எந்த சமாதான வார்த்தைகளும் தணிக்காத கால்டனை, கயலிடமிருந்து வந்த ஒரே ஒரு குறுஞ்செய்தி குளிரச்செய்துவிட்டது. சந்தோஷத்தின் குன்றேறி சிகரம் தொட்டார் கால்டன். கயலின் மனது மீண்டும் மாறுவதற்குள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிட வேண்டுமென்று, ‘மாலை வீட்டுக்கு வரும்படி’ பதில் மெசேஜ் அனுப்பினார்.
அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று அவரது பிஸினஸ் மூளை கச்சிதமாக யோசித்துத் திட்டமொன்றினை வகுத்தது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு கயல், தனக்கு இரட்டை ஷிப்ட் என்றும் மாலை வீட்டுக்கு வர இயலாது என்றும், மறுநாள் காலை 8 மணிக்கு மேல் தான் வர இயலும் என்றும் பதில் அனுப்பினாள். சரி என்று சொன்ன கால்டன், சற்று ஏமாற்றமடைந்தார். இருப்பினும் மறுநாள் காலை சந்திக்கப்போவதை எண்ணி சந்துஷ்டி அடைந்தார்.
அலுவலகத்தில், அமைதியடைந்த கால்டனைக் கண்டதும் தான் நிம்மதியடைந்தனர் அனைவரும். இரவு 8 மணிக்குக் காரில் வீடுக்குக் கிளம்பிச் சென்றுகொண்டிருந்த கால்டன், எதேச்சையாக கயல் பணிபுரியும் பல்கலை மருத்துவமனைக்கு அருகே சாலையில் கயலையும் அலியையும் ஒன்றாகப் பார்த்தார். இருவரும் இரவு உணவு முடித்துச் சென்றுகொண்டிருந்தனர்.
அதனைப் பார்த்த கால்டனுக்குக் கோபம், பொறாமை, கடுப்பு, தன்னுடைமை அனைத்தும் ஒருசேர படமெடுத்து உயர்ந்தது. தன்னைச் சந்திக்க முடியாதென மறுத்துவிட்டு வேறு ஒருவருடன் செல்கிறாளே என்று குழந்தைத்தனமாக நினைத்தார் புத்திசாலியான கால்டன். சிறிதும் யோசனையின்றி காரை பார்க் செய்துவிட்டு கயலைத் தேடினார். கண்ணில் பட்டாள் கயல். கயலும் அலியும் மீண்டும் மருத்துவமனைக்குள் நடந்து சென்று கொண்டிருந்தனர். வேக நடையில் அணுகி “கயல்..” என்று சத்தமாக அழைத்தார்.
திரும்பிய கயல் ஒரு நிமிடம் அசைவற்றுப் போனாள். கால்டனை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“கொஞ்சம் பேசலாமா?” என்று கால்டன் கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியாமல் அலியைப் பார்த்தாள்.
2 ஆண்டுகளாக என்றுமே கயலை இப்படி ஒரு ஆண் அணுகியதில்லை ஆதலால் அலிக்கு அது வித்தியாசமாகப் பட்டது. ஆனால் கயலிடம் எதுவும் கேட்டுக்கொள்ளாமல் “பேசனும்னா போ.. நா பாத்துக்கறேன். ஆனா சீக்கிரம் வந்துடு” என்று சொல்லிவிட்டுச் சென்றார் அலி. கயலுக்கு எரிச்சலாய் வந்தது. இருப்பினும் காட்டிக்கொள்ள முடியாதே..
“சொல்லுங்க”
“பக்கத்துல ஒரு காஃபி ஷாப் இருக்கு. அங்க போலாமா?”
“நா ஐ.சி.யுவில டியூட்டியில இருக்கேன். ஆற அமர காஃபி சாப்பிட நேரமில்ல எனக்கு. என்ன விஷயம்னு சொல்லுங்க” சற்று கண்டிப்பாய்ச் சொன்னாள் கயல்.
கால்டன் பிறந்தது முதல் அவரிடம் இந்த தொணியில் இந்த பாணியில் யாருமே பேசியது இல்லை. ஆச்சரியத்தில் கோபம் வந்தது அவருக்கு.
“ஓ.. அவரோட வெளிய போயிட்டு வர நேரமிருக்கு, என்னோட வர நேரமில்லையா?”
“இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல எனக்கு. நாளைக்கு 8.30க்கு உங்க வீட்டுல இருப்பேன். குட் நைட்” என்று கத்தி வீசினாற்போல் சொல்லிவிட்டு மருத்துவமனை நோக்கி நடந்தாள் கயல்.
முன் பின் தெரியாத பெண்ணிடம் இப்படி பேசுகிறாரே, தோற்றத்துக்கும் நடத்தைக்கும் சம்பந்தமே இல்லையே என்று பலவாறாக சிந்தித்துக்கொண்டே ஐ.சி.யூவை அடைந்தாள்.
தன்னைத் துச்சமென நினைத்துப் பேசிவிட்ட கயலின் தைரியம், மனப்பான்மை கண்டு கால்டனுக்கு ஆச்சரியமும் கடுப்பும் ஒருங்கே ஏற்பட்டது. உண்மையில் கயலின் திமிர், கால்டன் கேட்டதும் சுள்ளென்று அவள் முகத்தில் ஏறிய கோபம், அவள் மூக்கறுத்த விதம், அவளின் கயல் விழிகளில் மின்னிய நெருப்பு அனைத்தும் கால்டனை உள்ளுக்குள் ஒரு உலுக்கு உலுக்கின. கால்டனும் ஒரு பெண்ணிடம் இப்படி அறிவுகெட்டத்தனமாக நடந்துகொண்டதில்லை. காதலை விடவும் ஒரு அறிவுகெட்டத்தனம் இருக்கிறதா என்ன!! கயல் மறையும் வரை அவளையே பார்த்துகொண்டு இருந்துவிட்டு, அவள் பார்வையிலிருந்து மறைந்ததும் காரில் ஏறி வீட்டுக்குப் போனார் கால்டன்.