அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் சிந்துவையும் குழந்தையும் ஊருக்கு போக அனுமதித்தாள் அமுதவள்ளி. மலர்ந்த முகத்துடன் மனைவி குழந்தையுடன் விடை பெற்றான் ஆதவன்.
“ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள எதுக்கு எல்லாரையும் ஊருக்கு அனுப்பின?”, என்று சிறு பிள்ளை போல ஏகாம்பரம் கோபப் பட்டார்.
“நம்ம பொண்ணுக்காக மாப்பிள்ளை அஞ்சாறு மாசமா இங்க தான் இருக்கார். அப்படின்னா நாமளும் அவங்களுக்காக நம்ம மகளைக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும்ல? வேணும்னா வாரம் வாரம் போய் நாம பாத்துட்டு வருவோம். இன்னும் ரெண்டு நாள்ல பேர் வைக்கிற பங்க்சனும் இருக்கு. அதுக்கு வேற போகணும்? எதுக்கு கவலைப் படுறீங்க? அங்க மங்கை அண்ணி பிள்ளையையும் பேரனையும் நல்லா பாத்துக்குவாங்க”, என்று அமுதவள்ளி சொன்னதும் ஏகாம்பரம் அமைதியாகி விட்டார்.
அடுத்த பத்து நாட்கள் கழித்து ஆதவன் வீட்டில் வைத்து குழந்தைக்கு பேர் வைக்கும் விழா நடந்து கொண்டிருந்தது. உறவினர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். வேணி வீட்டில் இருந்து சக்தி மற்றும் செல்வி தான் குழந்தையுடன் வந்திருந்தார்கள்.
வேணி மற்றும் பிரியாவை யாரும் அழைக்க வில்லை. வைதேகி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததால் அவளை அலைய வைக்க வேண்டாம் என்று எண்ணி பெற்றோரின் பாதுகாப்பில் அவளை விட்டுவிட்டு வைகுந்த் மட்டுமே வந்திருந்தான்.
திருமண நிச்சயம் ஆனதால் அசோக் சிந்து அருகில் சுற்றிக் கொண்டிருந்த ஜானகியை உரிமையான பார்வை பார்த்து அவளை சிவக்க வைத்துக் கொண்டிருந்தான். படிப்பை முடித்து அவளுக்கு வேலையும் சென்னையில் கிடைத்திருந்தது. இன்னும் ஒரு மாதத்தில் அவள் வேலைக்குச் செல்ல வேண்டும். அதுவும் அசோக் அவளது சம்பளப் பணத்தை அவளுடைய வீட்டுக்கே கொடுக்கச் சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு மாதம் மாதம் பணம் வருமாறு அவளின் பெற்றவர்கள் பெயரில் ஒரு பெரிய தொகையையும் போட்டு விட்டான்.
அதனால் இப்போது அவள் மனதில் எந்த கவலையும் இல்லாததால் அசோக்கின் முழுக் காதலையும் ரசித்து அவன் பார்வையில் சிவந்து கொண்டிருந்தாள். அவன் மேல் அளவுக்கு அதிகமான காதலையும் வைத்து விட்டு அவன் கரம் பிடிக்க காத்திருந்தாள்.
விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளையும் எப்போதும் போல ரங்கன் தான் செய்து கொண்டிருந்தான். அவன் தான் ஆதவனின் மகனால் மாமா ஆகி விட்டானே? ஆதவன் என்ன தான் அவனை தம்பி தம்பி என்று அழைத்தாலும் ரங்கன் சிந்துவுக்கு அண்ணனாக இருக்க தான் விரும்பினான்.
இத்தனை நாளும் அந்த சின்னக் குட்டியை அவன் தான் தூக்கிக் கொண்டு திரிவான். ஆனால் இன்று உறவினர்கள் அனைவரும் இருந்தததால் அவன் ஒதுங்கிக் கொண்டான்.
ஏனென்று தெரிய வில்லை. இன்று அவனுக்கு தனிமை உணர்வு அதிகம் எழுந்தது. அந்த வீட்டில் அவனை யாருமே அன்னியர்களாக நினைக்க வில்லை தான். ஆனாலும் ஏதோ ஒரு வலி அவனுக்குள் எழுந்தது.
அவன் தனிமையை நாடிச் செல்ல அவனைத் தேடி வந்தாள் அஞ்சலி. அவளைக் கண்டதும் அவன் தனிமை உணர்வு ஓடியது போல இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டாமல் நின்றிருந்தான்.
“இப்ப எதுக்கு இங்க வந்து நிக்குறீங்க?”, என்று கேட்டாள் அஞ்சலி.
“அதைக் கேக்க நீ யாரு? முதல்ல இங்க இருந்து போ”, என்று எரிந்து விழுந்தான்.
“எதுக்காக இப்படி என் கிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுறீங்க? நான் உங்களை என்ன பண்ணினேன்?”, என்று அவள் கேட்க அவன் அமைதியாக இருந்தான்.
உன் பார்வை என்னை சலனப் படுத்துகிறது என்றா சொல்ல முடியும்? அதனால் அமைதியாக இருந்தான்.
“எனக்கு இன்னைக்கு தெரிஞ்சே ஆகணும்? எதனால என் கிட்ட இருந்து விலகி விலகிப் போறீங்க? இத்தனை மாசமா நாம ஒண்ணா தான் வேலை பாக்குறோம்? ஒரே வீட்ல தான் இருக்கோம். ஆனா எல்லார்க் கிட்டயும் நல்லா பேசுற நீங்க என்னை மட்டும் ஒதுக்கி வைக்கிறீங்க ஏன்? இன்னைக்கு உண்மை தெரியாம நான் உங்களை விடுறதா இல்லை”
“உன்னோட பார்வை சரி இல்லை. அதனால தான் ஒதுங்கிப் போறேன். போதுமா?”, என்று அவள் முகம் பார்க்காமல் சொன்னான் ரங்கன்.
“அப்படின்னா என் பார்வையில இருக்குற வித்தியாசம் உங்களுக்கு புரியுது தானே? அப்பாடி சந்தோஷம். அது உங்களுக்கு புரியலையோன்னு வருத்தப் பட்டேன்”, என்று அவள் புன்னகையுடன் சொல்ல அவனுக்கு எரிச்சல் வந்தது.
“இங்க பாரு அஞ்சலி. இதெல்லாம் தேவை இல்லாத வேலை. உனக்கு புரியுதா? இந்த வீட்ல உள்ளவங்க என்னை நல்லா பாத்துக் கிட்டாலும் நான் இந்த வீட்ல வேலைக்காரன் தான்? ஆனா நீ அப்படி இல்லை. நல்லா படிச்சிருக்க. இப்ப நல்ல சம்பளம் வாங்குற? உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. அவங்க ஒரு படிச்ச மாப்பிள்ளையை உனக்கு பாப்பாங்க. அவனை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரு. இனி என்னை டிஸ்டர்ப் பண்ணாத. இனி உன் பார்வை என் மேல பட்டுச்சுன்னா கூட நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன். எனக்கு கிடைச்சிருக்குற இந்த குடும்பத்தை விட்டு என்னைப் பிரிக்கணும்னு முடிவு பண்ணிட்டா என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ”, என்று சொன்னவன் அங்கிருந்து சென்று விட்டான்.
அதே இடத்தில் அமர்ந்த அஞ்சலிக்கு அழுகையாக வந்தது. எந்த கஷ்டம் வந்தாலும் அஞ்சலி அழ மாட்டாள். ஆனால் ரங்கனின் உதாசீனம் அவளை உடைத்துப் போட்டது. இத்தனை நாள் அவனைப் பார்க்கவாது அனுமதித்தவன் இன்று அதற்கும் தடை போட்டது அவளை உலுக்கியது. அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற மனதின் ஆசையையும் மீறி ஒரே வீட்டில் இருந்து கொண்டு அவள் எப்படி அவனைப் பார்க்காமல் இருக்கவாம்?
இந்த வேலையை விட்டுச் செல்ல வேண்டும் என்றால் இவள் வாங்கும் சம்பளத்தை வைத்து தான் அவள் குடும்பமே நன்றாக இருக்கிறது. அந்த அளவுக்கு அதிகமான சம்பளத்தை தான் ஆதவன் அவளுடைய அக்கவுண்டுக்கு அனுப்பி வைப்பான். இந்த அளவு மனதுக்கு பிடித்த வேலையும் இடமும் சம்பளமும் வேறு எங்கு அவளுக்கு கிடைக்குமாம்?
“என்ன டி இங்க வந்து உக்காந்துருக்க? ஆளைக் காணுமேன்னு தேடி வந்தேன்”, என்று சொன்ன படி அவள் அருகே வந்து அமர்ந்தாள் சிந்து.
அவளைக் கண்டதும் முகத்தை சாதாரணமாக வைக்க முயன்றாள் அஞ்சலி. அது முடியாமல் போக சிந்து அவள் கண்ணீரைக் கண்டு விட்டாள்.
“அழுறியா அஞ்சலி?”, என்று அவள் அதிர்ந்து போய்க் கேட்க அடுத்த நொடி அவள் மடியில் படுத்த அஞ்சலி ஏங்கி ஏங்கி அழுது விட்டாள்.
அவள் அழுவதைக் கண்டு சிந்துவுக்கும் அழுகையாக வந்தது. சிந்துவுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்று புரிய வைத்தவளே அவள் தான். அப்படி இருக்க இன்று அவள் வாழ்க்கையை வெறுத்து அழுவதா?
மீண்டும் மீண்டும் சிந்து என்னவென்று கேட்க தன்னுடைய மனதையும் ரங்கனின் பாராமுகத்தையும் கடைசியாக அவன் பேசிச் சென்ற அனைத்தையும் அவளிடம் சொல்லி விட்டாள்.
எல்லாவற்றையும் கேட்ட சிந்து “என் கிட்ட சொல்லிட்டல்ல? இதைப் பத்தி அப்புறம் பேசுவோம். இப்ப பங்ஷன் ஆரம்பிக்க போகுது. நீ வா”, என்று சொல்ல அஞ்சலியும் முகத்தை சாதாரணமாக மாற்றிக் கொண்டு எழுந்து கொண்டாள்.
“நீ உள்ள போ அஞ்சலி, நான் வரேன்”, என்று சொன்ன சிந்து ரங்கனைத் தேடிச் சென்றாள். அவன் உர்ரென்ற முகத்துடன் கிணத்தடியில் அமர்ந்திருக்க “அண்ணா இங்க என்ன பண்ணுறீங்க? குழந்தைக்கு பேர் வைக்கணும் வாங்க. அவங்க தான் உங்களை எங்கன்னு கேட்டாங்க. அதான் நான் உங்களைக் கூப்பிட வந்தேன்”, என்றாள்.
“நீ போ மா, நான் வரேன்”
“அதெல்லாம் வேண்டாம். நீங்க வாங்க”, என்று சொல்லி அவன் கரம் பற்றி அழைத்துச் சென்றவள் ஆதவன் அருகில் சென்று நிறுத்தினாள்.