Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

73. வேணு கானமிதுContest Stories 2026

கானம் 31(Final)

அத்தியாயம்: 31

“பீரியட்ஸ் ஆகி எத்தன நாள் ஆகுதும்மா?” என்று ஒரு பெண் மருத்துவர் கேட்க, 



Advertisement

“அஞ்சி நாள் ஆகுது டாக்டர்.” என்ற ரிதன்யாவைப் பரிசோதனை மேடையில் படுக்க வைத்து கால்களைக் குத்துக்காலிடச் சொன்னார். 

அவர் சொன்னது போலவே செய்தவளிடம், “த்ரெட் தெரியலயேம்மா… ஒரு ஸ்கேன் பண்ணிப் பாத்திடுவோமா?” என்றவர் எழுதிக் கொடுக்க, 

Advertisement

Advertisement

“என்ன சொன்னாங்க டாக்டர்?” என்ற கேள்வியோடு எதிர்கொண்டாள் சுருதி.

அவளிடம் ஸ்கேன் செய்யப் போவதாகச் சொல்ல, “பயப்படாத எல்லாம் நார்மலாத்தான் இருக்கும்.” என்று சொல்லி அழைத்துச் சென்றாள். 

Advertisement

அடுத்த அரைமணி நேரத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லாது ரிதன்யா மருத்துவர் அறையை விட்டு வெளியே வந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட,

“ரொம்ப வலிக்குதா ரிது?” என்று கலக்கத்துடன் கேட்டாள். 

“நீ நர்ஸ் தான! உனக்கு தெரியாதா என்ன செய்யும்னு.” 

“தெரியும் தான்… ஆனா நீ இப்படி உக்காருறப்ப பயம்மால்ல இருக்கு.” என்றவள் அவளின் அருகிலேயே அமர்ந்து, கொண்டு வந்து பானத்தைப் பருகக் கொடுத்தாள்.

தெம்பு வரவேனா என்று அடம்பிடிக்க, உடல் அசருகிறது என்பதை விழிகள் காட்டிக் கொடுத்தன. 

“என்னடி செய்து?” 

“ஒன்னுமில்ல…”

“நான் பத்ரி மச்சானுக்கு கால் பண்றேன்.” என்று ஃபோனை எடுக்க, அதைப் பட்டென வாங்கியவள், 

“அவருக்குத் தெரியாது நான் இங்க வந்தது. சொல்லாத.” என்றாள் கட்டளையாக.

‘ஐயோ! இவா சொல்லாதங்கிறா! சொல்லலன்னா இவ புருஷன் வந்து கத்துவாரே…’ என்று பயந்து கொண்டிருக்க,

“நான் சொல்ல மாட்டேன் ரிது. ஆனா அவரே நேர்ல வந்து நின்னா! என்ன செய்றது?.” என்று தூரத்தே வந்து கொண்டிருந்த பத்ரியைக் கை காட்டினாள் சுருதி. 

இவர்களைப்‌ பார்த்து விட்டான் போலும். நடையில் இருந்த வேகம் அவனின் கோபத்தைச் சொல்லியது. அவனிடம் எதுவும் சொல்லாது வந்தால் அது தானே தரும்.

இருவரையும் முறைத்தபடி வந்தவன், “நான் காரணமில்ல மச்சான். இவா… இவ தான்… உங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு இப்ப கூட சொல்லிட்டு இருக்கா…” என்று போட்டுக் கொடுக்க,‌ சுருதியைக் கண்டு கொள்ளாது, மனைவியை முறைத்தவாறே மருத்துவர் இருக்கும் அறைக்குள் சென்றான். 

“ஐயோ!! அவரு டாக்டர்ட்ட பேசப் போறாரு.” என்று சுருதி பதற,‌

“விடு சுருதி… சில விசயங்கள நாம விளக்கமா சொல்லி தெரிஞ்சுக்கிறத விட, அடுத்தவங்க சொல்லி கேக்குறது தான் நல்லது.” என்றவள் அயர்வாக மூச்சை விட்டாள். 

ஐந்து நிமிடங்களில் வெளியே வந்தவன் பெண்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“நீ எதுல வந்த சுருதி?” 

“ஆட்டோல வந்தேன் மச்சான்.”

“பத்திரமா திரும்பி ஆட்டோலயே போய்டுவேல?” என்க, அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, 

“போய்க்குவேன்.” என்று வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

“கொஞ்ச கூட கருணையே கிடையாது. இவரு பொண்டாட்டிக்கு உதவி செய்யத் தான வந்தேன். அவ கூப்பிட்டான்னு தான் காலைலயே சோறு தண்ணி உங்காம, மாமியார்ட்ட பொய்ய சொல்லிட்டு ஓடி வந்தேன். ஹாஸ்பிட்டல்ல அப்பாயின்மெண்ட் வாங்காததுனால நிக்க வச்சிட்டா அந்த டாக்டரு. ஒரு மணி நேரம் இந்த டாக்டரம்மாட்ட நின்னு, காமணி நேரம் ஸ்கேன் பாக்குற இடத்துல நின்னுன்னு கால் கடுக்க கூடவே இருந்திருக்கேன். ஒரு டீ… ஒரு சமோசா… ஒரு சாத்துக்குடி ஜூஸ்… ஏன் ஒரு பாட்டில் தண்ணி கூட வாங்கிக் குடுக்காம, இடத்த காலி பண்ணுங்கிறத எப்படி நாசுக்கா சொல்றான்… இல்ல இல்ல… சொல்றாரு… நான் அவ புருஷன மரியாதை இல்லாம திட்டினேன்னு தெரிஞ்சா என்னை ஸ்டெக்சர்ல ஏத்தி விட்டுடுவா… ரவுடி பொண்டாட்டி… அதுக்கு ஏத்த கறார் புருஷன். என்னை இப்படி வெறும் வயித்துல புலம்ப விட்டுட்டானுங்களே. ஒரு புள்ளத்தாச்சி பொம்பளைய நடக்க விட்டுட்டானுங்களே.” என்று முணுமுணுத்துக் கொண்டே வந்தளை அழைத்துச் செல்ல விஷ்ணு காத்திருந்தான். 

ஏழு மாத கருவைச் சுமக்கும் அவளைத் தனியாக எப்படி விடுவான். விஷ்ணுவையும் கையோடு கூட்டி வந்திருந்தான் பத்ரி.

அவள் கேட்ட சாத்துக்குடி சாறை பாட்டிலில் அடைத்து வைத்து, அதை ஆட்டியபடியே வரவேற்றவனிடம், உள்ளே இருந்த டெரர் ஜோடிகளைத் திட்டித் தீர்த்துக் கொண்டே ஏறி அமர்ந்தாள்.

இங்கு, ப்ளாஸ்டிக் நாற்காலியின் கைப்பிடியை அழுத்திப் பிடித்து, எழுந்து நின்றவளின் இடையில் கரம் கொடுத்துக் கைகளில் அள்ளிக் கொண்டு பத்ரி சென்றான், காருக்குள். 

“பத்ரி, இது ஹாஸ்பிடல். எல்லாரும் பாப்பாங்க.” என்றவளைத் தீப் பார்வை பார்த்தான். 

வாயை மூடிக் கொண்டாள் ரிதன்யா.

இருள் கவிழத் தொடங்க, வீட்டிலிருந்து ஃபோன் வந்தது. சுதாவிடமும் எதுவும் சொல்லாது வந்திருந்ததால் அவரும் கலக்கத்துடன் அழைத்திருந்தார்.

“வந்து சொல்றேன் அத்தை.” என்று அவரிடம் சொல்லி வைத்தாள்.

“என்னத்தா போய்ச் சொல்லப் போற? உனக்குக் கொஞ்சமாச்சும் புத்தி இருக்கா! வீட்டுல யார்க்கிட்டயும் சொல்லாம ஹாஸ்பிடல் போய் உக்காந்திருக்க.”

“சீக்கிரம் வந்திடலாம்னு நினைச்சேன். நான் நினைச்சத விட லேட்டாகிடுச்சி.” 

“ஃபோன் வச்சிருக்கேல!” என்று நக்கலாக கேட்க, எதுவும் சொல்லவில்லை அவள். 

அவனுக்குத் தெரியக் கூடாது என்று தானே சென்றாள். 

தெரிந்தால் குத்திக் கிழிப்பான் என்று தெரியாதா அவளுக்கு.

பெருத்த மௌனத்துடன், கார் நகர்வலம் சென்றுகொண்டிருந்தது.

கியரில் இருந்த அவனின் கரத்தின் இறுக்கம் கண்டவள், கள்ளிப்பூவைக் பூங்காற்று வருவதுபோல் இதமாய் வருட,

“ம்ச்… சும்மா வா தன்யா… நான் உம்மேல செம்ம கோபத்துல இருக்கேன்.” என்றான் புருவ நெறிப்புடன்.

மடியில் முழங்கையை வைத்து, கன்னத்தைக் கரத்தில் தாங்கி, அவனின் முகம் பார்த்து மெல்லிதாய்ப் புன்னகைத்தவள், “ரொம்…ப கோபமோ!!” என்க, 

“பேசாம வா டி…” என்றான் கடுகடுத்து.

சரி பேசவில்லை என்பது போல் இதழ்களுக்கு சிப் போட்டவள், ஸ்டேரிங்கைப் பற்றியிருந்த அவனின் இடது கரத்திற்குள் தன் கரத்தை நுழைத்து, கட்டிக்கொண்டு தோளில் தலை சாய்த்து, பாவமாய் அவனின் முகம் பார்த்தாள். 

அவன் ஏறிடவில்லை என்றதும், கன்னத்தைப் புஜத்தில், பூனைக்குக் குட்டி போல் உரசி உரசியே அவனின் கோபத்தீயைச் சாம்பலாக்கிப் பறந்து போக வைத்தவள்,

‘தும்பை போல் தூய அழகை

உன்னிடம் தான் காண்கிறேன்.

என் கை நீட்டு ஏந்தி அணைக்கும்

நாளை எண்ணி ஏங்கினேன்…’

என்று முணுமுணுக்க, அவன் கடைக் கண்களால் அவளை முறைத்தான். அவளின் குரலில் இருந்த மாற்றம் உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டியது. 

அது, மெல்ல மெல்ல ஏறிக் கொண்டே போக, 

“தன்யா… போதும்.” 

“பேசத் தான் கூடாது… பாடவும் கூடாதா…” என்றவள், மீண்டும் பாடத் தொடங்கினாள். இம்முறை அவளின் சுட்டுவிரல் அவனின் தாடையில் கோலமிட்டது.

‘நானும் நீயும் காலம் எழுதி

காற்றில் வீசிய நாடகம்

அந்த காற்றே மீண்டும் இணைத்து

அரங்கம் ஏற்றும் காவியம்…

மேகதூதம் பாட வேண்டும்

மேனி மீது சாரல் வேண்டும்

காளிதாசன் காண வேண்டும்

வானவில் வரும் வாழ்வில் மீண்டும்

ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்

ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்

ஹ்ம்ம் ம்ம் பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம்’

என்க, விரலை மடக்கிப் பிடித்தான்.

“ம்… வலிக்கிதுப்பா…” என்று சிணுங்கியவள் சரிகாவைப் பிரதிபலித்தாள்.

பொறுப்புகள் கூடிப் போன பின் தன் குழந்தைத்தனத்தை மறைத்துக் கொள்ளும் பெண்கள், தன் அகம் தீண்டும் நபரிடம் வெளிக்காட்டத் தவறியதில்லை.

சரிகாவிடம் காட்டுவாள். ஏன் அதிதியிடம் கூட செல்லம் கொஞ்சிப் பேசிக் கேட்டிருக்கிறான். முதல் முறை தன்னிடம் இவ்வாறு பேசுறாள். 

ஏன் என்று அவனுக்குத் தெரியுமே. டாக்டர் தான் விளங்கியிருந்தாரே.

பல நிமிடங்களாக விரலை முறுக்கியபடி இருக்கிறான் போலும், வளைந்து நெளிந்து அமர்ந்திருந்தால் இடையில் வலி உண்டாக,

“ஸ்…” என்று வயிற்றில் கை வைத்துக் கொண்டாள். பதறியவன் உடனே காரை ஓரங்கட்டினான்.

“வலிக்குதா டி?” என்று பதைபதைப்புடன் கேட்டவனுக்கு, இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

“தேவையாடி இதெல்லாம்.”

“எனக்குத் தேவை.”

“ம்ச்… உன்னை வருத்தி அவசியம் இதைச் செய்யணுமா?” என்று முகம் திருப்ப, அதைப்பற்றி தன் பக்கம் திருப்பியவள், 

“என்னைய வருத்தல, நம்மளயும் வருத்தப் பட விட மாட்டேன்.” என்று ஆழ்ந்த குரலில் சொன்னவள், 

“உங்களால தான் நான் இப்படி பண்ணேன்.” 

‘என்னாலயா!!’ என்று கண்களால் கேட்டவனிடம்,

“ம்… நீங்க தான் காரணம். நீங்களும் உங்க மருமகளும் தான் உசுப்பி விட்டு, இதைச் செய்ய வச்சது” என்றவள் நேற்று நடந்த சம்பாசனைகளைக் கூறி, குற்றம் சுமத்த, கன்னம் பற்றியிருந்த விரல்களில் மென்மையாக இதழ் பதித்தான். 

கரத்தை உதறியவள், “இப்படிக் கண்ட இடத்துல முத்தம் குடுத்து குடுத்து தான் என்னை இதைச் செய்ய வச்சிருக்கீங்க.” என்று சிணுங்களாகச் சொல்ல, அவளின் தோள்ப்பட்டையில் இதழ்பதித்து, தன் நாடியையும் வைக்க, குறுந்தாடியின் குறுகுறுப்பில் நெளிந்தாள் பெண்.

“ஒரு வார்த்தை, நான் இதை பண்ணட்டுமான்னு எங்கிட்ட கேட்டிருக்கலாம் தன்யா.” என்று குறைபட,

“நான் தான் கேட்டேனே… நீங்க என்ன சொன்னீங்கன்னு நியாபகம் இருக்கா? இல்ல நான் நியாபகப்படுத்தவா!” என்றவள் கண்சிமிட்ட, அது அவனின் கோபத்தைக் கிளறியிருக்க வேண்டும். ஓரம் கட்டிய கார் வேகமெடுத்தது. 

அதிகம் கேள்வி கேட்டு, பெற்றவர்களின் செயல்களை, குணநலன்களைப் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளே வைத்துக் கொண்டு, அவளுக்கும் அவனுக்கும் தனிமை கிடைப்பது என்பது சற்று அரிதாகத்தான் இருந்தது. 

ஆனால் அந்தத் தனிமை இருவரும் தாம்பத்தியத்தில் இணை சேர போதுமானதாக இருந்தது. பல நேரங்களில் அந்தத் தனிமையை இருவரும் தயங்காது உண்டாக்கியும் கொண்டனர். 

தன்னை முழுமையாக வென்றவனிடம் தான், தன் மெய் பொருள் அனைத்தையும் ஒப்படைப்பாள் பெண். 

காதலின் உச்சபட்ச நிலையாக மனமொத்து இணை சேருவது என்பதை நம்பும் ரிதன்யாவிற்கு பத்ரியிடம் தன் பெண்மையை அள்ளித் தருவதில் தயக்கம் இல்லை. 

அவனும் அவளைத் தயங்க விடவில்லை.

ஆடவனின் கம்பீரமான ஆண்மை, பெண்ணவளின் நடுக்கத்தையும், வெட்கத்தையும் மெல்ல மெல்ல விலக்கி, தன்னுள் புதைத்துக் கொண்டது. 

அவனின் அணைப்பில் கட்டுண்டு கிடப்பதே சொர்க்கம் என்று எண்ண வைத்திருந்தான். மயக்கம், கிறக்கம், மோகம், தாபம் என அனைத்தும் தீர்க்க, கூடிக் களித்து ஒரு நிறைவான, ரகசியமானத் தாம்பத்தியம் அரங்கேறியது. 

ரகசியம் தான்… 

பணிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டல்லவா சந்தித்தனர். நடு நிசியில் உறக்கம் பிடிக்காது, பிள்ளைகளின் அருகில் இருப்பவள், அவர்கள் உறங்கியதும் அவனின் அறைக்குள் சென்று அவனின் மார்பில் முகம் புதைத்து தான் உறங்கவே செய்வாள். 

அதில் அலாதி சுகம் இருவருக்கும்.

காமமற்ற காதலாகக் கூட பல இரவுகள் நகரும்.

எந்த வகையிலும் அவளைக் காயப்படுத்தாது, “நீ ஓகே வா தன்யா… பெயினா பீல் பண்ணா சொல்லிடு.” என்று அனுமதி கேட்டு கேட்டு கொண்டாடியவனுக்கு, தன்னைக் கொடுத்து ஒரு ஆத்மார்த்தமான தாம்பத்தியத்தில் இணைந்து கணவன் மனைவியாக வாழத் தொடங்கியிருந்தனர். 

வாழ்வது மட்டுமல்ல, அவர்களைக் கணவன் மனைவியாகவே பார்த்தனர் பிள்ளைகளும்.

ஒன்றாக அமர்ந்து டிவி பார்க்கும் சமயங்களிலும், நால்வரும் சேர்ந்து உறங்கும் சமயங்களிலும் அதிதி, சரிகாவைத் தன் அத்தைக்கும் மாமனுக்கும் இடையில் அனுமதிப்பதில்லை. 

“ஒன்னும் உன் அம்மா பக்கத்துல இரு. இல்ல அப்பா பக்கம். யாராவது ஒருத்தர் பக்கத்துல தான் இடம் உனக்கு. ரெண்டு பேருக்கும் நடுவுலலாம் கிடையாது.” என்று சண்டை போட்டு துரத்திவிடுவாள். 

அதிதிக்குத் தெரியும் அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று. இருவரின் திருமணத்திற்கே அவள் தான் முதல் காரணம். அப்படியிருக்க திருமணத்தின் அர்த்தமும், அதன் மூலமாக வரும் உறவிற்கு இருக்கும் உரிமையும் தெரியாதா என்ன! அதுவும் இந்தக் காலத்து யுவதி அவள். 

ஆதலால் இருவருக்கும் இடையே தன்னாலான நெருக்கத்தைத் தந்து கொண்டே இருந்தாள்.

அருகருகே அமர்வது, கை பற்றிக் கொள்வது, மெல்லியதாக அணைப்பது, நெற்றியில் முத்தமிடுவது, இடையில்‌ கரம் கோர்த்துக் கொள்வது எனக் குழந்தைகள் விகல்பம் பார்க்காதவாறு நடந்து கொண்டனர். 

ஒன்றை அடைந்து விட்டால் அடுத்தது என்று எதிர்பார்ப்புகள் முளைத்துக் கொண்டே தானே செல்லும். எங்கும் தேங்கி நிற்பதல்லவே வாழ்க்கை. 

குழந்தை என்ற பேச்சுக்கு வந்து நின்றது‌. 

“இந்த வீட்டுக்கு ஒரே ஆண்வாரிசு அவன் தான். காலாகாலத்துல ஒரு குழந்தைய பெத்துக் குடுத்தேன்னா அது தழைக்கும்மா.” என்று சுதா சொல்ல, அப்பொழுது தான் நினைவு வந்தது குழந்தைத் தரிக்க கூடாது என்று மருத்துவச் சாதனத்தை உபயோகித்தது.

உடனே அதைப் பத்ரியிடம் சொல்ல, “நமக்கென்ன பிள்ளையா இல்ல. அதிதி சரிகான்னு ரெண்டு பேர் இருக்காங்க தன்யா. போதும். புதுசா எந்தக் குழந்தையும் நமக்கு அவசியமில்லை. நீ வச்சது வச்சதாவே இருக்கட்டும். செக் மட்டும் பண்ணிக்க.” என்றவனுக்குப் பிள்ளைகள் மீதிருக்கும் அன்பைப் பங்கு போட புதிதாக ஒரு ஜீவன் வருவதில் உடன்பாடில்லை.

அவன் சொல்வதும் சரியென்றது ஒரு மனம். விவரம் அறிந்த பிள்ளைகள் முன் வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிற்பதா! என்று நினைத்தவள் அந்தப் பேச்சை மறந்து போனாள்.

நாள்கள் உருண்டோடின.

மாமனும் மருமகளும் சேர்ந்து காரைப் பழுது நீக்கம் செய்து கொண்டிருந்தனர் அன்று.

காருக்கு அடியில் படுத்துக் கொண்டு, ஏதோ ஒன்றை  எடுத்துத் தரச் சொல்லி அதிதியிடம் கேட்க, அவளுக்கு இருக்கும் வலுவிற்கு, அதை நகர்த்தக் கூட முடியவில்லை. அவனே வெளியே வந்து எடுத்துக் கொண்டு சென்றான்.

வேலைப் பளுவால் கணுக்காலில் வலி உண்டாக, மருந்திட்டுக் கொண்டிருந்தாள் அதிதி.

“பாவம் மாமா நீங்க. ஒத்தையா கிடந்து அல்லாடுறிங்க.”

“வீட்டுல லேடீஸ் பாப்புலேஷன் அதிகமான இப்படித்தான். ஒத்தாசைக்குக் கூட ஆளு இருக்காது.” என்க, 

“உங்களுக்கு வயசாகிடுச்சிங்கிறத இப்படி சொல்றீங்களா?” என்று அவனைப் பார்த்து பலிப்புக் காட்டினாள் அதிதி. 

“ஒரு டூல தூக்கத் தெரியல, நீ வாய் பேசுற!” என்று சலித்துக் கொள்ள, 

“உடம்ப பாத்துக்கங்க மாமா… இந்த வீட்டுக்கே நீங்க ஒருத்தர் தான் ஆம்பள…” என்று கேலி செய்ய, ஏனோ மனம் கணத்தது ரிதன்யாவிற்கு. 

அவனுக்கு உதவியாக, துணையாக அவனின் உதிரத்தில் ஒரு பிள்ளை இருப்பதில் என்ன தவறு உள்ளது. அதை நீ அவனுக்குக் கொடுக்காது வஞ்சிக்கிறாய். உன் பிள்ளைக்கு மட்டுமே அவனைத் தகப்பனாக இருக்க வேண்டும் என்று சுயநலமாக யோசிக்கிறாய். அவனுக்கென ஒரு பிள்ளையைக் கூட நீ யோசிக்கவில்லை என்று மனம் இடிக்க, அவனின் மகவுக்கான முதல் அடியை எடுத்து வைக்கதான் இந்த மருத்துவமனை விஜயம். 

எட்டு மணியானது இருவரும் வீடு வந்து சேர.

“சாப்டீங்களாம்மா?” என்று கூடத்தில் அமர்ந்திருந்தவரை மகன் விசாரிக்க, 

“நாங்க முடிச்சிட்டோம்ப்பா… நீங்க?” என்றவருக்கு, ரிதன்யாவின் முகத்தில் இருந்த வாட்டம் உறுத்தியது.

என்னானது என்றார் அவர்.

“அவகிட்டயே கேளுங்க.” என்று விட்டு கோபமாக சோஃபாவில் அமர்ந்தாள். அவள் செய்து வைத்தக் காரியத்தில் அவனுக்கு உடன் பாடு இல்லை போலும். 

“அம்மா கூட சண்டை போட்டிங்களா?” என்று மிரட்டலுடன் கேட்டாள் சரிகா.

என்ன தான் அவனை அப்பா அப்பா என்று உருகி கட்டிக்கொண்டாலும், தாயின் முகம் வாடிவிட்டாள் போதும், “அம்மாவ பாத்துக்கிறேன்னு ப்ராமிஸ் பண்ணீங்கள.” என்று கேட்டு சண்டைக்கு வருவாள். 

ரிதன்யா மீது சிறுமி வைத்த பாசம் அது. 

“ஏய் பேரிக்கா… என்னை மட்டும் பேரிகார்ட்டு போட்டுத்  தடுத்துக் கேள்வி கேக்காம… எங்கம்மாட்டயும் கொஞ்சம் கேளு… எங்க போனான்னு.”

“எங்க போனிங்கம்மா?”

“ஹாஸ்பிட்டலுக்கு டா செல்லம்.”

“ஏன்ம்மா என்ன செய்து?” என்று கலக்கத்துடன் கேட்க, ரிதன்யா, உதவி செய் என்பது போல் கணவனைப் பார்த்தாள்.

அவனோ, ‘நீயாகத்தானே முடிவு செய்தாய். நீயே சொல். இப்படி ஒரு சங்கடம் வரும் என்று தானே வேண்டாம் என்றேன். சமாளி.’ என்பது போல் அறைக்குள் சென்று சத்தெனக் கதவடைத்தான்.

“எதுவும் பிரச்சனையாம்மா?” 

மகனின் வேகத்தைக் கண்டு சுதா கலவரமாக கேட்டார்.

“அது வந்து… அத்தை… நான்… நான்… டென் இயர்க்கு காப்பர்-டி போட்டிருந்தேன்… அதை ரிமூவ் பண்ணிட்டு வந்தேன்.” என்றவள் வெட்கம், கூச்சம் தயக்கம் என்று பல உணர்வுகளோடு சொல்ல, அனுபவசாலியான சுதாவிற்கு விளங்கி விட்டது, விரைவில் வீட்டில் சின்னக் கண்ணன் குரல் கேட்க ஏற்பாடுகள் நடக்கிறது என்று. 

எத்தனை நாள் ஆசை… பேரனோ! பேத்தியோ! எல்லாம் தன் மகனின் உதிரம் அல்லவா!

வேகவேகமாக பூஜை அறைக்குச் சென்று, இறைவனை வணங்கியவர், திருநீற்றைப் பூசி விட்டு, 

“புருஷன் பொண்டாட்டியா பிள்ளைகள் குட்டிங்களோட நீடூழி வாழணும்மா நீங்க ரெண்டு பேரும்.” என்று கன்னம் தடவி கண்கலங்கி வாழ்த்தினார். அவரின் காலில் பட்டென்று விழுந்து விட, அவளைத் தூக்கியவரின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

ரிதன்யா சொன்னதில் அர்த்தம் புரியாது நின்ற அதிதிக்கு, தன் அம்மம்மாவின் வாழ்த்தில் என்ன விளங்கியதோ…  

“அத்தை உங்க உடம்பு சரியாகுற வர, மாமா ரூம்ல படுத்துக்கங்க. நான் சரிகாவ பாத்துக்கிறேன்.” என்றவள்,

“அம்மாக்குச் சரியானதும் நம்ம கூட வந்து படுப்பாங்க. இப்ப வா. மைனி கதை சொல்றேன். கட்டிப் பிடிச்சு தூங்கு.” என்று தன்னுடன் உறங்கும் படி அழைத்துச் சென்றாள்.

சுதாவும் சிறுமிகளுடன் முடங்கிக் கொள்ள, ஒரு வித நடுக்கத்துடன் பத்ரியின் அறைக்குச் சென்றாள்.

“பத்ரி…” என்று வாசலுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனை விளிக்க, திரும்பவில்லை அவன்.  

அவனிடம் அசைவு இல்லை என்பதை உணர்ந்தவள், வேகமாகச் சென்று அவனின் வயிற்றோடு சேர்த்து அணைத்து கொண்டு முதுகில் முகம் புதைத்தாள். 

“எனக்கு வேணும் பத்ரி… உங்க குழந்தைய என்னோட கருவுல தூக்கிச் சுமக்குற வாய்ப்பு எனக்கு வேணும். அதை வேண்டாம்னு மட்டும் சொல்லிடாதீங்க. ப்ளீஸ்…” என்றாள் கண்ணீருடன். 

அவளின் கடந்த கால வாழ்க்கையில் விக்ரமின் உயிரணுவிற்கு தன் கருவறையில் இடம் தரமாட்டேன் என்றவள், இன்று பத்ரியின் குழந்தையைத் தூக்கிச் சுமக்க வேண்டிய இறைஞ்சினாள்.

“ப்ராமிஸ்ஸா சொல்றேன் பத்ரி. நான் எந்தக் குழந்தையையும் பாகுபாடு பாக்க மாட்டேன். அதிதி, சரிகா, குட்டி பத்ரி எல்லாருமே நம்ம அன்போட பரிசு… நம்ம காதலோட அடையாளம். நல்லபடியா பாத்துப்பேன்… என்னை நம்புங்….” என்போதே அவளின் கரம் பற்றி தன் முன் கொண்டு வந்தவன்,

“உன்னை நம்பாம வேற யாரடி நம்பணும்.” என்று சொல்லி அணைத்தவன், 

“அதென்ன குட்டி பத்ரி… இன்னொரு சரிகாவும் வந்தா கசக்குமா…”

“ஐயோ… ஒரு சரிகாவையே வீடு தாங்க மாட்டேங்கிது. இதுல இன்னொன்னா…” என்று விழி விரிக்க,‌

அவளின் முகம் நோக்கிக் குனிந்தவன், “தாங்குமா தாங்காதான்னு நான் செக் பண்ணிச் சொல்றேன்.” என்று இதழ்களைச் சோதித்தான்.

குனிந்து வளைந்து கொடுத்து, இதழமுதம் பருகியவன், முதுகுத் தண்டை நிமிர்த்தி, அவளைத் தன் உயரத்திற்கு உயர்த்தி கைகளில் அள்ளிக் கொண்டான் கலவியல் கானம் இசைக்க…  

அவர்கள் குடும்பமெனும் வேணு(புல்லாங்குழல்) இசைக்க புது கானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் முழுமூச்சாய் இறங்கி விட்டனர் போலும்.

இதோ குட்டி பத்ரியோ சரிகாவோ… எதுவோ ஒன்று பெண்ணவளின் கர்ப்பப்பையை நிறைத்து வளர்ந்து கொண்டிருக்கிறது. 

ஐந்து மாதம் வயிற்றில் ஏறிய சந்தோஷ சுமையைத் தூக்கிக் கொண்டு காரில் ஏறினாள் ரிதன்யா.

“வெள்ளிப் காப்பு எடுத்து வச்சியாம்மா…” என்றார் சுதா.

“ம்… எடுத்தாச்சி அத்தை. ஏய் வாலு… ஒழுங்கா உக்கார மாட்ட…” என்று மகளின் தலையில் தட்ட, முகம் திரும்பினாள் சரிகா.

“எத்தனை பீசா வாங்கி குடுக்கணும்? உன்னை சமாதானம் செய்ய.” என்றாள் அதிதி.

“நான் பீசா சாப்பிட மாட்டேன்.”

ரிது, “ஏண்டி… திருந்திட்டியா?” 

“நோ… நோ… அடுத்த வாரம் ஸ்டேட் லெவல் டோர்னமெண்ட் இருக்கு. அதுல வின் பண்ணணும்னா உடம்ப ஃபிட்டா வச்சுக்கணும். பீசா சாப்டா நானும் அப்பாவும் ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ராவா க்ரவுண்டுல ஓட வேண்டிய வரும். நான் ஓகே. அப்பா பாவம் இல்லயா.” என்றாள்.

மகள் வாங்கிய மெடல்களின் ஒன்றை காரில் தொங்கவிட்டிருந்தான் பத்ரி. அதைப் பெருமையுடன் வருடியவளின் பார்வை, லைட் க்ரே பேண்ட் மற்றும் அரக்கு நிற சட்டையில் கைகளை மடித்து விட்டபடி வந்தவனிடம் ஆசையுடன் நிலை குத்தி நின்றது. 

அந்தப் பார்வை சுருதியின் மகனின் பெயர் சூட்டு விழா முடிந்து வீடு வந்து சேரும் வரை மாறவே இல்லை. 

இனியும் மாறாது…

சுருதிக்குத் தாய் வீட்டுச் சொந்தம் ரிதன்யா தானே… ஆதலால் பலத்த கவனிப்புடன் வரவேற்க, தம்பதி சகிதமாக வந்திறங்கிய ரிதன்யாவைக் கண்டு சுருதியின் விழிகள் நிறைந்து போயின. கணவனின் தோளில் சாய்ந்து, அவனது சட்டையை ஈரம் செய்து முடித்து விட்டு, ஓடிச் சென்று கட்டி அணைத்து வரவேற்றாள். 

சரிகாவின் சேட்டைகளால் விழா, பேச்சும் சிரிப்புமாக கானம் இசைப்பது போல் இருந்தது.

நாம் மங்கல் கானம் பாடி விடைபெறுவோம்… 

6 thoughts on “கானம் 31(Final)

  • மனசு நெகிழ்து கண்ணு நிறைச்சு நிக்குது
    அருமையான கதை
    வாழ்த்துக்கள் authore

    Reply
    • Venu KanamathuPost author

      நன்றி சிஸ் 🥰🥰

      Reply
  • Feel good wonderful story. All the best

    Reply
    • Venu KanamathuPost author

      நன்றி சகி 😊

      Reply
  • அருமையான கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    Reply
    • Venu KanamathuPost author

      நன்றி சகி 😊🙏

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!