருந்த கனகவதி பொன்னம்மாவின் செயலில் குழம்பி போனாள்.
“எதுக்கு புது காப்பி?” என்று கேட்டாள் சமைத்துக் கொண்டிருந்த ரேவதி.
“அந்த காப்பி கீழே விழுந்து உடைஞ்சி போச்சி. அதான் புதுசா போடுறேன். அதுவும் போன முறை மருமக பாப்பாவுக்கு காப்பி கொண்டு போது மறந்துட்டேன்..” என்று புது காப்பியை இரண்டு கோப்பைகளில் ஊற்றி எடுத்து போனாள் பொன்னம்மா.
கனகவதி ஆத்திரத்தில் கையை சுவரில் குத்தினாள். அவசரப்பட்டு குத்தி விட்டு கையை உதறினாள்.
இப்படி சொதப்புதே என்று தன்னையே திட்டினாள்.
மாயா பிரெஸ் ஆகி வெளியே வந்தாள்.
விக்னேஷ் சோஃபாவில் அமர்ந்து காப்பியை பருகி கொண்டிருந்தான். நல்லவேளையாக இது பச்சை விளக்கொளியில் தெரியவில்லை.
“காப்பி..” என்று இவளுடையதை நீட்டினான்.
இவனிடம் உண்மையை சொல்லலாமா என்று யோசித்தாள்.
ஆனால் அது ஏதாவது பிரச்சனையில் முடிந்து விடுமோ என்றும் பயமாக இருந்தது. ஏதோ ஒரு சக்தி நம்மை காப்பாற்ற முயல்கிறது. சரியான பாதையில் அனைத்தையும் நடத்த முயற்சிப்போம் என்று முடிவெடுத்தாள்.
அவனருகில் அமர்ந்தவளின் இடது கரம் அனிச்சையாக அவனின் கால் மீது ஓய்வெடுக்க சென்றது.
இவன் ஆச்சரியத்தோடு அவளை பார்த்தான்.
அவளின் காப்பி அருந்தும் உதடுகள், எதையோ யோசிப்பதை வெளிக்காட்டும் கண்கள், உலகை மறந்த முகம்.. அவளை பார்க்க பார்க்க இவனுக்கு அவளின் ஆன்மாவோடு பின்னி பிணைய வேண்டும் போல் இருந்தது.
காப்பி அருந்தும் தருணம் அது. ஆனால் இவனுக்கு காதல் ஊர்வலத்தின் ஒரு பகுதியாக தெரிந்தது.
அவள் தன்னை மறந்திருக்க, இவன் அவளுள் தன்னை தொலைத்திருக்க.. அங்கே காலடி சத்தம் அதிர வந்து சேர்ந்தான் தருண்.
அவனை கண்டதும் கணவனை விட்டு விலகி எழுந்து நின்றாள் மாயா.
“இரண்டு பேர் தனியா இருக்கும் இடத்துக்கு ஏன்டா கரடி மாதிரி வர?” என்று கேட்டபடி சலிப்பாக எழுந்து நின்றான் விக்னேஷ்.
அவனின் நெஞ்சில் கை முட்டியால் எத்து விட்ட மாயா “சும்மா இரு..” என்றாள்.
“சொல்லுங்க மாமா..” என்றாள் வந்தவனிடம்.
அவன் இருவரையும் நெருங்கினான். தம்பியின் நெஞ்சில் விரல் வைத்தவன் “நானும் என் வொய்ப்பும் தனியா இருக்கும்போது எத்தனை முறை நீ டிஸ்டர்ப் பண்ணி இருக்க தெரியுமா? சோ நீ வாயை மூடு..” என்றான்.
கொழுந்தியாளிடம் திரும்பி “நீங்க இரண்டு பேரும் இங்கே இருந்தா தேவையில்லாம பிரச்சனைகள் வரும். உன் அக்காவும் ரொம்ப பயப்படுறா. நீங்க என்னோடு கிளம்புங்க..” என்றான்.
மாயா முடியாதென்று தலையாட்டினாள்.
“உனக்கு என் அம்மாவை பத்தி தெரியாது. அவங்களோட ஈகோ ஜெயிக்கணும்ன்னு உன்னை கொல்ல கூட பார்ப்பாங்க. அப்படியே ஏதாவது ஆச்சின்னா உன் அக்கா தாங்கிக்கவே மாட்டா. என்னோடு இப்பவே கிளம்புங்க..” என்று கட்டளை விதித்தான்.
அக்காவின் சந்தேகம் சரிதான். மாமனின் பாசமும் சரிதான். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது மிகவும் முக்கியம் ஆயிற்றே.
“நானும் இவரும் அப்புறமுமா வீட்டுக்கு வரோம் மாமா. அங்கே பேசிக்கலாம்..” என்றாள் இவள்.
“இப்பவே நீ என்னோடு கிளம்பணும். உன்னை கையோடு கூட்டி வருவதா உன் அக்காகிட்ட சொல்லிட்டு வந்து இருக்கேன்..”
அக்காவும் மாமனும் சமாதானம் ஆகிவிட்டார்கள். அக்காவை இம்ப்ரஸ் செய்வதற்காக மாமன் நம்மை கூட்டிப் போக வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்ட மாயா “மதியம் வரை வெயிட் பண்ணுங்க. நான் எல்லாத்தையும் சொல்றேன்..” என்றாள்.
அவன் மேலும் சொல்லும் முன்னால் அந்த அறையின் வாசலில் வந்து நின்றாள் கனகவதி. “வீட்டுக்கு வர மாட்டேன்னு சொன்ன? இப்ப எதுக்கு இங்க வந்த?” என்று பெரிய மகனிடம் கேட்டாள்.
தருண் பேசுவதற்காக வாயை திறக்க, “நீங்க அமைதியா கிளம்புங்க மாமா..” என்றாள் மாயா.
தருண் கையை இறுக்கியபடி அங்கிருந்து கிளம்பினான்.
“பொண்டாட்டி தாசனை கேள்விப்பட்டு இருக்கேன். கொழுந்தியா தாசனை இப்பதான் பார்க்கிறேன்..” என்று கிண்டலடித்தாள் கனகவதி.
இந்த வீட்டுக்கு வந்ததே நம் தவறு என்று தன்னையே திட்டியபடி அங்கிருந்து போனான் தருண்.
கனகவதி மாயாவை நக்கலாக பார்த்தாள். சீக்கிரம் உன்னை இந்த உலகத்தை விட்டு ஓட வைக்கிறேன் என்று விழிகளால் சொல்லியபடி கிளம்பிப் போனாள்.
அவளின் பார்வை மாயாவை கொஞ்சம் பயமுறுத்தி விட்டது.
மாயாவின் தோளில் படிந்தது கரம். திரும்பினாள். அவளின் கணவன் கன்னத்தில் முத்தமிட்டு “உனக்கு என்ன தோணுதோ செய். நான் உன்னோடு மட்டும்தான் இருப்பேன்..” என்று சொன்னான்.
மென்மையாய் புன்னகைத்தாள். “தேங்க்யூ..” என்று அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.
அடுத்து என்ன ப்ளான் செய்வது என்று கனகவதி யோசிக்க, தர்மேந்திரன் அலுவலகம் செல்ல தயாராகி வந்தார்.
இவளை பார்த்தவர் “பிள்ளைங்க இரண்டு பேரையும் உன் பிழையால் எதிரிகளா மாத்திட்ட. அவனுங்க ஆபிஸ்க்கு வராம என்னை தனியா அல்லாட விட்டு சாகடிக்கிறாங்க..” என்று திட்டி விட்டு கிளம்பினார்.
இவள் அவரின் புலம்பலை ஒதுக்கி தள்ளி விட்டு மருமகளாக வந்தவளை எப்படி ஓட விடுவது என்று யோசித்தாள்.
காலை உணவை அவர்களின் அறைக்கே கொண்டுப் போய் தந்தாள் பொன்னம்மா. கனகவதி ஹாலில் அமர்ந்து நகத்தை கடித்தபடி மாடி அறையை வெறித்தாள்.
பதினொரு மணியளவில் விக்னேஷூம் மாயாவும் தயாராகி வந்தார்கள்.
“எங்க வீட்டுக்கு போய்ட்டு வரோம் அத்தை..” என்று கொஞ்சும் குரலில் சொல்லிவிட்டு கணவனை இழுத்து போனாள் மாயா.
கனகவதி மனதுக்குள் அவளுக்கு சாபத்தை வைத்து தீர்த்தாள்.
இவர்கள் அந்த வீட்டுக்கு சென்றபோது தருணும் ரதியும் வாசலில் நின்று பெட்ஷூட்டை பிழிந்துக் கொண்டிருந்தார்கள்.
தங்கையை கண்டதும் பெட்ஷீட்டை அவசரமாக காய போட்டாள் ரதி.
வீட்டுக்கு வந்த இருவருக்கும் எலுமிச்சை ஜூஸை கொண்டு வந்து தந்தாள் அமலா.
“அந்த வீட்டுல என்னடி பண்ற? சாவுல இருந்து மீண்டு வந்தும் உனக்கு புத்தி வராதா?” என்று கேட்டாள்.
மாயா ஜூஸை குடித்து முடித்த நேரத்தில் அக்காவும் மாமாவும் உள்ளே வந்து விட்டார்கள்.
ஈர கைகளை துடைத்தபடி தம்பியை நெருங்கிய தருண் “அந்த வீடும் நமக்கு வேணாம். அந்த ஃபேமிலியும் நமக்கு வேணாம்..” என்றான்.
மாயா அந்த மூவரையும் மாறி மாறி பார்த்தாள்.
“நீங்க என்னை இங்கே கூப்பிடத்துக்கு பதிலா நீங்க அங்கே வந்தா நல்லா இருக்கும்..” என்றாள்.
மூவரும் அதிர்ந்தார்கள்.
“என்னடி சொல்ற?” எனக் கேட்டாள் அக்கா.
“அந்த லேடி சரியில்லக்கா. பெத்த பிள்ளைங்க மேலயும் பாசம் இல்ல. மருமகள்கள் மேலயும் பாசம் இல்ல. அவங்க நம்மை துரத்தியடிப்பதில் குறியா இருக்காங்க. நாம பயந்து வெளியே இருக்கும் வரை அந்தம்மாதான் ஜெயிக்கும். நாம எதிர்த்து நிற்கணும். நம்மை கல்யாணம் பண்ண பாவத்துக்கு இவங்க அந்த வீட்டுல இருக்கும் உரிமைகளை விட்டுட்டு இருக்கணுமா? அவங்க பார்த்து கட்டி வச்ச பொண்ணு நீ. ஆனாலும் உன்னை வெறுக்கிறாங்க. அவங்க தப்பை அவங்க உணரணும். இல்லன்னா நாம உணர வைக்கணும்..” என்றாள் பிடிவாதமாக.
தொடரும்.
error: Content is protected !!