காலையில் எழுந்தச் சந்தியா அன்று வானிலை எப்போதும் போல அழுது வடியாமல் சற்று பிரகாசமான வெளிச்சத்துடன் பளிச்சென்ற வானம் அவள் அறையின் பக்கவாட்டு ஃப்ரெஞ்ச் விண்டோவின் வழியே காட்சியளிக்க சோம்பல் முறித்தபடி அதை ரசித்துவிட்டு அவள் அமர்ந்திருந்த படுக்கையின் அருகே இருக்கும் மேஜையின் மீது வைக்கப்பட்டிருக்கும் ஷாப்பிங் பேக்கைப் பார்த்ததும் நேற்றைய நிகழ்வுகளின் நினைவில் முகம் சுருக்கியவள் அதை எடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டு குளியலறையை நோக்கிச் சென்றாள்.
பல் துளக்கிவிட்டு முகத்தை டவலில் துடைத்தபடி வந்தவளின் மனம் அதைத் திறந்து தான் பாரேன் என்று அவளைத் தூண்டிவிட ஆர்வம் தாங்காமல் அதைத் திறந்துப் பார்த்தவளைக் கண்டு கண் சிமிட்டியது அட்டைப்பெட்டிக்குள் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு நிற டிசைனர் புடவை. அது சந்தியாவுக்குப் பிடித்த நிறம். அதைக் கண்டதும் குதூகலத்துடன் புடவையை மேலே வைத்துவிட்டுக் கண்ணாடியில் பார்த்தவள் புடவையின் அழகில் மயங்கித் தான் போனாள். புடவையின் ஆரஞ்சு நிற உடல்பகுதியில் ஆங்காங்கே செய்யப்பட்டிருந்த மெல்லிய தங்கநிறப்பூ வேலைப்பாடுகளும் அதன் மென்மையான தங்கநிற பார்டருமாக புடவையின் ஒவ்வொரு இடத்திலும் கலைநயம் மின்ன அதற்கு மேல் அந்தப் புடவையை வேண்டாம் என்று சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை.
ஆனால் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த ரெடிமேட் தங்கநிற பிளவுசைப் பார்த்தவள் உதட்டைச் சுழித்து “இதுவும் அந்த நிப்பான் பெயிண்ட் அளவுக்குத் தான் இருக்கும்” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே வாயில் நிழலாட யாரென்றுப் பார்க்கையில் அங்கே கையைக் கட்டிக்கொண்டு நின்று அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் சூரியா.
அவனைக் கண்டதும் சட்டென்று புடவையை மீண்டும் அட்டைப்பெட்டியிலேயே வைத்தவள் தொண்டையைச் செறுமிக் கொண்டு “நான் சும்மா ஷாரி எப்பிடி இருக்குனு தான் பார்த்தேன்.. மத்தபடி ஒன்னும் இல்லை..” என்று குரலில் அலட்சியத்தைக் காட்டிக் கூற முயல
சூரியா அவளைக் கேலியாகப் பார்த்தபடி உள்ளே வந்தவன் “ இந்த ஷாரி உனக்குனு நான் தேடிப் பிடிச்சு வாங்குனது பிரவுனி… நல்லா தான் இருக்கும்” என்று கூறிவிட்டு நிறுத்தியவன் “சீக்கிரமா இந்தச் ஷாரியைக் கட்டிட்டு ரெடியாகு பிரவுனி.. நம்ம இன்னைக்கு கோயிலுக்குப் போயிட்டு வருவோம்” என்று கூறச் சந்தியா கையைக் கட்டிக்கொண்டு நின்றாளே தவிர அவன் சொன்னதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
சூரியா “ப்ளீஸ் பிரவுனி! சீக்கிரமா போயிட்டுத் திரும்பிடுவோம்.. எனக்கு உன் கிட்ட நிறைய பேசணும்னு ஆசையா இருக்கு… பட் பேசிட்டே இருந்தா ரொம்ப லேட் ஆயிடும்… நீ கிளம்பு ப்ளீஸ்” என்று வார்த்தைக்கு ஒரு ப்ளீஸைப் போட்டு அவளைக் கரைத்துச் சம்மத்ததை வாங்கிவிட்டுத் தான் அங்கிருந்து அகன்றான்.
சந்தியாவும் அதற்கு மேல் பிடிவாதம் பிடிக்காமல் தயாரானவள் கண்ணாடியில் தன்னைப் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டாள். ஆனாலும் ஏதோ குறை என்று யோசித்தவளின் பார்வை டிரஸ்ஸிங் டேபிளின் மீது இருந்த காஜலின் மீது பட்டு மீள அதை எடுத்து கண்ணை அலங்கரித்தவள் இது போதுமென்று எண்ணியவளாய் அந்த அறையை விட்டு வெளியேறி ஹாலில் தனக்காக காத்திருக்கும் சூரியாவைத் தேடிச் சென்றாள்.
[the_ad id=”6605″]சூரியா வெள்ளைநிறச்சட்டையும் கருப்புநிற ஜீன்சுமாகத் தயாராகி ஹால் சோஃபாவில் கைகளைத் தலைக்கு அண்டை கொடுத்து அமர்ந்திருந்தவன் சந்தியாவின் காலடியோசை கேட்டு அவளின் புறம் திரும்ப அவள் அன்னநடை நடந்து அவன் முன் வந்து நின்றவள் “நான் ரெடி! போலாமா மார்ஸ்மாலோ?” என்று சொன்னபடி பக்கவாட்டில் போட்டிருந்த ஜடைப்பின்னலைச் சரிப்படுத்தியபடி கேட்டாள்.
சூரியா தான் வாங்கி வந்திருந்த ஆரஞ்சுவண்ணச் சேலையில் அழகுப்பதுமையாக நிற்பவளைக் கண்டதும் ஒரு நிமிடம் சுவாசிக்க மறந்தான். அவளை அணைக்கத் துடித்தக் கரங்களைக் கட்டுப்படுத்த போராடியவனின் மனம் அவனிடம் “அவ கோயிலுக்கு உன்னோட வர்றேனு சொன்னதே பெரியவிஷயம்… இதுல நீ எதாச்சும் ஏடாகூடமா பண்ணி வச்சிடாதே தெய்வமே” என்று வேண்ட அவன் தனது கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டான்.
சந்தியாவிடம் போகலாம் என்று தலையசைத்தவன் முன்னே செல்ல அவள் அணிந்திருந்த காலணி சேலையில் தட்டுவதால் சந்தியா மெதுவாக அவன் பின்னே நடந்துவர சூரியா புன்னகை பூத்தமுகமாய் கதவைத் திறந்தவன் அங்கே நின்றவளைக் கண்டதும் இவள் எங்கே இங்கு வந்தாள் என்று யோசித்தபடி “சாயா நீ இங்கே என்ன பண்ணுற?” என்று ஆச்சரியத்துடன் கேட்க
அவன் எதிரே இடுப்பில் கைவைத்து முறைத்தபடி க்ரீம்நிற முழுநீளச்சுடிதாரில் நின்றவள் தோள்பட்டையிலிருந்து வழுவிய துப்பட்டாவை ஸ்டைலாகத் தூக்கிப் போட்டபடி “நீ வாங்கிக் குடுத்த டிரஸ் தானே! அதான் உன் கிட்ட காட்டிட்டுப் போலாம்னு வந்தேன்” என்றுச் சொல்லவும் சூரியாவின் பின்னே நின்று கொண்டிருந்த சந்தியா முன்னே வந்து நின்றாள்.
சாயா அவளைப் அந்த ஆரஞ்சுநிறப் புடவையில் கண்டதும் துணுக்குற்றவள் மனதிற்குள் “இவளுக்காகவா அத்தனை கடை ஏறி இறங்கி இந்த ஷாரியை வாங்குனான் சூரியா?” என்ற யோசனையுடன் நிற்க சந்தியாவோ “எதோ எனக்கு மட்டும் தான் ஷாரி வாங்குன மாதிரி என்ன பில்டப் குடுத்தான் இவன்? இவளுக்கும் இவன் தான் சுடிதார் வாங்கிக் குடுத்துருக்கான்… இவனை எந்த கேட்டகரியில சேர்க்கணும்னே தெரியலை” என்று பொருமியபடி நின்று கொண்டிருந்தாள்.
சூரியா சாயாவிடம் “உனக்கு என்ன டிரஸ் போட்டாலும் சூப்பரா இருக்கும். இதைல்லாம் நீ என் கிட்ட கேக்கணுமா?” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாயில் இன்னொரு கார் நிற்கும் சத்தம் கேட்க அதைக் கேட்டதும் சந்தியாவின் முகம் பூவாய் மலர “வாவ்! சொல்லி பதினஞ்சு நிமிசத்துல வந்துட்டான்! வில் ஸ்மித் வில் ஸ்மித் தான்யா” என்று மனதில் எண்ணியபடி
சாயாவிடம் “எக்ஸ்யூஸ்மீ! ப்ளீஸ் மூவ் அ லிட்டில்” என்று புருவம் உயர்த்த அவள் ஒதுங்கி வழிவிடவும் வேகமாக வாயிலை நோக்கிச் சென்றாள்.
காரிலிருந்து இறங்கிய மார்க் சந்தியாவைக் கண்டதும் “ஹாய் சான்டி!” என்றபடி தோளோடு அணைத்து அநியாயத்துக்குச் சூரியாவின் இரத்த அழுத்தத்தைச் சோதிக்கச் சந்தியா தன் பங்குக்கு அவனிடம் சிரித்துச் சிரித்துப் பேசி அவனை நூறு டிகிரி கொதிநிலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தாள்.
அவனது கவனம் முழுவதும் அந்த இருவர் மீது மட்டுமே இருக்க சாயா பேசிய ஒரு வார்த்தை கூட அவனது காதில் ஏறவில்லை. சாயாவோ இதை அறியாமல் கதை பேசிக்கொண்டிருக்கச் சூரியாவின் மனமோ அவர்கள் என்ன தான் பேசுகிறார்கள் என்று ஆராயத் தொடங்கியது.
சந்தியா மார்க்குடன் பேசிக்கொண்டே நடந்தவள் செருப்பின் வார் அவிழ தடுக்கிவிழப் போனவளை மார்க் விழாமல் தாங்கிக்கொள்ளவும் சூரியாவினுள் எரிச்சல் அலை ஒன்று எம்பி அடங்கியது. மார்க் அவளைத் தாங்கியதோடு நிற்காமல் அவளை நேராக நிறுத்தியவன் கீழே குனிந்து அவள் செருப்பின் வாரைச் சரி செய்ய ஆரம்பிக்கவும் சூரியாவுக்குப் பொறுமை காற்றில் பறந்துவிட்டது. அவர்களை நோக்கி முன்னேற எத்தனித்தவன் கரம் சாயாவின் கரங்களுக்குள் சிக்கியிருக்க அங்கே சந்தியாவோ மார்க்கிடம் அவசர அவசரமாகத் தடுக்க அதற்கு மார்க் ஏதோ சிரித்துக்கொண்டே சொல்ல சந்தியாவின் முகத்தில் பொருள்விளங்கா உணர்வு ஒன்று தோன்றியது.
காலில் வாரை மாட்டிவிட்டு நிமிர்ந்தவனிடம் சந்தியா ஏதோ தீவிரக்குரலில் கேட்க மார்க்கும் அதே பாணியில் பதிலளித்துவிட்டு நின்றுகொண்டிருந்தான். சந்தியா அவனிடம் ஏதோ சொல்லிவிட்டுத் தனது கைகளை இதயவடிவில் குவித்துக் காட்ட மார்க் கலகலவென்று நகைத்தது சூரியாவின் எரிச்சலை இன்னும் அதிகரிக்கச் சாயாவிடம் இருந்துக் கையை உருவிக்கொண்டவன் மார்க்கை நோக்கிச் சென்றான். சாயாவும் அவனை விடாமல் பின்தொடர்ந்தாள்.
[the_ad id=”6605″]மார்க்கிடம் வந்தவன் “ஹாய் மார்க்? என்ன இந்தப் பக்கம்?” என்றபடி அவனிடம் கைகுலுக்கியபடி சந்தியாவிடம் என்ன இதெல்லாம் என்று பார்வையாலேயே வினவ அவள் சாயாவைச் சுட்டிக்காட்டி என்ன இது என புருவத்தால் கேள்வி கேட்டாள். இருவரின் மவுனயுத்தம் மற்ற இருவரின் கவனத்தைக் கவரவில்லை. அது அவர்கள் இருவருக்கும் மட்டுமே புரியும் பரிபாஷை.
மார்க் சூரியாவின் கேள்விக்குப் பதிலளிக்கும் முன் முந்திக் கொண்ட சந்தியா “நான் தான் மார்க்கை வரச் சொன்னேன்” என்று கூறிவிட அதன் பின் இருவர் மட்டுமே செல்வதாக இருந்த கோயில் விஸிட் நால்வரும் சேர்ந்துச் செல்வதாக மாற்றப்பட்டது. மார்க் தன்னுடைய காரில் சென்றுவிடலாம் என்று கூற சூரியா இல்லையென்று மறுத்தவன் சந்தியாவைத் தன்னுடன் வருமாறு சைகை காட்ட அது சரியாக சாயாவின் விழியில் பட்டுத் தொலைத்தது.
அவள் சந்தியாவையும் மார்க்கையும் கண்டுப் புன்னகைத்தவள் “சந்து நீ மார்க் கூட கார்ல வந்துடு… நானும் சூரியாவும் ஒன்னா வர்றோம்” என்று கூற சந்தியா உதட்டுச்சுழிப்புடன் அங்கிருந்து மார்க்குடன் அகன்றாள். இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு கையாலாகாத்தனத்துடன் நின்று கொண்டிருந்தான் சூரியா.
சாயா அவனிடம் வந்தவள் “கம் ஆன் சூரியா! லெட்ஸ் கோ” என்றபடி அவன் கரத்தைக் கோர்த்துக்கொள்ளச் சூரியாவும் எதுவும் பேசாமல் அவளுடன் காரை நோக்கிச் சென்றான். சில நிமிடங்களில் இரு கார்களும் ஹூஸ்டனின் சுவாமி நாராயண் கோயிலை நோக்கி விரைந்தன. சூரியாவின் கரங்கள் தான் ஸ்டியரிங்க் வீலில் படிந்திருந்ததே தவிர அவனது எண்ணம் சந்தியாவையும் மார்க்கையும் சுத்தி சுத்தியே வந்தது. அப்படி மார்க் என்ன தான் கூறியிருப்பான் என்ற குழப்பம் மண்டையைக் குடைய கார் அது பாட்டில் சாலையில் சென்று கொண்டிருந்தது.
இதே யோசனையுடன் கோயிலும் வந்துவிட காரை ஓரங்கட்டி அதற்குரிய இடத்தில் நிறுத்திய சூரியா சாயாவுடன் சேர்ந்து மார்க் மற்றும் சந்தியாவுக்காகக் காத்திருக்க இருவரும் பேசிக்கொண்டே அவன் அருகில் வந்துவிட்டனர்.
நால்வரும் அந்த வெள்ளைப்பளிங்கினால் இழைக்கப்பட்டக் கோயிலுனுள் நுழைந்தனர். பெரிய நுழைவுவாயிலைத் தொடர்ந்து சிவப்புக்கற்கள் பதித்த நீண்ட நடைபாதை, அதன் இருபுறங்களில் பச்சைநிறப்புல்வெளி, அந்நடைபாதையின் நடுவில் ஒரு நீண்ட குளம் என கோயிலின் தோற்றம் மனதைக் கவர்ந்தது. கோயிலைச் சுற்றி ஓடிய சிவப்புகல் நடைபாதையின் இடையிடையே சிறிய சிறிய நீருற்றுகள் அழகாக தண்ணீரை தூவிக் கொண்டிருந்தன. இவற்றைக் கடந்துச் சென்றால் சுவாமிநாராயண் கோயிலில் படிக்கட்டுகள் மீதேறி கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
நால்வரும் மேலே ஏறியவர்கள் கோயிலின் வடிவமைப்பை ரசித்ததுடன் ராதா கிருஷ்ணனை தரிசித்தனர். அந்தச் சூழல் மனதுக்கு இதமளிக்க நால்வரும் அமைதியாக அந்த இதத்தை அனுபவித்தபடி கோயிலின் சுற்றுபிரகாரத்தின் சுவரில் வடிக்கப்பட்ட சிற்பங்களை ரசித்தபடி நடந்து கொண்டிருந்தனர்.
அப்போது சாயா சூரியாவிடம் “சூரியா நான் உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்” என்று கூறச் சந்தியாவுக்கு அவள் எதற்காகச் சூரியாவைத் தனியாக அழைக்கிறாள் என்பது புரிந்தது. மார்க்குடன் கோயிலின் முன் பரந்திருக்கும் குளத்தைக் காட்டி “சால் வீ கோ தேர்?” என்று கேட்க மார்க் புன்னகையுடன் தோளைக் குலுக்கிவிட்டு அவளுடன் நடந்துச் சென்றான்.
சந்தியா அந்தச் செவ்வக வடிவ செயற்கைக்குளத்தின் சுவரின் அமர்ந்தவள் மார்க்கிடம் “ம்ம்.. தென் அவங்களுக்கு என்னாச்சு?” என்று அவர்கள் பேசியபோது இடையில் நிறுத்திய விஷயத்தை மீண்டும் கூறுமாறு கேட்க மார்க் விலாவரியாகக் கூற ஆரம்பித்தான்.
“ஐ லவ் ஹெர் அ லாட்… பட் ஒரு சாதாரண நிமோனியா காய்ச்சல் அவளை என் கிட்ட இருந்துப் பிரிச்சுடுச்சு.. யாருமே இதை எதிர்பார்க்கலை.. அதுக்கு அப்புறம் நான் உடைஞ்சுப் போயிட்டேன்… நேசிச்சவங்களை இழக்குறதோட வலிக்குச் சாவு எவ்வளவோ மேல் சான்டி” என்று கூறும்போதே அவனது பழுப்புநிறக்கண்களில் கண்ணீரின் சாயல்.
சந்தியா ஆறுதலுடன் அவன் கரங்களை அழுத்த சிறிதுநேரம் விழி மூடி தன்னை சமனிலைப்படுத்தியவன் கண்களைத் திறந்ததும் தன் எதிரே அமர்ந்திருப்பவளை ஆதுரத்துடன் பார்த்தபடி “உன்னைப் பார்த்ததும் எனக்கு அவளோட நியாபகம் தான் வந்துச்சு… உன்னோட செய்கை, சிரிப்பு, பேச்சு எல்லாமே அவளை மாதிரியே தான் இருக்கு… அவளும் இப்பிடித் தான் என் கிட்ட உரிமையா பேசுவா.. அவ கூட செலவளிச்ச ஒவ்வொரு நிமிசமும் பொக்கிஷம் மாதிரி சான்டி… ஆனா பொக்கிஷத்தை நான் மட்டுமே அனுபவிக்கக்கூடாதுனு நினைச்சக் கடவுள் அவளை என் கிட்ட இருந்துப் பிரிச்சுட்டாரு…. ஆனா உன்னை என் கண் முன்னாடி கொண்டு வந்துட்டாரு…”என்றபடி அவள் கரங்களை வாஞ்சையுடன் பற்றிக் கொள்ள அவனது அன்பை எண்ணி சந்தியாவின் விழியில் நீர்த்திரையிட்டது.
மார்க் அதிர்ச்சியுற்றவனாய் “என்னாச்சு சான்டி? ஒய் ஆர் யூ க்ரையிங்?” என்று பதற
சந்தியா கண்ணீரை உள்ளிழுத்தபடி “நான் சந்தோசத்துல அழுறேன் மார்க்.. உண்மையான அன்பு ரெண்டு விதத்துல கண்ணீரை வரவைக்கும்… ஒன்னு அது மறுக்கப்படுறப்போ, இன்னொன்னு எதிர்பாராத ஆள் கிட்ட இருந்து கிடைக்கிறப்போ…எனக்கு இப்போ கண்ணீர் வரக் காரணம் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத உங்க கிட்ட இருந்து எனக்குக் கிடைச்ச இந்த அன்பு தான்” என்று மனதாறக் கூற
மார்க் அவள் கன்னத்தில் தட்டியவன் “அது வாழ்க்கை முழுக்க உனக்கு கிடைக்கும்..ஒரு…..” என்று அவன் ஆரம்பிக்கும் போதே
“சாயா ப்ளீஸ் நில்லு!” என்றபடி சாயாவின் பின்னர் ஓடிய சூரியாவும் கண்ணீரைத் துடைத்தபடி ஓடியச் சாயாவும் இந்த இருவருக்கும் பதற்றத்தைக் கொடுக்க சூரியா ஓடும்போதே மார்க்கிடம் “மார்க் பிரவுனியை வீட்டுல டிராப் பண்ணிடு” என்று சொன்னபடி சாயாவின் பின்னே சென்றான்.
சந்தியா மனதுக்குள் “இவ அழுறதுக்குக் கண்டிப்பா இந்த மார்ஸ்மாலோ தான் காரணமா இருப்பான்” என்று எண்ணிக்கொண்டாள். அவள் எண்ணியபடி சாயாவின் கண்ணீருக்குக் காரணம் சூரியா தான்.
சற்று முன்னர் சாயா அவனிடம் தனியாகப் பேசவேண்டும் என்று கூறச் சந்தியா இருவருக்கும் தனிமை அளித்துவிட்டு மார்க்குடன் குளத்தை நோக்கிச் செல்லவும் சாயா அதைப் புன்னகையுடன் பார்த்தபடி “சூரியா உன் ஃப்ரெண்டுக்கும் மார்க்குக்கும் சம்திங் சம்திங் இருக்கும் போல! அவ காலுல இவன் செருப்பை மாட்டி விடுறதும், ரெண்டு பேரும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசுறதும் பார்த்தா எனக்கு அப்பிடித் தான் தோணுது” என்று கூறிச் சூரியாவின் மனதில் அணுகுண்டை வீசினாள்.
சூரியா அவசரத்துடன் அதை மறுத்தவன் “பிரவுனியோட குணத்துக்கு எல்லாரும் அவளுக்கு ஈஸியா ஃப்ரெண்ட் ஆயிடுவாங்க.. நான், ஆரியா இப்போ மார்க்… மத்தபடி அவளோட கான்சென்ட்ரேசன் எல்லாமே இப்போ ஸ்டடீஸ் மேல மட்டும் தான்” என்று விளக்கம் கொடுக்க
சாயா மனதிற்குள் “அவ எப்பிடி போனா எனக்கென்ன? அவ என் வழிக்கு வரலை.. அதுவே போதும்” என்று எண்ணிக் கொண்டாள்.
பின்னர் தொண்டையைக் கனைத்தவள் “சூரியா நம்ம ஃப்ரெண்ட்ஷிப்புக்கு என்ன வயசுனு உனக்கு நியாபகம் இருக்கா?” என்று கேட்டுவிட்டு அவனது பதிலுக்குக் காத்திருந்தாள்.
“இல்லை சாயா”
“கிட்டத்தட்ட இருபது வருசத்துக்கும் மேல… நம்ம ஃப்ரெண்ட்ஷிப் கிண்டர்கார்டன்ல ஆரம்பிச்சது யூனிவர்சிட்டி வரைக்கும் தொடர்ந்திருக்குனு நினைச்சா உனக்கு என்ன தோணுது?” – சாயா
“நம்ம ஃப்ரெண்ட்ஷிப்புக்குக் கடவுளோட ஆசிர்வாதம் இருக்குனு புரியுது” – சூரியா
“ம்ம்…கரெக்ட்… கடவுளோட ஆசிர்வாதம் நம்ம ஃப்ரெண்ட்ஷிப்புக்கும், நமக்கும் இருக்கப்போய்த் தான் இத்தனை நாள் ஆகியும் அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் நம்ம ஃப்ரெண்ட்ஷிப் மாறாம இருக்கு…இது வாழ்க்கை முழுக்கத் தொடரணும்னு நான் ஆசைப்படுறேன்… நம்ம ஃப்ரெண்ட்ஷிப் வாழ்க்கையோட அடுத்தக் கட்டத்துக்குப் போகணும்னு நான் ஆசைப்படுறேன் சூரியா”
“நீ சொல்லுறது புரியலை சாயா”
[the_ad id=”6605″]“ஐ லவ் யூ சூரியா… உன்னோட ஃப்ரெண்ட்ஷிப், லவ் ரெண்டுமே எனக்கு வேணும்டா.. எனக்கு மட்டுமே வேணும்… உன்னை நான் யார் கிட்டவும் ஷேர் பண்ணிக்கத் தயாரா இல்லை… ஐ லவ் யூ” என்று சொல்லிவிட்டு அவனை அணைத்துக் கொண்டவள் சூரியாவின் மனதைக் கருத்தில் கொள்ளவில்லை.
சூரியா இதை எதிர்பார்த்திருந்தவன் அவளை விலக்கி நிறுத்திவிட்டு “சாயா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்… ஆனா அதுக்கு அர்த்தம் நான் உன்னைக் காதலிக்கிறேனு இல்லை… நீ சொன்ன மாதிரி கிண்டர்கார்டன்ல இருந்து யூனிவர்சிட்டி முடிக்கிறவரைக்கும் உன்னைப் பத்தின என்னோட கண்ணோட்டம் மாறவே இல்லை… நீ என்னைக்குமே எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் மட்டும் தான்… நம்ம ஃப்ரெண்ட்ஷிப் இப்பிடியே தொடரணும்னு நான் ஆசைப்படுறேன்” என்று மெதுவாக அவளதுக் காதலை மறுக்கவே சாயாவிற்கு தன் காதலை இவன் மறுக்கிறானே என்ற ஆங்காரம் தான் எழுந்தது.
அவனது சட்டையைப் பற்றியவள் “ஆனா எனக்கு உன்னைப் பிடிச்சுருக்கு சூரியா… எப்பிடியும் நீ யாரோ ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிப்ப தானே! அது ஏன் நானா இருக்கக்கூடாது? ப்ளீஸ் சூரியா..” என்று கெஞ்சும் போது அவள் கண்ணில் கண்ணீர் வந்துவிட
சூரியா “சாயா ப்ளீஸ் அழாதே! நீ சொல்லுற மாதிரி நான் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணித் தான் ஆகணும்… பட் அவ நீ இல்லை…” என்று கூற அவனது சட்டையைப் பற்றியிருந்த அவளின் கரங்கள் தளர்ந்தது.
கையை உதறிவிட்டு “நீ என்னை வேண்டானு சொல்லிட்டல்ல” என்று அவனைக் குற்றம்சாட்டும் பார்வை பார்த்தவள் அங்கிருந்து வேகமாக வெளியேற சூரியா அவள் ஏதும் தவறாக முடிவெடுத்துவிடுவாளோ என்று பயந்து “சாயா ப்ளீஸ் நில்லு” என்றபடி அவள் பின்னே வேகமாக ஓடினான்.
காரில் அவள் அமரச் சூரியா காரை எடுப்பதைப் பார்த்துவிட்டுச் சந்தியா பெருமூச்சுவிட்டபடி மார்க்கிடம் தன்னை வீட்டில் கொண்டுச் சென்றுவிடுமாறு கூற அவனும் சரியென்று அவளுடன் கிளம்பினான்.
********