சலசலக்கும் சொந்தங்கள்
அத்தியாயம் 14
பேசி முடிச்சுட்டோம்னு சொல்லவும், எனக்குள்ள ஏமாற்றம், இருந்தாலும் ஏத்துகதான செய்யணும், ஆனா ஒரு விஷயம் ரொம்ப பயமாவும் இருந்துச்சு, ஏன்னா உன்ன முதல்முறையா பார்த்தப்பவே ஒரு ஃபீல் வந்துச்சு, நான் ஜென்சிய பல வருஷமா பார்க்குறேன் எந்த ஃபீலும் வந்ததில்ல. அப்படியிருக்கப்ப எங்க கல்யாண வாழ்க்கை என்னவாகும், கடமைக்காக இருக்குமோனு தோண ஆரம்பிக்கவும் நெஞ்சுல ஒரு பாரம் சொல்லாம கொள்ளாமா வந்து உட்கார்ந்துக்கிச்சு.
அவன் இவ்வாறு கூறவும் ஏதோ அவன் இப்ப வருத்தப்படுகிற மாதிரி அவள் அவன் கையை இறுக்கி பிடித்தாள். புன்னகையை அவளுக்கு தந்து, நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள் வந்தேன். அதுக்கு பிறகு என்ன நடந்ததுனு தான் ஏற்கனவே சொல்லிட்டேனே.
தற்போது நிம்மி, “உங்களுக்கு பொண்ணுனு என்னை எப்படி செலக்ட் பண்ணினாங்கனு சொல்லவே இல்ல”..
பீட்டர், “அதுவா, ஜென்சி விஷயம் தெரிஞ்சதும், உன்னோட நினைப்புதான் எனக்கு, என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப, உண்மையில தோணியது- நான், தாத்தா அப்பாயிட்ட பேசி, உங்க வீட்ல பேச சொல்லலாம்னு, ஆனா சமாதானம் பேச உங்க வீட்டுக்கு போகலாம்னு சொல்லவும், சரி அங்க போயி சூழ்நிலைய தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சுயிருந்தேன்.
கூடவே கல்யாணம் நின்னா இந்த படத்துல வர மாதிரி முறைபொண்ண கட்டிக் கொடுத்துற மாட்டாங்களானு ஒரு எண்ணம், அதுக்கு உங்க வீட்ல, உங்க அப்பா அம்மா முன்னால கல்யாணம் நிக்கணும்னு, சுந்தர்-ஜென்சி கல்யாணம் உங்க வீட்டுக்கு வரப்ப நடக்குறது போல அரேஞ் செய்து கொடுத்தேன்.
இப்ப அவங்க விஷயம் தெரிஞ்சா போதும், பின்னால நம்ம விஷயத்த பேசிக்கலாம்னு நெனச்சுருந்தேன். நானே எதிர்பார்க்கல, மனசுல ஒரு யோசன, சரி முயற்சி செய்யலாமேனுதான், அக்ஸிலீயா அத்த வீட்ல உங்க அப்பா இருக்கவும், பேட்ரிக்கிட்ட பேசுற மாதிரி நம்ம பங்காளிகளுக்கு கேட்குறது போல, ‘இந்த ஜென்சி என்ன இப்படி பண்ணிட்டா, நம்ம குடும்ப மானம் காத்துலதான் பறக்க போகுது, டைம் இருந்தாலாவது வேற பொண்ண பார்க்கலாம், ஆனா அதுக்கும் வழியில்ல, பத்து நாள்ல கல்யாணம், இந்த சின்ன அத்த பொண்ணு கூட தான் நமக்கு முறைப்பொண்ணு, அதுக்காக, மாமாட்ட பொண்ணு தாங்கனு கேக்க முடியுமா, இல்ல கொடுக்கதான் செய்வாறா, என்ன ஆனாலும் பரவாயில்லனு எப்படி நம்ம சின்ன மாமாட்ட பேசுறது, நான் பேச முடியுமா, இல்ல நீ தான் பேச முடியுமானு’ நான் டைலாக் விட்டுட்டு அமைதியா நின்னு பங்காளிகள் பேசறத கவனிச்சா, ‘பரிசு மழை பெய்தது போல’னு டிவி-ல சொல்றது மாதிரி, நான் சொன்னதையே இரண்டு பேரும் எல்லார்கிட்டயும் பேசுனாங்க பாரு, கூடவே மாமா வேற சம்மத்திச்சுட்டாரா, ஒரு குதி குதிக்க தோணிச்சு, பிறகென்ன அதுக்கப்பறம் நடந்ததெல்லாம் உனக்கு தெரிஞ்சது தான்.
தன்னை பற்றியும் தன் பார்வையில் அவளைப் பற்றியும் தன் நினைவுகளைப் பகிர்ந்த பீட்டர், நிகழ்காலத்தில் “இதெல்லாம் நான் யார்கிட்டேயும் சொன்னதில்ல, ஜென்சி வீட்ட விட்டு போன அன்றைக்கு நான் திடீருனு அந்த பங்காளிகள்ட்ட அப்படி பேசவும் தான் பேட்ரிக் தொல்லை பண்ணி விஷயத்த வாங்கிட்டான். அப்படி இருக்கிறப்ப நான் உன்ன லவ் செய்தது தெரியும்னு சொன்ன, எப்படி?”.
நிம்மி, “அதுவா, ஒரு வருஷத்துக்கு முன்னாலேயே தெரியும். கூடவே உங்களுக்கு அப்பப்ப மூளை வேலைச் செய்யாதுனு இப்ப உங்கள பத்தி சொல்லும் போதே புரிஞ்சுக்கிட்டேன்”.
முறைத்த அவன், “ஓவரா பேசுற”, அவளோ, “பேசுன்னா என்ன செய்வீங்க”, அவன், “நான் என்ன செய்ய போறேன், ஒண்ணுமே செய்ய போறதில்ல, நீ சொல்லு விஷயத்தை”.
அவள், “ஒருத்தி பிரபோஸ் செய்யவும், இங்க வந்தேன்னு சொன்னீங்கல, அப்ப என்ன ஃபாலோ பண்ணத நானும் கவனிச்சேன், இதென்னடா தொல்லையா போச்சு நினைச்சு, அப்பாகிட்ட சொல்லிட்டேன், அப்பாவும் ‘யார் அவன், உன்னதான் பாக்குறானா, இல்ல உன் கூட உள்ள பிள்ளைகளையா, என்ன ஏதுனு விசாரிச்சுட்டு, அப்பறம் என்ன பண்றது முடிவு பண்ணலாம்னு’ சொல்லி, உங்கள பார்க்கதுக்காக அப்பா காலேஜ்ல டிராப் செய்றேன்னு கிளம்பி, அந்த பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல வந்ததும் வண்டிய ஸ்லோ பண்ண, தெரிஞ்சவரு வரவும், பேசினாரு, நீங்க சொன்னத வச்சு பார்க்கும் போது உங்க பிரண்டோட அப்பாகிட்ட தான் பேசியிருக்காரு. அப்பா என்னை காலேஜ்ல விட்டுட்டு அந்த பையன் உன்ன ஃபாலோ செய்த மாதிரி தெரியல, பின்னாடி காணல பாரு, இருந்தாலும், அவன் அங்கயிருந்து கிளம்பினா பின்தொடர சாந்தா மகன்ட்ட சொல்லியிருக்கேன், அவன் விசாரிச்சுட்டு வந்துருவான், நீ கண்டதையும் நெனைக்காம நிம்மதியா இருனு சொல்லி போய்ட்டாங்க”
அவன், “அடிபாவிகளா, ஆள் செட் பண்ணி என்ன ஃபாலோ செஞ்சுயிருக்கீங்க. அது சரி, சாந்தா மகன்னா உங்க வீட்டுக்கு போயிருந்தப்ப, ஒரு அத்த தன் பையனுக்கு உன்ன பொண்ணு தரலனு சண்ட போட்டாங்களே அவங்களா?”, எனக் கேட்கவும், அவள், “ஆமா” சொல்லவும் அவளை முறைத்தான்.
நிம்மி, “அத விடுங்க, முழுசா கேளுங்கத்தான், அந்த அத்த பையன் உங்கள பின்தொடர்ந்து ஹோட்டல் வரை வந்து, அங்கிருந்து உங்க முகவரியையும் வாங்கி அப்பாட்ட கொடுத்துட்டாங்க, அப்பா, முகவரிய பார்த்ததும், அதிர்ச்சி அடைந்து இது எப்படினு யோசிச்சு இருக்காங்க. அப்பதான் காலையில பஸ் ஸ்டாண்டுல பார்த்தவரும் இன்னொருத்தரும் சாயங்காலம் வீட்டுக்கு வந்து அப்பாட்ட பொண்ணு கேட்டுயிருக்காங்க, இதுல தான் டுவிஸ்ட் உங்களுக்கு”.
பீட்டர், “என்னடி டுவிஸ்ட்டு புரிய மாதிரி சொல்ல மாட்டீயா?
நிம்மி, “உங்க பிரண்டோட அப்பா துணைக்கு, கூட வந்த இன்னொருத்தர் எங்க தாத்தா வழியில அப்பாக்கு மச்சான் முறை, அவருக்கு இரண்டு, இல்ல மூனு அண்ணன் தம்பிங்க, இவருதான் மூத்தவரு, அந்த பிரண்டோட அப்பா பேசும் போது, உங்க பெரிய மச்சான் பையன், வெளிநாட்டுல வேலை செய்றாரு, உங்க பொண்ண கட்டிக்க ஆசைப்படுறாரு, யோசிச்சு முடிவு சொல்லுங்கனு, பொதுப்படையா பேசி கிளம்பிட்டாங்க, நான் அங்க தான் இருந்தேன். அம்மா வந்து அப்பாகிட்ட, ‘என்னங்க இது, பொண்ணு கேட்டுட்டு போறாங்க, இவ வேலைக்கு போகனும்னு சொல்றா, நீங்க என்ன முடிவு செய்திருக்கீங்க’னு கேட்க, அப்பா, ‘மச்சான் பொண்ணு கேட்டா தர மாட்டோம்னு தெரிஞ்சுதான் இன்னொருத்தர கூட்டிட்டு வந்திருக்காரு, அவர் பையனுக்கும் நம்ம பொண்ணுக்கும் வயசு வித்தியாசம் கூட, அதுமட்டுமில்லாம பொறுப்பில்லாதவன்னு வேற பேசிக்கிறாங்க, ஏன் ரிஸ்க் எடுக்கனும், மச்சான் கூட வந்தாரே அவர்கிட்ட வயச காரணம் காட்டி வேணாம்னு சொல்லிறேன்’ சொல்லி என் முன்னாடி தான் பேசினாரு”.
பீட்டர், “எனக்கு நேரமே சரியில்ல, அப்ப என்ன பத்தி நீங்க பேசலயா?”.
நிம்மி, “ஏன் பேசாம? அப்பவே அப்பா அம்மாட்ட சொன்னாங்க, ஒரு பையன் நம்ம பாப்பா பின்னாடி வரதா சொல்லிச்சு, விசாரிச்சப்ப அது, உன் பெரிய அண்ணன் பையன், பாப்பாக்கு பேசலாமானு கேட்கவும், உங்க இஷ்டம் சொன்னாங்க, ஆனா அப்பா பிடிவாதம் நீ என்ன நினைக்குறனு சொல்லனும் சொல்லவும், எங்க அண்ணன் பையன் மாப்பிள்ளையா வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்னாங்க, உடனே அப்பா, என்னகிட்ட உன் கருத்தையும் சொல்லுமான்னார். கல்யாணத்துக்கு மாப்பிள்ள பார்க்க வேண்டிய பொறுப்பு உங்களோடது, அதனால மாப்பிள்ள யாருனு நீங்களே பார்த்துக்கோங்க, ஆனா நான் வேலைக்கு போவேன்னு சொல்லிரனும் அப்படினு சொன்னேன், அப்பாவும், நாளைக்கு அந்த பையன்ட்ட பேசிட்டு பெரியவங்கள்கிட்ட பேசலாம் சொல்லிட்டாரு, அடுத்த நாள் பஸ் ஸ்டாண்டுல தேடுன்னா, ஆள் அட்ரஸே இல்ல”.
இவள் சொல்லவும் நெற்றியில் அடித்துக் கொண்டவன், “இன்னேரம் பிள்ளக்குட்டியோட இருந்திருக்க வேண்டியவன் கதை கேட்டுட்டு இருக்கேனே” என்றான்.
அவனை முறைத்தவள், “பிள்ளக்குட்டியோட இருந்திருப்பீங்களா?, நீங்க செய்த காரியத்துக்கு, தேவையில்லாம அந்த பையன் பத்தி உனக்கு ஆசைய வளர்த்துட்டோமோனு அப்பா தான் என்கிட்ட வருத்தப்பட்டாங்க, அப்பறம் நான் தான் ‘அப்பா யாரா இருந்தாலும் என் கல்யாணத்துக்கு பிறகு மட்டுமே எனக்குள்ள வர முடியும், அதனால நீங்க ஃபீல் செய்யாதீங்கனு’ அவர நான் கன்வின்ஸ் பண்ற மாதிரி ஆயிடுச்சு.
அதுக்கு பிறகு, உங்கள அன்னைக்கு எங்க வீட்டு வாசல்ல வேன நிறுத்தி இறங்குனப்பதான் பார்த்தேன், பார்த்தும் நீங்க சொல்லாம கொள்ளாம போனதும் எங்க அப்பா வருத்தப்பட்டதும் ஞாபகத்துக்கு வந்துச்சு, உங்கள பார்த்ததுமே புரிஞ்சுது, எங்கம்மா அண்ணன் வீட்ல இருந்து வந்திருக்காங்கனு, புரிஞ்சும் உங்க மேல இருந்த கடுப்புல யார் நீங்கனு வேணுமுனேதான் கேட்டேன்”.
பீட்டர், “கேப்படி கேப்ப, நான் இல்லாத பிளான்லா போட்டா, நீ கூலா யாருனு கேட்குற”.
நிம்மி, “ஹாஹா, பிளான சொல்லிட்டு செய்திருக்கனும், ஒரு வாரம் என் பின்னாடி சுத்திட்டு வேறொருத்தியோட கல்யாணம் சொல்லி வருவீங்க, நாங்க என்ன ஆரத்தியா எடுக்கனும், ஆமா நீங்க கூட அன்னைக்கு என்ன பூசணிக்கா சொன்னீங்கல, எவ்ளோ திமிரு, நான் அப்படியா இருக்கேன்”.
அவன், “எப்படியிருக்கனு நான் பார்த்து சொல்றேன்” என்றவன் அவளை மடியில் இழுத்து விட்டவன் “அப்படியெல்லாம் தெரியல, ஹாஹா… சரி டென்ஷன் வேண்டாம், அன்னைக்கு ஒரு வார்த்தையாவது உங்கூட பேசனும் போல இருந்துச்சு, அதான் எதையாவது பேசனுமேனு பேசுனது”.
அவள், “எது எப்படியோ, நம்ம கதையிலே இருந்து என்ன புரிஞ்சது உங்களுக்கு”, அவனோ, “ஆன், என்ன புரியனும், அதான் எதையோ சொல்ல ரெடியாயிட்டியே, வேணான்னா விடவா போற, சொல்லு கேட்போம்” எனக் கூறவும்,
அவள், “அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க தான் செய்யனும், இடையில வேறொருத்தர உள்ள கொண்டே வரக் கூடாதுனும், கூடவே காதலோ, கல்யாணமோ இடையில இன்னொருத்தவங்கள பஞ்சாயத்துக்கு கூப்பிடக் கூடாதுனும் புரிஞ்சுதா?” எனக் கேட்க, அவன் வடிவேல் பாணியில், “ஷ்ஷப்பா, இப்பவே கண்ணக்கட்டுதே” சொல்லி சிரிக்கவும், அவளும் இணைந்து சிரித்து விட்டு, “ஓக்கே, கேட்க வேண்டியது சொல்ல வேண்டியது எல்லாம் முடிஞ்சது, இப்பவே லேட், தூங்கலாம், நாளைக்கு வேலைக்கு போகனும்”.
அவன், “இதெல்லாம் அநியாயம்டி, நாளைக்கு லீவ் போட்டுக்கலாம்”.
அவள், “சாரி மிஸ்டர்ர்ர்…அடுத்து ரிவிசன் எக்ஸாம் நடக்குறதால இன்விஜிலேஷனுக்கு ஆள் மாத்தி விடறது கஷ்டம், சோ…. குட் நைட்” என்று படுத்து விட்டாள். அவளை ஓரிரு நொடிகள் பார்த்தவனும் அவளை அணைத்து உறங்கினான். உண்மையில் இருவருக்கும் பெரும் நிம்மதி கிடைத்தது அடுத்தவர் வார்த்தைகளில்.
கட்டாயத்தில் செய்யாமல் தன்னை விரும்பி தான் திருமண செய்துள்ளான் என்று அவளுக்கும், தான் விரும்பிய பெண்ணே தனக்கு மனைவியாக அமைந்துள்ளாள் என்று அவனுக்கும் மனதில் நிறைவு இருந்தது.
இரண்டு நாட்களுக்கு பிறகு காலையிலேயே அம்மாவிடமிருந்து போன் வந்தது. போனை எடுத்தவள் “சொல்லுங்கம்மா”, மறுமுனையில், “சின்னக்குட்டி, நாளைக்கு லீவ் சொல்லிரு”, நிம்மி, “அதெல்லாம் முடியாது, வேலை இருக்கு”, அம்மா, “உங்க அண்ணன் அவன் வந்துதான் சீர் கொடுக்கனும்னு பிடிவாதம் பிடிச்சதால தான் நாளைக்கு வரோம்னு சொல்றேன், நாளைக்கு விடியகாத்தால வரான், இல்லேன்னா முன்னாடியே சீர் செய்ய வந்திருப்போம், இதுக்கு பிறகு நாள் இல்ல, எங்க அண்ணன், அப்பா, அம்மா எல்லார்கிட்டயும் பேசியாச்சு, எதையாவது கிளப்பி விடாம லீவ் போட்டுரு, நாங்கயெல்லாம் வந்திருவோம்” என்று கூறி வைத்து விட்டார்.