சிந்துவின் திருமணம் கோகுலுடன் நிச்சயம் ஆனதில் இருந்து அஞ்சலி அவனை அப்படித் தான் சொல்கிறாள். “உங்க அப்பாவுக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்கலையா? இந்த கருவாயனைப் போய் எதுக்கு பிடிச்சார்?”, என்று பொருமிக் கொண்டு தான் இருக்கிறாள். தோழியின் நினைவில் புன்னகை வந்தது சிந்துவுக்கு.
அப்போது தான் அவளுக்கு ஒரு கேள்வியும் மனதில் எழுந்தது. கடைசி நிமிடத்தில் கோகுல் திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டு ஓடியிருக்கிறான். அதன் பிறகு என்ன நடந்திருக்கும்?
திடீர் மாப்பிள்ளையாக ஆதவன் எப்படி மாறினான்? கட்டாயம் ஏகாம்பரம் அவனிடம் கெஞ்சி இருக்க மாட்டார். ஆக அசோக் தான் அவனிடம் தங்கையின் வாழ்க்கையை காப்பாற்ற கெஞ்சி இருக்க வேண்டும் என்று புரிந்தது.
அண்ணனை நினைத்து நெகிழ்ந்த அவள் மனது ஆதவனை நினைத்து குழம்பியது. “அண்ணன் கெஞ்சினான்னா இவங்க எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிக்கணும்? நட்புக்காக என்னை ஏத்துக்க முன் வந்தாங்களா? இனி எனக்கு கல்யாணமே ஆகாதுன்னு வாழ்க்கை பிச்சைப் போட்டாங்களா? என்னை பிடிச்சு கல்யாணம் பண்ணினாங்களா? இல்லை அண்ணன் அவங்களை ஒத்துக்க வச்சானா?”, என்று குழம்பினாள்.
நேற்று வரும் வழியில் அவன் தன்னை அக்கறையாக கவனித்துக் கொண்டது, முத்த நிகழ்வு எல்லாம் நினைவில் வர வந்த குழப்பத்தில் பாதி ஓடிப் போனது. “திடீர்னு ஏன் அவன் அப்படி பண்ணினான்?”, என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அறைக் கதவு தட்டப் பட்டது. அவசரமாக கதவைத் திறந்தாள்.
உள்ளே வந்த ரங்கநாயகி “கிளம்பிட்டியா கண்ணு?”, என்று கேட்டுக் கொண்டே அவளைப் பார்த்தாள்.
“ஆமா ஆச்சி”, என்று அமைதியாக பதில் சொன்னாள். “நேத்து நீ போட்டிருந்த எல்லா நகையையும் போட்டுக்கோ கண்ணு”
“வேண்டாம் ஆச்சி. எல்லாம் ரொம்ப வெயிட்டா இருக்கு”, என்று சொல்லும் போதே மங்கையும் வேணியும் உள்ளே வந்தார்கள். அவர்களைக் கண்டு சிந்து அமைதியாக இருக்க “வேணி, பாத்தியா என் மருமகளை. எம்புட்டு அழகா இருக்கா?”, என்று சொன்னாள் மங்கை.
சிந்து வெட்கத்துடன் தலை குனிய அவளை ஆராய்ச்சியாக பார்த்த வேணி “ஆமா அண்ணி”, என்றாள்.
“மங்கை, சிந்து எல்லா நகையையும் போட மாட்டிக்கா”, என்றாள் ரங்கநாயகி.
“இது மட்டும் இருக்கட்டும் மா. எல்லாத்தையும் போட்டா எல்லாரும் கண்ணு போட்டுருவாங்க. ஏற்கனவே அவ அழகுக்கு திர்ஸ்டி சுத்தணும். இதுவே அழகா தான் இருக்கு. எல்லா போட்டா அவளுக்கும் கசகசன்னு இருக்கும்”, என்று மங்கை சொல்ல அவளை நன்றியோடு பார்த்தாள் சிந்து.
“கவரிங் செட் நகைக்கு இந்த சீனா?”, என்று எண்ணிய வேணி “இந்தாம்மா பொண்ணு, உன் பேர் என்ன?”, என்று கேட்டாள். அவள் குரலில் சிந்து பயத்துடன் மங்கையிடம் ஒட்ட “பயப்படாத டா. அவ உனக்கு சித்தி முறை ஆகணும்”, என்றாள் மங்கை.
“பேரைக் கேட்டா என் அண்ணி பின்னாடி ஒழியுற?”, என்று வேணி கேட்க “என் பேர் சிந்து”, என்றாள்.
“முதல் நாளே பிள்ளையை விரட்டாத வேணி. என் பேத்தி பயந்துக்க போறா”, என்று ரங்கநாயகி சொல்ல கோபத்தை அடக்கிக் கொண்டு நின்ற வேணி “சரி அண்ணி, நான் வீட்டுக்கு கிளம்புறேன். உங்க மக கிட்டயும் மருமகன் கிட்டயும் சொல்லணும்”, என்றாள்.
“இரு வேணி நானும் வரேன். நான் வந்து மருமகன் கிட்ட சொல்றேன்”, என்று சொன்ன மங்கை “அம்மா சிந்துவை வெளிய கூட்டிட்டு வாங்க. எல்லாரும் பாக்குறதுக்கு நிக்குறாங்க. அவங்க கிட்ட தலையைக் காட்டிட்டு உள்ள கூட்டிட்டு வந்துருங்க. நீங்க கூடவே இருங்க. நான் இப்ப வந்துறேன்”, என்று சொல்லிச் சென்றாள்.
“வா கண்ணு”, என்று சிந்துவை வெளியே அழைத்துச் சென்றார் ரங்கநாயகி. வெளியே வந்ததும் அங்கே இருந்த கூட்டத்தைக் கண்டு அரண்டு போனாள் சிந்து. அக்கம் பக்கம் இருந்த பெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள்.
“பொண்ணு அழகா இருக்கா அத்தை. அதான் உன் பேரன் மயங்கிட்டான் போல?”, என்று ஒரு பெண்மணி ரங்கநாயகியிடம் சொல்ல “ஆமா எம்புட்டு அழகு என் பேத்தி. சரி சரி இன்னைக்கு யாரும் அவங்க வீட்ல சோறு போங்க வேண்டாம். மூணு தரமும் நம்ம மண்டபத்துல தான் சாப்பாடு”, என்றார் ரங்கநாயகி. சிந்துவுக்கு தான் அவர்கள் முன்னிலையில் தான் காட்சிப் பொருளாக இருக்கிறோம் என்று கூச்சமாக இருந்தது.
பின் அவர்கள் கிளம்பியதும் “வா கண்ணு, உள்ளாரப் போகலாம்”, என்று அவளை அழைத்துச் சென்ற ரங்கநாயகி அவளை ஓய்வெடுக்கச் சொன்னாள். சிந்துவும் அந்த அறைக்குள் வந்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.
ஒரு அரை மணி நேரம் கழித்து வேலைக்காரப் பெண் அவளுக்கு உணவு கொண்டு வர சாப்பிட்டு முடித்தாள். அப்போது தான் அங்கு வந்தான் ஆதவன். அவனைக் கண்டு அவள் தலை குனிந்து கொண்டாள்.
அப்போது வேணி வீட்டுக்கு சென்ற மங்கையும் அங்கு வந்தாள். மகனைக் கண்டதும் “உனக்கு இங்க என்ன டா வேலை? எந்திச்ச உடனே இங்க வந்து நிக்குற? அதுவும் முகம் கூட கழுவாம?”, என்று சிறு சிரிப்புடன் கேட்டாள்.
அன்னை சொன்னதைக் கேட்டு அவன் அசடு வழிய “அவன் உசுறு இங்க இருக்குறப்ப அவன் இப்படி ஓடித் தான் வருவான்”, என்று அவனை மேலும் வாரினார் ரங்கநாயகி.
“சரி சரி சீக்கிரம் பேசிட்டு வந்துரு”, என்று சொல்லி விட்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு விலகிச் சென்றார்கள் பெரியவர்கள்.
அவர்கள் சென்றதும் “சிந்து”, என்று அழைத்த படி அவள் அருகே வந்தான். அவள் தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க “ரொம்ப அழகா இருக்க”, என்றான்.
இதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் அவனையும் ரசித்தது. தூங்கி எழுந்து வெறும் உள் பனியன் மற்றும் வெள்ளை வேஷ்டியுடன் வந்தவனைப் பார்க்கும் போது அவளுக்கு என்னவோ போல இருந்தது. அவன் கழுத்தில் கிடந்த தங்க செயின் கூட அவனைக் கவர்ச்சியாக காட்டியது.
வந்ததில் இருந்து அவள் தன்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் இருக்கவும் “சரி நீ தலை குனிஞ்சிட்டே இரு. நான் போறேன்”, என்று கோபத்துடன் சொல்லி விட்டு அவன் செல்லப் போக “ஒரு நிமிஷம்”, என்றாள்.
“என்ன?”, என்று கண்கள் மின்னக் கேட்டான்.
“அம்மா அப்பா அண்ணன் எல்லாம்?”
“அதானே இவளாவது என் கிட்ட பாசமா பேசுறதாவது?”, என்று எண்ணிக் கொண்டு “இப்ப தான் கிளம்பிட்டு இருக்காங்களாம். மதியம், இல்லைன்னா சாயங்காலம் வந்துருவாங்க”, என்றான்.
“சரி”, என்று சொன்னதும் அவளையே குறுகுறுவென்று பார்த்தான். அவன் அமைதியாக இருக்கவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் அழகு அவனை பாதிக்க “வேற ஒண்ணும் இல்லையா?”, என்று தாபத்துடன் கேட்டான்.
“வேற என்ன?”, என்று அவள் புரியாமல் கேட்க “எனக்கு ஐஸ் கிரீம் வேணும்?”, என்று கேட்டு அவளைச் சீண்டினான்.
ஐஸ்கிரீம் என்றதும் நேற்றைய நினைவு வர அவனை முறைத்துப் பார்த்தாள் சிந்து. “இதுக்கு வெக்கப் படணும் சிந்து. நீ என்னடான்னா முறைக்கிற? சரி சரி ரெஸ்ட் எடு. நைட் உன்னைப் பாத்துக்குறேன்”, என்று அவன் விளையாட்டாக சொல்லி விட்டுச் சென்றான். அவன் நைட்டுக்கு கொடுத்த அழுத்தத்தில் அவள் மிரண்டு போனாள். அதைப் பற்றிய யோசனையிலே அமர்ந்து விட்டாள். என்ன பண்ணுவான் என்று குழப்பமாக இருந்தது.
வீட்டுக்கு சென்ற வேணி தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள். அப்போது அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தாள்.
பிரியா தான் குளித்து முடித்து புது மலர் போல வந்தாள். “எங்க டி காலையிலே குளிச்சு கிளம்பிட்ட?”, என்று கேட்டாள் வேணி.