“கஷ்டமா இருக்கு டா, அவ எனக்கு வேணும் டா ரங்கா. எனக்கு அவளை அந்த அளவுக்கு பிடிச்சிருக்கு டா”
“இதை தங்கச்சிக் கிட்ட சொன்னியாண்ணே?”
“அவ பின்னாடியே தானே அலையுறேன். அவளுக்கு அது புரியாதா என்ன? ஆனாலும் ஏன் என்னை விட்டுப் போனா? அப்பா வேற திட்டிட்டார் டா”, என்று ஆரம்பித்து நடந்தததைச் சொன்னான்.
“கடைசில சந்தோஷ் சுப்பிரமணியம் மாதிரி வெடிச்சு சிதறிட்ட போல?”, என்று ரங்கன் கேட்க ஆதவனுக்கும் சிரிப்பு வந்தது. இவ்வளவு நேரம் இருந்த இறுக்கமும் கொஞ்சம் தளர்ந்தது போல இருந்தது.
ஆதவன் முகத்தில் இருந்த புன்னகையைக் கண்டு “நீ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும்ணே. உன்னை விட்டுட்டு தங்கச்சியால இருக்க முடியாது. கண்டிப்பா வந்துரும். அப்புறம் அண்ணே நாம நம்ம வீட்டுக்கு போகலாமா? ஐயாவும் அம்மாவும் பாவம். அங்க போவோமா?”, என்று கேட்டான் ரங்கன்.
“அவர் என்னை என்ன பேச்சு பேசினார் தெரியுமா? எனக்கும் மானம் ரோஷம் எல்லாம் இருக்கு. அங்க நான் வர மாட்டேன்”, என்று ஆதவன் சொல்லிச் செல்ல ரங்கனுக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
அதே நேரம் ரத்தினம் வீட்டுக்கு வந்தாள் வேணி. மங்கை மூலம் சிந்து வீட்டை விட்டுச் சென்ற விஷயம் கேள்விப் பட்டு சந்தோசமாக இருந்தது அவளுக்கு. “கடைசில நான் நினைச்ச மாதிரியே நடந்துருச்சு அண்ணி”, என்று மங்கையிடம் சொன்னாள்.
“என்ன வேணி சொல்ற?”, என்று குழப்பமாக கேட்டாள் மங்கை.
“நம்ம ஆதவன் ஜாதகம் எதுவும் பாக்காமல் அந்த பொண்ணைக் கட்டிக்கிட்டு வந்ததே எனக்கு சரியாப் படலை. நான் நினைச்ச மாதிரி முதல்ல ஜோசியர் நாளை தள்ளிப் போட்டார். அப்புறம் ஆதவன் கை உடைஞ்சிருச்சு. இப்ப என்னடான்னா அவ இவனை விட்டு பிரிஞ்சே போய்ட்டா. அவங்க ஒண்ணா இருக்க கூடாதுன்னு கடவுளே நினைக்கிறார் போல?”, என்று வேணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே “என்ன பேச்சு பேசுற வேணி?”, என்று கோபமாய் கேட்ட படி அங்கே வந்தார் ரத்தினம்.
அண்ணனைக் கண்டு ஒரு நொடி திக்கென்று இருந்தாலும் “இல்லைண்ணா அது வந்து.. நடந்ததை வச்சு…”, என்று தயக்கமாக சொன்னாள்.
“நீ பேசினதை நான் கேக்க தான் செஞ்சேன். இப்ப என்ன சொல்ல வர?”
“அந்த பொண்ணுக்கும் நம்ம ஆதவனுக்கும் ஏதோ பொருத்தம் இல்லை போலண்ணே. அதனால தான் மாத்தி மாத்தி தடங்களா வருது”
“அதுக்கு என்ன பண்ணனும்? அவங்களை ஒரேடியா பிரிக்கணும்னு சொல்ல வரியா?”, என்று ரத்தினம் கேட்க “என்னங்க இப்படி பேசுறீங்க?”, என்று கேட்டாள் மங்கை.
“அண்ணன் சொல்றது சரி தான் அண்ணி. அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு வேண்டாம். கடவுள் கொடுத்த முடிவை ஏத்துக்குவோம்”, என்று வேணி சொல்ல “அப்படின்னா ஆதவன் வாழ்க்கை என்னவாகும்?”, என்று கேட்டார் ரத்தினம்.
“அவனுக்கென்ன? அவன் ஆம்பளை. அவன் எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணலாம்”, என்றதும் “வாயை மூடு வேணி”, என்றாள் மங்கை.
“அண்ணி”
“என் மகனுக்கு தாய் ஒண்ணுன்னா தாரமும் ஒண்ணு தான். என் மகனையும் மருமகளையும் எப்படி வாழ வைக்கணும்னு எனக்கு தெரியும். எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு தான். அதுக்காக இந்த ஜாதகம் ஜோசியம் நம்பி என் மகன் வாழ்க்கையையும் சூதுவாது தெரியாத அப்பாவி பொண்ணோட வாழ்க்கையையும் நான் கெடுக்க மாட்டேன்”
“பாருங்கண்ணா அண்ணி எப்படிச் சொல்றாங்கன்னு. நான் சொல்றதையும் மீறி அவங்க வாழ்ந்தா ஆதவனுக்கு ஏதாவது….”, என்று வேணி சொல்ல வர “வாயை மூடு வேணி. மங்கை சொல்றது தான் சரி. எங்க வீட்டுக்கு மருமகள்னா அது சிந்து தான். நாங்க நாளைக்கு அவளைக் கூப்பிட போறோம். இதை உன் மருமகன் கிட்ட உளறிறாதே. புருஷன் பொண்டாட்டின்னா சண்டை வரது சகஜம் தான். கூடிய சீக்கிரம் சரியாப் போகும்”, என்று சொல்லி விட்டுச் சென்றார் ரத்தினம்.
“எனக்கு மனசுல பட்டதைச் சொன்னேன். தப்பா நினைக்காதீங்க அண்ணி”, என்று சொல்லி விட்டு சென்ற வேணி போகும் போதே ஆதவனை போனில் அழைத்தாள்.
அதை எடுத்து “சொல்லு அத்த. என்ன இந்த நேரம் கூப்பிட்டுருக்க?”, என்று கேட்டான்.
“இப்ப தான் வீட்டுக்கு போனேன் ஆதவா. அண்ணி எல்லாம் சொன்னாங்க. எவ்வளவு தைரியம் இருந்தா இந்த சிந்து இப்படிக் கிளம்பிப் போயிருப்பா? இதுக்கு தான் நம்ம பக்கம் இருக்குற பொண்ணைக் கட்டணும்னு சொல்றது”
“அப்படிச் சொல்லாதீங்க அத்தை. சிந்து பாவம். அவ ரொம்ப பயப்படுவா. கோவில்ல ஏதோ நடந்துருக்கு. அதுக்கப்புறம் தான் சிந்துவுக்கு ஏதோ கோபம். அதை முதல்ல கண்டு பிடிக்கணும்”, என்று அவன் சொன்னதும் அதிர்ந்த மனதுடன் “என்ன ஆதவா சொல்ற?”, என்று கேட்டாள்.
“ஆமா அத்தை, ஏதோ பார்த்து பயந்துருக்கா. நீங்க கவலைப்படாதீங்க. அவ இல்லாம எனக்கு ஏது வாழ்க்கை? கண்டிப்பா அவளை சரி செஞ்சிருவேன்”, என்று தெளிவாக சொன்னதும் வேணிக்கு எரிச்சலாக வந்தது.
“சரி ஆதவா, உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரவா?”
“அம்மா கொடுத்து விட்டுருச்சு. சாப்பிட்டேன்”
“ஓ சரி. நாளைக்கு அண்ணனும் அண்ணியும் அவளைக் கூப்பிட போறாங்க போல? எல்லாரும் அவளைத் தாங்குறது எனக்கு சரியாப் படலை”
“என்னது அம்மா அப்பா அவளைக் கூப்பிடப் போறாங்களா? நல்ல விஷயம் தான். அப்புறம் எத்தனை பேர் தாங்கினாலும் அவளுக்கு தகும் அத்தை. யாருக்கும் கிடைக்காத அறிய வகை பொக்கிஷம் சிந்து. அந்த சிந்து நதியை விட தூய்மையானவ என்னோட சிந்து. பூவை விட மென்மையானவளும் கூட. அவ என்னோட உயிர். சரி வைக்கிறேன்”, என்று சொல்லி போனை வைக்க வேணிக்கு எரிச்சலாக இருந்தது.
வீட்டுக்கு வந்ததும் பிரியா விஷயத்தைக் கேட்க அனைத்தையும் சொன்னாள் வேணி. பிரியாவுக்கும் அனைவரும் சிந்துவுக்கு சாதகமாக பேசியது கடுப்பாக இருந்தது.
“என்ன ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசுறீங்க?”, என்று கேட்டான் சக்தி. அவன் அருகே செல்வியும் நின்றிருந்தாள்.
“அண்ணன் வீட்டுக்கு போயிருந்தேன் சக்தி. ஒரு விஷயம் கேள்வி பட்டேன். அதான் பிரியா கிட்ட சொல்லிட்டு இருந்தேன்”, என்றாள் வேணி.
“என்ன ஆச்சு மா?”, என்று சக்தி கேட்க செல்விக்கும் குழப்பமாக இருந்தது.
“அந்த பொண்ணு,… அதான் ஆதவன் பொண்டாட்டி அவ அம்மா வீட்டுக்கு போய்ட்டாளாம். அதுவும் நேத்து நைட்டே. என்ன ஏதுன்னு காரணமே தெரியலையாம். நாளைக்கு அண்ணனும் அண்ணியும் விசாரிக்க சென்னை போறாங்களாம்?”, என்று சொன்னதும் சக்திக்கு திக்கென்றுப் இருந்தது. செல்வியோ வேணி மற்றும் பிரியாவை ஆராய்ச்சியாக பார்த்தாள்.
“என்ன செல்வி இது? இப்படி ஆகிருச்சு?”, என்று கேட்டான் சக்தி. செல்வி கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலை என்பதால் அவள் நேற்று அவள் செல்ல வில்லை. அப்படிச் சென்றிருந்தால் அவள் சிந்துவை தனியே விட்டிருக்க மாட்டாள்.
“எனக்கு தெரியலைங்க. ஆனா எனக்கு என்னமோ இவங்க ரெண்டு பேர் மேலயும் தான் சந்தேகமா இருக்கு”, என்று நேரடியாகவே சொல்லி விட்டாள் செல்வி.
அவள் அப்படிச் சொன்னதும் கொதிப்படைந்த வேணி “ரொம்ப நல்லா இருக்கு செல்வி. அவ கோச்சீட்டு போனா அதுக்கு நாங்க காரணமா? என் மக மனசை மாத்த நான் போராடிட்டு இருக்கேன். அவளும் இப்ப எல்லாம் நிதர்சனத்தை உணர்ந்து சரியா தான் இருக்கா. நீ என்னடான்னா இப்படி சொல்ற? பாத்தியா சக்தி, உன் பொண்டாட்டி எங்களைப் பேசுறதை?”, என்று கோபமாக சொன்னாள்.
“செல்வி ஆதாரம் இல்லாம என் அம்மா மேலயும் தங்கச்சி மேலயும் பழி போடக் கூடாது. அவங்க ஒண்ணும் பண்ணிருக்க மாட்டாங்க”, என்றான் சக்தி.