4.19- பிரிவும் வலியும்
“அம்மாடி.. அப்பா பேசுறேன் மா”
இந்த வாசகத்தைக் கேட்டு எத்தனை நாட்கள் ஆகிவிட்டது என்று நினைத்த கயலால் அழுகையை அடக்கவே முடியவில்லை. கயலின் அப்பாவுக்கு முகத்தில் ஒரு பக்கம் லேசான பெராலிஸில் ஏற்பட்டிருந்தது. GBS நோயின் விளைவுகளுள் ஒன்று அது. ஒரு பக்கம் லேசாகக் கோணிய வாயால் சிரமப்பட்டாலும் அவர் விழிகளில் அளவிடமுடியாத பாசத்தைக் காட்டி கயலிடம் “அம்மாடி.. அப்பா பேசுறேன் மா” என்று வாயசைத்ததைக் கண்டதும் எவரால் கண்ணீருக்கு அணை கட்ட முடியும்?
கயல் குலுங்கிக் குலுங்கி அழத்துவங்கினாள். மிகவும் உணர்ச்சிவசப்பட்டாள்.
அவரிடம் அப்படி அழக் கூடாதென்று மருத்துவர் என்கிற முறையில் அவள் நன்கு அறிவாள் தான்! மருத்துவராய் இருந்தாலும் அவள் முதலில் மகள் அல்லவா! அழுகையை அடக்கிவைக்க முடியவில்லை.
கையில் ஃபோனைப் பிடித்துக்கொண்டு அவள் அப்படி அழுததைப் பார்த்த கால்டனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஓடிச்சென்று அவள் பக்கம் நின்று திரையைப் பார்த்தார். அவளின் அப்பா என்று எளிதாய்க் கண்டுபிடித்துவிட்டார்.
அவள் அழுவதன் காரணமும் அவருக்கு நன்றாய் புரிந்தது. அவளின் விரல் இடுக்குகளைத் தன் விரல்களால் நிரப்பி இறுக்கிப் பிடித்தார்.
கயலுக்கு தைரியம் சொன்னது அந்த கை கோர்ப்பு. சட்டென்று சுதாரித்தாள். தான் ஒரு மருத்துவர் என்பதும் நோயுற்றிருப்பவர் முன் இப்படி அழுது அவர்களையும் கலவரப்படுத்தக் கூடாது என்பதும் நினைவுக்கு வந்தது.
கண்ணீரினைத் துடைத்துக்கொண்டு “அப்பா..” என்று பாசம் ஒழுக எப்போதும் போல் அழைத்தாள்.
கயலின் தந்தை புகழேந்தி..
தமிழாசிரியராய் இருந்து பணி ஓய்வு பெற்றவர். நடுத்தர குடும்பம் தான். அவரின் மனையாள், கயலின் அம்மா 14 வருட இல்வாழ்வை இன்பமாக்கிய பின்பு மூளை நோயினால் மறைந்து போனார். அவர் மறைந்த பின்பு அவர் வாழ்ந்துவிட்டுப் போன அந்த 14 ஆண்டுகளின் நினைவுகளும், அவர்களின் காதலின் சாட்சியான கயலுமே புகழேந்திக்குப் போதுமானதாய் இருந்தது. மகளை மருத்துவராக்கும் முனைப்புடன் வாழ்ந்து அதைச் சாதித்தும் காட்டியவர். கயலை தைரியமான பெண்ணாக, ஆணுக்கு இணையாக, தற்காப்புக் கலைகள் சொல்லிக் கொடுத்து துணிச்சல்காரியாக வளர்த்தவர். அதே நேரம் தமிழர் பண்பாட்டுக் கூறுகளையும் இலக்கியங்கள் வழி கற்றுக்கொடுக்கத் தவறவில்லை அவர். தெளிவாகச் சிந்திக்கப் பயிற்சி அளிப்பதே ஒரு பெண்ணுக்குப் பெற்றோர் அளிக்கும் ஆகச் சிறந்த வளர்ப்பு என்ற கருத்தியல் கொண்டவர்.
கயலின் முதல் ஆணுலகம் அவர் தான். அப்பா என்று மட்டும் இல்லாமல் அவளின் அம்மா, சகோதரன், சகோதரி, நண்பன், குறும்புக்காரக் கூட்டாளி, உறவுகள், ஆசிரியர், வழிகாட்டி, கடவுள் என எல்லாமாகவும் இருந்து அவளை இங்கனம் வளர்த்தெடுத்திருக்கும் ஒரு வெற்றிகரமான தந்தை, திரு.புகழேந்தி!
அவரை அந்த நிலையில் பார்ப்பது சங்கடமாக இருந்தாலும் அவர் ஒரு திடமான போராளி என்பதைக் கயல் அறிவாள். அத்தனை சீக்கிரத்தில் அவர் உயிரை விட்டுக்கொடுத்திட மாட்டார் என்ற நம்பிக்கை தான் அவளை இத்தனை தூரம் போராட வைத்தது.
அவள் போராட்டங்களின் பலனை அவரின் வாயசைப்பில் அடைந்துவிட்டாள் கயல். அளவில்லா ஆனந்தம் கொண்டாள்.
அவரிடம் உற்சாகமூட்டும் விதத்தில் பேசினாள். எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும் என்று உறுதி சொன்னாள். அவரால் நீண்ட நேரம் பேச இயலவில்லை. லீலாவிடம் இணைப்பினைத் துண்டித்துவிடச் சொன்னாள்.
அதற்காய் லீலா அலைபேசியினைத் திருப்பும் முன், அந்த கோணலான இதழ்களைக் கஷ்டப்பட்டு குவித்து கயலுக்கு முத்தமொன்றினை அளித்தார் அப்பா! கண்ணீர் மீண்டும் வழிய கயலும் முத்தமிட்டாள். கால் கட் ஆனது.
அவளின் கைகோர்த்து நின்றுகொண்டே இருந்த கால்டனும் அழுது நனைந்திருந்த அவள் கன்னத்தில் அழுந்த முத்தமொன்றினைப் பதித்தார். தமிழில் நடைபெற்ற அந்த மொத்த உரையாடல்களும் அவருக்குப் புரிந்துகொள்ள கஷ்டமாயில்லை. உணர்வுகளுக்கு மொழி ஏது! அவர் கண்களை ஏறெடுத்துப் பார்த்த கயல் முதன்முறையாய் அவரை இறுகக் கட்டியணைத்து “ஓ..” வென்று அழுதாள்.
கால்டன் அன்றளவும் இத்தகைய உணர்ச்சிப் பெருக்கினை அனுபவித்ததே இல்லை. அழும் தன்னவளை ஆரத் தழுவி ஆறுதலாய்த் தடவிக்கொடுத்தார். அவளோடு மனதாலும் உடலாலும் உணர்வாலும் உயிராலும் கலந்துவிட்டது போல் இருந்தது அவருக்கு! அவளின் உணர்வுக் கிணற்றுக்குள் குதித்து ஆழம் கண்டது போல் இருந்தது அவருக்கு!
கயல் தன் தந்தைக்காக மட்டும் அழவில்லை. குழந்தைக்காகவும் தான் அழுதாள். கால்டனை ஏமாற்றிவிட்ட குற்ற உணர்விலும் தான் அழுதாள். 2 நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டு விலகினாள். எதுவும் பேசாமல் தோட்டத்துக்குப் போய்விட்டாள்.
கால்டனுக்கு அவளைப் பின்தொடர்ந்து போகவேண்டுமென்று தான் இருந்தது. ஆனால் கட்டுப்படுத்திக்கொண்டு தன் அறைக்குப் போய்விட்டார். அவள் அப்போது தனிமையை விரும்புவாளென்று புரிந்தது அவருக்கு. தன் அறைக்குச் சென்று வைத்த கண் வாங்காமல் அவளையே தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
இரவானது.. மறுநாள் அவளுக்கு காலை டூட்டி! 1 வாரத்துக்குப் பின்பு அவளை டின்னர் சாப்பிட அழைத்தார். அவளும் மறுக்கவில்லை!
மெளனமாகவே இருவரும் உணவருந்தினர். ஆனால் இடையிடையே பார்வைகள் மட்டும் இடம் மாறத் தவறவில்லை. சாப்பிட்டு முடித்ததும் கயலே பேச்சை ஆரம்பித்தாள்!
“சாரி..”
“எதுக்கு!!?”
“நான் நிஜமாவே உங்களுக்கு உதவத்தான் நினைச்சேன். இப்படி ஆகுமின்னு எதிர்பார்க்கல்ல. இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்! என் தப்பு தான்!”
“இது ஒரு விபத்து.. உன் மேல எதுக்கு பழி போட்டுக்குற? நீ எவ்வளவு அக்கறையா இருந்தன்னு எனக்கு தெரியாதா? நாந்தான் உன்கிட்ட சாரி கேக்கனும். உன்னைத் தேவையில்லாம இப்படி இழுத்து விட்டுட்டேன்.”
“நீங்க இழுத்து விடல்லையே! நான் தானே பணம் வாங்கிக்கிட்டு ஒத்துக்கிட்டேன்! அப்பா கொஞ்சம் நல்லா ஆகிட்டாரு! ஆனா நீங்க நினைச்சது இப்படி பாதியிலையே போய்டுமின்னு நான் எதிர்பார்க்கவே இல்ல..”
“அழுதுறாத ப்ளீஸ்.. இதுக்கு மேல நீ அழுறத பாக்க முடியாது.”
“அழுது ஓஞ்சிட்டேன். உங்க கிட்ட என்ன சொல்லி மன்னிப்பு கேக்குறதுன்னே தெரியல்ல எனக்கு!”
“என்ன மன்னிப்புன்னெல்லாம் பேசுற? விடு! பரவாயில்ல.. இது விஷயமா இனி பேசாத நினைக்காத.. கடந்து வந்திடலாம்”
“சுலபம் இல்ல எனக்கு அது!”
“உன் அப்பா கொஞ்சம் நல்லா ஆகிட்டாரு. அதுவே பெரிய சந்தோஷம் எனக்கு!”
“குழந்தை போய் அப்பா கிடைச்சிருக்காரு. ஒரு பக்கம் சந்தோஷம். இன்னொரு பக்கம் ரொம்ப வலிக்கிது”
“அந்த பேச்சை விடுன்னு சொன்னேன்ல..”
“சரி.. நான் எப்ப கிளம்பனுமின்னு சொன்னிங்கன்னா… ஏற்பாடு பண்ணுவேன்”
“எங்க கிளம்பப்போற?”
“2 ஆப்ஷன் இருக்கு. முன்னாடி இருந்த வீடு. அவங்க இன்னும் யாருக்கும் வாடகைக்கு விடல்ல. இல்லைன்னா ஹாஸ்பிட்டல் குடியிருப்பு. நாளைக்குத் தான் விசாரிக்கனும்.”
அதிர்ச்சியாய் அவளை நிலைத்துப் பார்த்தார் கால்டன். நிலநடுக்கம் ஏற்பட்டது போல் இருந்தது அவருக்கு.
அவள் தன்னைப் பிரிந்து போவதைப் பற்றித்தான் பேசுகிறாளென்று புரிந்ததும் கண்கள் கலங்கிப்போயின.
“யூ மீன்.. இந்த வீட்டுல இனி இருக்கப்போறதில்லன்னு சொல்றியா!”
“ம்..”
“ஏன்?”
“குழந்தை பிறந்து நம்ம காண்ட்ராக்ட் பீரியட் 2 வருஷம் வரை இங்க இருக்க சொன்னிங்க. ஆனா அது நடக்கல்ல.. இனி இங்க நான் இருந்தா அது சரி இல்ல. எப்ப போகனுமின்னு சொன்னிங்கன்னா கிளம்பிடுவேன்”
கால்டன் மிகுந்த கோபமானார். ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளாமல் “உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.
இதைச் சொன்னால் கால்டன் தன் காதலைப் பற்றி ஏதேனும் பேசுவார், தெளிவாய் அவரிடம் கலந்தாலோசித்து நல்லதொரு முடிவெடுக்கலாம் என்று எதிர்பார்த்த கயலுக்கு அவர் அப்படி உன் இஷ்டம் என்று சொல்லி எழுந்து போனதும் ஏமாற்றமானது.
குழந்தையை இழந்ததால் தன் மேல் கோபமோ வெறுப்போ ஏற்பட்டிருக்கலாம் என்று அவளாகவே நினைத்துக்கொண்டாள்.
ஆரம்பத்தில் பயந்தது போல் அவளுக்குக் கால்டனைப் பிரிவது பயங்கரமாய் வலித்தது. மனதளவில் உடைந்து போனாள். “போகாதே” என்று ஒரு வார்த்தை சொல்லமாட்டாரா என்று காத்திருந்தாள். ஆனால் மறுநாள் அவளை மருத்துவமனையில் இறக்கிவிட்டுக் கால்டன் எதுவுமே பேசாமல் அலுவலகமும் போய்விட்டார். காதலின் பிரிவு அவளுக்குத் தீராத வலியைக் கொடுத்தது.
-வித்யாகுரு