1.7 எனக்கு எல்லாமே பிஸினெஸ் தான்
1.8 மறுத்துவிட்டால் முடிந்துவிடுமா?
காலை மருத்துவமனையில் வார்டு சுற்றுகளை முடித்துவிட்டுத் தன் அறையில் வந்து அமர்ந்தாள் கயல். உடனே காலை வணக்கம் சொல்லிக்கொண்டு அலி வந்து தன்னுடைய ஒரு பேஷண்டின் கேஸ் ஷீட்டைக் கொடுத்து நேரமிருக்கும் போது பார்க்குமாறு சொன்னார். இது அவர்களுக்கிடையே அடிக்கடி நடப்பதுண்டு. இருவருமே திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆதலால் ஒருவருக்கொருவர் அடிக்கடி கருத்து பரிமாரிக்கொள்வர்.
“பணம் ஏற்பாடு பண்ணிட்டியா?”
“இல்ல. வர்க் அவுட் ஆகல்ல”
“அப்பா எப்படி இருக்காரு?”
“அப்படியே தான்..”
வாசகத்தை முடிக்கும் முன் இந்தியாவிலிருந்து அழைப்பு வந்தது. இந்திய நேரத்தில் இரவு 10 மணி. வழக்கமாக இந்த நேரத்தில் அழைப்பு வராது என்பதால் முகம் முழுக்க பதட்டம் பரவியது கயலுக்கு. எடுத்தாள். அதிர்ச்சி ஆனாள். சரி என்று அழைப்பைத் துண்டித்து மெயிலைத் திறந்தாள். அலியும் அதைப் பார்த்து உடனே பணம் ஏற்பாடு செய்தாக வேண்டும் என்றார். புரிந்ததற்கு அறிகுறியாய்த் தலையசைத்தாள் கயல்.
“தாமதப்படுத்திட்டேனா அலி?!..” குற்ற உணர்ச்சியோடு கண்கள் கலங்க தொண்டை அடைக்கக் கேட்டாள்.
“ஹே.. உனக்கு தெரியாதது இல்ல. உங்க அப்பாவுக்கு வந்துருக்கற நோய்க்குக் கொஞ்சம் கூட தாமதிக்கக் கூடாது. 1 வாரத்துக்குள்ளையே நுரையீரலும் பாதிக்கப்பட ஆரம்பிச்சிடுச்சு பாத்தியா. எவ்வளவு சீக்கிரமோ அவ்வளவு நல்லது”
“ம்..”
“சரி. அந்த முகம் பெராலிஸிஸ் பேஷண்டுக்கு சர்ஜரி பண்ணப்போறேன். பாக்க வரியா?”
“இல்ல அலி.. சாரி”
“பரவாயில்ல.. அப்பறம் பாக்கலாம்” விடைபெற்றார் அலி.
என்ன செய்வதென்று தெரியாமல் கைகளைப் பிசைந்தாள் கயல்.
அவளின் அப்பா மிக மிக அரிதான நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஒரு வாரம் முன்பு தான் நோய் அறிகுறிகள் தென்பட்டன. உடனே ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்து மிக அடிப்படையான சாதாரண சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. உடனடியாக இந்நோய்க்கான அதி தீவிர சிகிச்சைகள் துவங்கப்பட வேண்டும் என்பதே நிலைமை. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் அவரை அதிக பாதிப்புகளுக்கு ஆளாக்கும். ஆனால் மொத்த சிகிச்சைக்கும் தோராயமாக சில கோடி ரூபாய்கள் தேவைப்படுகிறது.
கயல் மிக மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். இவ்வளவு பெரிய தொகையினை உடனடியாக ஏற்பாடு செய்ய எந்த முகாந்திரங்களும் இல்லவே இல்லை அவளுக்கு. அமெரிக்காவில் படிக்க மட்டும் தான் உதவித்தொகை. ஸ்டைஃபண்டாக மாதாமாதம் சில டாலர்கள் அளித்தார்கள். அவ்வளவு தான். இப்போது தான் சர்ஜனாக அதே பல்கலையின் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள். அந்த வேலையும் தற்காலிகமானது தான். உதவித்தொகையுடன் படித்தவர்கள் படிப்பு முடித்தவுடன் 2 ஆண்டுகள் அங்கே பணிபுரிந்தாக வேண்டும் என்ற உடன்படிக்கை இருக்கிறது. அவளே அந்த நிர்பந்தத்தில் தான் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள். இல்லாவிட்டால் அப்பாவுக்கு உடல்நிலை குன்றியதும் இந்தியாவுக்குப் பறந்திருக்க மாட்டாளா! ஒப்பந்தப்படி 2 ஆண்டுகள் அந்த பல்கலைக்கழக மருத்துவமனையில் பணி செய்யாமல் போக நினைத்தால் மிகப்பெரும் தொகையினை அபராதமாகக் கட்டிவிட்டுத்தான் போக முடியும். அதுவும் அவளால் முடியாது. அங்கே சில மாதங்களாகச் சம்பாதித்த தொகையை வைத்து ஆரம்ப கட்ட சிகிச்சைகளைத் துவங்கிவிட்டாள். அதனால் அவளின் நிதி நிலைமை நெருக்கடியில் தான் உள்ளது. கோடி ரூபாய்க்கு அவள் எங்கே போவாள்.??!!
தன் அலைபேசியை ஆன் செய்தாள். அப்பாவுடன் சிரித்துக்கொண்டு அவள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வால்பேப்பராக இருந்தது. சிறிதும் யோசிக்காமல் கால்டனுக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“உங்கள் சலுகையை ஏற்றுக்கொள்கிறேன். அடுத்த நடைமுறைகளுக்கு நான் தயார்.” என்று.
நீண்ட பெருமூச்சு விட்டாள். “பெரிய தப்பு பண்றேன் கடவுளே.! எனக்கு வேற வழி தெரியல்ல” என்று நினைத்தாள். கண்ணீர் ஆறாய் வழிந்தது.
அன்று கால்டன் அலுவலகத்தில் எரிமலையாய் வெடித்துக்கொண்டிருந்தார். அனைவரையும் கடிந்தார். கேத்தரின் நிலைமை பரிதாபமாய் இருந்தது. அணுகவே நடுங்கிக்கொண்டிருந்தாள்.
இவற்றைக் கண்டு சகிக்க முடியாமல் தெரெக் கால்டனுக்கு இடித்துரைத்தார்.
“உன்னை நீயே திரட்டிக்கிட்டு கட்டுப்பாட்டுக்கு வா கால்டன்” என்று அறிவுறுத்தினார்.
அனைத்திற்கும் கயல் மறுத்துவிட்டுப் போனது தான் காரணம். கால்டனால் அந்த நிராகரிப்பினை ஏற்க முடியவில்லை. அதை எப்படிக் கையாளுவதென்று தெரியவில்லை. எப்போதும் தடுமாறாத கால்டன் நிதானம் இழந்து தவித்தார்.
“உன்னப்போல ஒரு பெரிய பணக்காரனுக்கு சரோகேட் கிடைக்கறது ஒன்னும் அமெரிக்காவில பெரிய கஷ்டம் இல்லையே கால்டன். நீ எதிர்பார்க்கற மாதிரி கிடைப்பாங்க. இவங்க இல்லைன்னா என்ன? விடு” என்று தெரெக் சமாதானம் சொன்னார்.
ஆனால் இப்போது கால்டனின் மனம் தேடுவது வெறும் வாடகைத்தாயை அல்ல. கயலை.. காதலை.. அவரையும் அறியாமல் கயலுக்குள் முழுவதுமாய் அவர் விழுந்துவிட்டார். அவர் அறிவு இதை ஏற்க மறுத்தாலும், ஈகோ தடுத்தாலும், இதுவே நிஜம்.
கயலும் இனி சந்திக்கப்போவதில்லை என்று தான் நினைத்தாள். ஆனால் காதல்,… மறுத்துவிட்டால் முடிந்துவிடுமா என்ன!!
1.9 காதலெனும் அறிவுகெட்டத்தனம்
-வித்யாகுரு